பாதை மாறிய பக்ரி

பாதை மாறிய பக்ரி

ஹாமித் பக்ரி…. அனைத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமைப் பொறுப்பை அலங்கரித்தவர். நல்ல பேச்சாளர். ஹதீஸ் கலையில் ஞானம் உள்ளவர். தவ்ஹீத் ஜமாஅத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் அவர் மீது அதிகமான மரியாதையும் அபிமானமும் வைத்திருந்தனர். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிகமதிகம் தவ்ஹீத் ஜமாஅத்திற்காகப் பிரச்சாரம் செய்தவர். ஆடியோ, வீடியோ கேஸட்டுகளில் தவ்ஹீத் ஜமாஅத்தினரின் வீடுகள் மற்றும் நூலகங்களில் அலங்கரித்து நின்றவை இவருடைய கேஸட்டும் கூட.

தவ்ஹீத் ஜமாஅத்தில் இப்படி ஓர் உச்சக்கட்ட நிலையில் இருந்தவர் தான் இன்று தரைமட்ட நிலையில் தேய்ந்து விட்டார். கோபுரமாக இருந்தவர் குப்பை மேடாக ஆகி விட்டார். இவருடைய சறுகலையும் வழுக்கலையும் பார்க்கக்கூடிய நாம், அல்லாஹ் தனது திருமறையில் கூறுவது போன்று இஸ்லாமிய மரணத்தைக் கேட்டுப் பிரார்த்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

எங்கள் இறைவா! எங்களுக்கு நேர் வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.

அல்குர்ஆன் 3:8

அத்துடன் நாம் இதில் புரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு அம்சம், நேர்வழி என்பது அல்லாஹ்வின் கைவசம் உள்ளது; அவனது தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளது. பக்ரியின் இந்த வழிதவறலுக்கு புகாரியில் இடம்பெறும் பின்வரும் ஹதீஸ் பொருத்தமான உதாரணமாகும்.

நபி (ஸல்) அவர்களும் இணை வைப்போரும் (கைபர் போர்க்களத்தில்) சந்தித்துப் போரிட்டுக் கொண்டனர். நபியவர்கள் தம் படையின் பக்கம் சென்று விட மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்றுவிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்களின் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார். அவர், (எதிரிகளில்) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர், படையிலிருந்து விலகிப் போய் தனியே சென்றவர் (அதாவது எதிர்த்து நிற்பவர், பணிந்து செல்பவர் என்று) எவரையும் நபித் தோழர்களுக்கு விட்டு வைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச் சென்று (மூர்க்கமாகப் போரிட்டுக்) கொண்டிருந்தார்.

(அவரது துணிச்சலான போரைக் கண்ட) நபித் தோழர்கள், “இந்த மனிதர் போரிட்டதைப் போல் இன்று நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லைஎன்று (வியந்து) கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “அவரோ நரகவாசியாவார்என்று கூறினார்கள். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மனிதர், “நான் அவருடன் இருக்கிறேன் (அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்கு)என்று சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார். அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார்.

(ஒரு கட்டத்தில்) அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி, தன் வாளின் (கைப்பிடியுள்ள) முனையை பூமியில் ஊன்றி, அதன் கூரான முனையைத் தன் இரு மார்புகளுக்கு இடையே வைத்து, அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

(இதை உடனிருந்து கண்காணித்துவிட்டு) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, “தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன்என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “என்ன விஷயம்?” என்று கேட்டார்கள். அவர், “சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி “அவர் நரகவாசிஎன்று கூறினீர்கள் அல்லவா? அதைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். நான் (மக்களிடம்), “உங்களுக்காக (அவரது நிலைகளை அறிந்து வர) நான் அவருடன் போய் வருகிறேன்என்று கூறிவிட்டு, அவரைத் தேடிப் புறப்பட்டேன். அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். உடனே, அவர் சீக்கிரமாக மரணமடைய விரும்பி, வாளின் பிடிமுனையை பூமியில் நட்டு, அதன் கூர்முனையைத் தன் இரு மார்பு களுக்கிடையே  வைத்து, அதன் மீது தன்னை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்களின் வெளிப் பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கத்திற்குரிய (நற்) செயலைச் செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார். மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் நரகத்திற்குரிய செயலைச் செய்துவருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் அஸ் ஸாஇதீ (ரலி)

நூல்: புகாரி 2898

இந்த ஹதீஸின் கடைசிப் பகுதியில் இடம்பெறும் வாசகம் நாம் மிகவும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

தற்கொலை செய்த இவர் தொடர்பான செய்தி புகாரியில் பல்வேறு இடங்களில் பதிவாகியுள்ளது. அந்தந்த செய்திகளின் கடைசியில் மனதை விட்டு நீங்காத இந்த எச்சரிக்கை மணி ஓசையை நபி (ஸல்) அவர்கள் எழுப்பி விடுகின்றார்கள்.

இதே ஹதீஸ் புகாரியில் 3062 எண்ணில் பதிவாகியுள்ளது. அதன் இறுதியில் பின்வருமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

“முஸ்லிமான ஆன்மா தான் சொர்க்கத்திற்குச் செல்ல முடியும். மேலும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் வாயிலாகவும் வலுவூட்டுகின்றான்” என்று பொது அறிவிப்புச் செய்தார்கள்.

இதே ஹதீஸ் புகாரியில் 6493வது ஹதீஸாகப் பதிவாகியுள்ளது. அதன் இறுதியில் நபி (ஸல்) அவர்கள் “இறுதி முடிவுகளைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன” என்று கூறுகின்றார்கள்.

இவ்வாறு ஒவ்வொரு செய்தியிலும் அபாய மணி அடிக்கின்றார்கள். அதனால் தான் உள்ளங்களைத் தன் கைவசம் வைத்திருக்கக்கூடிய அல்லாஹ்விடம் கீழ்க்காணும் துஆக்களை செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம்.

என்னை முஸ்லிமாகக் கைப்பற்றுவாயாக! நல்லோர்களில் என்னைச் சேர்ப்பாயாக!

அல்குர்ஆன் 12:101

எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக!

அல்குர்ஆன் 7:126

மேலே நாம் எடுத்துக்காட்டிய ஹதீஸில் உள்ளவர் வழிகேட்டில் இறந்து விட்டார். பக்ரி வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையிலிருந்து பக்ரி பாவ மன்னிப்பு தேடவில்லை என்றால் இவருக்கும் இதே கதி தான். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். நாம் இங்கே வெளிப்படையான அவருடைய தற்போதைய நிலையைப் பார்த்தே அவர் வழிகேட்டில் சென்றிருக்கிறார் என்று கூறுகிறோம்.

தடுமாற்றமும் தட மாற்றமும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான் “இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்என்பேன். அதற்கு இறைவன் “உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்று விட்டார்கள்என்று சொல்வான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6585, 6586, 6857

இந்த ஹதீஸ் புகாரியில் இடம் பெறுகின்றது. இந்த ஹதீஸை வைத்துக் கொண்டு, “பார்த்தீர்களா? ஸஹீஹுல் புகாரியிலே வருகின்றதா இல்லையா? என்ன வருகின்றது? ஸஹாபாக்களே ஹவ்லுல் கவ்ஸர் தண்ணீருக்கு அருகில் போக முடியாமல், ரசூலுல்லாஹ்விடமிருந்து தண்ணீரைப் பெற முடியாமல் தடுக்கப்படுகிறார்கள். இப்படி தடுக்கப்படும் ஸஹாபாக்களையா நீங்கள் பின்பற்றப் போகிறீர்கள்?” என்று இந்த ஹதீஸை வைத்து இப்படிக் குழப்பி, கேட்கக் கூடிய நிகழ்வைப் பார்க்கிறோம்.

சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். இந்த ஹதீஸ் இருப்பது உண்மை. ஸஹீஹுல் புகாரியில் இருப்பது உண்மை. ஆனால் அல்லாஹ் எப்படி அவர்களது கண்களைக் குழப்புகிறான் என்று பாருங்கள். அவர்களுடைய இதயங்களை எப்படிச் சிதைக்கிறான் என்று பாருங்கள். இந்த ஹதீஸில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான ஒரு வாசகம், அந்த வாசகம் தான் பிரதானமான வாசகம். அவர்கள் யாரென்றால் முர்தத்துகளாக, இஸ்லாத்தை விட்டு, வட்டத்தை விட்டு வெளியேறி மதம் மாறிப் போனவர்கள்.

நான் கேட்கிறேன், ஸஹாபி என்றால் நாம் யாரைச் சொல்வோம். நபி (ஸல்) அவர்களுடைய திருமுகத்தைப் பார்த்து, இஸ்லாத்தை ஏற்று, அந்த நிலையிலேயே வஃபாத்தாகி இருப்பார்களே அவர்களைத் தானே ஸஹாபாக்கள் என்று சொல்வோம். மதம் மாறியவர்களை ஸஹாபாக்கள் என்று யாராவது சொல்வோமா? இதை அவர்களது கண்களிலிருந்து அல்லாஹ் மறைக்கிறான்.

அது மட்டுமல்ல! அங்கு உஸைஹாபீ, உஸைஹாபீ என்று சொன்னதற்கு என்ன அர்த்தம்? இந்த ஹதீசுக்கு என்ன விளக்கம்? இந்த ஹதீஸ் என்னென்ன கிதாபுகளில் இடம் பெற்றுள்ளது? அதற்கு விளக்கம் சொல்லியிருக்கிறார்களே! மிகப் பெரிய இமாம்கள். சொன்ன விஷயங்களெல்லாம் என்ன? இது ஸஹாபாக்களைக் குறிக்கின்ற விஷயமா? இல்லை. இது ஸஹாபாக்களைக் குறிக்கின்ற விஷயம் இல்லை. உம்மத்தைக் குறிக்கின்ற விஷயம். இந்தச் செய்தி வேறு வேறு கிதாபுகளில் வருகின்றது என்றும் குறிப்பிடுகிறார்கள்.

ஆக இல்லாத விளக்கத்தைக் கொடுத்து, இருக்கிற வாசகத்தை மறைத்து, தப்பான அர்த்தத்தைக் கொடுத்து, ஸஹாபாக்கள் மீது தங்களுக்கு இருக்கிற காழ்ப்புணர்ச்சியைத் தீர்த்துக் கொள்வதற்காக ஹதீஸ்களையே குழப்பக்கூடிய ஒரு நிலைக்கு வந்திருக்கிறார்கள் என்று சொன்னால், இந்த ஒன்று தான், எத்தனையோ விஷயங்களைச் சொல்லலாம். இந்த ஒன்று தான் இவர்களிடமிருந்து என்னை அல்லாஹ் பிரித்த விஷயம். யோசித்துப் பாருங்கள். இதை எப்படி ஜீரணிக்க முடியும்?

காயல்பட்டிணத்தில் நடைபெற்ற புகாரி சபையில் ஹாமித் பக்ரி பேசிய வார்த்தைகள் தான் இவை.

ஸஹாபாக்களின் மீது தவ்ஹீத் ஜமாஅத்தினர் கொண்ட காழ்ப்புணர்ச்சியும் கசப்புணர்ச்சியும் தான் தன்னை தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து வெளியேறச் செய்தது என்று கூறுகின்றார். இவர் சொல்கின்ற இந்தக் காரணம் உண்மையா என்று பார்ப்போம்.

பக்ரி நமது ஜமாஅத்தில் இருந்த போது ஜமாஅத்திற்கும் மார்க்கத்திற்கும் எதிரான சில கள்ளத்தனமான காரியங்களில் களமிறங்குகின்றார். ஒரு ரமளானின் இரவு நேரத்தில் கைதும் செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுகின்றார். கூட இருந்து கொண்டே குழி பறிக்கின்ற இதுபோன்ற ஆட்களை ஜமாஅத்தில் வைக்கக் கூடாது என்று கருதி தவ்ஹீத் ஜமாஅத் அவரை நீக்குகின்றது. அவரைச் சிறையிலிருந்து வெளியே எடுப்பதற்கான எந்த ஏற்பாட்டையும் செய்வதில்லை என்பதிலும் தவ்ஹீத் ஜமாஅத் உறுதியாக இருந்தது.

இந்த நிலையில் சிறையிலிருந்து சிலர் மூலம் தூது விட்டார். தவ்ஹீத் ஜமாஅத் அதைக் கண்டு கொள்ளவில்லை. வெளியே வந்த இவர் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக எந்த விமர்சனத்திலும் ஆரம்பத்தில் இறங்கவில்லை.

தமுமுகவினர் சதி

இவரை வெளியேற்றும் போது தமுமுக நம்முடன் இருந்தது. பக்ரியின் நீக்கம் குறித்த முடிவில் தமுமுகவும் நூற்றுக்கு நூறு உடன்பாடு கொண்டிருந்தது. பக்ரி சிறையிலிருந்து வெளியே வந்த சமயம் தமுமுகவுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் உரசல் துவங்கும் நேரம். இந்த நேரத்தில் இவருக்கும் தமுமுகவைச் சேர்ந்த ரிபாயி என்பவருக்கும் ரகசிய தொடர்பு ஏற்படுகின்றது. தமுமுகவுடன் கொஞ்சலும் குழாவலும் ஏற்படுகின்றது. ஜாக்குடனும் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது தான் நமக்கு எதிராக இவர் வாய் திறக்க ஆரம்பிக்கின்றார். ஆனாலும் அதிகமாக எதுவும் விமர்சிக்கவில்லை.

இந்நிலையில் இவர் கொஞ்சம் கொஞ்சமாக தவ்ஹீத் என்று மருந்தளவுக்கு இருந்த அல்ஜாமிவுல் அஸ்ஹர் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இவரால் உருவாக்கப்பட்ட ஆயிஷா சித்தீகா மதரஸாவிலிருந்தும் தூக்கியெறிப்பட்டார். இறுதியில் இவர் எந்த புகாரி சபையை விமர்சித்துக் கொண்டிருந்தாரோ அந்த புகாரி சபையின் பூசாரிகளிடம் பாத பூஜை செய்து பாவ மன்னிப்பு கோருகின்றார். அங்கு ஒரு புனர் ஜென்மம் எடுக்கின்றார். அப்போது தான், “இந்த ஒன்றுக்காகத் தான் வெளியே வந்தேன்” என்று புலம்பி அழுகின்றார்; புளுகித் தள்ளுகின்றார்.

இதற்காகத் தான் வெளியே வந்தார் என்றால் உள்ளே இருக்கும் போதே இதற்காகப் போர்க்கொடி தூக்கியிருக்க வேண்டும். மார்க்க ரீதியாக இவர் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களை வைக்கின்ற போது   அனைவரும் அதற்குத் தனிக்கவனம் செலுத்துவர்; தனி மரியாதை கொடுப்பார்கள். ஆனால் அப்போது இதற்காகக் குரல் கொடுத்தாரா? குரல் கொடுப்பது ஒரு புறமிருக்கட்டும். முனகக் கூட இல்லை.

பசப்பு மொழியாளர்! பச்சைப் பொய்யர்!

அப்போது முனகக் கூடச் செய்யாத, மூச்சு விடாத இவர் இப்போது ஸஹாபாக்களுக்காகத் தான் வெளியே வந்தேன் என்கிறார் என்றால் இது பச்சைப் பொய்யைத் தவிர்த்து வேறென்னவாக இருக்க முடியும்? பசப்பு வாதம் என்பதைத் தவிர்த்து வேறென்ன சொல்ல முடியும்?

இவர் தன் பாட்டிற்கு இருந்திருந்தால் நாம் இவரைக் கண்டு கொள்ளப் போவதில்லை. நமது ஜமாஅத்தை சீண்டிப் பார்த்தால், சிராய்ந்து பார்த்தால், ஜமாஅத் இவரை அக்கு வேறாக, ஆணி வேறாக அடையாளம் காட்டத் தயங்காது. ஜமாஅத் மீது அடாத பழியை, ஆகாத பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்துகின்றார். அவ்வாறு சுமத்தும் போது, இவர் பொய்யர் என்பதை இவரது வார்த்தைகள் மூலமாகவே அல்லாஹ் வெளிப்படுத்துகின்றான்.

உப்புத் தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும். தப்புச் செய்தவன் தண்டனை அனுபவித்தாக வேண்டும் என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்ட இவர், புகாரி சபையில் போய் அந்த உண்மையைச் சொல்லியிருந்தால் இவரை நாம் பாராட்டலாம். ஆனால் இப்படி முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்து தனது முனாஃபிக் தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றார். இந்த வகையில் கலந்தர் மஸ்தான், அப்துல்லாஹ் ஜமாலி இன்னும் இவரது வகையறாக்களை நாம் பாராட்டலாம். அவர்கள் அசத்தியத்தில் இருந்தாலும் அந்தக் கொள்கையில் உறுதியாக இருக்கின்றார்கள்.

தவ்ஹீதுவாதிக்குத் தக்க பாடம்

பக்ரியின் இந்த விவகாரத்தில் தவ்ஹீதுவாதிகளுக்குத் தக்க பாடம் இருக்கின்றது. பக்ரியை நாம் நமது தவ்ஹீத் ஜமாஅத்தை விட்டுத் தான் நீக்குகின்றோம். தவ்ஹீதை விட்டு நீக்கவில்லை. ஆனால் அவர் தவ்ஹீதை விட்டே வெளியே போய் விட்டார்.

இறைவா! (நபி) முஸ்தபாவின் பொருட்டால் எங்களது நாட்டங்களை நிறைவேற்றுவாயாக! தயாளனே! கடந்து விட்ட எங்களது தவறுகளை எங்களுக்காகப் பொறுத்தருள்வாயாக!

இவ்வாறு அல்லாஹ்விடம் ஒருவர் பொருட்டால் தா என்று கேட்கும் அளவுக்குக் கேடு கெட்டுப் போய் விட்டார். இதற்குக் காரணம் என்ன? ஜமாஅத் எடுத்த நியாயமான நடவடிக்கையைப் பொருந்திக் கொள்ளாதது தான். எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தேன், என்னையா இப்படித் தண்டித்தீர்கள்? என்ற வெறுப்புத் தான் இன்றைக்கு இவரை நரக நெருப்பின் பக்கம் அழைத்துச் சென்றிருக்கின்றது.

இன்றைக்கு நம்மில் சிலரிடமும் தலைக் கனம் இருக்கின்றது. ஜமாஅத்தினால் தான் நாம் என்பதை விடுத்து விட்டு, நம்மால் தான் இந்த ஜமாஅத் என்ற கர்வம் நம்மிடம் இருந்தால் அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். அவர்களது முடிவு இப்படித் தான் இருக்கும்.

நபித்தோழர்களின் அடக்கமும் அமைதியும்

தலைமையில் இருப்பவர்களும் மனிதர்களே! தலைமையிடத்தில் சில தவறுகள் ஏற்பட்டு விடலாம். அது நிரபராதியைக் கூடத் தண்டித்து விடலாம். அதுவும் ஓர் அநியாயக்காரன் சொல்லைக் கேட்டு ஒரு நியாயவாதி மீது நடவடிக்கை எடுத்து விடலாம். இதுபோன்ற சமயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஜமாஅத் நலன் கருதி அல்லாஹ்விடத்தில் பொறுப்பைச் சாட்டி விட்டு, பாரத்தைச் சுமத்தி விட்டு அமைதியாகவும் அடக்கமாகவும் பொறுத்திருக்க வேண்டியது தான். இதற்கு ஜைத் பின் அர்கம் (ரலி) அவர்களது வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வை எடுத்துக் கூறலாம்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு நயவஞ்சகனின் பொய்யை நம்பி, உண்மை சொன்ன தமது தோழர் ஜைத் பின் அர்கம் (ரலி) அவர்களைச் சங்கடப்படுத்தி விடுகின்றார்கள்.

ஒரு நயவஞ்சகனின் சொல்லைக் கேட்டு விட்டு, நம்மை நம்ப மறுத்து விட்டார்களே என்று ஜைத் பின் அர்கம் (ரலி) இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடவில்லை. பட்ட கவலையுடன் பாரத்துடன் காத்திருக்கின்றார்கள்.

நான் என் சிறிய தந்தையாருடன் இருந்து கொண்டிருந்தேன். அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் என்பான், “அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்களுக்கு (-முஹாஜிர்களுக்கு-) நீங்கள் செலவு செய்வதை நிறுத்தி விடுங்கள். அவர்கள் (அவரை விட்டும்) விலகிச் சென்று விடுவார்கள்என்று சொல்வதையும், மேலும், “நாம் மதீனாவுக்குத் திரும்பினால் (எங்கள் இனத்தவர்களாகிய) கண்ணியவான்கள், இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை நகரிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள்என்று கூறுவதையும் நான் கேட்டேன். அதை நான் என் சிறிய தந்தையாரிடம் கூறினேன். அதை என் சிறிய தந்தையார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்லிவிட்டார்கள்.

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபை மற்றும் அவனுடைய நண்பர்களுக்கு ஆளனுப்பினார்கள். அவர்கள் வந்து, “நாங்கள் அப்படிச் சொல்லவேயில்லைஎன்று சத்தியம் செய்தனர். எனவே அவர்களை நம்பி விட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (நம்ப) மறுத்து விட்டார்கள். (என் வாழ்நாளில் அதற்கு முன்) இது போன்ற ஒரு கவலை ஏற்பட்டதேயில்லை எனும் அளவிற்கு என்னைக் கவலை ஆட்கொண்டது. ஆகவே, நான் எனது வீட்டில் (கவலையோடு) அமர்ந்திருந்தேன். அப்போது அல்லாஹ், “(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகின்ற போதுஎன்று தொடங்கி “ஆயினும், நயவஞ்சகர்கள் அறிய மாட்டார்கள்என்று முடியும் (63:1-8) வசனங்களை அருளினான். உடனே, எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். (நான் அவர்களிடம் சென்றபோது) அவற்றை எனக்கு ஓதிக்காட்டி, “ஸைதே! அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்தி விட்டான்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் அர்கம் (ரலி)

நூல்: புகாரி 4901

இங்கு ஜைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் பொறுமையாக இருந்ததற்கான பரிசைப் பெறுகின்றார்கள். இப்படித் தான் ஒரு தவ்ஹீதுவாதி இருக்க வேண்டுமே தவிர நடவடிக்கை எடுத்தவுடன் இயக்கத்தை விட்டு வெளியே சென்று விடக் கூடாது. அப்படிச் சென்றவர்கள் இயக்கத்தை விட்டு மட்டுமல்ல, ஏகத்துவத்தை விட்டே வெளியே போய் விடுகின்றார்கள் என்பதற்கு பக்ரிகளும் பாக்கர்களும் அவர்களது பரிவாரங்களும் சிறந்த எடுத்துக்காட்டுக்கள். அதனால் ஜமாஅத்தால் நடவடிக்கைக்கு உள்ளாகக் கூடியவர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஜமாஅத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளியே சென்றவர்கள், விஷமத்தனம் செய்தவர்களின் தீய முன்மாதிரிகளைப் போன்று, நடவடிக்கைக்குப் பின்னும் ஜமாஅத்தை விட்டு வெளியேறாமல் பொறுமையுடன் இருந்த சகோதரர்களின் நல்ல முன்மாதிரியும் இருக்கின்றது. எனவே ஜமாஅத்திற்குக் கட்டுப்பட்டு கொள்கையைக் காப்போமாக!

கவ்ஸர் தடாகம் தடுக்கப்படுவோர் யார்?

பித்அத் செய்யக் கூடாது. பித்அத் செய்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும், விபரீதங்கள் ஏற்படும் என்பதற்குப் பல்வேறு ஆதாரங்களை தவ்ஹீத் ஜமாஅத் காட்டி வருகின்றது. அந்த ஆதாரங்களில் முக்கியமான ஆதாரம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். (அதில்), “மக்களே! நீங்கள் (மறுமையில்) செருப்பணியாதவர்களாகவும், நிர்வாணமானவர்களாகவும், விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாகவும் அல்லாஹ்விடம் கொண்டுவரப்படுவீர்கள்என்று கூறிவிட்டுப் பிறகு “எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவதைப் போல் நாம் வானத்தைச் சுருட்டும் அந்நாளில், நாம் முதலில் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீண்டும் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) படைப்போம்எனும் (21:104ஆவது) இறைவசனத்தை இறுதிவரை ஓதினார்கள்.

பிறகு, “அறிந்துகொள்ளுங்கள்: மறுமை நாளில் (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படும் முதல் நபர் (இறைத்தூதர்) இப்ராஹீம் அவர்கள்தாம்.

அறிந்து கொள்ளுங்கள்: என் சமுதாயத்தாரில் சிலர் கொண்டுவரப்பட்டு, இடப் பக்கத்(திலுள்ள நரகத்)திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான், “என் இறைவா! (இவர்கள்) என் தோழர்களில் சிலர்என்று சொல்வேன். அதற்கு “இவர்கள் உங்களு(டைய மரணத்து)க்குப் பின் என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாதுஎன்று கூறப்படும். அப்போது நான், நல்லடியார் (ஈசா நபி) சொன்னதைப் போன்று, “நான் அவர்களுடன் இருந்த வரையில் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்!என்று பதிலளிப்பேன். அதற்கு, “இவர்களை நீங்கள் பிரிந்ததிலிருந்து, இவர்கள் தங்கள் குதிகால் (சுவடு)களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து வெளியேறிக் கொண்டு தான் இருந்தார்கள்என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 4625, 4740, 6526, 6572, 6582, 6585, 6586, 7049

முஸ்லிம் 365, 4247, 4250, 4259, 5104

இந்த ஹதீஸ்கள் அனைத்திலும், உங்களுக்குப் பின்னால் இவர்கள் புதிதாக என்னென்ன உருவாக்கினார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது என்று வருகின்றது. அதனால் தவ்ஹீத் ஜமாஅத் இந்த ஹதீஸை ஆதாரமாக முன்வைக்கின்றது. பித்அத் செய்தால் நாளை மறுமையில் தடாகத்தில் தண்ணீர் குடிக்க விடாமல் தடுக்கப்படுவதுடன், நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படுகிறார்கள். பித்அத் செய்தால் இதுபோன்ற தண்டனை கிடைக்கும் என்று இந்த ஹதீஸிலிருந்து நிறுவுகிறோம்.

இந்த ஹதீஸை பித்அத்தை ஒழிப்பதற்காகக் கொண்டு வருகின்றோம். இந்த நோக்கத்திற்காக ஹாமித் பக்ரி என்பவரும் இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டி பேசியிருக்கின்றார். இப்போது அவர் அதை மறுக்க முன்வருகின்றார்.

ஸஹாபாக்கள் பித்அத் செய்தார்கள் என்று வந்து விடக் கூடாதாம். ஸஹாபாக்களை இதை விட்டும் காப்பாற்றுவதற்காக இதற்கு ஒரு மாற்று விளக்கம் கொடுக்கின்றார்.

“இந்த ஹதீஸ் குறிப்பிடுவது ஸஹாபாக்களை அல்ல, ஒட்டுமொத்த உம்மத்தையும் குறிக்கிறது. இந்த உம்மத்தில் மதம் மாறியவர்களைக் குறிக்கும்”

இது தான் அவர் கொடுக்கும் மாற்று விளக்கமாகும். இப்படித் தான் இமாம்கள் விளக்கம் கொடுக்கிறார்கள் என்று ஒரு வாதத்தை வைக்கின்றார். மதம் மாறியவர்கள் என்று ஹதீஸிலேயே வருகின்றது என்றும் சொல்கின்றார்.

இவர் சொல்வது போல் புகாரியில் 3349, 3447, 4625, 4740, 6526 மற்றும் முஸ்லிம் 5104 ஆகிய ஹதீஸ்களில் இடம் பெறுகின்றது.

இவர் கொடுக்கக் கூடிய இந்த விளக்கம் கபீஸா கூறுவதாக புகாரியில் 3447 ஹதீஸில் இடம் பெற்றிருக்கின்றது.

விளக்கம் தரும் வேறொரு ஹதீஸ்

பொதுவாக ஒரு வசனத்திற்கு மற்றொரு வசனம் விளக்கமாக அமைவது போல் ஒரு ஹதீசுக்கு மற்றொரு ஹதீஸ் விளக்கமாகும். இது எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு பொது விதி! அந்த அடிப்படையில் பக்ரியும் ஒரு காலத்தில் ஒத்திருந்தார். இப்போது வழி தவறியதால் வாயும் தவறுகின்றார். அதனால் இப்போது இமாம்களுடைய விளக்கத்தைப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்.

ஒரு ஹதீசுக்கு மற்றொரு ஹதீஸ் விளக்கமாக அமையும் என்ற அடிப்படையில் இப்போது இந்த ஹதீஸின் விளக்கத்தைப் பார்ப்போம்.

பக்ரி சொல்வது போல் உம்மத்தைக் குறிக்கும் வகையிலும் ஹதீஸ்கள் வராமல் இல்லை. சுனன் நஸயீ அல்குப்ராவில் 11095வது ஹதீஸில், நபி (ஸல்) அவர்கள் “அஸ்ஹாபீ’ என்பதற்குப் பதிலாக “உம்மத்தீ – என்னுடைய சமுதாயமே’ என்று சொன்னதாக இடம் பெற்றுள்ளது. வேறு சில நூற்களிலும் இதுபோன்ற ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. இதன் காரணத்தால் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் இந்த ஹதீஸ் குறிக்கும் என்ற பொருள் கொடுக்க முடியுமா? முடியாது. காரணம், “அஸ்ஹாபீ’ என்று குறிப்பிடுகின்ற ஹதீஸ்கள் அனைத்தையும் இணைத்துத் தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும். எனவே இந்த ஹதீசுக்கு விளக்கமாக அமைந்த ஏனைய ஹதீஸ்களை இப்போது பார்ப்போம்.

ஆதாரம்: 1

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின்) பொது மையவாடிக்குச் சென்று “அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் லாஹிகூன்‘ (அடக்கத் தலங்களிலுள்ள இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். இறைவன் நாடினால் நிச்சயமாக நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள் தாம்) என்று கூறி விட்டு, “நம் சகோதரர்களை (இவ்வுலகிலேயே) பார்க்க நான் ஆசைப்படுகிறேன்என்று சொன்னார்கள்.

மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் சகோதரர்கள் இல்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் என் தோழர்கள்தாம். (நான் கூறுவது) இதுவரை (பிறந்து) வந்திராத நம் சகோதரர்கள்என்று கூறினார்கள். மக்கள், “உங்கள் சமுதாயத்தாரில் இதுவரை (பிறந்து) வராதவர்களை நீங்கள் எவ்வாறு அறிந்து கொள்வீர்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு மனிதரிடம் முகமும் கை கால்களும் வெண்மையாக உள்ள குதிரை ஒன்று இருந்தது. அது கறுப்புக் குதிரைகளுக்கிடையே இருந்தால் தமது குதிரையை அவர் அறிந்து கொள்ள மாட்டாரா, கூறுங்கள்என்று கேட்டார்கள். மக்கள், “ஆம் (அறிந்து கொள்வார்), அல்லாஹ்வின் தூதரே!என்று பதிலளித்தனர். “(அவ்வாறே) அவர்கள் அங்கத் தூய்மையினால் (பிரதான) உறுப்புகள் பிரகாசிக்கும் நிலையில் (மறுமையில்) வருவார்கள். நான் அவர்களுக்கு முன்பே (அல்கவ்ஸர் எனும் எனது) தடாகத்திற்குச் சென்று அவர்களுக்கு நீர் புகட்டக் காத்திருப்பேன். அறிந்துகொள்ளுங்கள்! வழி தவறி(விளைச்சல் நிலத்திற்குள் நுழைந்து)விட்ட ஒட்டகம் துரத்தப்படுவதைப் போன்று, சிலர் எனது தடாகத்திலிருந்து துரத்தப்படுவார்கள். அவர்களை நான் “வாருங்கள்என்று சப்தமிட்டு அழைப்பேன். அப்போது, “இவர்கள் உங்களுக்குப் பின்னால் (உங்களது மார்க்கத்தை) மாற்றிவிட்டார்கள்என்று சொல்லப்படும். அப்போது நான் “(இவர்களை) இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக; அப்புறப்படுத்துவானாக!என்று கூறுவேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

 நூல்: முஸ்லிம் 367

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களையும், சமுதாயத்தில் உள்ள மற்றவர்களையும் நன்கு தெளிவாக வேறுபடுத்தி, வித்தியாசப்படுத்தியே காட்டுகிறார்கள்.

தடாகம் தொடர்பான ஹதீஸ்கள் அனைத்திலும் உம்மத்தீ (என்னுடைய சமுதாயமே) என்ற வாசகம் இடம்பெறவில்லை. மாறாக அஸ்ஹாபீ (என்னுடைய தோழர்களே) என்று தான் அழைக்கிறார்கள். ஒரு சில அறிவிப்புக்களில் “உஸைஹாபீ’ (குறைவான எண்ணிக்கையிலுள்ள எனது தோழர்களே) என்று இடம் பெறுகின்றது.

அதனால் நபி (ஸல்) அவர்கள் அஸ்ஹாபீ என்று சொல்வதன் பொருள், அவர்கள் தமது தோழர்களைத் தான் அழைக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக நிரூபணம் ஆகின்றது.

ஆதாரம்: 2

புகாரி 7051, முஸ்லிம் 4243 ஆகிய எண்களில் பதிவாகியுள்ள ஹதீஸ்களில், “அவர்களை நான் அறிவேன்; அவர்களும் என்னை அறிந்து கொள்வார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த ஹதீஸில் நபியவர்கள் குறிப்பிடுவது ஸஹாபாக்களில் சிலரைத் தான் என்பது உறுதியாகின்றது.

ஆதாரம்: 3

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மில்ஹானின் மகளான உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கு சாய்ந்து அமர்ந்து (உறங்கிக்) கொண்டிருந்து, பிறகு (விழித்தெழுந்து) சிரித்தார்கள். உம்மு ஹராம் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நபி  (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவதற்காகக்) கடலில் பயணம் செய்வார்கள். அவர்களுடைய நிலை, கட்டில்களில் (சாய்ந்து) வீற்றிருக்கும் அரசர்களைப் போன்றதாகும்என்று கூறினார்கள். (ஹதீஸ் சுருக்கம்)

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூற்கள்: புகாரி 2878, முஸ்லிம் 3535

மேற்கண்ட ஹதீஸில், “நாஸுன் மின் உம்மத்தீ – என்னுடைய சமுதாயத்தில் சிலர்” என்று பொதுவாகக் குறிப்பிடும் நபி (ஸல்) அவர்கள், தடாகம் தொடர்பான ஹதீஸில், “நாஸுன் மின் அஸ்ஹாபீ – என்னுடைய தோழர்களில் சிலர்” என்றே குறிப்பிடுகின்றார்கள். பொதுவாக சமுதாயத்தவராக இருந்தால் என்னுடைய தோழர்களில் சிலர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமையில்) என் தோழர்களில் சிலர் (அல்கவ்ஸர்) தடாகத்தினருகில் என்னிடம் வருவார்கள். நான் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் போது என்னை விட்டு அவர்கள் விலக்கி வைக்கப்படுவார்கள். அப்போது நான் “(இவர்கள்) என் தோழர்களாயிற்றே!என்பேன். அதற்கு இறைவன் “உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்என்பான்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 6582

இன்னும் இதை விடத் தெளிவாகவே முஸ்லிமில் இடம் பெறும்  (4259) ஹதீஸில், “என்னிடம் தோழமை கொண்டவர்களில் சிலர்’ என்று மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்கள்.

இதன் மூலம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த ஹதீஸில் குறிப்பிடுவது, ஸஹாபாக்களைத் தான் என்பது உறுதியாகின்றது.

நஸயீயில் வரும் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் பொதுவாக உம்மத் என்று குறிப்பிட்டாலும்,

முஸ்லிம் 367 ஹதீஸில், நீங்கள் தோழர்கள் என்று பிரித்துக் காட்டுவதாலும், தடாகம் தொடர்பான ஏனைய ஹதீஸ்களில் ஸஹாபாக்களில் ஒரு சாரார் என்று குறிப்புப்படுத்துவதாலும் நபி (ஸல்) அவர்கள் இங்கு குறிப்பிடுவது ஸஹாபாக்களைத் தான் என்பது சந்தேகத்துக்கிடமின்றி உறுதியாகின்றது.

ஆதாரம்: 4

உம்மத்தீ – என்னுடைய சமுதாயத்தினர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதால் இது ஸஹாபாக்களைக் குறிக்காது என்பது பக்ரியின் வாதம்.

ஆனால் உம்மத்தீ என்பது பொதுவான வார்த்தையாகும். அஸ்ஹாபீ என்பது குறிப்பு வார்த்தையாகும்.

அதாவது, உம்மத் என்பதில் ஸஹாபாக்களும் அடங்குவார்கள். மற்ற மக்களும் அடங்குவார்கள். ஆனால் ஸஹாபி என்பதில் அனைத்து மக்களும் அடங்க மாட்டார்கள்.

உதாரணமாக, ஒரு செய்தியில், “வன விலங்கு ஒன்று மனிதனைக் கடித்து விட்டது’ என்று இடம் பெறுவதாக வைத்துக் கொள்வோம். அதே செய்தியை மற்றொரு இடத்தில் சொல்லும் போது, சிங்கம் ஒன்று மனிதனை கடித்ததாகக் கூறப்படுகிறது என்றால் இப்போது முன்னர் இடம் பெற்ற செய்தியில் உள்ள வன விலங்கு, சிங்கம் தான் என்பது தெளிவாகி விட்டது.

வன விலங்கு என்பதால் அது புலி, சிறுத்தை, ஓநாய் எல்லாவற்றையும் குறிக்கும்; எனவே கடித்தது சிங்கம் அல்ல என்று யாரும் கூற மாட்டார்கள். ஏனென்றால், முதல் செய்தியில் வன விலங்கு என்று பொதுவான வார்த்தை இடம் பெற்றாலும், அடுத்த செய்தியில் சிங்கம் என்ற குறிப்பான வார்த்தை வந்து விட்டதால் இங்கு வேறு அர்த்தம் கொடுக்க வழியே இல்லை.

சில ஹதீஸ்களில் உம்மத் என்ற வார்த்தை இடம் பெற்றாலும் அது ஸஹாபாக்களைக் குறிக்காது என்று கூற முடியாது. ஏனென்றால் ஸஹாபாக்களும் உம்மத்தில் உள்ளவர்கள் தான்.

உம்மத் என்று பொதுவான வார்த்தை இடம் பெறும் ஹதீசுக்கு, ஸஹாபி என்ற வார்த்தை இடம் பெறும் ஹதீஸ் விளக்கமாக அமைகின்றது. எனவே இந்த அடிப்படையிலும் இந்த ஹதீஸில் கூறப்படுவது நபித்தோழர்கள் தான் என்பது உறுதியாகின்றது.

ஆதாரம்: 5

எல்லா ஹதீஸ்களிலும் அஸ்ஹாபீ, அஸ்ஹாபீ என்று இடம் பெறும் போது, புகாரி 4625, முஸ்லிம் 4529 ஆகிய ஹதீஸ்களில் உஸைஹாபீ என்று சொன்னதாக இடம் பெறுகின்றது. இவ்வாறு சொல்வதற்கு அரபியில் தஸ்கீர் என்று குறிப்பிடுவர். அதாவது ஒன்றின் பரிமாணத்தைக் குறைத்துக் காட்டுவதற்காக, எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதற்காக இவ்வாறு சொல்லப்படும்.

உதாரணத்திற்கு ஹஸன் என்றால் அழகன் என்று பொருள். ஹுஸைன் என்றால் சிறிய அழகன் என்று பொருள்.

இதுபோல் அஸ்ஹாபீ எனும் போது அதற்கு, அதிக எண்ணிக்கையிலான என்னுடைய தோழர்கள் என்று பொருள் வரும்.

உஸைஹாபீ என்று சொல்லும் போது, குறைவான எனது தோழர்கள் என்று பொருள்படும்.

இவ்வாறு தமது தோழர்களில் பித்அத் செய்து, மதம் மாறியவர்கள் மிகக் குறைவானவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதிலிருந்தும், அவர்கள் ஸஹாபாக்களைத் தான் குறிப்பிடுகின்றார்கள் என்று தெளிவாகின்றது.

ஆதாரம்: 6

மதம் மாறியவர்கள் என்று மேற்கண்ட ஹதீஸில் சில இடங்களில் வருகின்றது. நபித்தோழர்களை மதம் மாறியவர்கள் என்று கூற முடியுமா? என்பது பக்ரியின் வாதம். இந்த வாதம் பாமர மக்களை ஏமாற்றுவதற்கு வேண்டுமானால் பயன்படலாம். ஆனால் நபித்தோழர்கள் என்று கருதப்பட்டவர்களிடம் மத மாற்றம் நிகழ்ந்துள்ளதை இஸ்லாமிய வரலாறு தெரிந்தவர்கள் மறுக்க மாட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இறந்தவுடனேயே மத மாற்றம் நடந்தது. இதை புகாரி 1400வது ஹதீஸிலும் வேறு பல ஹதீஸ்களிலும் காணலாம்.

அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில், “நபி (ஸல்) அவர்கள் இருக்கும் போது ஜகாத் கொடுத்தோம். அவர்கள் இறந்து விட்டார்கள். இனிமேல் ஜகாத் கொடுக்க மாட்டோம்” என்று அரபிகள் மறுத்து மதம் மாறியுள்ளனர்.

இந்த அரபிகள் யார்? நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர்கள் தான் இந்த அரபிகள்.

இவர்ளை தாபியீன்கள் என்று கூற முடியாது. காரணம் தாபிஃ என்றால் ஸஹாபாக்களைச் சந்தித்தவர்கள் என்று அர்த்தம்.

நபி (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்தவர்கள் தான் ஜகாத் கொடுக்க மறுக்கிறார்கள். எனவே அவர்களை ஸஹாபாக்கள் என்று தான் குறிப்பிடுவோம்.

நபி (ஸல்) அவர்களை முஸ்லிமாகச் சந்தித்து, அவர்கள் இறந்த பின்னர் மதம் மாறியிருந்தாலும் நபியவர்களைப் பொறுத்த வரை அவர்கள் ஸஹாபிகள் தான். ஏனென்றால் நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு தான் மதம் மாறுகிறார்கள்.

எனவே மதம் மாறியிருந்தாலும் அதை நபி (ஸல்) அவர்கள் அறிந்திராத காரணத்தால் தான், “என்னுடைய தோழர்கள்” என்று அழைக்கிறார்கள். உங்களுக்குப் பிறகு, அதாவது உங்களுடைய மரணத்திற்குப் பிறகு அவர்கள் மதம் மாறியது உங்களுக்குத் தெரியாது என்று மறுமையில் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. எனவே மதம் மாறியவர்களை நபித்தோழர்கள் என்று எப்படிக் குறிப்பிடலாம் என்ற வாதம் அர்த்தமற்றதாகும்.

ஆதாரம்: 7

இந்தக் கருத்தில் வரும் புகாரி 3349, 3347, 4625, 4740, 6526, முஸ்லிம் 5104 ஆகிய ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள், “ஈஸா (அலை) அவர்கள் சொன்ன வாக்குமூலத்தை நானும் சொல்லி விடுவேன்’ என்று குறிப்பிடுகின்றார்கள்.

அதாவது திருக்குர்ஆன் 5:117 வசனத்தில் உள்ளது போன்று, “நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்” என நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள் என்ற கருத்து இந்த ஹதீஸில் இடம் பெறுகின்றது.

இந்த வாக்குமூலத்தைப் பாருங்கள். “நான் அவர்களுடன் இருக்கும் போது நான் அவர்களைக் கண்காணித்தேன்’ என்றால் அவர்கள் இருக்கும் போது உடனிருந்த மக்கள் யார்? நபித்தோழர்கள் தான் என்பது திட்டவட்டமாகத் தெரிகின்றது. அப்படியிருக்கையில் இந்த ஹதீஸ் நபித்தோழர்களைக் குறிக்கவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? மனோ இச்சையைப் பின்பற்றித் தான் இவ்வாறு வாதிட முடியும்.

ஆதாரம்: 8

“நீங்கள் இவர்களைப் பிரிந்(து மரணித்)ததிலிருந்து இவர்கள் தம் மார்க்கத்தை விட்டு விலகி, தாம் வந்த சுவடுகளின் வழியே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்” என்று கூறுவார்கள். (புகாரி 3447, 3449)

இந்த ஹதீஸில், நபி (ஸல்) அவர்களிடம், “நீங்கள் இவர்களைப் பிரிந்ததிலிருந்து” என்ற வாசகம் இடம் பெறுகின்றது. நபித்தோழர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் பிரிவதையே இது குறிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

எனவே இந்த வாசகமும் தடாகத்தில் தடுக்கப்படுவோர் நபித்தோழர்களில் சிலர் தான் என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றது.

இந்த விளக்கங்களின் அடிப்படையில் பார்க்கும் போது, தடாகத்தில் நபி (ஸல்) அவர்கள் அழைப்பது ஒட்டு மொத்த உம்மத்தையும் அல்ல! ஸஹாபாக்களைத் தான் என்பது நன்கு தெளிவாகின்றது.

பல்வேறு ஹதீஸ்களை ஒன்றிணைத்துப் பார்த்து நாம் இந்த முடிவுக்கு வருகின்றோம். ஆனால் பக்ரியோ இமாம்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் என்று சொல்கிறார். இவ்வாறு சுய விளக்கம் கொடுப்பதுடன் மட்டும் நில்லாமல் தவ்ஹீத் ஜமாஅத்தினர் மனோ இச்சையைப் பின்பற்றுவதாகவும் கூறுகின்றார்.

இமாம்களின் பெயர்களைச் சொல்லி ஹதீசுக்கு சுய விளக்கம் கொடுத்து மனோ இச்சையைப் பின்பற்றுபவர்கள் யாô? ஹதீசுக்கு ஹதீஸிலிருந்தே விளக்கம் கொடுத்து மார்க்கத்தைப் பின்பற்றுவது யார்? என்பதை இந்தக் கட்டுரையைப் பார்க்கும் நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

அனைவருக்கும் ஆதாரமான ஹதீஸ்

இங்கே இதுவரை நாம் கண்ட விளக்கங்களின்படி இந்த ஹதீஸ் ஸஹாபாக்களைத் தான் குறிக்கும் என்றால், பித்அத்தை ஒழிப்பதற்கு இந்த ஹதீஸை நாம் ஆதாரமாகப் பயன்படுத்துவது ஏன்? என்ற கேள்வி இங்கே எழுகின்றது.

ஸஹாபாக்களுக்கே இந்தத் தண்டனை என்றால் நாம் பித்அத் செய்தால் நமக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பது தான் இந்த ஹதீஸிலிருந்து நாம் பெறுகின்ற பாடமும் படிப்பினையும் ஆகும். அந்த அடிப்படையில் மட்டுமே இந்த ஹதீஸ் இந்த உம்மத் அனைவருக்கும் ஆதாரமாகும். இந்தக் கண்ணோட்டத்தில் தான் நாம் இந்த ஹதீஸைக் கையாள்கிறோம்.