நிர்வாகவியல் ஓர் இஸ்லாமியப் பார்வை

நிர்வாகவியல் ஓர் இஸ்லாமியப் பார்வை

உலகத்திலேயே மிக நீளமான ஆறு ஓடும் கண்டம் எது? உலகத்திலேயே மிக அடர்ந்த காடுகள் நிறைந்த கண்டம் எது? அதிகமான தங்கச் சுரங்கங்கள் நிறைந்த கண்டம் எது? மண்ணைச் சலித்தாலும் தங்கம் கிடைக்கும் கண்டம் எது? பதில் எல்லோருக்கும் தெரியும். ஆப்ரிக்கா.

ஆனால் உலகத்திலேயே அதிக வறுமை நிறைந்த கண்டம் எது? அதுவும் ஆப்ரிக்கா தான்.

உலகத்திலேயே அதிகம் சுனாமி வரும் நாடு எது? அதிகம் நில நடுக்கம் ஏற்படும் நாடு எது? அதிகம் புயல் வரும் நாடு எது? ஜப்பான்.

உலகில் முதன் முதலில் அணுகுண்டு வீசப்பட்ட ஹிரோஷிமா நகரில் நேரடியாகக் குண்டு தாக்கிய அரசு அலுவலகம் அப்படியே இன்று வரை வைக்கப்பட்டுள்ளது. அதைச் சுற்றி பூஞ்சோலையாக மாற்றப்பட்டுள்ளது. அங்கே ஒரு வாசகத்தையும் எழுதி வைத்துள்ளார்கள். அது: “குண்டு விழுந்த இடத்தைச் சுற்றி 75 ஆண்டுகளுக்கு  எந்தப் புல் பூண்டும் முளைக்காது என்று கூறுவார்கள். நாம் அதை மாற்றிக் காட்டியுள்ளோம்”

ஏன் இந்தத் தலைகீழ் நிலை? ஒரு புறம் வளங்கள் நிறைந்து காணப்படுகின்ற அதே அளவு வறுமையும் நிறைந்துள்ளது.

மறுபுறம் வளங்களே இல்லை என்பதையும் கடந்து, தடைகளும் இன்னல்களும் நிறைந்துள்ளன. ஆனால் தொழில் துறையில் முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம்.

என்ன காரணம்? இவர்கள் பாதகங்களையும் சாதகங்களாக எவ்வாறு மாற்றிக் கொண்டார்கள்? வளங்களிலெல்லாம் சிறந்த வளமான மனித வளத்தை முறைப்படுத்திப் பயிற்றுவித்து, அதன் மூலம் பாதகங்களும் சாதகங்களாக மாற்றப்பட்டுள்ளன.

ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் மனிதர்களில் சிறந்தவர் யார்? எனக் கேட்கப்பட்டது.

மக்கள் சுரங்கங்கள் ஆவர். அறியாமைக் காலத்தில் அவர்களில் சிறந்தவர்களாக இருந்தவர்கள் இஸ்லாத்தை ஏற்ற பின்பும் அவர்களில் சிறந்தவர்களாக இருப்பார்கள்; அவர்கள் மார்க்க அறிவைப் பெற்றுக் கொண்டால்! இந்த (ஆட்சியதிகாரம்) விஷயத்தில் (வேறு வழியின்றி) சிக்கிக் கொள்ளும் வரை அதைக் கடுமையாக வெறுப்பவரையே மக்களில் சிறந்தவராக நீங்கள் காண்பீர்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 3493, 3496

சுரங்கத்திலிருக்கும் கனிமங்கள் போன்ற வளத்தை நபி (ஸல்) அவர்கள் எப்படி செம்மைப்படுத்தினார்களோ, காட்டுமிராண்டிக் கூட்டத்தை எவ்வாறு உலகத்தின் தலைவர்களாக மாற்றினார்களோ அந்த அடிப்படையில் அவர்கள் வழியிலான நிர்வாக அமைப்பை, தனி மனிதப் பண்புகளில் விருத்தியை, தகவல் தொடர்பு முறையை, நவீன நிர்வாக தலைமைத்துவப் படைப்புகளின் ஒப்பீட்டோடு விளக்க முயன்றுள்ளோம்.

மக்களின் நம்பகத்தன்மையை ஒரு நிர்வாகம் பெற்றிருப்பதன் அளவைப் பொறுத்துத் தான் அதன் வெற்றி தோல்வியை முடிவு செய்ய முடியும். இன்றைய நவீன உலகில் எல்லாத் துறைகளுமே தனிப் பாடத் திட்டமாக பயிற்சி முறையாக வளர்ச்சியடைந்து விட்டது. அது போல நிர்வாகவியலும் தனித் துறையாக வளர்ச்சியடைந்துள்ளது.

இன்று தமிழ் முஸ்லிம் சமுதாயத்தில் ஜமாஅத் அமைப்புகள் தான் முஸ்லிம்களின் தனி மற்றும் மார்க்க விவகாரங்களைக் கவனிக்கும் அதிகார மையமாகப் பெரும்பாலும் திகழ்கின்றன. ஆனால் பெரும்பாலும் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு இஸ்லாமும் தெரியவில்லை; நிர்வாகவியலும் தெரியவில்லை. அதனால் அவர்களின் பொறுப்பும், கடமையும், இலக்கும் அவர்களுக்குத் தெரியாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை.

அது போல முஸ்லிம்களின் வாழ்வைப் புனரமைப்பதற்காகவும், பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கச் செய்வதற்காகவும், இஸ்லாத்தை எடுத்துரைப்பதற்காகவும் செயல்படும் அமைப்புகளில் இணைந்து பணி புரிவோரும் இஸ்லாத்தைத் தெரிந்திருக்கும் அளவுக்கு  நிர்வாகவியலைத் தெரிந்திருக்கவில்லை.

உயர் அரசுப் பணிகளில், நிறுவனங்களில் ஒரு சில முஸ்லிம்கள் தான் செயலாற்றுகின்றனர். அதுபோன்று சில முஸ்லிம்கள் தனி நிறுவனங்களை, தொழில் மையங்களை நடத்துகின்றனர். இவர்களிடம் நிர்வாகவியல் பற்றித் தெளிவு இருக்கின்றது. ஆனால் இஸ்லாமிய நிர்வாக அமைப்பு பற்றிய தெளிவில்லை.

இன்று ஒவ்வொரு முஸ்லிம் செய்யும் தவறுகளும் இஸ்லாத்தின் மேல் உள்ள குறை எனப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் காலத்தில் நமது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் இஸ்லாம் பிரதிபலிக்க வேண்டும். இப்படிப்பட்ட காலத்தில் நிர்வாகவியல் என்ற ஒரு முக்கியத் துறையை இஸ்லாமிய அடிப்படையில் அனைவரும் அறிந்து நடக்க வேண்டும் என்ற முயற்சி தான் இந்தத் தொடர். இதில் நிர்வாக அமைப்பு முறை பற்றியும் நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய கொள்கை, திறமை, ஆற்றல், ஒழுக்க முறைகள் பற்றியும் நவீன நிர்வாகவியல் கல்வி ஒப்பீட்டோடு விளக்க முனைந்துள்ளோம்.

இதைத் தகவலுக்காக வாசிக்கும் சராசரிப் புத்தகமாக எடுக்காமல் ஒவ்வொருவரும் சமுதாய அங்கங்களாக நமது கடமைகளைக் குடும்பத்தில், தொழிலில், வாழ்க்கையில் கடைப்பிடித்து இஸ்லாம் முழுமையான மார்க்கம் என்பதை நடைமுறையில் காட்டுவோம்.

எனது இந்த ஆய்வில் குறைகள் இருக்குமானால் அது மனிதன் என்ற முறையில் என்னைச் சார்ந்தது. சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வேன். நிறைகள் இருக்குமானால் அண்ட அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனைச் சார்ந்தது. அவனுக்கே புகழனைத்தும்.

நிர்வாகம் என்றால் என்ன?

ஒரு குடும்பத்தை, ஒரு கிராமத்தை, ஒரு ஊரை, ஒரு நகரை, நாட்டை அல்லது ஒரு வியாபார நிறுவனத்தை, தொழிற்சாலையை, ஒரு கட்சியை, ஒரு இயக்கத்தை வழி நடத்த ஒரு தனி நபர் தலைமையில் ஒரு குழுவை ஏற்படுத்துகின்றது. அந்தக் குழு ஒரு கொள்கையின் அடிப்படையில், இடையில் ஏற்படும் தடைகள், இடைஞ்சல்களைச் சமாளித்து, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கித் தங்களைப் பின்பற்றுபவர்களை வழி நடத்துவதே நிர்வாகம் எனப்படுகின்றது.

நடைமுறையிலிருக்கும் பிற நிர்வாகவியல் கோட்பாடுகள்

1) அறிவு

2) உணர்வுகள்

3) பொருளாதாரம்

4) அனுபவங்கள்

மேலை நாட்டு ஒழுக்கத் துறை அறிஞர்கள் மேற்காணும் நான்கு அடிப்படைகளை வைத்து, முன் வாழ்ந்து சென்ற மனிதர்களிடமிருந்து தம் வாழ்க்கைக்கான வழிகாட்டல்களைப் பெறுகின்றனர்.

ஆனால் ஒரு விஷயத்தை நாம் அவசியம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த உலக வாழ்க்கை திட்டமிட்டபடி மகிழ்ச்சிகரமாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் மனிதன், இதை விட அதிக மகிழ்ச்சி கிடைக்கும் வேறொரு வழி கிடைக்குமானால் அது ஒழுக்க வரையறைகளுக்கு உட்பட்டு இருக்கின்றதா இல்லையா என்றெல்லாம் பார்க்க மாட்டான்.

அப்படிப் பார்க்க வேண்டுமானால் “இவ்வுலக வாழ்வு என்பது நிரந்தரப் பேறுகளும், சுகங்களும் நிறைந்த மறுமை வாழ்வுக்கான தேர்வு’ என்ற அஸ்திவாரம் வலுவாகப் போடப்பட வேண்டும். இந்த அடிப்படை மேலை நாட்டு ஒழுக்கத் துறை அறிஞர்களிடம் இல்லை.

முஸ்லிம்கள் எந்தத் துறையை ஒப்பு நோக்கினாலும் மேலை நாட்டு அறிஞர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதையும் ஆய்வுக்கு எடுக்கின்றனர். ஆனால் மேலை நாட்டு அறிஞர்களின் ஆய்வுகளில் “இஸ்லாம் என்ன கூறுகின்றது?’ என்பதையும் கருத்தில் எடுக்கும் பரந்த மனப்பான்மை இல்லாததை நாம் காண முடிகின்றது.

மேலை நாட்டு தலைமைத்துவக் கோட்பாடுகள் தனி வாழ்வு, பொது வாழ்வு என வாழ்க்கையை இரு கூறுகளாகப் பிரித்துள்ளன. தனி வாழ்வைப் பற்றி ஒரு தலைவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது என்று வலியுறுத்துகின்றது.

ஆனால் இஸ்லாம் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த இல்வாழ்க்கையும் நம்பிக்கையாளர்களுக்கு முன்மாதிரி என கற்றுக் கொடுக்கின்றது. இஸ்லாமியத் தலைவர், தனி வாழ்விலும் பொது வாழ்விலும் ஒருங்கே ஒழுக்க விதிகளுக்கு உட்பட்டு வாழ வேண்டும்.

கைஸைன் கோட்பாடு

கைஸைன் கோட்பாடு என்பது ஜப்பானில் முறைப்படுத்தப்பட்டதாகும். தலைமைத்துவக் கல்வியாக வரையறுக்கப்பட்ட எல்லா தத்துவங்களுக்கும் கைஸைன் கோட்பாடு தான் முன்னோடி என நம்பப்படுகின்றது. ஜப்பான் நாட்டின் விரைவான வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இந்தக் கோட்பாடு முக்கியக் காரணம் என ஜப்பானியர்கள் நம்புகின்றனர். மிக விரிவாக இதைப் பற்றி எழுதலாம் என்றாலும் இஸ்லாமிய தலைமைத்துவம் பற்றி எழுத வேண்டும் என்பதால் கைஸன் கோட்பாட்டைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

பின்வரும் அடிப்படையில் தான் ஒரு தலைவர் இயங்க வேண்டும் என்று கைஸைன் கோட்பாடு கூறுகின்றது.

1)  சுய பண்புகளை மேம்படுத்திக் கொள்வது

2) தனிப்பட்ட வாழ்விலும், மற்ற துறைகளிலும் தொடர்ச்சியான முன்னேற்றம் வேண்டும். எந்தத் துறை சார்ந்த முன்னேற்றமும் தடைபட்டு நின்று விடக் கூடாது.

3) வாடிக்கையாளர்கள் அல்லது தன்னைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்களின் நலனில் அக்கரை காட்ட வேண்டும்.

4) தனது தவறுகளை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

5) தாராளத் தன்மை, திறந்த மனப்பான்மை போன்றவற்றை ஊக்கப்படுத்த வேண்டும்.

6) குழு செயல்பாட்டை வளர்க்க வேண்டும்.

7) நல்ல உறவுகளை ஊக்குவிக்க வேண்டும்.

8) நிறுவனத்தில் வேலை செய்யும் சக ஊழியர்களுக்கும், இயக்கத்தில் தனக்குக் கீழ் உள்ள நண்பர்களுக்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் தெரிவிக்க வேண்டும். எல்லாக் காரியத்தைச் செய்யும் முன்பும் அவர்களுடன் ஆலோசிக்க வேண்டும்.

9) ஊழியர்களை அல்லது பின்பற்றுபவர்களைப் பயிற்றுவித்து ஆக்கப்பூர்வமானவர்களாக மாற்ற வேண்டும்.

10) மாறிப் பணி புரிவது – ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர் தமது வேலைகளை முடித்து விட்டு, வேலையை முடிக்காத சக ஊழியர் வேறொரு பிரிவிலிருந்தாலும், தனது மேலதிகாரியின் அனுமதியின்றி உதவுவது)

கைஸைன் சித்தாந்தத்தைப் பொறுத்த வரை விரிவான ஆய்வு தேவையில்லை. ஏனெனில் இது இஸ்லாமிய தலைமைத்துவ வரையறைகளை மீறவோ மோதவோ இல்லை என்பதால் அடுத்த கோட்பாட்டைப் பாப்போம்.

முழுமையான தர மேலாண்மை

1) எதிலும் எல்லாவற்றிலும் தரம் வேண்டும்.

2) வாடிக்கையாளர்கள் மீது மிகுந்த அக்கரை.

3) எல்லா துறைகளிலும் தொடர்ச்சியாக வளர்ச்சி தேவை.

4) புதிது புதிதாகச் சிந்தித்து மாற்றங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். 5) அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.

6) குழுச் செயல்பாட்டைத் தூண்ட வேண்டும்.

முழுத் தர மேலாண்மை  என்ற இந்த மேலாண்மைத் துறை அமெரிக்கா, ஜப்பான் இன்னும் சில ஐரோப்பிய நாடுகளிலும் பயிற்றுவிக்கப்படுகின்றது. இந்த மேலாண்மைக் கல்வி இதைப் பின்பற்றும் நாடுகளில் விரைவான வளர்ச்சியும் முன்னேற்றமும் அடைய உதவியுள்ளதாக நம்பப்படுகின்றது.

வளரும் இன்ஷா அல்லாஹ்