அமைதியை விரும்பிய அகிலத்தின் தூதர்

அமைதியை விரும்பிய அகிலத்தின் தூதர்

ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சமாதானத்திற்குக் கொடுத்த முன்னுரிமையையும், முக்கியத்துவத்தையும் சென்ற இதழில் கண்டோம். இதற்கு இன்னொரு எடுத்துக்காட்டையும் இப்போது பார்ப்போம். ஹுதைபிய்யா ஒப்பந்த விதியின்படி மக்காவிலிருந்து எந்த முஸ்லிம் மதீனாவுக்கு வந்தாலும் அவரைத் திருப்பியனுப்ப வேண்டும்.

(ஒப்பந்த விதி இவ்வாறு இருக்கும் நிலையில்) குறைஷிகளில் ஒருவரான அபூபஸீர் என்பவர் முஸ்லிமாக இருக்கும் நிலையில் (மதீனாவுக்கு) வருகை தந்தார். அவரைத் தேடி(ப் பிடிக்க) குறைஷிகள் இரண்டு பேரை அனுப்பி வைத்தனர். அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம் வந்து), “நீங்கள் எங்களுக்குக் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றுங்கள்” என்று கேட்டனர். உடனே, அவரை அந்த இருவரிடமும் நபி (ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள்.

அவர்கள் இருவரும் அபூபஸீர் அவர்களை அழைத்துக் கொண்டு துல்ஹுலைஃபாவை அடைந்தனர். அவர்கள், தம்முடைய பேரீச்சம் பழங்களைத் தின்றுகொண்டே (ஒரு மரத்தடியில்) தங்கினார்கள். அபூபஸீர் (ரலி) அவர்கள் அவ்விரு நபர்களில் ஒருவரிடம், “அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னானே! உன்னுடைய இந்த வாளை நான் மிக நல்லதாகக் காண்கிறேன்” என்றார். உடனே மற்றொருவர் வாளை உருவி, “ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! இது மிக நல்ல வாள்தான். நான் இதைப் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன், மீண்டும் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன்; மீண்டும் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன்” என்று சொன்னார்.

அபூபஸீர் அவர்கள், “எனக்கு(அதை)க் காட்டு. அதை நான் பார்க்கிறேன்” என்று கேட்டு அவரைத் தன் வசத்தில் கொண்டு வந்து (அந்த வாளால்) குத்திக் கொன்று விட்டார். மற்றொருவர் விரண்டோடி மதீனா வரை சென்று விட்டார்; ஓடிக் கொண்டே பள்ளிவாசலுக்குள் புகுந்தார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைக் கண்ட போது, “இவர் ஏதோ பீதியேற்படுத்தும் விஷயத்தைக் கண்டு விட்டிருக்கிறார்” என்று கூறினார்கள். அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நின்ற போது, “அல்லாஹ்வின் மீதாணையாக! என் சகோதரர் கொல்லப்பட்டு விட்டார். (நீங்கள் அபூபஸீரைத் தடுக்காவிட்டால்) நானும் கொல்லப்பட்டு விடுவேன்” என்று கூறினார்.

உடனே அபூபஸீர் அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் தங்கள் பொறுப்பை நிறைவேற்றி விட்டான். தாங்கள் என்னை அவர்களிடம் திருப்பியனுப்பி விட்டீர்கள். பிறகு அல்லாஹ், என்னை அவர்களிடமிருந்து காப்பாற்றி விட்டான்” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “இவரது தாய்க்குக் கேடுண்டாகட்டும். உதவுபவர் எவராவது இவருக்குக் கிடைத்தால் இவர் போர்த் தீயை மறுபடியும் மூட்டி விடுவார்” என்று கூறினார்கள். இதைச் செவியுற்றவுடன் அபூபஸீர் அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தம்மை (மீண்டும்) குறைஷிகளிடம் திருப்பியனுப்பி விடுவார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அங்கிருந்து தப்பியோடி கடலோரத்திற்குச் சென்றார்கள்.

இது புகாரி 2732வது ஹதீஸ் தெரிவிக்கும் செய்தியாகும்.

இந்த ஒப்பந்தத்தை வளைக்கும் விதமாக அபூபஸீர் ஒரு தந்திரமான சமாதானத்தைக் கூறுகின்றார். நபி (ஸல்) அவர்கள் அந்தத் தந்திர சமாதான யுக்தியை ஏற்றுக் கொள்ளவில்லை.

அத்துடன், “இவர் போர்த்தீயை மறுபடியும் மூட்டிவிடுவார்’ என்று அபூபஸீரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் கூறுவதிலிருந்து, அவர்கள் போரைத் தவிர்ப்பதில் எந்த அளவுக்கு உறுதி பூண்டிருந்தார்கள் என்பதைத் தெளிவாக விளங்க முடிகின்றது.

நபி (ஸல்) அவர்கள் காட்டிய உறுதிப்பாடு தன்னை மீண்டும் மக்காவில் கொண்டுபோய் தள்ளிவிடும் என்று தெரிந்த மாத்திரத்தில் அபூபஸீர் தப்பித்து விடுகின்றார்.

ஹுதைபிய்யா உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றுவதில், அமைதியை நிலைநாட்டுவதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொண்டிருந்த உறுதிப்பாட்டை நாம் அறிந்து கொள்ளலாம்.

எதிரிகளின் வெறியும் இறைத்தூதரின் நெறியும்

நபி (ஸல்) அவர்கள் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதிலும் போரை முற்றிலும் தவிர்ப்பதிலும் உறுதியாக இறைநெறியைக் கடைப்பிடிக்கின்றார்கள். ஆனால் எதிரிகள் இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் கொல்வதிலேயே குறியாகவும் வெறியாகவும் இருந்தார்கள். இதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.

நாங்களும், மக்காவாசிகளும் சமாதான ஒப்பந்தம் செய்து, எங்களில் ஒருவர் மற்றொருவருடன் கலந்துறவாடிக் கொண்டபோது, நான் ஒரு மரத்தை நோக்கி வந்து, அதன் (அடிப்பாகத்தில் இருந்த) முற்களை அகற்றிவிட்டு அதற்குக் கீழே படுத்துக்கொண்டேன்.

அப்போது மக்காவாசிகளான நான்கு இணைவைப்பாளர்கள் என்னிடம் வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை இழிவாகப் பேசத் தொடங்கினர். அவர்கள் மீது எனக்குக் கோபம் வந்தது. உடனே மற்றொரு மரத்துக்கு நான் மாறிக் கொண்டேன். அந்த நால்வரும் தம் ஆயுதங்களை (அந்த மரத்தில்) தொங்கவிட்டுவிட்டு அவர்களும் படுத்துக்கொண்டனர்.

இந்நிலையில், யாரோ ஒருவர் அந்தப் பள்ளத்தாக்கின் கீழேயிருந்து “முஹாஜிர்களுக்கு ஏற்பட்ட நாசமே! (நம் தோழர்) இப்னு ஸுனைம் கொல்லப்பட்டுவிட்டார் (ஒப்பந்த மீறல் நடைபெற்றுவிட்டது)என்று உரக்க அறிவித்தார். உடனே நான் எனது வாளை உருவிக் கொண்டு, படுத்திருந்த அந்நால்வரைத் தாக்கினேன். அவர்களின் ஆயுதங்களை எடுத்து ஒரே கட்டாக என் கையில் வைத்துக் கொண்டேன்.

பிறகு “முஹம்மத் (ஸல்) அவர்களது முகத்தைக் கண்ணியப்படுத்திய (இறை)வன் மீதாணையாக! உங்களில் யாரேனும் தலையைத் தூக்கிப் பார்த்தால் அவரது கண் உள்ள பகுதியிலேயே அடிப்பேன்என்று கூறினேன்.

பின்னர் அவர்களை இழுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். என் தந்தையின் சகோதரர் ஆமிர் (ரலி) அவர்கள் “அபலாத்குலத்தைச் சேர்ந்த “மிக்ரஸ்எனப்படும் ஒரு மனிதரை பிடித்துக்கொண்டு, துணி விரிக்கப்பட்ட குதிரையொன்றில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அவருடன் எழுபது இணை வைப்பாளர்களும் இருந்தார்கள்.

அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்துவிட்டு “அவர்களை விட்டு விடுங்கள். (ஒப்பந்த மீறல்) குற்றம் அவர்களிடமிருந்தே தொடங்கி மீண்டும் ஏற்பட்டதாக இருக்கட்டும்என்று கூறி, அவர்களை மன்னித்து விட்டுவிட்டார்கள்.

நூல்: முஸ்லிம் 3695

மக்காவாசிகளில் எண்பது பேர் நபி (ஸல்) அவர்கள் மீதும் நபித்தோழர்கள் மீதும் திடீர்த் தாக்குதல் தொடுப்பதற்காக “தன்ஈம்மலையிலிருந்து ஆயுதங்களோடு இறங்கி வந்தனர். அப்போது சரணடைந்த அவர்களை நபி (ஸல்) அவர்கள் பிடித்து, (மன்னித்து) உயிரோடு விட்டுவிட்டார்கள். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “மக்காவின் மையப் பகுதியில் அவர்களுக்கு எதிராக அவன் உங்களுக்கு வெற்றி அளித்த பின், உங்கள் கைகளை அவர்களை விட்டும், அவர்கள் கைகளை உங்களைவிட்டும் அவனே தடுத்தான்” (48:24) எனும் வசனத்தை அருளினான்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: முஸ்லிம் 3696

மக்காவாசிகள் மீது நபி (ஸல்) அவர்கள் நேரடியாகப் போர் தொடுப்பதற்கு அத்துணை நியாயமிருக்கின்றது. ஆனாலும் போர் செய்ய வந்த, புனித நபியைக் கொல்ல வந்த எண்பது எதிரிகளை நபி (ஸல்) அவர்களே மன்னித்து விடுகின்றார்கள். இது நபி (ஸல்) அவர்கள் போரை விரும்பாமல் அமைதியையே விரும்பினார்கள் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.