பிரித்துக் காட்டிய பெருநாள் பிறை

பிரித்துக் காட்டிய பெருநாள் பிறை

தங்களைத் தாங்களே சுன்னத் வல்ஜமாஅத்தினர் என்று சொல்லிக் கொள்ளும் அசத்திய ஜமாஅத்தினரை விட்டும் தவ்ஹீதுவாதிகள் மார்க்கத்தின் எல்லா வணக்கங்களிலும் தனியாகப் பிரிந்து அடையாளம் காட்டிக் கொண்டிருந்தனர். உளூ, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற வணக்கங்களிலும், திருமணம், சமூக வாழ்க்கை, மரணம் போன்ற நிகழ்வுகளிலும் தங்களை தவ்ஹீதுவாதிகள் என்று அடையாளப்படுத்திக் கொண்டனர்.

“அடையாளப்படுத்திக் கொண்டனர்’ என்று சொல்லும் போது, ஏதோ ஒரு தனிப் பாதையை, தனி மார்க்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர் என்று அர்த்தமல்ல. இவற்றில் நபி (ஸல்) அவர்கள் காட்டிய பாதையில் செயல்பட ஆரம்பித்தனர் என்பது தான் அதன் உண்மையான பொருள்.

சுன்னத் ஜமாஅத் எனப்படுவோரின் வணக்க வழிபாடுகள் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வணக்க வழிபாட்டு முறைகளுக்கு நேர் மாற்றமாக அமைந்திருந்தன. சரியான முறைப்படி தவ்ஹீதுவாதிகள் செயல்பட ஆரம்பித்ததும் அது அவர்களுக்குப் புதிதாகவும், அதிசயமாகவும் தெரிந்தது. அதனால் தான் வரிந்து கட்டிக் கொண்டு தவ்ஹீதுவாதிகள் மீது எரிந்து விழுந்தனர். பள்ளிவாசலை விட்டு தவ்ஹீதுவாதிகளைத் துரத்தியடித்தனர்.

வணக்க வழிபாடுகளிலும் வாழ்க்கை நெறிகளிலும் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றிச் செயல்படுவதற்காக ஏகத்துவவாதிகள் பெரும் விலையைக் கொடுத்தனர். இரத்தம் சிந்தினர். காவல்துறையின் மூலம் நெருக்கடிக்கு உள்ளாயினர். சிறைவாசம் அனுபவித்தனர். நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் நெடுங்காலம் ஏறி இறங்கினர்; இதுவரை ஏறி இறங்கிக் கொண்டு இருக்கின்றனர்.

பிறை விஷயமும் பெருநாள் விஷேசமும்

இத்தனை சோதனைகளையும் தாங்கிக் கொண்ட ஏகத்துவவாதிகள் பெருநாள் விவகாரத்தில் ஏற்படும் பிரிவினையைத் தாங்குவார்களா? என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. பிறை தொடர்பாக சரியான தகவல் கிடைக்காத சமயத்தில், நாம் தனியாகப் பெருநாள் கொண்டாடுவோம் என்று சொல்லும் போது தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ள ஒரு சில சகோதரர்களின் விழிகள் கூடப் பிதுங்கியிருக்கின்றன.

மயிரிழையில் உயிர் தப்புவது போல் ஒவ்வொரு தடவையும் கடைசி நேரத்தில் எங்காவது பிறை பார்த்த தகவல் கிடைத்து, பெருநாளில் பிரிவினை ஏற்படாமல் இருந்தது.

நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ

இந்த ஹதீஸ் அடிப்படையில் பிறை விஷயத்தில் ஒரு போதும் மோதல் வராது என்ற நம்பிக்கை இருந்தது. அதற்குத்தக்க ஜாக் இயக்கத்தின் கணிப்புப் பிறை, தகவல் பிறை, சவூதிப் பிறை போன்றவற்றின் மூலம் சமுதாயத்தில் பெருநாளைத் திணித்த போது நாம், “அண்ணனுக்கு ஒரு பெருநாள்; தம்பிக்கு ஒரு பெருநாள்’ என்று விமர்சனம் செய்தோம்.

இவையும் தவ்ஹீது சகோதரர்களின் உள்ளங்களில் உரமாகப் பதிந்து விட்டது. இப்படி ஒரு பதினைந்து ஆண்டு கால அளவு உருண்டோடி விட்டது. இப்போது தான் நம்முடைய எதிரிகள் நம்மைப் பார்த்து, “இவர்கள் கூட்டம் கூட்டுவதற்காகவும், வசூலுக்காகவும் ஊருக்கு ஒத்துப் போகின்றனர்’ என்ற பொய்யான குற்றச்சாட்டை நம் மீது வீசியெறிந்தனர்.

உண்மையில் பிறை விஷயத்தில் சு.ஜ.வினருக்கும் நமக்கும் மத்தியிலுள்ள தேனிலவு என்றாவது ஒரு நாள் முறியத் தான் செய்யும் என்ற எண்ணம் உள்ளூர இல்லாமல் இல்லை. ஏனெனில் சு.ஜ.வினரைப் பொறுத்த வரை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் செயல்படுபவர்கள் கிடையாது. அதனால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்று ஓரளவு நாம் எதிர்பார்த்தே இருந்தோம். அது இந்த ஹஜ் பெருநாளில் நிகழ்ந்து விட்டது.

ஹஜ் பெருநாள் தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமை அறிவிக்க முனைகின்ற போது, பிறை பார்க்கும் குழுவினரிடமிருந்து பெற்ற பதில் நவம்பர் 7 அன்று எங்குமே பிறை தென்படவில்லை என்பது தான்.

ஒருவேளை சுன்னத் ஜமாஅத்தினர் பார்த்திருக்கலாமோ என்றெண்ணி, டவுண் காஜியிடம் விசாரித்த போது, தமிழகத்தில் எங்கும் பார்க்கப்படவில்லை என்றே கூறினார். அதன் பின்னர் தொடர்பு கொண்ட போது, மாலேகானில் பிறை பார்த்திருப்பதாகக் கூறினார். மாலேகான் பிறையை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என்று கேட்ட போது, மாலேகான் பக்கத்தில் தானே உள்ளது என்று உளறினார். இந்த உளறலையே பெருநாளாக தமிழகத்திற்கும் அறிவித்தார். உல(க)மாக்கள் சபையும் அதை ஏற்றது.

தவ்ஹீத் ஜமாஅத்தின் அறிஞர் குழு உடனே கூடி ஆய்வு செய்தது. 6ஆம் தேதி சவூதியில் முதல் பிறை என்று அறிவித்த நாள் அமாவாசை! அன்று பிறை பார்ப்பதற்கு அறவே சாத்தியமில்லை. நவம்பர் 6 அன்று சவூதியின் மக்கா நேரப்படி மாலை 5.42 மணிக்கு சூரியன் அஸ்தமனமாகின்றது. அதே மாலை 5.47 மணிக்கு சந்திரன் அஸ்தமனமாகின்றது. எனவே இந்த ஐந்து நிமிட இடைவெளியில் பிறை பார்ப்பது சாத்தியமே இல்லை.

சவூதி மட்டுமின்றி உலகின் எல்லா பகுதிகளிலும் இதே நிலை தான். 7ஆம் தேதி பிறை பார்ப்பதற்கு சாத்தியம் இருந்தது. ஆனால் ஜல் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் மேக மூட்டமாக இருந்ததால் பிறை பார்க்க வாய்ப்பில்லை. பிறை தென்படவில்லை. ஆக தமிழகமெங்கும் தலைப்பிறை தென்படவேயில்லை.

அதனால் நமக்கு முன்னால் இருப்பது ஒரே ஒரு வழி தான். அது நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த, காட்டித் தந்த வழி!

அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1909

அந்தந்த பகுதிகளில் பிறை காண்பதன் அடிப்படையிலேயே நோன்பு மற்றும் பெருநாட்களைத் தீர்மானிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்தவரை தமிழகத்தில் எங்கு பிறை கண்டாலும் ஏற்பது என்ற முடிவை எடுத்துள்ளது. பிற மாநிலப் பிறையை ஏற்பது கிடையாது. (இது குறித்த விளக்கத்தைத் தனித் தலைப்பில் காண்க.)

நபி (ஸல்) அவர்களின் ஹதீசுக்கும், அதற்கேற்றவாறு எடுக்கப்பட்ட முடிவுக்கும் மாற்றமாகச் செயல்படுவது சந்தர்ப்பவாதமாகும்.

எனவே எந்த நிலைப்பாடும் இல்லாமல், மார்க்க ஆதாரமும் இல்லாமல் தான்தோன்றித்தனமாக டவுண் காஜி அறிவித்த பிறையை ஏற்பதில்லை என்றும், தனியாகப் பெருநாள் கொண்டாடுவது என்றும் முடிவெடுத்தது.

இந்த அறிவிப்பு கொள்கைச் சகோதரர்களுக்கு ஓர் அதிர்ச்சியாகவும் ஒப்புக் கொள்வதற்குக் கசப்பாகவும் ஆனது.

பிற மாநிலப் பிறை – ஒரு பார்வை

மக்கள் தீர்மானிக்கும் நாளில் தான் நோன்பு, பெருநாள் என்று வரும் ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு தானே நாம் ஜாக்கை விமர்சனம் செய்தோம்; இப்போது நாமே தனியாகப் பெருநாள் கொண்டாடலாமா? என்றெல்லாம் நமது சகோதரர்கள் கேள்வி கேட்டார்கள். இந்த ஹதீஸை சரியான அடிப்படையில் புரிந்து கொள்ளாததால் இவ்வாறு கேட்கின்றார்கள்.

மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1907

மாதம் என்பது 29 அல்லது 30 நாட்கள் தான். இதற்கு மாற்றமாக ஒருவர் ஷஅபான் பிறை 28ல் நோன்பு என்றோ அல்லது ரமளான் பிறை 31ல் பெருநாள் என்றோ அறிவித்தால் ஏற்றுக் கொள்வோமா? என்றால் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

நோன்பு வைப்பதாக இருந்தாலும் பெருநாள் கொண்டாடுவதாக இருந்தாலும் 29ஆம் நாளில் பிறை பார்க்க வேண்டும். பிறை தென்படாவிட்டால் 30ஆகப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த அடிப்படையில் மக்கள் தீர்மானித்தால் தான் அதை ஏற்றுக் கொள்ள முடியும். இதல்லாமல் இஷ்டத்திற்குத் தீர்மானிப்பதற்கு, “மக்கள் தீர்மானித்தல்’ என்று கூற முடியாது. அது மனோ இச்சையைப் பின்பற்றுவதாகும்.

இந்த அடிப்படையில் தான் டவுன் காஜியின் பிறை அறிவிப்பை நாம் எதிர்க்கின்றோம்; விமர்சனம் செய்கின்றோம்.

கடந்த நோன்புப் பெருநாளில் டெல்லி, மும்பை, பெங்களூர் போன்ற அனைத்துப் பகுதிகளிலும் நமக்கு ஒரு நாளைக்குப் பின்னால் தான் பெருநாள் கொண்டாடினர்.

அங்குள்ள பிறையை இந்த டவுண் காஜி ஏற்றுக் கொள்ளவில்லை. இங்கு பார்த்த பிறையை அவர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏன்? இந்தியா முழுவதும் ஒரே பிறை என்பது ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதால் தான்.

தமிழகத்தில் பார்க்கப்பட்ட பிறையை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் ஏற்றுக் கொண்டால், மக்கள் தீர்மானிக்கும் நாள் என்பதை இந்தியா முழுவதுக்கும் பொருத்திப் பார்க்கலாம். ஆனால் அவ்வாறு தமிழகத்தில் பார்க்கப்பட்டதை இந்தியாவின் பிற பகுதிகளில் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில், மக்கள் தீர்மானிப்பது என்பது தமிழக அளவில் தான் என்றாகி விடுகின்றது. அது தான் பொருத்தமாகவும் செயல்படுவதற்கு எளிதாகவும் உள்ளது.

தமிழக அளவில் பிறையைத் தீர்மானித்ததால் கடந்த சில ஆண்டுகள் தமிழகம் முழுவதும் எவ்வித பிரச்சனையும் இன்றி நோன்பு வைக்க முடிந்தது. பெருநாளும் கொண்டாட முடிந்தது. எனவே நமது பகுதி எது என்பதை மக்கள் தீர்மானிப்பதில் பிற மாநிலப் பிறை ஏற்றுக் கொள்வது அடங்காது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

பிறை தொடர்பான இந்த விளக்கத்தையும் டவுன் காஜியின் இந்தக் குழப்பத்தையும் கொள்கைச் சகோதரர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் தலைமை தெளிவாக விளக்கியது. இதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

கூட்டத்திற்குத் தக்க கொள்கையை மாற்றும் கூட்டத்தினர், “சுன்னத் ஜமாஅத்தை வைத்துத் தான் படம் காட்டினீர்கள்; இப்போது அது வெளிச்சமாகி விடும்’ என்றெல்லாம் கேலியும் கிண்டலும் பேசினர்.

இவ்வளவு நாளும் வசூல் மழையை எழுதினீர்கள். 18ஆம் தேதி வசூலை எழுதுங்கள், பார்ப்போம் என்று சவால் விட்டனர்.

18ஆம் தேதியன்று திடல்கள் வெறிச்சோடிக் கிடக்கும்; தவ்ஹீத் ஜமாஅத் ஒரு வெற்றுக் கூடாரமாகி விடும் என்று கனவு கண்டவர்களின் கண்களில் அல்லாஹ் மண்ணை அள்ளிப் போட்டு விட்டான். அவர்களை நிலைகுலையச் செய்து விட்டான். அல்ஹம்துலில்லாஹ்!

ஒவ்வொரு பெருநாளின் போதும் அலை அலையாக வந்த அதே கூட்டம் அணை உடைத்த வெள்ளம் போல் 18ஆம் தேதி பெருநாள் திடலிலும் வந்து சூழ்ந்தது. திடல்கள் பொங்குமாங் கடலாய் பொங்கி வழிந்தன. படையெடுத்து வந்த பத்திரிகையாளர்களின் படங்களும் இதை நிரூபிக்கின்றன. ஒளி நாடாக்கள் இந்த வரலாற்று நிகழ்வை ஒன்று விடாது பதிவு செய்திருக்கின்றன.

முஃப்தியா? முஃப்த்தினா?

முஃப்தி எனற பெயரில் முஃப்த்தினாக (குழப்பவாதியாக) செயல்படுகின்ற டவுண் காஜியின் ஏகபோக பிறை சாம்ராஜ்யம் இதன் மூலம் உடைத்தெறியப்பட்டுள்ளது. பிறை விஷயத்தில் இதுவரை தான்தோன்றித்தனமாக அறிவித்து வந்த ஒரு தனிநபர் ஆதிக்கத்தை தவ்ஹீத் ஜமாஅத் உடைத்து, தனி சமுதாயமாகப் பரிணமித்தது.

இப்ராஹீம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவராகவும், உண்மை வழியில் நின்றவராகவும் இருந்தார். இணை கற்பிப்பவராக அவர் இருந்ததில்லை.

அல்குர்ஆன் 16:120

இப்ராஹீம் (அலை) அவர்கள் பாதையில், அவர்களின் தியாகத்தை மையமாகக் கொண்ட தியாகத் திருநாளில் தவ்ஹீத் ஜமாஅத் தன்னுடைய முத்திரையைப் பதித்தது.

இப்ராஹீம் நபி, ஊரை – உலகத்தை அல்லாஹ்வுக்காகப் பகைத்தார்கள்.

உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டதுஎன்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.

அல்குர்ஆன் 60:4

அந்த ஏகத்துவ இமாமின் நினைவாக அமைந்த இந்த இறை தியான நாட்களில் தவ்ஹீத் ஜமாஅத் அல்லாஹ்வுக்காக மக்களைப் பகைத்துக் கொண்டது.

வணக்க வழிபாடுகளில், திருமண, மரண நிகழ்வுகளில் உங்களைப் பகைத்தோம். உங்களுக்கும் எங்களுக்கும் எஞ்சிய உறவு ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுவது தான். இப்போது அதையும் அல்லாஹ்வுக்காகப் பகைத்து விட்டோம் என்று 18ஆம் தேதி தவ்ஹீத் ஜமாஅத் நிரூபித்து விட்டது.

கூட்டத்திற்காகவோ, வசூலுக்காகவோ குராபிகளுடன் சேர்ந்து கொண்டாடவில்லை. அவர்களது நோன்பும் பெருநாளும் ஹதீசுக்கு ஒத்திருந்தது. அதனால் அவர்களுடன் ஒத்துப் போனோம். அவர்கள் உண்மைக்கு ஒத்துப் போகவில்லை. அதனால் அவர்களைப் பிரிந்து விட்டோம். இது தான் உண்மை.

“இவ்வளவு நாள் எங்களுடன் சேர்ந்து பெருநாள் கொண்டாடினீர்கள்; இப்போது பிரிந்து விட்டீர்களே’ என்று கேட்கும் சுன்னத் ஜமாஅத்தினருக்கும் நாம் கூறுவது இது தான். நாங்கள் எதையுமே ஆதார அடிப்படையில் தான் பின்பற்றுவோம்; அனுமான அடிப்படையில் அல்ல. இதைத் தான் இந்தப் பெருநாள் நிரூபித்துக் காட்டியுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்.

இவ்வாறே நீங்கள் (மற்ற) மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், இத்தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும் உங்களை நடு நிலையான சமுதாயமாக்கினோம். வந்த வழியே திரும்பிச் செல்வோரிலிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே, ஏற்கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ணயித்திருந்தோம். அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டினானோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கிறது. அல்லாஹ் உங்கள் நம்பிக்கையைப் பாழாக்குபவனாக இல்லை. அல்லாஹ் இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 2:143

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஏற்பட்ட இந்தக் கிப்லா மாற்றம் நயவஞ்சகர்களை அடையாளம் காட்டியது போல் தவ்ஹீத் ஜமாஅத்தில் வேஷம் போட்டுக் கொண்டிருந்த பச்சோந்திகளையும் இந்தப் பெருநாள் பிரித்துக் காட்டியது.