மர்மக் காய்ச்சல் தண்டனையா? சோதனையா?

மர்மக் காய்ச்சல் தண்டனையா? சோதனையா?

ஏற்கனவே டெங்கு, மலேரியா, மூளைக் காய்ச்சல் எனப் பல்வேறு காய்ச்சலில் மாட்டித் தவித்துக் கொண்டிருக்கையில், புதுப் புது ரகமாய் வெளியாகும் நோக்கியா போன் வரிசையைப் போன்று இப்போது புதுப்புது பெயர்களில் காய்ச்சல்கள் புறப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், சிக்குன்குனியா போன்றவை இந்த வரிசையில் உள்ள காய்ச்சல்களாகும்.

இறக்கை கட்டி வந்து மக்களைத் தாக்கி முடமாக்கி, தற்காலிகமாகப் படுக்க வைத்தும், நிரந்தரமாகப் படுக்க வைத்தும் வேடிக்கை பார்க்கும் இந்த ராட்சஷப் பறவையைப் பார்த்து மக்கள் பயத்தில் ஆடிப் போய்க் கொண்டிருக்கின்றனர்.

இது அல்லாஹ்வின் தண்டனை என்று ஒரு சில அசத்தியவாதிகள் கூறியும் திரிகின்றனர். ஏகத்துவவாதிகள் அவ்லியாக்களைத் திட்டுவதால் தான் இவ்வகைக் காய்ச்சல்கள் தலை காட்டுகின்றன என்று சொல்லி அசத்தியவாதிகள் தங்கள் அறியாமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இறந்து விட்ட நல்லடியார்களை இறைவனுக்கு நிகராகக் கருதி, அவர்களிடம் உதவி தேடுவதையும் அவர்களுக்கு விழா எடுப்பதையும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நாம் விமர்சிக்கிறோம். இதைத் தான் இவர்கள் அவ்லியாக்களைத் திட்டுவதாகக் கூறுகின்றனர்.

சரி! இதனால் தான் இந்த விஷக் காய்ச்சல் வந்து விட்டது என்று ஒரு வாதத்திற்கு ஒத்துக் கொண்டால் கூட தமிழகத்தில் மட்டும் இவ்வகைக் காய்ச்சல்கள் நடமாடுவதில்லை.

பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் போன்றவை உலகளாவிய காய்ச்சல்கள் ஆகும். அப்படியானால் உலகெங்கும் தவ்ஹீதுவாதிகள், அவ்லியாக்களைத் திட்டுகிறார்கள் என்று கூறுவார்களா?

இவர்கள் இவ்வாறு சொல்வதில் எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை. இறைத் தூதர்களுக்கு எதிராகச் சொல்லப்பட்ட வாதங்கள் தாம் இவை!

அவர்களுக்கு ஏதேனும் நன்மை வந்தால் “அது எங்களுக்காக (கிடைத்தது)எனக் கூறுகின்றனர். அவர்களுக்கு தீங்கு ஏற்படுமானால் மூஸாவையும் அவருடன் உள்ளவர்களையும் பீடையாகக் கருதுகின்றனர். “கவனத்தில் கொள்க. அவர்கள் பீடையாகக் கருதுவது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது. எனினும் அவர்களில் அதிகமானோர் இதனை அறிவதில்லை

அல்குர்ஆன் 7:131

ஸாலிஹ் (அலை) அவர்களை நோக்கியும் இந்தக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளனர்.

அல்லாஹ்வை வணங்குங்கள்என்று ஸமூது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பினோம். உடனே அவர்கள் இரு பிரிவுகளாக தர்க்கம் செய்யலானார்கள்.

என் சமுதாயமே! நன்மைக்கு முன்னால் தீமையை ஏன் அவசரமாகத் தேடுகிறீர்கள்? நீங்கள் அருள் செய்யப்பட அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேட மாட்டீர்களா?” என்று அவர் கூறினார்.

உம்மையும், உம்முடன் இருப்போரையும் கெட்ட சகுனமாகக் கருதுகிறோம் என்று அவர்கள் கூறினர். உங்கள் கெட்ட சகுனம் அல்லாஹ்விடமே உள்ளது. மாறாக நீங்கள் சோதிக்கப்படும் கூட்டமாக உள்ளீர்கள் என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 27:45-47

யாஸீன் அத்தியாயத்தில் மூன்று இறைத் தூதர்களின் வரலாற்றை இறைவன் குறிப்பிடுகின்றான். அந்த வரலாற்றிலும் இறைத் தூதர்களை நோக்கி எதிரிகள் இதே வாதத்தைச் சொன்னதாகத் திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

சத்தியப் பாதையில் இதுபோன்ற குற்றச்சாட்டை, வாதத்தை ஏகத்துவவாதிகள் சந்திக்க வேண்டும். அதைத் தான் நாம் சந்திக்கிறோம். இது, நாம் சத்தியத்தில் இருக்கிறோம் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

தண்டனையா? சோதனையா?

ஏகத்துவப் பிரச்சாரம் வந்ததால் தான் இந்தத் தண்டனை என்று கூறுகின்ற இவர்களிடம் மார்க்க அறிவு கடுகளவுக்குக் கூட இல்லை என்று நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

தண்டனை என்றால் என்ன? சோதனை என்றால் என்ன? என்ற வித்தியாசம் இவர்களுக்குப் புரியவில்லை.

அல்லாஹ் இட்ட கட்டளையை அடியார்கள் செய்யாத போது, அல்லது அவனது கட்டளையை மீறும் போது அல்லாஹ் இறக்கக் கூடிய வேதனைக்குப் பெயர் தான் தண்டனை.

அல்லாஹ்வை மட்டும் தான் அடியார்கள் வணங்க வேண்டும் என்று அடியார்களுக்கு அல்லாஹ் உத்தரவு போடுகின்றான். அதுபோல் தன்னைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது என்று தடையும் போடுகின்றான்.

அடியார்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்காததுடன், அவன் போட்ட தடையையும் மீறினார்கள். அதனால் அவர்கள் மீது வேதனை இறக்கப்படுகின்றது.

நூஹ் நபியின் சமுதாயம் வெள்ளத்தில் அழிக்கப்பட்டது. ஹூது நபியின் ஆது சமுதாயம் காற்றில் அழிக்கப்பட்டது. ஸமூது சமுதாயம் பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டது. லூத் நபியின் சமுதாயம் கல்மாரி பொழிந்து அழிக்கப்பட்டது. ஷுஐப் நபியின் சமுதாயம் வெப்ப மழையால் அழிக்கப்பட்டது. இவையெல்லாம் தண்டனைகளாகும். இந்தத் தண்டனைகள் பற்றிய திருக்குர்ஆன் வசனங்களைப் படிப்பவர்கள் இரண்டு நியதிகளைத் தெளிவாகப் பார்க்கலாம்.

  1. ஒரு சமுதாயம் அழிக்கப்படுவதற்கு முன்னால் அவர்களுக்கு அனுப்பப்பட்ட இறைத் தூதருக்கு இது குறித்த எச்சரிக்கை வரும். அந்த எச்சரிக்கையை இறைத் தூதர் மக்களுக்குத் தெரிவிப்பார். ஆனால் அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் ஏளனம் செய்வர். இறுதியில் அந்த வேதனை வந்து அம்மக்களை அழிக்கும். இது ஒரு நியதி!

அவர் கப்பலைச் செய்யலானார். அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போது அவரைக் கேலி செய்தனர். “நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம்என்று அவர் கூறினார். “இழிவு தரும் வேதனை யாருக்கு வரும்? நிலையான வேதனை யாருக்கு இறங்கும் என்பதை அறிந்து கொள்வீர்கள்!” (என்றும் கூறினார்)

அல்குர்ஆன் 11:38, 39

  1. தீயவர்கள் அழிக்கப்படும் போது இறைத் தூதரும் அவரை நம்பியவர்களும் அவ்வூரில் இருக்க மாட்டார்கள். திரும்பிக் கூடப் பார்க்காமல் நல்லவர்கள் ஊரைக் காலி செய்து விட வேண்டும்.

லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள். அவர்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படக்கூடியது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக்கெடு வைகறைப் பொழுது. வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா?” என்றனர்.

அல்குர்ஆன் 11:81

நூஹ் நபியின் காலத்தில் வெள்ளப் பிரளயம் என்பதால் நூஹையும் அவரது சமுதாயத்தையும் அல்லாஹ் கப்பலில் ஏறச் செய்து, அதாவது நல்லவர்களை மட்டும் பிரித்தெடுத்து காப்பாற்றுகின்றான். இது இரண்டாவது நியதி.

படிப்பினை பெறுவதற்காகப் பல வகைப் பஞ்சங்களாலும் பலன்களைக் குறைப்பதன் மூலமும் ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தைத் தண்டித்தோம்.

அவர்களுக்கு ஏதேனும் நன்மை வந்தால் “அது எங்களுக்காக (கிடைத்தது)எனக் கூறுகின்றனர். அவர்களுக்குத் தீங்கு ஏற்படுமானால் மூஸாவையும் அவருடன் உள்ளவர்களையும் பீடையாகக் கருதுகின்றனர். “கவனத்தில் கொள்க. அவர்கள் பீடையாகக் கருதுவது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது. எனினும் அவர்களில் அதிகமானோர் இதனை அறிவதில்லை

எங்களை வசியம் செய்வதற்காக நீர் எந்தச் சான்றைக் கொண்டு வந்த போதிலும், நாம் உம்மை நம்பப் போவதில்லைஎன்று அவர்கள் கூறினர்.

எனவே அவர்களுக்கு எதிராக வெள்ளப்பெருக்கு, வெட்டுக்கிளி, பேன், தவளைகள், இரத்தம் ஆகிய தெளிவான சான்றுகளை அனுப்பினோம். அவர்கள் ஆணவம் கொண்டனர். குற்றம் புரிந்த கூட்டமாகவே இருந்தனர்.

அவர்களுக்கு எதிராக, வேதனை வந்த போதெல்லாம் “மூஸாவே! உமது இறைவன் உம்மிடம் தந்த வாக்குறுதியின் படி அவனிடம் பிரார்த்திப்பீராக! எங்களை விட்டு இந்த வேதனையை நீர் நீக்கினால் உம்மை நம்புவோம். உம்முடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பி வைப்போம்என்று அவர்கள் கூறினர்.

அவர்கள் அடைந்து கொள்ளக் கூடிய காலக் கெடு வரை அவர்களுக்கு நாம் வேதனையை நீக்கிய உடனே அவர்கள் வாக்கு மாறினர்.

அவர்கள் நமது சான்றுகளைப் பொய்யெனக் கருதி, அவற்றை அலட்சியம் செய்து வந்ததால் அவர்களைத் தண்டித்தோம். அவர்களைக் கடலில் மூழ்கடித்தோம்.

அல்குர்ஆன் 7:130-136

இந்த வசனங்களில் ஃபிர்அவ்னின் சமுதாயத்தினரை மட்டும் வேதனை செய்ததாக இறைவன் குறிப்பிடுகிறான். அந்த வேதனையை, மாற்றி மாற்றிச் செய்ததாகவும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

இன்று ஏற்படுகின்ற இந்தக் காய்ச்சல்கள் நல்லவர்கள், கெட்டவர்கள், முஸ்லிம், கிறித்தவர்கள், இறை மறுப்பாளர்கள் என அனைவரையும் சேர்த்தே பீடிக்கின்றன. அதனால் இதைத் தண்டனை என்று ஒரு போதும் கூற முடியாது.

இந்தத் தண்டனையைப் பற்றி அறிவிப்பதற்கு இறைத் தூதர்கள் இருந்தாக வேண்டும். காரணம் அவர்கள் வஹீயின் தொடர்பில் இருப்பதால் அல்லாஹ் அவர்களிடம் தான் அது பற்றி அறிவிப்பான்.

இந்த நியதிகளின் அடிப்படையில் அமைந்தால் தான் மக்களுக்கு ஏற்படும் வேதனையை அல்லாஹ்வின் தண்டனை என்று சொல்ல முடியும். இல்லையென்றால் அது சோதனையாகும்.

சோதனை

தண்டனை என்பது ஒருவர் செய்த தீமைக்குப் பரிசாக வழங்கப்படும் வேதனை! இதைத் தான் நபிமார்களின் வரலாறுகளில் நாம் கண்டோம். இதை இன்னும் தெளிவுபடுத்துவதற்காக, பனூ இஸ்ரவேலர்கள் குரங்குகளாக மாற்றப்பட்ட வரலாற்றைக் குறிப்பிடலாம்.

கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம்.

அல்லாஹ் அழிக்கப் போகின்ற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகின்ற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?” என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் “உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது) தப்பிப்பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்)எனக் கூறினர்.

கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது தீமையைத் தடுத்தவர்களை (மட்டும்) காப்பாற்றினோம். அநீதி இழைத்தவர்களை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடுமையாகத் தண்டித்தோம்.

தடுக்கப்பட்டதை அவர்கள் மீறிய போது “இழிந்த குரங்குகளாக ஆகி விடுங்கள்!என்று அவர்களுக்குக் கூறினோம்.

அல்குர்ஆன் 7:163-166

சனிக்கிழமையன்று வணங்க வேண்டும் என்ற கட்டளையை பனூ இஸ்ரவேலர்கள் செய்யாததுடன், அந்நாளில் மீன் பிடிக்கக் கூடாது என்ற தடையையும் மீறினார்கள். இதனால் அவர்கள் குரங்குகளாக மாற்றப்பட்டனர். இறைவனின் கட்டளையைச் செய்யாமல், அவன் விதித்த தடையையும் மீறியதற்காக இந்தத் தண்டனை.

சோதனை என்பது இரு விதங்களில் அமையும்.

  1. திருத்துவது.
  2. தேர்வு செய்தல், பரிசளித்தல்

திருத்துதல்

திருத்துதல் என்பது காஃபிர்களுக்குரியதாகும்.

அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களை காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர்.  (அல்குர்ஆன் 29:65)

கடலில் பயணம் செய்யும் போது அல்லாஹ் கடுமையான புயலை அனுப்புகின்றான். அதன் மூலம் அவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பளிக்கின்றான். அவர்கள் திருந்தவில்லை எனில் அவர்களுக்கு மறுமையில் நிரந்தர நரகத்தைக் கூலியாக வழங்குகின்றான்.

தேர்வு செய்தல், பரிசளித்தல்

இது இறை நம்பிக்கையாளர்களுக்குரியதாகும்.

இப்ராஹீம் நபியவர்களுக்கு அல்லாஹ் மிகப் பெரும் அந்தஸ்தை அளிக்கின்றான். தலைவர் என்ற பதவியை அளித்தான். அந்தப் பதவிக்கு அவரைத் தேர்வு செய்வதற்கு முன்னால் பல விதமான சோதனைகளைச் செய்கிறான்.

இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். “உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்என்று அவன் கூறினான். “எனது வழித் தோன்றல்களிலும்” (தலைவர்களை ஆக்குவாயாக!) என்று அவர் கேட்டார். “என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராதுஎன்று அவன் கூறினான்.

அல்குர்ஆன் 2:124

அந்தச் சோதனைகளில் மகத்தான சோதனை, இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் மகனை அறுத்துப் பலியிட வேண்டும் என்ற அல்லாஹ்வின் கட்டளையாகும். அந்தக் கட்டளையை நிறைவேற்ற முன்வந்து அந்தச் சோதனையில் வெற்றியும் அடைகின்றார்.

அவருக்கு சகிப்புத் தன்மைமிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம். அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது “என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு” என்று கேட்டார். “என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்” என்று பதிலளித்தார்.

இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, “இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம்.

அல்குர்ஆன் 37:101-107

பயிற்சிப் போட்டிகள்

ஒரு விளையாட்டுப் போட்டிக்குச் செல்வதற்கு முன்னால், பல்வேறு பயிற்சிப் போட்டிகள் நடக்கின்றன. அதன் பின் கால் இறுதி, அரையிறுதிப் போட்டிகள். அவற்றில் வெற்றி பெற்றால் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்படுகின்றனர். இதுபோன்று ஒரு போர்க்களத்தில் கலந்து கொள்வதற்கு முன்னரும் அல்லாஹ் ஒரு சில சோதனைகளை வைக்கிறான்.

தாலூத், படைகளுடன் புறப்பட்ட போது “அல்லாஹ் உங்களை ஒரு நதியின் மூலம் சோதிக்கவுள்ளான். அதில் அருந்துபவர் என்னைச் சேர்ந்தவர் அல்லர். அதை உட்கொள்ளாதவர் என்னைச் சேர்ந்தவர்; கை அளவு அருந்தியவர் தவிரஎன்றார். அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) அதில் அருந்தினார்கள். அவரும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் அதைக் கடந்த போது “ஜாலூத் மற்றும் அவனது படையினருடன் (போரிட) இன்று எங்களுக்கு எந்த வலிமையும் இல்லைஎன்றனர். அல்லாஹ்வைச் சந்திக்கவுள்ளோம் என்று நம்பியோர், “எத்தனையோ சிறு படைகள், பெரும் படைகள் பலவற்றை அல்லாஹ்வின் விருப்பப்படி வென்றுள்ளன. சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்என்றனர்.

ஜாலூத்தையும், அவனது படையினரையும் அவர்கள் களத்தில் சந்தித்த போது “எங்கள் இறைவா! எங்கள் மீது சகிப்புத் தன்மையை ஊற்றுவாயாக! எங்கள் பாதங்களை நிலைப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!என்றனர்.

அல்குர்ஆன் 2:249, 250

போர்க்களத்திலும், போர்க் காலத்திலும் மட்டுமல்லாது, சாதாரண ஹஜ் போன்ற வணக்கத்திலும் அல்லாஹ் சோதனை வைக்கிறான்.

நம்பிக்கை கொண்டோரே! “தனிமையில் (தன்னை) அஞ்சுபவர் யார்?’ என்பதை அல்லாஹ் அடையாளம் காட்ட (நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் போது) உங்கள் கைகளுக்கும் உங்கள் ஈட்டிகளுக்கும் எட்டும் வகையில் சில வேட்டைப் பிராணிகளைக் காட்டி உங்களை அல்லாஹ் சோதித்துப் பார்ப்பான். இதன் பின்னர் வரம்பு மீறுபவருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

அல்குர்ஆன் 5:94

ஹாஜிகளிடமிருந்து ஹஜ் என்ற வணக்கத்தை ஏற்றுக் கொள்வதற்கும் அல்லாஹ் இந்தத் தேர்வை நடத்துவதைப் பார்க்கிறோம்.

இதுபோன்று பரிசு, சன்மானம் வழங்குவதற்கும், பாவத்தை அழிப்பதற்கும் அல்லாஹ் சோதனையை வைக்கின்றான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது அவர்கüடம் நான் சென்றேன். “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே!என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “ஆம்; உங்கüல் இரு மனிதர்கள் காய்ச்சலால் அடைகின்ற துன்பத்தை (ஒரே மனிதனாகிய) நான் அடைகின்றேன்என்று சொன்னார்கள்.

நான், “(இந்தத் துன்பத்தின் காரணமாகத்) தங்களுக்கு இரு (மடங்கு) நற்பலன்கள் கிடைக்கும் என்பதா இதற்குக் காரணம்?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “ஆம்; அது அப்படித் தான். ஒரு முஸ்லிமைத் தைக்கும் ஒரு முள்ளாயினும், அதற்கு மேலான துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக, மரம் தன் இலைகளை உதிர்த்து விடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் (உதிரச் செய்து) மன்னிக்காமல் விடுவதில்லைஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 5648

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் சோதிக்கப்படுகிறார்கள்; அதிலும் கடுமையாகச் சோதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பார்க்கிறோம்.

நபி (ஸல்) அவர்களுக்கும், முஃமின்களுக்கும் ஏற்படுகின்ற சோதனை அவர்களுக்கு அல்லாஹ் உயர்ந்த பரிசைக் கொடுப்பதற்காக வழங்கப்படும் சோதனையாகும். இதைத் தான் அல்லாஹ் பின்வரும் வசனங்களில் குறிப்பிடுகின்றான்.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!

தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது “நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்என்று அவர்கள் கூறுவார்கள்.

அல்குர்ஆன் 2:155, 156

இப்போது ஏற்பட்டிருக்கும் இந்தக் காய்ச்சல் இறை நம்பிக்கையாளர்களையும் பிடித்திருக்கின்றது; இறை மறுப்பாளர்களையும் பிடித்திருக்கின்றது. எனவே இதை அல்லாஹ்வின் தண்டனை என்று கூற முடியாது. இது இறைவன் வைத்திருக்கும் சோதனை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தச் சோதனை மூலம் இறை நம்பிக்கையாளர்களுக்கு அந்தஸ்தை அல்லாஹ் உயர்த்துகின்றான். இறை மறுப்பாளர்களுக்கு இதன் மூலம் திருந்துவதற்கான வாய்ப்பை அளிக்கின்றான் என்று விளங்கிக் கொள்வோமாக!