மலைக்க வைக்கும் மண்டபத் திருமணங்கள்

மலைக்க வைக்கும் மண்டபத் திருமணங்கள்

அண்மைக் காலத்தில் நமது தலைமையை நோக்கி திருமணம் தொடர்பான புகார்கள், விமர்சனங்கள் படையெடுக்க ஆரம்பித்தன.

தவ்ஹீது மணமகன் பெண் வீட்டாரிடம் ஏதேனும் மறைமுகமாக வரதட்சணை வாங்கிய விவகாரமா? அல்லது பெண் வீட்டில் விருந்தா? இது தொடர்பான புகார் எதுவும் வரவில்லை. விமர்சனம் எதுவும் வரவில்லை.

வந்த புகார், விமர்சனம் அனைத்தும் மண்டபத்தில் நடக்கும் திருமணம் குறித்துத் தான். மண்டபத்தில் திருமணம் மார்க்க அடிப்படையில் கூடாது என்பதாலா? அதுவும் இல்லை. மாறாக, மண்டபத் திருமணங்களில் செய்யப்படும் செலவினங்கள் பற்றியே விமர்சனம் எழுகின்றது.

திருமண விருந்தான வலீமாவைப் பொறுத்த வரையில் மார்க்கத்தில் ஒரு வரையறை இல்லை. அவ்வாறு ஒரு வரையறை வைக்க முடியாத நெருடலான விஷயம் திருமண விருந்து.

ஆனாலும் அதில் வரம்பு கடந்து சென்று விடக் கூடாது. அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரகத் (இறைவனின் மறைமுகமான பேரருள்) நிறைந்ததுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: அஹ்மத் 23388

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மணமக்களை வாழ்த்தும் போது கூட அல்லாஹ் (பரக்கத்) அருள் செய்வானாக என்று தான் பிரார்த்திக்கின்றார்கள். அதனால் தம்பதியருக்கும் மிக மிக அவசியம் பரக்கத் என்பதை இதன் மூலம் விளங்கலாம்.

பரக்கத் என்பதன் பொருள்

இந்த பரக்கத் என்பதன் பொருள் என்ன? என்பதை விரிவாகத் தெரிந்து கொள்வதற்காக அல்லாஹ்வின் திருமறை வசனங்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களையும் பார்ப்போம்.

பூமியில் புதைந்து கிடக்கும் பரக்கத்

நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் (பரக்கத்) பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே.

அல்குர்ஆன் 41:10

உலகில் இந்தப் பூமியில் மனித இனம் மட்டுமே உயிர் வாழவில்லை. ஊர்வன, பறப்பன, நீர்வாழ் உயிரினங்கள் போன்ற எண்ணற்ற உயிரினங்கள் பூமியில் வாழ்கின்றன. தாவர இனமும் அறிவியல் அடிப்படையில் உயிரினம் தான். கோடான கோடி உயிரினங்களுக்கும் தாவர வகைகளுக்கும் உணவு வழங்கும் ஓர் உன்னதத் தாயாக, ஊட்டச் சத்து வழங்கும் தானியக் களஞ்சியமாக பூமி திகழ்கின்றது. இன்று உலகில் வாழ்கின்ற மக்கள் தொகை 700 கோடியாகும்.

இப்போது வாழ்கின்ற மக்களுக்கும், ஏற்கனவே வாழ்ந்து மறைந்தவர்களுக்கும் உலகம் அழியும் நாள் வரை உலகில் பிறக்கப் போகின்றவர்களுக்கும் உணவு அளிக்கவிருப்பது இந்தப் பூமி தான்.

மழையில் அடங்கிய மகத்தான பரக்கத்

அண்மைக் காலத்தில் தமிழகத்தின் தென் பகுதி கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கி, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிலத்தடி நீர் கூட வற்றிப் போய் விட்டது. அணைகளில் பாசனத்திற்கு அல்ல, குடிநீருக்குக் கூட தண்ணீர் இல்லாத அளவுக்குத் தரை தட்டியது.

ஊராக இருந்தாலும், ஆறாக இருந்தாலும் அதற்குத் தனது உணவு வளத்தை பூமி தர வேண்டும் என்றால் அதற்கு ஆதாரம் வான்மழை தான். இல்லையென்றால் மனித வாழ்வு அஸ்தமித்துப் போய் விடும். அந்த வான்மழைக்கும் அல்லாஹ் பரக்கத் என்ற வார்த்தையைத் தான் பயன்படுத்துகின்றான்.

அவ்வூர்களைச் சேர்ந்தோர் நம்பிக்கை கொண்டு (நம்மை) அஞ்சியிருந்தால் வானிலிருந்தும், பூமியிலிருந்தும் (பரக்கத்) பாக்கியங்களை அவர்களுக்காக திறந்து விட்டிருப்போம். மாறாக அவர்கள் பொய்யெனக் கருதினர். எனவே அவர்கள் (தீமை) செய்து வந்ததன் காரணமாக அவர்களைத் தண்டித்தோம்.

அல்குர்ஆன் 7:96

சந்ததியில் அடங்கிய சமுதாய பரக்கத்

இந்தப் பூமியில் வாழும் 700 கோடி மக்களும் யார் என்கிறீர்கள்? எல்லாம் நூஹ் நபியின் கப்பலில் இருந்தவர்கள் தான். வெள்ளம் வந்து விரோதிகள் அழிக்கப்பட்டு, கப்பல் தரையிறங்கிய போது கப்பலிலிருந்து இறங்கிய நூஹ் நபியின் சமுதாயத்தை நோக்கி அல்லாஹ் பரக்கத் என்ற வார்த்தையின் பன்மைச் சொல்லைப் பயன்படுத்துகின்றான்.

நூஹே! உம் மீதும், உம்முடன் உள்ள சமுதாயங்கள் மீதும் (பரக்கத்) பாக்கியங்கள் பொழியவும், நம்மிடமிருந்து சாந்தி நிலவிடவும் இறங்குவீராக!என்று கூறப்பட்டது. சில சமுதாயங்களுக்கு சுக வாழ்வை அளிப்போம் பின்னர் துன்புறுத்தும் நமது வேதனை அவர்களை அடையும்.

அல்குர்ஆன் 11:48

மறுபடியும் வரும் “மண்’ணின் பரக்கத்

யுக முடிவு நாள் ஏற்படும் போது பூமியில் நிகழும் மாற்றங்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

அல்லாஹ் மழை பொழியச் செய்வான். அந்த மழை எந்த மண் வீட்டிலும், எந்த முடி வீட்டிலும் படாமல் இருக்காது. இறுதியில், பூமியைக் கழுவி, கண்ணாடி போன்று (சுத்தமாக) ஆக்கி விடும். பின்னர் பூமிக்கு, “நீ உன் கனி வர்க்கங்களை முளைக்கச் செய்வாயாக; உன்னிடமுள்ள வளங்களை (பரக்கத்தை) மறுபடியும் தருவாயாகஎன்று உத்தரவு பிறப்பிக்கப்படும்.

அன்றைய நாளில் (எந்த அளவுக்கு வளம் கொழிக்குமெனில்), ஒரு குழுவினர் சேர்ந்து ஒரே யொரு மாதுளம் பழத்தை உண்பர். அதன் தோல் அவர்கள் அனைவருக்கும் நிழல் அளிக்கும். அவர்களுக்குப் பால் வளமும் கிட்டும். எந்த அளவுக்கென்றால், பால் தரும் ஓர் ஒட்டகம் ஒரு பெரும் கூட்டத்துக்கே போதுமானதாயிருக்கும். பால் தரும் பசுவொன்று ஒரு குலத்தாருக்கே போது மானதாயிருக்கும். பால் தரும் ஆடொன்று உறவினர்கள் அடங்கிய ஒரு கூட்டத்திற்கே போதுமான தாயிருக்கும்.

நூல்: முஸ்லிம் 5228

இந்த ஹதீஸிலிருந்து பரக்கத்தின் பொருளை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். அதாவது குறைந்த வாழ்வாதாரத்தில் நிறைவான வளம் பெறுதல் என்று விளங்கிக் கொள்ளலாம்.

ஆட்டு மந்தையில் பரக்கத்

ஒட்டகத் தொழுவங்களில் தொழுவதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள், “ஒட்டகத் தொழுவங்களில் தொழாதீர்கள். ஏனெனில் அவை ஷைத்தான்களாகும்என்று பதில் சொன்னார்கள். அவர்களிடம் ஆட்டுத் தொழுவங்களைப் பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள், “அத்தொழுவங்களில் தொழுங்கள்! ஏனெனில் அவை அருள் (பரக்கத்) நிறைந்தவையாகும்என்று பதில் அளித்தார்கள்.

அறிவிப்பவர்: பர்ரா பின் ஆஸிப் (ரலி)

நூல்: அபூதாவூத் 493

இன்று உலகில் கோடிக்கணக்கான ஆடுகள் உணவுக்காக அறுத்துப் பலியிடப்படுகின்றன. அவை ஈனுகின்ற குட்டிகளோ மிகக் குறைவாக இருப்பினும் பலன்கள் மிக அதிகமாக இருக்கின்றன. பன்றிகள் அதிகமான குட்டிகள் போடுகின்றன. அவற்றின் பலன்கள் மற்றும் உணவுக்காக அறுப்பதும் மிக மிகக் குறைவு தான். இந்தக் கணக்கின்படிப் பார்த்தால் உலகில் ஏராளமான பன்றிகள் பெருகிப் போயிருக்க வேண்டும். ஆட்டினம் அழிந்து போயிருக்க வேண்டும். ஆனால் ஆட்டினம் பல்கிப் பெருகிக் கொண்டே தான் இருக்கின்றது.

இவையெல்லாம் அல்லாஹ்வின் மகத்தான அற்புதங்கள். பரக்கத்திற்குரிய அரிய சான்றுகள்.

இந்த பரக்கத்தை மணமக்கள் அடைய வேண்டும் என்றால் அவர்கள் தங்கள் திருமணத்தை எளிமையாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

ஆனால் மண்டபத் திருமணங்கள் இதற்கு நேர் மாற்றமானவை. மண்டபத்திலும் ஒரு சில எளிய திருமணங்கள் நடந்தாலும் அவை ஆடம்பரத்தின் அடையாளச் சின்னமாகத் தான் அமைகின்றன.

மண்டப வாடகையிலேயே பணக்கார வாடை தெரிய ஆரம்பித்து விடுகின்றது. அடுத்தபடியாக, மண்டப அரங்கத்தை அலங்கரிக்கும் வண்ண விளக்கு, அலங்காரங்கள் என்று அதன் பரிமாணம் அகன்று கொண்டே செல்கின்றது. எளிமைத் திருமணத்திற்கு இது எள்ளளவுக்கும் கட்டியம் கூறுவதாக இல்லை. ஏழையின் திருமணமாகவே இருந்தாலும் மண்டபத் திருமணம் ஒரு மாளிகைத் திருமணமாகக் காட்சியளிக்கின்றது.

எளிய திருமணமே ஏகத்துவப் பிரச்சாரத்தின் அடித்தளம்

தவ்ஹீதுக் கொள்கை வளர்ந்ததற்குரிய ஓர் அடித்தளமே எளிமைத் திருமணம் தான். தூதுச் செய்தியின் அடிப்படையே மக்களின் கைகளில், கழுத்துக்களில் மாட்டப்பட்டிருக்கும் சமூக நிர்ப்பந்தம் எனும் விலங்குகளை அறுத்தெறிவது தான். இதைப் பின்வரும் வசனத்தில் நாம் பார்க்கலாம்.

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.

அல்குர்ஆன் 7:157

வீடுகளில் நடக்கும் திருணமங்களில் விருந்து கொஞ்சம் கூடிப் போனால் கூட அதன் தோற்றம் மலைக்க வைப்பதில்லை.

அதனால் வீடுகளில் விருந்தை வைத்து விளாசித் தள்ளலாம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. வீட்டு விருந்திலும் எளிமையைத் தான் கடைப்பிடிக்க வேண்டும். அதில் தான் நபி (ஸல்) அவர்கள் கூறிய பரக்கத் அடங்கியிருக்கின்றது. எளிய விருந்தைக் கூட மண்டபத்தில் வைக்கும் போது அதன் தோற்றம் பலருடைய முகத்தையும் சுளிக்க வைக்கின்றது.

ஏனைய எதிர் விளைவுகள்

மண்டபத் திருமணங்கள், தவ்ஹீத் ஜமாஅத்தின் திருமணத்திற்கும் இதர திருமணத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்ற நிலையைத் தோற்றுவிக்கின்றது.

இதல்லாமல், மண்டபத்தில் நடக்கும் திருமணத்தில் அங்குள்ள மக்களுக்காக ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினாலும் அது பயனற்றதாக ஆகி விடுகின்றது. யாருக்கு அந்த உரை போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்கு, அதாவது திருமண நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பெண்களுக்குக் கடுகளவு கூட போய்ச் சேர்வதில்லை. அந்த அளவுக்கு அவர்களிடம் கூச்சல் குழப்பம் நடந்து கொண்டிருக்கின்றது.

சில பேச்சாளர்கள் தங்களுடைய பேச்சை நிறுத்தி, மிரட்டிக் கூடப் பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் என்ன மிரட்டல் விடுத்தால் எங்களுக்கென்ன என்று இரைந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். வீடியோ கேமராக்களின் வெளிச்சமும் கூச்ச நாச்சம் இல்லாத பெண்களை தனக்குள் வளைத்துப் போடுகின்றது. இந்த வீடியோக்கள் வீடுகளில் எடுக்கப்பட்டாலும் கண்டிக்கத்தக்கது தான். ஆனாலும் வீடுகளில் இதுபோன்று பெண்களை வளைத்து வளைத்து எடுப்பதைப் பார்க்க முடியாது. சொற்பொழிவைப் பதிவு செய்வதற்காக வீடியோ எடுப்பதைத் தான் பார்க்க முடியும்.

இதுபோன்ற திருமண நிகழ்ச்சிகளுக்குப் பெண்கள் தங்களிடமுள்ள புத்தாடை, பொன் நகைகளைப் போட்டு, தங்களது ஆடம்பரப் பகட்டை வெளிப்படுத்தும் உல்லாச ஒன்று கூடலாகத் தான் மண்டபத் திருமணங்கள் அமைகின்றனவே தவிர, அமைதியுடன் அங்கு நிகழ்த்தப்படும் உரைகளைக் கேட்கும் அளவுக்கு அவை இருப்பதில்லை.

தஃப்தர் உண்டு! தாயீ இல்லை!

எனவே இந்த விளைவுகளையும் எல்லாவற்றிற்கும் முதன்மையாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்ற எளிமை இல்லாத நிலை ஏற்படுவதையும் கவனத்தில் கொண்டு, இதுபோன்ற மண்டபத் திருமணங்களுக்கு தஃப்தர் (திருமணப் பதிவேடு) கொடுப்போம்; அங்கு உரையாற்ற தாயீக்களை அனுப்ப மாட்டோம் என்று தலைமை நிர்வாகக் குழு முடிவெடுத்து அதைச் செயல்படுத்தி வருகின்றது.

இது கொள்கைச் சகோதரர்களுக்கு சற்று அதிர்ச்சியாகவும், அலர்ஜியாகவும் இருக்கின்றது. இங்கு தான் கொள்கைச் சகோதரர்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் தான் பரக்கத் நிறைந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் திருமணத்துக்காக கோட் சூட்டுகள் எடுப்பதோ, ஊரை வளைத்துப் பந்தல் போடுவதோ, பத்திரிகை அடிப்பதோ, கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவதோ எதுவுமே இருக்கவில்லை.

இப்படியெல்லாம் செலவுகள் செய்யப்பட்டு வந்தால் இதைக் குறைப்பதற்காக நபிகள் நாயகம் மேற்கண்டவாறு சொன்னார்கள் என்று எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் நபிகள் நாயகம் காலத்தில் திருமணத்துக்காக இரண்டு செலவுகள் மட்டுமே இருந்தன. ஒன்று மஹர் செலவு. மற்றொன்று விருந்துச் செலவு. மஹரைப் பொறுத்தவரை ஒரு குவியலையே கொடுத்தாலும் அது தவறல்ல என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

அப்படியானால் திருமணத்துக்காக விருந்துச் செலவு மட்டும் தான் அன்றைக்கு இருந்தது. இந்த நிலையில் திருமணத்தைக் குறைந்த செலவில் நடத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறுகிறார்கள் என்றால் விருந்துச் செலவைக் குறைப்பது பற்றியே கூறியுள்ளார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

திருமணத்தில் விருந்துக்காகச் செலவு செய்வது அனுமதிக்கப்பட்டதாக இருந்தாலும் அதுவும் குறைந்த செலவில் இருக்கும் போது தான் அதில் பரக்கத் இருக்கும். இல்லாவிட்டால் பரக்கத்தை இழக்கும் நிலை ஏற்படும்.

மேலும் நமக்கு சமுதாயப் பொறுப்பும் இருக்க வேண்டும். பெரிய மண்டபங்களில் அதிக செலவில் விருந்து வைக்கும் பழக்கத்தை நாம் தொடரும் போது அதனால் ஏழைகள் பாதிக்கப்படுகிறார்கள். இது போல் நாமும் நடத்தாவிட்டால் நமக்கு சமுதாயத்தில் மரியாதை இருக்காது என்று எண்ணி, கடன் வாங்கியாவது, பிச்சை எடுத்தாவது மண்டபம் பிடிக்க நினைக்கிறார்கள்.

நம்மிடம் வசதி உள்ளது என்பதற்காக நாம் செய்யும் செயல் ஏழைகளுக்குச் சிரமத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மண்டபத்துக்கும் பெரிய விருந்துக்கும் செலவு செய்யும் நிலை ஏற்படும் வரை திருமணத்தை தள்ளிப்போடும் நிலையும் ஏற்படுகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் மண்டபத்தில் நடத்தப்படும் திரும்ணங்கள் எளிமையானவை அல்ல; அது பரக்கத்தை இல்லாமல் செய்து விடும் என்று நாம் கருதுகிறோம்.

ஒரு பெரிய செலவீனத்தில் நடத்தப்படும் திருமணம் மார்க்கப்படி செல்லுமா? என்றால் செல்லும். ஆனால் மார்க்கம் நமக்கு வலியுறுத்துவது எளிமைத் திருமணத்தைத் தான்.

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரக்கத் (இறைவனின் மறைமுகமான பேரருள்) நிறைந்ததுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: அஹ்மத் 23388

இறை நம்பிக்கையாளர்களின் பண்பைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்.

எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!என்று அவர்கள் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் 25:74

அல்லாஹ் கூறுகின்ற இந்தப் பண்புக்கு எடுத்துக்காட்டாக நாம் திகழ வேண்டும். இறையச்சமுடையவர்களுக்கு முன்னோடிகளாக ஆக வேண்டும். அதன் அடிப்படையில் எளிமைத் திருமணத்திற்கு இலக்கணமாக நாம் விளங்க வேண்டுமே தவிர, அதற்குப் புறம்பாக ஆடம்பரத் திருணத்திற்கு இலக்கணமாகத் திகழக் கூடாது.

மண்டப வலீமா

இப்போது இங்கே ஒரு கேள்வி எழலாம். தவ்ஹீத் ஜமாஅத்தின் தாயீக்கள் வராமல் திருமணப் பதிவேடு மட்டும் தந்து நடத்தப்படும் மண்டபத் திருமணத்தின் வலீமா விருந்தில் கலந்து கொள்ளலாமா? என்ற கேள்வி இங்கு வரலாம்.

மார்க்கத்தில் தடையில்லை என்பதால் தான் திருமணப் பதிவேடு வழங்கலாம் என்று தலைமை முடிவெடுத்துள்ளது. அதனால் அந்த விருந்திலும் கலந்து கொள்ளலாம். ஆனால் இதை ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக அறிவிக்கக் கூடாது. காரணம் நமது நோக்கமே எளிமைத் திருமணத்தை நடைமுறைப்படுத்துவது தான். அந்தச் சீரிய திட்டத்தை இது சிதைத்து விடும்.

அதனால் கொள்கைச் சகோதரர்கள் நபிவழி அடிப்படையில் எளிமைத் திருமணத்தை மக்களிடம் அறிமுகப்படுத்தி, அமுல்படுத்தி, இறையச்சமிக்கவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும்.