மாற்று மதத்தவர்களுக்கு மாநாடு விடுக்கப் போகும் செய்தி

மாற்று மதத்தவர்களுக்கு மாநாடு விடுக்கப் போகும் செய்தி

பாதுகாப்பான ஆட்சியை

யாரால் தர முடியும்?

ஊழல் இல்லாத ஆட்சி!

லஞ்ச லாவண்யம் இல்லாத நேர்மை மிக்க நிர்வாகம்!

சட்ட ஒழுங்கைப் பாதுகாத்தல்!

இவை தான் அரசியல் கட்சிகளின் நோக்கங்களும் குறிக்கோள்களுமாகும்.

இந்தக் கொள்கைகளையும், குறிக்கோள்களையும் மக்களுக்கு மத்தியில் அறிவிப்பதற்காகத் தான் மாநாடுகள் நடத்தப்படுகின்றன.

ஒரு வாகனத் தயாரிப்பு நிறுவனம் தங்களது தயாரிப்புகளை வணிகச் சந்தையில் பார்வைக்கு வைப்பது போல் இக்கட்சிகள் தங்கள் கொள்கைகளை இது போன்ற மாநாட்டுச் சந்தைகளில் முன்வைத்து அதன் பால் மக்களை அழைக்கின்றன.

மாநாடு என்பது புதுமுகங்களை தங்கள் இயக்கத்திற்குள் ஈர்க்கும் ஒரு ஈர்ப்பு சக்தி! இதனால் தான் இந்த மாநாடுகள் மூலம் கட்சிகள், கழகங்கள், இயக்கங்கள் போன்றவை தங்கள் கொள்கைகளை நிறுவ முயல்கின்றன.

இந்தக் கட்சிகள் உலக நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மக்களை அழைக்கின்றன. ஆனால் இவற்றில் ஒன்று கூட தாங்கள் கூறும் கொள்கைகளை நிலைநிறுத்த முடியவில்லை.

லஞ்சம், லாவண்யம் தலை விரித்தாடுகின்றது. விண்ணைத் தொடும் விலைவாசி! வேலை வாய்ப்பின்மை! விவசாயிகள் தற்கொலை! பாராளுமன்றத்தையே தகர்க்கும் பயங்கரவாதிகளின் அட்டூழியம்! நக்சலைட்டுகளின் நாச வேலைகள்!

இனி எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்தத் தீமைகளை அழிக்க முடியாது.

காரணம் அவர்களிடம் தூய ஏகத்துவக் கொள்கை இல்லை. இந்த ஏகத்துவக் கொள்கையுடையவர்களால் மட்டுமே ஊழல், லஞ்சம் மட்டுமல்ல, அனைத்துத் தீமைகளையும் இந்த மண்ணிலிருந்து அழித்து ஒழிக்க முடியும்.

நல்ல கொள்கைக்கு தூய்மையான ஒரு மரத்தை அல்லாஹ் எவ்வாறு உதாரணமாக ஆக்கியுள்ளான் என்பதை நீர் அறியவில்லையா? அம்மரத்தின் வேர் (ஆழப் பதிந்து) உறுதியாகவும், அதன் கிளை ஆகாயத்திலும் உள்ளது. தனது இறைவனின் விருப்பப்படி ஒவ்வொரு நேரமும் தனது உணவை அது வழங்குகிறது. மக்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு அல்லாஹ் உதாரணங்களைக் கூறுகிறான். தீய கொள்கைக்கு உதாரணம் கெட்ட மரம். அது பூமியின் மேற்புறத்திலிருந்து பிடுங்கப் பட்டுள்ளது; அது நிற்காது. நம்பிக்கை கொண்டோரை உறுதியான கொள்கையின் மூலம் இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் அல்லாஹ் நிலைப்படுத்துகிறான். அநீதி இழைத்தோரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விடுகிறான். அல்லாஹ் நாடியதைச் செய்வான்.

அல்குர்ஆன் 14:24-27

முஹம்மத் (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட காலத்தில் ஊழல், கொலை, கொள்ளை போன்ற பெரும் பெரும் தீமைகள் மலிந்து கிடந்தன. அந்தத் தீமைகளை ஒழிப்பதற்கு அல்லாஹ் அவர்களுக்குக் காட்டிய வழிமுறை இந்த ஏகத்துவக் கொள்கை தான்.

அதன்படி நபி (ஸல்) அவர்கள் அந்த ஏகத்துவ மரத்தை நடுகின்றார்கள். தீமைகளின் ஆணிவேர் இணை வைப்புக் கொள்கை தான். அதாவது மனிதர்களையும் மனிதனல்லாத மற்ற படைப்புகளையும் கடவுளாக்கும் இணை வைப்புக் கொள்கை தான் தீமைகளின் ஆணி வேராகும். அந்தக் வேர்களைக் களைந்து, ஏகத்துவ மரத்தை நிலை நாட்ட முயல்கின்ற போது அரபுலகம் அதிர்ந்தது; ஆச்சரியப்பட்டது.

கடவுள்களை ஒரே கடவுளாக ஆக்கி விட்டாரா? இது வியப்பான செய்தி தான்.

அல்குர்ஆன் 38:5

இந்தக் கொள்கையைப் பரப்பிய இறைத்தூதர்களும், அதை ஏற்றுக் கொண்ட மக்களும் பெரும் இன்னல்களுக்கு உள்ளானார்கள். அப்போது அதை அந்த இறைத்தூதரிடமே முறையீடு செய்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழ-ல் தமது சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்த போது அவர்களிடம், (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி, “எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோர மாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய மாட்டீர்களா?” என்று கேட்டோம்.

அதற்கு அவர்கள், “உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று, இறைத் தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட, ரம்பம் கொண்டு வரப்பட்டு அவரது தலை மீது வைக்கப்பட்டு, அது இரு கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும், அ(ந்தக் கொடுமை யான)து அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரது இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும் நரம்பையும் சென்றடைந்து விடும். அதுவும் கூட அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) “ஸன்ஆ’விலிருந்து “ஹளர மவ்த்’ வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர, அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்ச மாட்டார். ஆயினும், நீங்கள் தான் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவசரப்படுகிறீர்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: கப்பாப் பின்      அல்அரத் (ரலி)

நூல்: புகாரி 3612

இது தான் நபி (ஸல்) அவர்களின் பதிலானது. அதாவது ஏகத்துவ மரம் கனிகளைத் தரப் போகின்றது; அதற்குள் அவசரப்படாதீர்கள் என்று ஆறுதல் வழங்குகின்றார்கள்.

இந்தச் சம்பவம் நடைபெற்றது மக்காவில்!

மதீனாவிலும் இதே போன்று மற்றொரு முறையீடு!

நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து (தன்னுடைய) வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து, வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே, நபி (ஸல்) அவர்கள், “அதீயே! நீ “ஹீரா’வைப் பார்த்ததுண்டா?” என்று கேட்டார்கள். “நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால், அது பற்றி எனக்குச் சொல்லப்பட்டிருக்கிறது” என்று  பதிலளித்தேன். அவர்கள், “நீ நீண்ட நாள் வாழ்ந்தால், நீ நிச்சயம் பார்ப்பாய். ஒட்டகச் சிவிகையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காகப் பயணித்து ஹீராவிலிருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள்” என்று சொன்னார்கள். – நான் என் மனத்திற்குள், “அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பி விட்ட “தய்யி’ குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்?” என்று கேட்டுக் கொண்டேன். – நபி (ஸல்) அவர்கள் (தொடர்ந்து), “நீ நீண்ட நாள் வாழ்ந்தால் குஸ்ரூ (பாரசீகப் பேரரசன் கிஸ்ரா)வின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதை நீ பார்ப்பாய்” என்று சொன்னார்கள். நான், “(மாபெரும் வல்லரசுக்குச் சொந்தக் காரரான) கிஸ்ரா பின் ஹுர்முஸா (வெற்றி கொள்ளப்படுவார்)?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “கிஸ்ரா பின் ஹுர்முஸ் தான் (தோற்கடிக்கப்படுவார்)” என்று பதிலளித்தார்கள்.

(மேலும் சொன்னார்கள்:) உனக்கு வாழ்நாள் நீண்டிருந்தால் ஒருவர் தனது கை நிறைய தங்கத்தை, அல்லது வெள்ளியை எடுத்துக் கொண்டு அதைப் பெற்றுக் கொள்பவரைத் தேடியலைவார். ஆனால் அதை ஏற்கும் எவரையும் அவர் காண மாட்டார். இதையும் நீ பார்ப்பாய். உங்களில் ஒருவர் அல்லாஹ்வைச் சந்திக்கும் (மறுமை) நாளில், அவருக்கும் அவனுக்குமிடையே மொழி பெயர்த்துச் சொல்லும் மொழி பெயர்ப்பாளர் எவரும் இல்லாத நிலையில் அவனைச் சந்திப்பார். அப்போது அல்லாஹ், “நான் உனக்கு ஒரு தூதரை அனுப்பினேனே! அவர் உனக்கு (என் செய்தியை) எடுத்துரைக்கவில்லையா?” என்று கேட்பான். அவர், “ஆம், (எடுத்துரைத்தார்)” என்று பதிலளிப்பார். பிறகு அல்லாஹ், “உனக்கு நான் செல்வத்தைத் தந்து உன்னை நான் மேன்மைப் படுத்தவில்லையா?” என்று கேட்பான். அவர், “ஆம் (உண்மை தான்)” என்பார். பிறகு அவர் தன் வலப் பக்கம் பார்ப்பார்; அங்கு நரகத்தைத் தவிர வேறெதையும் காணமாட்டார். தன் இடப் பக்கம் பார்ப்பார்; நரகத்தைத் தவிர வேறெதையும் காண மாட்டார்.

அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள், “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தாவது நரகத்திலிருந்து (உங்களைக்) காத்துக் கொள்ளுங்கள். எவரிடம் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டு கூட இல்லையோ அவர் நல்ல சொல் ஒன்றைக் கொண்டாவது (நரகத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளட்டும்)” என்று சொல்லக் கேட்டேன்.

மேலும், “ஒட்டகச் சிவிகையில் இருக்கும் பெண் ஒருத்தி ஹீராவிலிருந்து கஅபாவை வலம் வருவற்காக அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாதவளாகப் பயணம் செய்து வருவதை (என் கண்களால்) நான் பார்த்தேன். (பாரசீக மன்னன்) கிஸ்ரா பின் ஹுர்முஸின் கருவூலங்களை வெற்றி கொண்டவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.

நீங்கள் நீண்ட நாள் வாழ்ந்தால் “ஒருவன் தங்கத்தையோ வெள்ளியையோ கை நிறைய அள்ளிக் கொண்டு அதை தர்மமாக ஏற்றுக் கொள்பவரைத் தேடியலைவதை நீ பார்ப்பாய்” என்று அபுல் காஸிம் நபி (ஸல்) அவர்கள் சொன்னதையும் நீங்கள் நிச்சயம்  காண்பீர்கள்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)

நூல்: புகாரி 3595

இங்கும் நபி (ஸல்) அவர்கள், ஏகத்துவ மரம் தரவிருக்கின்ற அந்தக் கனிகளை, அதாவது விளைவுகளைப் பற்றித் தான் சொல்கிறார்கள்.

இந்த முன்னறிவிப்புகளில் ஒன்றைத் தவிர மற்ற இரண்டு நடந்தேறிய அந்த வரலாற்று உண்மையை அதீஃ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் இதே ஹதீஸில் தெளிவுபடுத்தியும் விட்டார்கள்.

ஓர் ஆட்சி என்றால் அதற்கு இரண்டு இலக்கணங்களை இங்கு நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

ஒரு பெண்ணின் கற்புக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு!

மற்றொன்று, மக்கள் அனைவருக்கும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறியிலிருந்து பாதுகாப்பு!

இந்த இரண்டையும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தத்துவார்த்தமாகச் சொல்லி நடைமுறைப்படுத்தியும் காட்டி விட்டார்கள்.

இப்படியொரு மாற்றத்தை மனித வரலாற்றில் எப்படி நிறுவ முடிந்தது?

“திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது! அதைச் சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது! திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்று ஒரு கவிஞன் பாடுகின்ற பாட்டில் கூறுகின்றான்.

சட்டத்தால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. மனிதன் திருந்தினால் தான், அதாவது அவன் மனம் மாறினால் தான் திருட்டை ஒழிக்க முடியும் என்று கூறுகிறான்.

தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் திருட்டை ஒழிக்கும் சட்டத்தை மட்டும் தந்து விட்டு இருந்து விடவில்லை. உள்ளத்தை மாற்றும் வழியைத் தான் மேற்கொண்டார்கள்.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அனுமதிக்கப் பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் அதிகம் பேர் அறிய மாட்டார்கள். எனவே எவர் சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார்; மானத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார். எவர் சந்தேகத்திற்கிடமானவைகளில் தலையிடுகிறாரோ அவர்,  வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேய விட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கின்றது. அல்லாஹ்வின் நாட்டில் அவனது எல்லை (வேலி) அவனால் தடைவிதிக்கப்பட்டவையே. அறிந்து கொள்க! உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும். அது சீர்குலைந்து விட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். அறிந்து கொள்ளுங்கள்: அது தான் உள்ளம்.

அறிவிப்பவர்: நுஅமான் பின் பஷீர் (ரலி)

நூல்: புகாரி 52

மனிதனின் உள்ளத்தில் ஏகத்துவம் என்ற மரத்தைப் பதிய வைக்கின்றார்கள். “மனிதனின் வாழ்வு இவ்வுலகுடன் முடிந்து விடுவதில்லை. அது மறுமை வரை தொடர்கின்றது. அங்கு அவன் மீண்டும் எழுப்பப்பட்டு விசாரிக்கப்படுவான். நன்மை செய்தால் சுவனம்! தீமை செய்தால் நரகம்!’ என்ற உண்மையைப் புரிய வைத்தார்கள். அதனால் தான் இம்மாபெரும் மாற்றம் ஏற்பட்டது.

உலகத்தில் இப்படி ஒரு மாபெரும் புரட்சிக் கொள்கையைக் கையில் வைத்துக் கொண்டு நாம் உறங்கிக் கொண்டிருக்கலாமா? உலகம் காக்கும் இந்த உன்னதக் கொள்கையின் பக்கம் மக்களைப் பல்வேறு வழிகளில் உரத்து அழைக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். அந்த வழிமுறைகளில் ஒன்று தான் மாநாடு!

அதன் அடிப்படையில் தான் இன்ஷா அல்லாஹ் தஞ்சையில் மே 10, 11 ஆகிய தேதிகளில் ஏகத்துவ எழுச்சி மாநாட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தவிருக்கின்றது.

ஆட்சி இலக்கணத்திற்கு அடிப்படைகளான பெண்களின் கற்புக்குப் பாதுகாப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி ஆகியவற்றிலிருந்து மக்களுக்குப் பாதுகாப்பு போன்ற அம்சங்கள் இந்த நாட்டில் இல்லை. இதை அன்றாடம் பத்திரிகைச் செய்திகளின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

இந்த இரண்டு அம்சங்களையும் இஸ்லாமிய மார்க்கத்தினால் மட்டும் தான் நிலைநாட்ட முடியும் என்பதைப் பிற மதத்தினருக்கு இம்மாநாடு உணர்த்தவுள்ளது.

இன்று இந்தியாவில் பெண்களின் கற்புக்கும், உயிருக்கும், உடமைக்கும் எந்தப் பாதுகாப்பும் இல்லை. ஒட்டு மொத்த மக்களின் உயிருக்கும் உடமைக்கும் எந்தப் பாதுகாப்பும் இல்லை.

வெறும் பொருளாதாரம் மட்டும் பறி போனால் கூடப் பரவாயில்லை. கிட்னி போன்ற விலை மதிக்க முடியாத உறுப்புகளும் இன்று பறிக்கப் படுகின்றன. எனவே இந்தக் கொடுமைகளிலிருந்து நாடு விடுதலை பெற வேண்டுமானால் அதற்கு இஸ்லாம் தான் தீர்வு என்பதை முஸ்லிமல்லாத மக்களுக்கு இம்மாநாடு எடுத்துக் காட்டவிருக்கின்றது இன்ஷா அல்லாஹ்!