முதஷாபிஹாத் – 4

தொடர்: 4         

முதஷாபிஹாத்

முதல் சாராரின் ஏழாவது ஆதாரம்

முதஷாபிஹ் வசனங்களுக்குப் பொருள் கூறுவதில் அறிஞர்கள் அனைவரும் ஒரே கருத்தைக் கூற முடியவில்லை. பல்வேறுபட்ட விளக்கங்களை ஒவ்வொருவரும் கூறுகின்றனர். முதஷாபிஹ் வசனங்களின் பொருளை விளங்க முடியும் என்றால் அனைவரும் ஒரே கருத்தைக் கூறியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு ஒரே கருத்தைக் கூறாமல் பல்வேறு கருத்துக்களைக் கூறியிருக்கின்றனர்.

இவ்வாறு அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருப்பதே முதஷாபிஹ் எவருக்கும் விளங்காது என்பதற்கு மற்றொரு சான்றாகும் என்று முதல் சாரார் வாதிக்கின்றனர்.

இரண்டாம் சாராரின் மறுப்பு

இந்த வாதமும் பொருளற்றதாகும். ஏனெனில் கருத்து வேறுபாடுகள் முதஷாபிஹ் வசனங்களில் மட்டுமல்ல! முஹ்கம் என்று முதல் சாராரும் ஒப்புக் கொள்ளக்கூடிய வசனங்களிலும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. தொழுகை, நோன்பு, இன்னபிற சட்டதிட்டங்களைக் கூறக்கூடிய வசனங்களை முதல் சாராரும் முஹ்கம் என்றே கூறுவர். சட்ட திட்டங்களைப் பற்றிய அந்த வசனங்களிலும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. மத்ஹபுகள் என்ற பெயரால் முரண்பட்ட சட்டதிட்டங்கள் நிலவி வருவது இதற்குப் போதிய சான்றாகும்.

கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் முதஷாபிஹ் வசனங்கள் விளங்காது என்ற முடிவுக்கு முதல் சாரார் வருவார்களானால் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ள ஏராளமான முஹ்கம் வசனங்களும் விளங்காது என்று கூற வேண்டிய நிலைமை ஏற்படும். அல்லது முதல் சாராரும் முஹ்கம் என்று ஏற்றுக் கொண்ட பல வசனங்களை முதஷாபிஹ் வசனங்கள் என்று கூறும் நிலை ஏற்படும்.

முஹ்கம் வசனங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் எல்லாக் கருத்துக்களையும் அலசி, சரியான கருத்தை முடிவு செய்வது போல் முதஷாபிஹ் வசனங்களிலும் முடிவு செய்ய முடியும்.

இன்னும் சொல்வதென்றால் முதல் சாரார் முதஷாபிஹ் வசனங்கள் எனக் கூறுகின்ற சொர்க்கம், நரகம், மறுமை போன்றவற்றைக் குறிப்பிடும் வசனங்களிலுள்ள கருத்து வேறுபாடுகளை விட முஹ்கம் என்று முதல் சாரார் முடிவு செய்துள்ள, சட்டதிட்டங்கள் தொடர்பான வசனங்களில் கருத்து வேறுபாடுகள் அதிகம் உள்ளன.

கருத்து வேறுபாடுகள் நிலவுவதைக் காரணம் காட்டி முதஷாபிஹ் வசனங்கள் விளங்க முடியாதவை என்று முதல் சாரார் கூறுவார்களானால் முஹ்கம் வசனங்களும் விளங்காது என்று கூற வேண்டிய நிலை ஏற்படும். முதல் சாரார் அவ்வாறு கூறத் துணிய மாட்டார்கள். எனவே அவர்களின் இந்த வாதம் அர்த்தமற்றது என்று இரண்டாம் சாரார் மறுக்கின்றனர்.

முதல் சாராரின் எட்டாவது ஆதாரம்

திருக்குர்ஆனில் முஹ்கம் வசனங்களும் உள்ளன; முதஷாபிஹ் வசனங்களும் உள்ளன. வல்ல அல்லாஹ்வே இவ்வாறு தன் வசனங்களை வகைப்படுத்தி இருக்கிறான். இறைவன் இரண்டு வகை வசனங்கள் உள்ளதாகக் கூறும் போது, இரண்டும் வெவ்வேறு தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் வித்தியாசம் இருப்பது அவசியம். முஹ்கம் வசனங்கள் மனிதர்கள் எவரும் விளங்கிக் கொள்ளத்தக்கவை அல்ல. இறைவன் மாத்திரம் அறியக் கூடியவை என்று கூறும் போது தான் இரண்டு வகைகளாக ஆக முடியும்.

முஹ்கம் வசனங்களும் விளங்கும்; முதஷாபிஹ் வசனங்களும் விளங்கும் என்று கூற முற்பட்டால் முஹ்கம் வசனங்களுக்கும் முதஷாபிஹ் வசனங்களுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லாமல் போகும். இறைவன் இரண்டு வகைகளாகத் தன் வசனங்களை வகைப்படுத்தி இருக்கும் போது, “இரண்டும் விளங்கத்தக்கவை’ என்று கூறினால் இறைவன் இரண்டு வகைகளாகப் பிரித்துள்ளதை ஒன்றாக ஆக்கும் நிலை ஏற்பட்டு விடும். எனவே தான் முதஷாபிஹ் வசனங்கள் விளங்காது என்று கூறி இரண்டையும் வித்தியாசப்படுத்துகிறோம் என்று முதல் சாரார் தங்களின் எட்டாவது சான்றைச் சமர்ப்பிக்கின்றனர்.

இரண்டாம் சாராரின் மறுப்பு

இறைவன் இரண்டு விதமான வசனங்கள் உள்ளதாகக் கூறுவது உண்மையே! இரண்டுக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதும் உண்மையே! அதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் முதல் சாரார் குறிப்பிட்ட வகையில் தான் அந்த வித்தியாசம் அமைய வேண்டும் என்பது என்ன அவசியம்?

முதல் சாரார் குறிப்பிடுகின்ற அந்த வித்தியாசத்தை, அதாவது குர்ஆனில் விளங்காதவைகளும் உள்ளன என்ற விபரீதக் கருத்தை எண்ணற்ற வசனங்கள் மறுத்துக் கொண்டிருக்கும் போது, முதஷாபிஹ் வசனங்களும் விளங்கும் என்று திருக்குர்ஆன் கூறும் போது அதற்கு மாற்றமான இந்த வித்தியாசத்தை எப்படி ஏற்க முடியும்? (முதஷாபிஹ் வசனங்களும் விளங்கக் கூடியவையே என்று இரண்டாம் சாரார் தங்கள் வாதங்களை எடுத்து வைக்கும் போது இது விரிவாக விளக்கப்படும்)

முஹ்கமையும் முதஷாபிஹையும் சம நிலையில் நாமும் வைக்கவில்லை. முஹ்கம் எளிதில் எவருக்கும் விளங்கக்கூடியவை; முதஷாபிஹ் வசனங்கள் அறிவில் தேர்ந்தவர்களுக்கு விளங்கக் கூடியவை என்று கூறுவதன் மூலம் இரண்டு வகையான வசனங்களையும் நாம் வித்தியாசப்படுத்துகிறோம் என்று இரண்டாவது சாரார் மறுக்கின்றனர்.

முதல் சாராரின் ஒன்பதாவது ஆதாரம்

முதஷாபிஹ் வசனங்கள் விளங்காது என்றால் அறவே விளங்காது என்று நாம் கூறவில்லை. ஓரளவு அனுமானம் செய்ய முடியும். திட்டவட்டமாக இது தான் விளக்கம் என்று கூற முடியாது என்பதே அதன் பொருள். முதஷாபிஹ் வசனங்களைச் சிந்திக்கவே கூடாது என்று நாங்கள் கூறவில்லை என்று முதல் சாரார் தங்களின் கூற்றுக்கு விளக்கம் தருகின்றனர்.

இரண்டாவது சாராரின் மறுப்பு

இவர்களின் இந்த வாதமும் சரியானதல்ல. பெரும்பாலான முஹ்கம் வசனங்களின் நிலையும் கூட இத்தகையது தான். திட்டவட்டமாக அல்லாஹ் இதைத் தான் நாடியுள்ளான் என்று கூற முடியாத முஹ்கம் வசனங்கள் பல உள்ளன.

நாம் ஏற்கனவே குறிப்பிட்டவாறு அறிஞர்கள் பல முஹ்கம் வசனங்களில் கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றனர். திட்டவட்டமாக அதன் விளக்கத்தை அறிய முடியாததாலேயே அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டனர்.

முதஷாபிஹ் வசனங்களும் விளங்கத்தக்கவை எனவும், விளங்காதவை எனவும் கூறுகின்ற இரு சாராரும் தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக எடுத்து வைக்கும் 3:7 வசனத்தையே இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

அந்த வசனத்திற்குப் பொருள் செய்யும் போது, “அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் விளங்க முடியாது” என்று சிலரும், “அல்லாஹ்வும், கல்வியில் உறுதி மிக்கவர்களும் விளங்குவார்கள்” என்று வேறு சிலரும் பொருள் கொள்கின்றனர்.

திட்டவட்டமாக அதன் பொருளைக் கூற இயலாத காரணத்தினால் தான் இப்படி இரு அர்த்தங்கள் செய்யும் நிலை. “திட்டவட்டமாக விளங்காது’ என்ற நிலை முதஷாபிஹ் வசனங்களில் மட்டுமல்ல; மேற்கூறிய 3:7 போன்ற முஹ்கம் வசனங்களின் நிலையும் இது தான்.

3:7 வசனம் “முஹ்கம் அல்ல; அதுவும் முதஷாபிஹ் தான்’ என்று முதல் சாரார் ஒரு வேளை கூற முற்பட்டால், அவர்களின் கூற்றுப்படி முஹ்கம் அல்லாத 3:7 வசனத்தை ஆதாரமாகக் கொண்டு தங்கள் வாதத்தை எழுப்பவே இயலாது போகும்.

அவர்களது வாதப்படி மனிதர்களால் விளங்க முடியாத முதஷாபிஹ் வசனத்தின் அடிப்படையில் எந்த வாதத்தையும் எழுப்ப முடியாது. முஹ்கம் வசனங்களின் அடிப்படையிலேயே வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பது முதல் சாரார் ஏற்றுக் கொண்ட உண்மை. இவ்வாறு இரண்டாம் சாரார் மறுக்கின்றனர்.

முடிவுரை – 1

இதுவரை முதல் சாரார் எடுத்து வைத்த வாதங்களையும், அதற்கான மறுப்புக்களையும் மீண்டும் படித்தால், முதஷாபிஹ் வசனங்கள் இவை தான் என்று கூறும் முதல் சாரார் அதற்குக் குர்ஆன், ஹதீஸிலிருந்து எந்த ஒரு ஆதாரத்தையும் எடுத்து வைக்கவில்லை என்பதை உணரலாம்.

முதஷாபிஹ் வசனங்கள் விளங்கிட இயலாதவை என்ற அவர்களின் கூற்றுக்கும் சரியான ஆதாரங்களை எடுத்து வைக்கவில்லை என்பதையும் விளங்கலாம். அவர்களின் வாதங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதையும் அறிய முடியும்.

“விளங்காத வசனங்களை இறைவன் எதற்காக இறக்கியருள வேண்டும்?” என்பதற்கு முதல் சாரார் சில வியாக்கியானங்களை அளிக்கின்றனர். இந்த விளக்கத்தை நாம் கண்டு கொள்ளவில்லை. ஏனெனில் குர்ஆனில் விளங்காதவை இருக்கின்றன என்பதை அவர்கள் நிரூபித்த பின்பே அந்த விளக்கங்கள் தேவைப்படலாம். எல்லாமே விளங்கத்தக்கவை என்று முடிவாகி விட்டால் அவர்களின் அந்த விளக்கம் அவசியமற்றுப் போய் விடும்.

இனி இரண்டாம் சாராரின் வாதங்களை விரிவாகப் பார்ப்போம்.