பெண்களின் உடைகள்

ஆடைகள்                                                    தொடர்: 3

பெண்களின் உடைகள்

எஸ். யூசுப் பைஜி

சென்ற இதழ்களில் ஆண்களின் ஆடையைப் பற்றித் தெரிந்து கொண்டோம். இந்த இதழில் பெண்களுக்குரிய ஆடைகளைப் பற்றிப் பார்க்கவிருக்கிறோம்.

இந்தத் தொடரில் முக்கியமாக, பெண்கள் தங்களுடைய மேனியில் எந்த அளவு மறைக்க வேண்டும்? கைகள், பாதம், முகம் இவைகளைக் கட்டாயமாக மறைக்க வேண்டுமா? என்பன போன்ற பல சட்டங்களை ஆதாரத்துடன் பார்க்கவிருக்கிறோம்.

பெண்கள் உடலை எந்த அளவுக்கு மறைக்க வேண்டும் என்பதற்கு ஆதாரமாகப் பின்வரும் வசனம் அமைந்துள்ளது.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றி யடைவீர்கள்.

(அல்குர்ஆன் 24:31)

“தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர” என்ற சொற்றொடர் இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ளது.

“வெளியே தெரிபவை தவிர” என்ற சொற்றொடர் முகம், முன் கைகள் ஆகிய இரண்டையும் தான் குறிக்கிறது என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். இப்னு அப்பாஸ் (ரலி) உள்ளிட்ட பல நபித் தோழர்கள் இவ்வாறு விளக்கம் அளித்திருப்பதை இதற்குச் சான்றாக எடுத்துக் காட்டுகின்றனர்.

முகம், முன் கைகளை பெண்கள் வெளிப்படுத்தலாம் என்ற வாதத்தை நாம் ஏற்றுக் கொண்டாலும் அந்த வாதத்திற்கு மேற்கண்ட வசனத்தை ஆதாரமாகக் கொள்வதை நாம் நிராகரிக்கிறோம்.

பெண்களின் உடலில் எந்தப் பகுதிகளை வெளிப்படுத்தலாம்? எந்தப் பகுதிகளை மறைக்க வேண்டும் என்பதற்கும் மேற்கண்ட வசனத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

இவ்வசனத்தில், “தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம்” என்ற வாக்கியம் உள்ளது.

அலங்காரம் என்று நாம் மொழி பெயர்த்த இடங்களில் ஸீனத் என்ற அரபுச் சொல் இடம் பெற்றுள்ளது. இச்சொல்லுக்கு அழகு என்று பலர் விளக்கம் கூறினாலும் இச்சொல்லுக்கு அலங்காரம் என்பதே சரியான பொருளாகும்.

அழகு என்பது ஒருவரது உடலில் இயற்கையாக அமைந்துள்ள கவர்ச்சியைக் குறிக்கும். அதாவது ஒருவரது நிறம், முக அமைப்பு, கட்டான உடல், உயரம், பார்ப்பவரை ஈர்க்கும் வகையில் அமைந்த பற்கள், கண்கள் போன்றவற்றை அழகு என்ற சொல் குறிக்கும்.

உடலின் ஒரு பகுதியாக இல்லாத ஆபரணங்கள், ஆடைகள், மேக்கப் செய்தல், லிப்ஸ்டிக் போன்றவற்றை அலங்காரம் என்ற சொல் குறிக்கும்.

அழகை வெளிப்படுத்த வேண்டாம் என்பது உடல் உறுப்புக்களைக் குறிக்கும். அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்பது உடல் உறுப்புக்களைக் குறிக்காது. இதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆனில் ஸீனத் என்ற சொல் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த இடங்களைக் கவனமாக ஆராய்ந்தால் ஸீனத் என்பது அலங்காரத்தைத் தான் குறிக்கும் என்பதைச் சந்தேகமற அறியலாம்.

வானத்தில் நட்சத்திரங்களை அமைத்தோம். பார்ப்போருக்கு அதை அழகாக்கினோம். (15:16)

முதல் வானத்தை நட்சத்திரங்கள் எனும் அலங்காரம் மூலம் நாம் அலங்கரித்துள்ளோம். (37:6)

இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான். ஒவ்வொரு வானத்திலும் அதற்குரிய கட்டளையை அறிவித்தான். கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். (அவற்றை) பாதுகாக்கப்பட்டதாக (ஆக்கினோம்). இது அறிந்தவனாகிய மிகைத் தவனின் ஏற்பாடாகும். (41:12)

அவர்களுக்கு மேலே உள்ள வானத்தை எவ்வாறு அமைத்து அதை அழகுபடுத்தியுள்ளோம் என்பதை அவர்கள் கவனிக்க வில்லையா? அதில் எந்த ஓட்டைகளும் இல்லை. (50:6)

முதல் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். அதை ஷைத்தான்கள் மீது எறியப்படும் பொருட்களாக ஆக்கினோம். அவர் களுக்கு நரகத்தின் வேதனையைத் தயாரித்துள்ளோம். (67:5)

மேற்கண்ட வசனங்களில் நட்சத்திரங்கள் வானத்துக்கு அலங்காரமாக அமைந்துள்ளதாக அல்லாஹ் கூறுகின்றான்.

நட்சத்திரங்கள் வானத்தின் ஓர் அங்கம் அல்ல! வானத்தில் ஓர் அங்கமாக இல்லாமல் வானத்துக்குக் கவர்ச்சியை நட்சத்திரங்கள் அளிக்கின்றன. இதைக் குறிப்பிட இறைவன் ஸீனத் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளான்.

அவர்களில் அழகிய செயலுடையவர் யார் என்பதைச் சோதிப்பதற்காகப் பூமியில் உள்ளதை அதற்கு (பூமிக்கு) அலங்காரமாக நாம் ஆக்கினோம். (18:7)

பூமியின் மேலுள்ள புற்பூண்டுகள் பூமிக்கு ஸீனத் (அலங்காரம்) என்று அல்லாஹ் கூறுகின்றான்.

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்! உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான். (7:31)

தொழுமிடத்தில் அலங்காரம் செய்து கொள்ளுங்கள் என்பது உடல் அழகைக் குறிக்காது. அவ்வாறு குறித்தால் உடல் அழகு இல்லாதவர்கள் பள்ளிக்கு வருவது குற்றமாகி விடும். அணிகின்ற ஆடை நல்ல முறையில் அமைய வேண்டும் என்பதையே மேற்கண்ட வசனம் குறிப்பிடுகின்றது.

24:31 வசனத்தில் இடம் பெற்றுள்ள ஸீனத் என்ற சொல்லின் பொருளை விளக்குவதற்காகவே மேற்கண்ட வசனங்களை நாம் எடுத்துக் காட்டுகிறோம்.

அலங்காரம் என்பதில் உடல் உறுப்புக்கள் அடங்காது என்றால் “முகம், கைகள் தவிர’ என்று பொருள் கொள்வது பொருத்தமாகாது.

பெண்கள் ஆபரணங்கள் அணிந்த நிலையில், லிப்ஸ்டிக் போட்டுக் கொண்ட நிலையில், மேக்கப் செய்து கொண்ட நிலையில் அன்னிய ஆண்களுக்கு முன்னால் காட்சி தரலாகாது. மேற்கண்ட வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்கள் முன்னிலையில் தவிர மற்ற ஆண்கள் முன்னிலையில் அலங்காரம் செய்யாமல் இயற்கையான தோற்றத்தில் தான் இருக்க வேண்டும். இது தான் இவ்வசனத்தின் கருத்தாகும்.

இவ்வசனத்தில் முகம், கைகளை மறைக்க வேண்டும் என்றும் கூறப்படவில்லை; மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறப்படவில்லை. உடல் அங்கங்கள் பற்றி இவ்வசனம் பேசவில்லை.

அப்படியானால், அலங்காரத்தில் வெளியே தெரிபவற்றைத் தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம் என்பதில் “வெளியே தெரிபவை’ என்பது எதைக் குறிக்கின்றது?

நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டியபடி அலங்காரம் என்பது நகைகள், முகப் பவுடர், லிப்ஸ்டிக் ஆகியவற்றுடன் ஆடையையும் குறிக்கும். உடலை மறைப்பதற்காக அணியும் ஆடைகள் கூட ஒருவருக்கு அலங்காரம் தான். அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம் என பொதுப்படையாகக் கூறினால் ஆடை அணியாமல் இருக்க வேண்டும் என்ற கருத்து வந்து விடும்.

மற்ற அலங்காரத்தை மறைக்கலாம், அல்லது தவிர்க்கலாம். ஆனால் ஆடை எனும் அலங்காரத்தை மறைக்கவும் முடியாது, தவிர்க்கவும் முடியாது. மறைப்பதற்காக ஆடையின் மேல் மற்றோர் ஆடையைப் போர்த்தினால் போர்த்தப்பட்ட ஆடையும் அலங்காரத்தில் அடங்கி விடும்.

என்ன செய்தாலும் வெளியே தெரிந்தே தீர வேண்டியதாக ஆடை எனும் அலங்காரம் அமைந்துள்ளது. எனவே வெளியே தெரிந்தே தீர வேண்டிய ஆடை என்ற அலங்காரம் தவிர மற்ற எந்த அலங்காரத்தையும் அன்னியர் முன் காட்ட வேண்டாம் என்று தெளிவு படுத்தவே, “வெளியே தெரிபவை தவிர” என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கருத்தை நபித் தோழர்களில் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியுள்ளனர். மற்றவர்கள் ஸீனத் என்பதற்கு அலங்காரம் என்ற பொருளை ஏற்றுக் கொண்டாலும் சுற்றி வளைத்து வியாக்கியானம் கொடுத்து, முகம், கைகளை மறைக்கத் தேவையில்லை என்ற கருத்தை இவ்வசனம் கூறுவதாகக் குறிப்பிடுகின்றனர்.

ஸீனத் என்ற சொல்லின் நேரடி அர்த்தத்தின் படியும், திருக்குர்ஆனில் பிற இடங்களில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ள படியும் நாம் கூறிய விளக்கம் தான் சரியானதாகும்.

பெண்கள் முகத்தையும், முன் கைகளையும் மறைப்பது அவசியமா? இல்லையா? என்றால் அதற்கு வேறு ஆதாரங்களைத் தான் எடுத்துக் காட்ட வேண்டும். மேற்கண்ட வசனத்தை இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டக் கூடாது.

பெண்கள் தமது முகத்தையும், முன் கைகளையும் அன்னிய ஆண்கள் முன் மறைப்பது அவசியம் இல்லை என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

முதலில் முகத்தை மறைக்க வேண்டும் என்று சொல்லக் கூடியவர்களின் ஆதாரங்களைப் பாôத்து விட்டு, முகத்தை மறைக்க வேண்டிய கட்டாயமில்லை விரும்பினால் மறைக்கலாம் என்று வரக் கூடிய ஹதீஸ்களைப் பார்ப்போம்.

“நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இஹ்ராம் அணிந்தவர்களாக (ஹஜ்ஜுக்காகப் புறப்படுவோம்) வாகனத்தில் செல்பவர்கள் எங்களைக் கடந்து செல்வார்கள். அவர்கள் எங்களைக் கடக்க நேரிட்டால் நாங்கள் எங்களுடைய மேலங்கியை தலையிலிருந்து முகத்தின் மீது போட்டுக் கொள்வோம். எங்களை அவர்கள் கடந்து சென்று விட்டால் நாங்கள் (முகங்களை) திறந்து விடுவோம் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

நூல்: அபூதாவூத் 1562

இந்தச் செய்தி ஆதாரப் பூர்வமானது இல்லை. ஏனென்றால் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக யஸீத் பின் அபீ ஸியாத் என்பவர் இடம் பெறற்றுள்ளார். இவரை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

இமாம் அஹ்மத் அவர்கள் “இவருடைய ஹதீஸ் தகுதியானதாக இல்லை’ என்றும், இப்னு மயீன் அவர்கள் “இவர் பலமானவர் இல்லை’ என்று ஓரிடத்திலும், மற்றொரு நேரத்தில் பலவீனமானவர் என்றும் விமர்சித்துள்ளனர்.

அபூ ஸுர்ஆ அவர்கள், “இவர் பலவீமானவர்; இவருடைய ஹதீஸ்களை எழுதிக் கொள்ளலாம் ஆனால் ஆதாரம் பிடிக்கக் கூடாது’ என்றும், இமாம் அபூஹாதம் அவர்கள், “இவர் உறுதியற்றவர்’ என்றும், இப்னு ஹிப்பான் அவர்கள் “இவர் நேர்மையாளர் தான் என்றாலும் இவருடைய வயது அதிகமான போது இவருடைய மனன சக்தி மோசமாகி விட்டது (இந்த நிலையில்) இவர் தனது மனனத்திலிருந்து சொல்ல ஆரம்பித்தார்; இதனால் நிராகரிக்கப்பட வேண்டிய செய்திகள் வர ஆரம்பித்து விட்டன’ என்றும் விமர்சித்துள்ளனர்.

யஃகூப் பின் சுப்யான் அவர்கள், “இவர் சரியான அறிவிப்பாளராக இருந்தாலும் இவரை அறிஞர்கள் இவர் மூளை குழம்பிய காரணத்தினால் விமர்சனம் செய்துள்ளனர்; இவர் முஜாஹிதிடமிருந்து செய்திகளை அறிவிக்கிறார்; ஆனால் இவர் அவரிடமிருந்து கேட்டதில் ஆட்சேபனை இருக்கிறது’ என்றும் விமர்சித்துள்ளனர்.

இமாம் நஸயீ அவர்கள் இவரைப் பலவீனமானவர் என்றும், இமாம் தாரகுத்னி அவர்கள், “ஆதாரப் பூர்வமான கிதாபுகளில் இவருடைய பலவீனமான செய்திகளை பதிவு செய்யக்கூடாது; இவர் அதிகமாகத் தவறிழைப்பவர்; இவர் தனக்கு சொல்லப்பட்டதை அப்படியே கூறுவார்’ என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.

நூல்: தஹ்தீப் தஹ்தீப்

(பாகம்: 11, பக்கம்: 288)

எனவே இந்தச் செய்தியை ஆதாரமாக ஏற்றுக் கொள்ள முடியாது.

இது போன்ற மற்றொரு செய்தியும் இப்னு குஸைமாவில் இடம் பெற்றுள்ளது

“நாங்கள் ஆண்களுக்காக முகங்களை மூடிக் கொள்வோம். இன்னும் அதற்கு முன்னால் தலை வாரிக் கொள்வோம்” என்று அஸ்மா பின்த் அபீ பக்கர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

நூல்: இப்னு குஸைமா

(பாகம்: 4, பக்கம்: 203)

இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமான செய்தி. இதே போன்று ஸஹாபிப் பெண்கள் முகத்தை மூடியதாக, பின் வரும் செய்தியும் ஆதாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(தன் மீது அவதூறு கூறப்பட்ட சம்பவம் தொடர்பாக) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நான் தங்கியிருந்த அந்த இடத்திற்கு (ஸப்வான் பின் முஅத்தல்) வந்தார். அவர் அங்கே தூங்கிக் கொண்டிருந்த ஓர் உருவத்தைப் பார்த்தார். பர்தாவுடைய சட்டம் அருளப் படுவதற்கு முன்னர் அவர் என்னைப் பார்த்திருந்தார். ஆகவே என்னைப் பார்த்ததும் அவர் என்னை அடையாளம் புரிந்து கொண்டார். அவர் என்னை அறிந்து கொண்டு, “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்’ என்று கூறிய சப்தத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன். உடனே முகத் திரையால் என் முகத்தை மறைத்துக் கொண்டேன். (ஹதீஸின் சுருக்கம்)

நூல்: புகாரி 4141

பெண்கள் முகத்தை மறைப்பது தொடர்பாக மற்றொரு செய்தியும் உள்ளது.

இப்னு உமர் (ரலி) கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதரே! இஹ்ராம் அணிந்திருக்கும் போது எந்த ஆடைகளை நாங்கள் அணியலாம் என்று நீங்கள் கட்டளை இடுகின்றீர்கள்?” என்று ஒரு மனிதர் எழுந்து கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் சட்டைகளையும் கால் சட்டைகளையும் தலைப் பாகையையும் தொப்பிகளையும் அணியாதீர்கள். ஒருவரிடம் செருப்புகள் இல்லை என்றால் அவர் காலுறைகளைக் கரண்டைக்குக் கீழ் உள்ள பகுதி வரை கத்தரித்துக் கொள்ளட்டும்! குங்குமப் பூச்சாயம், வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்த்த எதையும் அணியாதீர்கள். இஹ்ராம் அணிந்த பெண் முகத் திரையும், கையுரைகளையும் அணியக் கூடாது” என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 1838

நபி ஸல் அவர்கள் காலத்தில் பெண்கள் முகத்தை மூடிக் கொள்ளும் வழக்கம் இருந்ததாக மேலே குறிப்பிட்ட செய்திகள் குறிப்பிடுகின்றன. ஆனால் இந்தச் செய்திகளிலிருந்து கட்டாயமாக முகத்தை மறைத்துத் தான் ஆக வேண்டும் என்ற கருத்து வராது.

ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் முகத்தை மூடியதைப் போன்று, முகத்தை மூடாமல் இருந்ததாகவும் ஆதாரப் பூர்வமான செய்திகள் கிடைக்கின்றன. எனவே முகத்தை மூடுவதற்குத் தடை இல்லை என்றே மேற்கண்ட செய்திகளை விளங்கிக் கொள்ள வேண்டும்.

பெண்கள் முகத்தை மறைக்க வேண்டியதில்லை என்பதற்குப் பின்வரும் செய்திகள் ஆதாரமாக அமைந்துள்ளன.

அடுத்த இதழில் இன்ஷாஅல்லாஹ்