ஓதிப்பார்க்கும் முறைகளும் துஆக்களும்

ஓதிப்பார்க்கும் முறைகளும் துஆக்களும்

நோயாளி ஓதவேண்டிய பிரார்த்தனைகள்

கடந்த இதழில் நாம் சுட்டிக் காட்டியதைப் போன்று, அல்ஹம்து அத்தியாயம், சூரத்துல் இக்லாஸ். ஃபலக், அந்நாஸ் அத்தியாயங்கள் மற்றும் அல்லாஹூம்ம ரப்பன்னாஸ் என்ற துஆக்களையும் நோயாளிகள் ஓதிக் கொள்ளலாம்.

உஸ்மான் பின் அபில்ஆஸ் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், தாம் இஸ்லாத்தைத் தழுவியது முதல் தமது உடலில் வலி ஏற்பட்டுள்ளதாக முறையிட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் உமது உடலில் வலியுள்ள இடத்தில் கையை வைத்து,

பிஸ்மில்லாஹ்என மூன்று தடவை கூறிவிட்டு, ஏழு தடவை

அவூது பில்லாஹி வ குத்ரத்திஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிருஎன்று சொல்வீராகஎன்றார்கள்.

(பொருள்: நான் அல்லாஹ்விடம் அவனது ஆற்றலை முன்வைத்து, நான் (தற்போது) உணர்கின்ற தீமையிலிருந்தும் (எதிர்காலத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என) நான் அஞ்சுகின்ற தீமையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.)

நூல்: முஸ்லிம் 4430

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியானுக்குத் துன்பமோ, கவலையோ ஏற்படும் போது

அல்லாஹும்ம இன்னீ அப்துக, வப்னு அப்தி(க்)க, வப்னு அம(த்)திக, நாசிய(த்)தீ பியதிக, மாளின் ஃபிய்ய ஹுக்முக, அத்லுன் ஃபிய்ய களாவுக, அஸ்அலு(க்)க பிகுல்லி இஸ்மின் ஹுவ லக ஸம்மய்த்த பிஹி நஃப்ஸக அவ் அன்ஸல்த்தஹு ஃபீ கிதாபிக, அவ் அல்லம்தஹு அஹதம் மின் கல்கிக, அவ் இஸ்தஃஸர்த்த பிஹி ஃபீ இல்மில் கைபி இன்தக, அன் தஜ்அலல் குர்ஆன ரபீஅ கல்பீ, வநூர ஸத்ரீ, வஜிலாஅ ஹுஸ்னீ, வதஹாப ஹம்மீ

(பொருள்:  அல்லாஹ்வே நான் உன்னுடைய அடியான். உன் அடியானின் மகன். உனது பெண் அடிமையின் மகன். என்னுடைய நெற்றி முடி உன் கையில் இருக்கிறது. என் விஷயத்தில் உன்னுடைய தீர்ப்பு செல்லுபடியாகும். என் விஷயத்தில் உன் தீர்ப்பு நீதமானது.

இறைவா! இந்தக் குர்ஆனை என்னுடைய உள்ளத்தின் வசந்தமாகவும், என்னுடைய நெஞ்சின் ஒளியாகவும், என்னுடைய கவலை அகற்றியாகவும், துன்பம் நீக்கியாகவும் நீ ஆக்க வேண்டும். உனக்கு நீயே சூட்டிக் கொண்ட, அல்லது உன்னுடைய வேதத்தில் நீ இறக்கி வைத்த, அல்லது உன்னுடைய படைப்பினங்களில் யாருக்காவது நீ கற்றுக் கொடுத்த, அல்லது உன்னிடத்தில் உள்ள மறைவான ஞானத்தில் நீ தேர்ந்தெடுத்துக் கொண்ட உனது அத்தனை பெயர்களைக் கொண்டும் நான் உன்னிடத்தில் வேண்டுகிறேன்.)

என்று கூறினால் அல்லாஹ் அவருடைய கவலையைப் போக்கி விடுவான். அவருடைய கவலையின் இடத்தில் சந்தோஷத்தைப் பகரமாக்கி விடுவான்.

அல்லாஹ்வின் தூதரே! இந்த வார்த்தைகளை நாங்கள் கற்றுக் கொள்வது எங்களுக்கு அவசியமானதா?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபியவர்கள், “அவற்றை யார் செவியுறுகிறாரோ அவர் அதைக் கற்றுக் கொள்வது அவசியமாகும்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி)

நூல்: அஹ்மத் 4091

அய்யூப் நபியவர்கள் தமக்குக் கடுமையான நோய் ஏற்பட்ட போது பின்வருமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள்.

அன்னீ மஸ்ஸனியல் லுர்ரு வஅன்த்த அர்ஹமுர் ராஹிமீன்

எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்என அய்யூப் தமது இறைவனைப் பிரார்த்தித்தார்.

அல்குர்ஆன்  21:83

ஒருவருக்குத் தாங்க முடியாத துன்பம் அல்லது நோய் ஏற்படும் போது பின்வருமாறு பிரார்த்திக்கலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த ஒரு துன்பத்தின் காரணத்தினால் மரணத்தை விரும்ப வேண்டாம். அவ்வாறு மரணத்தை விரும்பித் தான் ஆக வேண்டும் என்றிருந்தால்,

இறைவா! (நான்) உயிர்வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர்வாழச் செய்வாயாக! நான் இறந்துவிடுவதே எனக்கு நன்மையாக இருப்பின், எனக்கு இறப்பைத் தருவாயாக!என்று கேட்கட்டும்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

நூல்: புகாரி 6351

தண்ணீரில் ஓதி ஊதிக் குடிக்கலாமா?

தண்ணீரில் ஓதி ஊதிக் குடிப்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் கிடையாது.

சிலர் பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டி தண்ணீரில் ஓதி ஊதிக் குடிக்கலாம் என்று கூறுகின்றனர்.

உம்மு ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நஹ்ருடைய நாள் (ஹஜ்ஜுப் பெருநாள்) அன்று பத்னுல் வாதியிலிருந்து ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்தை நான் பார்த்தேன். பிறகு திரும்பிச் சென்றார்கள். ஹஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண் நபியவர்களைப் பின்தொடர்ந்து சென்றார். அவருடன்  அவருடைய குழந்தையும் இருந்தது. அந்தக் குழந்தைக்கு யாருடனும் பேசமுடியாத நோய் இருந்தது. அந்தப் பெண் “அல்லாஹ்வின் தூதரே இவன் என்னுடைய மகன். என்னுடைய குடும்பத்தில் எஞ்சியிருப்பவன். இவனுக்கு (யாருடனும்) பேசமுடியாத நோய் உள்ளதுஎன்று கூறினார். நபியவர்கள் “என்னிடத்தில் கொஞ்சம் தண்ணீரைக் கொண்டு வாருங்கள்என்று கூறினார்கள். தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தன்னுடைய இரண்டு கைகளையும் கழுவி வாய் கொப்பளித்து பிறகு (அதனை) அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்கள். “இதிலிருந்து அவனுக்கு நீ புகட்டு. இதிலிருந்து அவன் மீது ஊற்று, அவனுக்காக அல்லாஹ்விடம் நிவாரணம் தேடுஎன்று கூறினார்கள்.

உம்மு ஜுன்துப் (ரலி) கூறுகிறார்: அந்தப் பெண்ணை (பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில்) நான் சந்தித்தேன். அந்தத் தண்ணீரில் இருந்து எனக்குக் கொஞ்சம் தந்தால் என்ன? என்று கேட்டேன். அதற்கவர் “அது இந்த நோயாளிக்கு மட்டும்தான்என்று கூறினார். மேலும் (உம்மு ஜுன்துப்) கூறுகிறார்: நான் அந்த வருடத்திற்குள் அப்பெண்ணைச் சந்தித்தேன் அவரிடம் அந்தச் சிறுவனைப் பற்றிக் கேட்டேன். அதற்கவர் “அவனது நோய் நீங்கி விட்டது. சாதாரண மனிதர்களின் சிந்தனைத் திறன் போல் இல்லாமல் மிகச் சிறந்த அறிவினைப் பெற்றிருக்கிறான்என்று கூறினாள்.

நூல்: இப்னு மாஜா 3523

இந்த ஹதீஸைத் தான் தண்ணீரில் ஓதி ஊதும் தொழில் செய்வோர் ஆதாரமாகக் காட்டுகின்றனர். ஆனால் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது இல்லை. ஏனென்றால் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக யஸீத் பின் அபீ ஸியாத் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

இமாம் அஹ்மத் அவர்கள் “இவருடைய ஹதீஸ் தகுதியானதாக இல்லை’ என்றும், இப்னு மயீன் அவர்கள் “இவர் பலமானவர் இல்லை’ என்று ஓரிடத்திலும், மற்றொரு நேரத்தில் பலவீனமானவர் என்றும் விமர்சித்துள்ளனர்.

அபூஸுர்ஆ அவர்கள், “இவர் பலவீனமானவர்; இவருடைய ஹதீஸ்களை எழுதிக் கொள்ளலாம் ஆனால் ஆதாரமாக ஆக்கக் கூடாது’ என்றும், இமாம் அபூஹாதம் அவர்கள், “இவர் உறுதியற்றவர்’ என்றும், இப்னு ஹிப்பான் அவர்கள் “இவர் நேர்மையாளர் தான் என்றாலும் இவருடைய வயது அதிகமான போது இவருடைய மனன சக்தி மோசமாகி விட்டது (இந்த நிலையில்) இவர் தனது மனனத்திலிருந்து சொல்ல ஆரம்பித்தார்; இதனால் நிராகரிக்கப்பட வேண்டிய செய்திகள் இவரிடமிருந்து வர ஆரம்பித்து விட்டன’ என்றும் விமர்சித்துள்ளனர்.

யஃகூப் பின் சுப்யான் அவர்கள், “இவர் சரியான அறிவிப்பாளராக இருந்தாலும் இவரை அறிஞர்கள் இவர் மூளை குழம்பிய காரணத்தினால் விமர்சனம் செய்துள்ளனர்; இவர் முஜாஹிதிடமிருந்து செய்திகளை அறிவிக்கிறார்; ஆனால் இவர் அவரிடமிருந்து கேட்டதில் ஆட்சேபனை இருக்கிறது’ என்றும் விமர்சித்துள்ளனர்.

இமாம் நஸயீ அவர்கள் இவரைப் பலவீனமானவர் என்றும், இமாம் தாரகுத்னி அவர்கள், “ஆதாரப்பூர்வமான கிதாபுகளில் இவருடைய பலவீனமான செய்திகளைப் பதிவு செய்யக்கூடாது; இவர் அதிகமாகத் தவறிழைப்பவர்; இவர் தனக்குச் சொல்லப்பட்டதை அப்படியே கூறுவார்’ என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.

நூல்: தஹ்தீப் தஹ்தீப், (பாகம்: 11, பக்கம்: 288)

மேலும் இதன் அறிவிப்பாளர் வரிசையில் “சுலைமான் பின் அம்ர் அல்அஹ்வஸ்” என்ற அறிவிப்பாளரும் இடம் பெற்றுள்ளார். “இவர் யாரென்றே அறியப்படாதவர்” ஆவார்.

இந்தச் செய்தி மிகவும் பலவீனமானது என்பதை மேற்கண்ட காரணங்களிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

ஒரு வாதத்திற்கு இது சரியானது  என்று வைத்துக் கொண்டால் கூட இதில் எந்த ஒன்றையும் ஓதி ஊதிக் கொடுத்ததாக வரவில்லை. நபியவர்கள் எதையும் ஓதாமல் தம்முடைய கைகளைக் கழுவி வாய்கொப்பளித்து கொடுத்ததாகத் தான் வந்துள்ளது.

மேலும் நபியவர்கள் அல்லாஹ்விடம் நிவாரணம் தேடச் சொன்னதாகத் தான் மேற்கண்ட செய்தியில் இடம் பெற்றுள்ளது.

இது சரியானதாக இருந்தால் கூட நபியவர்களுக்கு மட்டும் உரிய தனிச் சிறப்பு என்று தான் கருத முடியுமே தவிர இதிலிருந்து அனைவரும் இவ்வாறு செய்யலாம் என்று சட்டம் எடுப்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இதில் இல்லை.

ஓதி, தண்ணீரில் ஊதிக் குடிக்கலாம் என்பவர்கள் பின்வரும் செய்தியையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் நோயுற்றிருந்த நிலையில் நபியவர்கள் அவரிடம் (நலம் விசாரிப்பதற்காக அவருடைய வீட்டிற்குள்) நுழைந்தார்கள். “மனிதர்களின் இரட்சகனே ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸை விட்டும் இந்த நோயைக் குணப்படுத்துவாயாகஎன்று பிரார்த்தித்தார்கள். பிறகு பத்ஹான் (என்ற இடத்தில்) இருந்து மண்ணை எடுத்து அதனை ஒரு பாத்திரத்தில் போட்டார்கள். பிறகு தண்ணீரை அதில் ஊதி அதனை அவர் மீது கொட்டினார்கள்

நூல்: அபூதாவூத் 3387

இந்த ஹதீஸ் ஓதி, தண்ணீரில் ஊதுவதைப் பற்றிப் பேசவில்லை என்பதுடன் இது பலவீனமான ஹதீஸாகவும் உள்ளது.

இதன் அறிவிப்பாளர்கள் தொடரில் யூசுஃப் பின் முஹம்மத் என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் யார் என்று அறியப்படாதவராவார். இவர் நம்பகமானவர் என்று யாரும் உறுதிப்படுத்தவில்லை.