பிற மேடைகளில் பிரச்சாரம் தவ்ஹீத் ஜமாஅத் நிலைப்பாடு

பிற மேடைகளில் பிரச்சாரம் தவ்ஹீத் ஜமாஅத் நிலைப்பாடு

ஆர். ரஹ்மத்துல்லாஹ்

சென்ற இதழின் தொடர்ச்சி..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பேச்சாளர்கள் பிற அமைப்பினரோடு இணைந்து பிரச்சாரம் செய்யும் போது நமது பேச்சாளர்களுக்கு ஏற்படும் அவலங்களைப் பற்றிக் கடந்த இதழில் அறிந்தோம்.

அதே போல், பல்வேறு கொள்கையுடையோர் ஒன்றிணைந்து செய்யும் பிரச்சாரத்தைக் கேட்கும் மக்களுக்கு ஏற்படும் அவலங்களைப் பார்ப்போம்.

கொள்கைக் குழப்பம்

அல்லாஹ்வையன்றி வேறு யாரையும் வணங்கக்கூடாது என்ற ஏகத்துவக் கொள்கையை ஏற்ற மக்கள், தான் மட்டும் ஏற்றுக் கொண்டதோடு நிறுத்தி விடாமல் பிற மக்களுக்கும் இந்தக் கொள்கை சென்றடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் சத்தியப் பிரச்சாரம் எந்தப் பகுதியில் நடந்தாலும் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வண்ணம் அங்கு சென்று சங்கமமாகி விடுவார்கள். இப்படிப்பட்ட தியாகிகளின் கொள்கைக்கு வேட்டு வைக்கும் செயல் தான் பலதரப்பட்ட கொள்கையுடையோர் ஒரே மேடையில் சொற்பொழிவாற்றுவது!

எந்த அளவிற்கென்றால் மத்ஹபைப் பின்பற்றக்கூடாது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை மட்டுமே வழிகாட்டியாகப் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்கள் இது போன்ற பலதரப்பட்ட கொள்கையுடையோரால் நடத்தப்படும் கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது அந்த மேடையில் ஓர் அறிஞர், “மத்ஹபைப் பின்பற்றக்கூடாது; தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை மட்டுமே பின்பற்ற வேண்டும்’ என்று முழக்கமிட மற்றொரு அறிஞர், “ஸஹாபாக்களை மார்க்கத்தின் வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளலாம்’ எனவும் பிரச்சாரம் செய்வார். இந்த இரண்டு உரையையும் பார்க்கும் மக்கள், எது  சரியான கொள்கை என்பதைக் கண்டறியாமல் குழப்பத்திற்கு ஆளாகிவிடும் சூழ்நிலை ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டும் உள்ளது.

கடந்த காலங்களில் நெல்லை, கோவை போன்ற மாவட்டங்களில் உள்ள சில பள்ளிவாசல்களில் ஒரு வாரம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பிலும் ஒரு வாரம் ஜாக் அமைப்பு சார்பிலும் ஜுமுஆ பிரசங்கம் நடைபெற்று வந்தது. அப்போது ரமலான், ஹஜ் பெருநாட்களின் போது பிறை விஷயமாக நம் ஜமாஅத் சார்பில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஒரு நிலைப்பாட்டை அறிவிப்போம். அதற்கு மாற்றமாக ஜாக் தரப்பில் ஒரு நிலைப்பாட்டில் அறிவிப்பார்கள். இருவரும் ஒரே பள்ளியில் வாரம் விட்டு வாரம் ஜுமுஆ பிரசங்கம் செய்வதால் ஒருவரையொருவர் சாடிப் பேசாமல் தங்களது நிலைப்பாட்டை மட்டும் அறிவிக்கும் நிலைக்குப் தள்ளப்பட்டார்கள்.

இதனால் பார்க்கும் மக்கள் குழம்பிப் போய், “பெருநாள் திங்களா? அல்லது செவ்வாயா?’ எனக் கேட்க அதற்கு அந்தச் சபையில் தர்க்க ரீதியாக பதில் சொல்லாமல் ஜாக் சார்பில் திங்கள்கிழமை பெருநாள் எனவும் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் செவ்வாய்கிழமை பெருநாள் எனவும் கூறி இதனால் மக்கள் குழப்பிப் போய் தங்களின் இபாதத்தே கேள்விக்குறியாகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். நம் ஜமாஅத் சார்பில் மார்க்க ரீதியாகப் பதில் கொடுக்கத் தெரிந்தாலும் பிற மேடைகளைப் பகிர்ந்து கொள்ள முடியாமல் போய்விடுமே என்கிற குறுகிய சிந்தனையே இந்த அவலத்தை ஏற்படுத்திவிட்டது.

நம்பிக்கை துரோகம்

பலதரப்பட்ட கொள்கையுடையோர் தங்கள் கருத்துக்களையும் கொள்கைகளையும் சரிசெய்து கொள்ளாமல் சமரசத்துடனும் சுயநலத்துடனும் ஒன்றிணைந்து பிரச்சாரம் செய்வதைப் பார்த்தால் இந்த மக்களின் கொள்கையில் தான் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றாலும் இன்னொரு பக்கம் இந்த அப்பாவி மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் செய்து அவர்களை பெருத்த ஏமாற்றத்தில் தள்ளிவிடுகின்றனர்.

தவ்ஹீத் கொள்கையை ஏற்ற மக்கள் வெறுமனே சத்தியவாதிகளின் பிரச்சாரத்தை மட்டுமே பார்த்து இந்த கொள்கையை ஏற்பது கிடையாது. மாறாக இந்தப் பிரச்சாரகர்களின் ஒழுக்கம், நேர்மை, நாணயம் ஆகியவற்றையும் பார்த்துத் தான் இந்தக் கொள்கையை ஏற்கின்றனர். இதுவே இயல்பு.

இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன். விளங்க மாட்டீர்களா?” என்று (முஹம்மதே!) கூறுவீராக

அல்குர்ஆன் 10:16

நான் சத்தியத் தூதர், என்னைப் பின்பற்றுங்கள் எனக் கூறாமல்  உங்களுக்கு முன்னால் பல ஆண்டுகள் நான் வாழ்ந்துள்ளேன்; என் ஒழுக்கத்தையும் நேர்மையையும் பார்த்து இந்தக் கொள்கைக்கு வாருங்கள். என்னை நம்புங்கள் என நபி (ஸல்) அவர்கள் அம்மக்களை சத்தியத்தின்பால் அழைக்கும் போது, தனது நாணயத்தையும் நேர்மையையும் ஒழுக்கத்தையும் வெளிப்படுத்தினார்கள்.

அதைப் போன்று தான் மக்களும் சத்தியப் பிரச்சாரம் செய்வோரை நன்மையை ஏவுபவராகவும், தீமையைத் தடுப்பவராகவும் மட்டும் பார்க்காமல் அவர் ஒழுக்கமுள்ளவராகவும் பார்க்கிறார்கள். ஒருவரை நாம் ஒழுக்க மாண்பு மிக்கவராகப் பார்க்கும் போது அவர் யாருடன் பழகினாலும், யாருடன் இணைந்து மேடையில் சொற்பொழிவு நிகழ்த்தினாலும் அவர்களையும் கண்ணியமானவராகவே கருதுவார்கள்.

அதற்குக் காரணம், நாம் யாரை ஒழுக்கமுள்ளவர் என்று நினைக்கிறோமோ அவர்கள் கழிசடைகளுடன் சகவாசம் வைக்க மாட்டார்கள்; என்றென்றும் ஒழுக்கமுடையோருன் மட்டுமே சகவாசம் வைப்பார்கள் என்று அவர்கள் மீது அளப்பரிய நம்பிக்கை இருக்கும். அதுமட்டுமின்றி இந்த சத்தியப் பிரச்சாரகர்கள் நடத்தை கெட்டோரையும் தவறான கொள்கையுடையோரையும் கண்டால் கடிந்து பேசுவார்களே தவிர அவர்களுடன் பல்லிளிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கும்.

உதாரணமாக, ஒழுக்கக் கேடு மற்றும் பண மோசடியின் காரணமாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட பாக்கரைப் பற்றி நாம் கடுமையாக விமர்சிக்கிறோம். அவர் கடந்த காலங்களில் அடிக்கடி திண்டுக்கல் சென்றார். ஏன் சென்றார்? எதற்காக சென்றார்? என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் இன்று அவரால் திண்டுக்கல்லில் ஒரு குடும்பம் நாசமாகி அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியான காரணத்தால், தனக்கு ஏற்பட்ட இந்தப் பாதிப்பு வேறு எந்தக் குடும்பத்திற்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, பாதிக்கப்பட்ட கணவர் கண்ணீர் மல்கக் கொடுக்கிறார்.

“என்னுடைய மணைவி பாக்கரின் உடன் பிறந்த அக்காள் மகள் என்ற உறவைச் சொல்லி அடிக்கடி எனது வீட்டிற்கு வந்திருக்கிறார். அதுவும் நானும் எனது பிள்ளைகளும் வீட்டில் இல்லாத போது பல முறை வீட்டிற்கு வந்திருக்கிறார்; தங்கியுமிருக்கிறார். மிக நெருங்கிய உறவினர் என்று விட்டு விட்டேன். ஆனால் பின்னால் தான் தெரிந்தது, அவருக்கும் எனது மனைவிக்கும் எந்தவிதச் சொந்தமும் இல்லை என்பது” என்று அவர் தனது பேட்டியில் கூறினார்.

பாதிக்கப்பட்ட அந்த அப்பாவி வீடியோவில் பேட்டியாகக் கொடுத்து, அது ஒரு இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

பாக்கர் இறையச்சத்தோடு (?) கத்தி, ஆக்ரோஷமாகப் பேசுபவர், இந்த இழிசெயலைச் செய்து விட்டார் என்ற மிகப் பெரிய நம்பிக்கைத் துரோகத்துக்கு ஆளாக்கப்பட்டு, தனது மனைவியை தலாக் விட்டுவிட்டார்.

இப்போது கவனியுங்கள்! இப்படிப்பட்ட கழிசடைகளை வன்மையாகக் கண்டித்து ஒரு புறம் பேசிவிட்டு, மறுபுறம் அவருடன் ஒரே மேடையில் பேசி அந்தக் கழிசடைகளுக்கு நற்சான்று கொடுத்தால் அது, நம் மீது நல்லபிப்ராயம் கொண்ட மக்களுக்கு நாம் செய்யும் துரோகமே அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

சிதிலடையும் சிந்தனைத் திறன்

எதைச் சொன்னாலும் செம்மறி ஆட்டுக் கூட்டத்தைப் போல் தலையாட்டிக்  கொண்டிருந்த நாம் இன்று அல்லாஹ்வின் கிருபையால் குர்ஆனையும் நபிமொழிகளையும் சிந்தித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்.

இவ்வாறு சிந்தித்து செயல்படுவதையே இஸ்லாம் மிகவும் வலியுறுத்துகிறது.

அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள்.

அல்குர் ஆன் 25:73.

அல்லாஹ்வின் வசனங்களைச் செவியேற்போர் அதைச் சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என்ற இந்த இறைவசனத்தை நம் ஜமாஅத்தின் சார்பில் நடத்தப்படும் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் வலியுறுத்தி மக்களை சிந்திக்கத் தூண்டுகிறோம்.

எந்த அளவிற்கென்றால் கப்ர் வழிபாட்டை வலியுறுத்தி எந்த ஆலிம்சாவாவது உரை நிகழ்த்திவிட்டால் அதற்கு நாம் தனி மேடை போட்டு அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் பதிலளிப்பதுடன் அந்த ஆலிம்சாவுக்கு சில கேள்விக் கணைகளைத் தொடுப்போம். அதற்கு அந்த ஆலிம் (?) பதில் சொல்ல முடியாமல் திணறிப் போய்விடுவார். அதைப் பார்க்கும் மக்கள் யாரிடம் சத்தியம் உள்ளது என சிந்தித்து உணர்வார்கள்.

ஆனால் பலதரப்பட்ட கொள்கையுடையோர் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தால் ஒருவரது தவறை மற்றொருவர் கண்டிக்க முடியாமல் போய்விடும். இதனால் யாருடைய கருத்துக்கள் சரியானவை எனக் கண்டுபிடிக்க முடியாமல் போய் மக்கள் சிந்திக்க மறந்து விடுவார்கள். இதனால் மீண்டும் வந்த வழியே திரும்பிப் போகும் அவலநிலைக்கு ஆளாக்கப்படுவார்கள்.

எனவே பலதரப்பட்ட கொள்கையுடையவர்களின் சமரசப் பேச்சைக் கேட்டு செல்லாக் காசாகிப் போய்விடாமல் குர்ஆனையும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளையும் மட்டும் கொள்கையாகக் கொண்டு, நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் தனித்தன்மையோடு செய்யப்படும் பிரச்சாரத்தில் பங்கேற்று ஈருலகத்திலும் வெற்றிபெற வல்ல ரஹ்மான் நமக்கு அருள்புரிவானாக.