கொள்கையற்றவர்களின் கூக்குரல்

கொள்கையற்றவர்களின் கூக்குரல்

“இறையில்லக் கொள்ளையர்கள் ஜாக்கிரதை’ என்ற தலைப்பில் அல்ஜன்னத்தில் வெளிவந்த ஒரு செய்தியில் குர்ஆன், ஹதீஸை பெயரில் மட்டும் தாங்கி நிற்கும் ஜாக் இயக்கம், தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சித்துள்ளது.

கன்னியாகுமரியில் சுன்னத் ஜமாஅத் பள்ளியைக் கொள்ளையடித்த ஒரு கூட்டம் தான் இந்தக் குற்றச்சாட்டை தவ்ஹீத் ஜமாஅத் மீது சுமத்துகின்றது.

இவ்வாறு நாம் கூறும் போது அவர்கள் இந்த வசனங்களை ஆதாரம் காட்டினர்.

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும்.

ஹாஜிகளுக்குத் தண்ணீர் வழங்கி, மஸ்ஜிதுல் ஹராமை நிர்வகிப்போரை அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைப் போல் கருதுகிறீர்களா? அவர்கள் அல்லாஹ்விடம் சமமாக மாட்டார்கள். அநீதி இழைத்த கூட்டத்துக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 9:17, 18, 19

“அந்தப் பள்ளிவாசல் இணைவைப்பில் இருந்தது. மேற்கண்ட வசனங்களின்படி நாங்கள் மீட்டெடுத்தோம்” என்று இவர்கள் பதில் சொல்வார்கள். அதே பதிலைத் தான் இவர்களுக்குத் திருப்பிச் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

இத்தனைக்கும் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வகிக்கும் இந்தப் பள்ளிகளைப் பொறுத்த வரை நிலம் வாங்குவதற்கோ, கட்டடம் கட்டுவதற்கோ ஜாக்கிலிருந்து பத்து பைசா கூட செலவளித்ததில்லை. அந்தந்த பகுதியிலுள்ள கொள்கைவாதிகள் மக்களிடம் வசூலித்த நன்கொடைகள் மூலமே நிலம் மற்றும் பள்ளி கட்டுமானப் பணிகள் நடத்தப்பட்டன. அப்போது நாம் ஜாக் என்ற பெயரில் செயல்பட்டதால் அந்தப் பெயரில் பதிவு செய்தோம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் செயல்பட்டிருந்தால் இந்தப் பெயரில் பதிவு செய்திருப்போம்.

தற்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பில் உள்ள மூத்த பிரச்சாரகர்கள் அனைவருமே ஆரம்ப காலத்தில் “குர்ஆன் ஹதீஸை மட்டுமே பின்பற்ற வேண்டும்; அவ்விரண்டும் தான் நமது மூல ஆதாரங்கள் என்ற அடிப்படையில் தான் ஒன்று சேர்ந்தோம். இதன் காரணமாகத் தான் அந்த இயக்கத்திற்கு ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் என்று பெயர் வைத்தோம். காலப் போக்கில் என்ன ஆனது?

தூய்மையை நிலைநாட்டுவதற்காகத் துவக்கப்பட்ட ஓர் அமைப்பில் ஊழல், ஒழுக்கக் கேடு போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்கள் ஒதுக்கப்படுவதற்குப் பதிலாக பதவி உயர்வு வழங்கப்பட்டனர்.

சமுதாய ரீதியிலான சில போராட்டங்களை அமைப்பு மூலமாகச் செய்வோம் என்று குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் நிறுவிய போது அதற்கு, “கூடாது’ என்று மார்க்க அடிப்படையில் பதிலளிப்பதை விட்டு விட்டு, “அமீர் சொன்னால் கேட்க வேண்டும்; அமீர் சொல்லுக்குக் கட்டுப்படாவிட்டால் அறியாமைக் கால மரணம்” என்று பதில் தரப்பட்டது.

இத்தோடு மட்டும் நிற்காமல், குர்ஆன் ஹதீஸ் என்ற இரண்டு ஆதாரங்களுடன் ஸஹாபாக்கள் என்ற மூன்றாவது ஆதாரத்தையும் மார்க்கத்தின் அடிப்படையாகச் சேர்த்தனர்.

சிறு சிறு விவகாரங்களில், சில்லரை பிரச்சனைகளில் மாற்றம் என்றால் ஏற்றுக் கொள்ளலாம். அடிப்படையிலேயே மாற்றம் என்றால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஆக, அந்த இயக்கத்தில் குர்ஆன் ஹதீஸ் என்பது பெயரளவுக்குத் தான் என்றானது.

நாம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்பதைப் பெயராக வைத்திருந்தாலும் இன்று வரை சொல்லில், செயலில், கொள்கையில் அனைத்தும் குர்ஆன் ஹதீஸ் தான். அந்த அடிப்படையில் பெருநாள் தொழுகையைத் திடலில் தொழ வேண்டும் என்று அறிமுகம் செய்த போது அதைக் கிண்டல் செய்தனர்.

குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஸஹர் பாங்கை அறிமுகப்படுத்திய போது அது இந்தக் காலத்திற்கு ஒத்து வராது; குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறினர்.

இவர்கள் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுவதை விட்டு விட்டதுடன் நில்லாமல், கூட ஒரு படி மேலே போய் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சொல்லை இந்தக் காலத்திற்குப் பொருந்தாது என்று தெளிவாக அறிவித்து விட்டனர்.

பெண் வீட்டு விருந்து ஒரு பகிரங்க வரதட்சணை என்று தெரிந்தும் பெண் வீட்டு விருந்தில் போய் பேயாக விழுந்தனர். இவர்கள் தான் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுகிறார்களாம்.

இதன்படி, சுன்னத் வல்ஜமாஅத் என்று பெயர் வைத்துக் கொண்டு ஷிர்க், பித்அத் செய்பவர்களைப் போன்று, இவர்கள் குர்ஆன், ஹதீஸ் என்று பெயர் வைத்துக் கொண்டு அதற்கு நேர் முரணான காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களிடத்தில் பள்ளிவாசல்கள் மாட்டினால் குர்ஆன் ஹதீசுக்கு மாற்றமான பாதையில் தான் போகும் என்று பள்ளிவாசல்களை மீட்டுவது ஒருபோதும் மார்க்கப்படி தவறாகாது.

எனவே கண்ணியமிகு பள்ளிவாசல்கள் மீட்புக்கு இவர்களிடம் என்ன காரணம் இருக்கின்றதோ அதே காரணம் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திடமும் இருக்கின்றது. எனவே இந்த அடிப்படையில் ஆலய அபகரிப்பு என்று இவர்கள் கூக்குரலிடுவது அறவே பொய் என்றாகி விடுகின்றது.

மேற்கண்ட வசனங்களின் கருத்துக்கேற்ப, குர்ஆன் ஹதீஸைத் தூய்மையாக நிலை நிறுத்துதல் என்ற பார்வையில் தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தச் செயல் ஆலயப் பாதுகாப்பாகத் தான் அமைகின்றது. இதை இங்கே ஒரு வாதத்திற்குத் தான் குறிப்பிடுகின்றோம்.

ஜாக் பட்டியலிடும் பள்ளிவாசல்கள் யாரிடம் இருக்கின்றன? குர்ஆன், ஹதீஸை மட்டும் பின்பற்ற வேண்டும் என்று சொல்லக் கூடியவர்களிடம் தான் இருக்கின்றன. குர்ஆன், ஹதீஸை பெயரளவில் வைத்துக் கொண்டு செயலில் அதற்கு மாற்றமாக நடப்பவர்களிடம் இந்தப் பள்ளிவாசல்கள் இல்லை.

எந்த நோக்கத்திற்காக இந்தப் பள்ளிவாசல்கள் உருவாக்கப்பட்டனவோ அந்த நோக்கத்திற்காகத் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மானில் ஸஹர் பாங்கு சொல்லப்படுகின்றது. இது ஹதீஸில் உள்ள ஒரு நடைமுறை! அதனால் இந்தப் பள்ளியில் அந்த நடைமுறை பின்பற்றப்படுகின்றது. ஜாக்கிடம் இருந்தால் இந்த ஹதீஸ் செயல் வடிவம் பெறுமா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அது மட்டுமின்றி இந்தப் பள்ளிக்காக உழைத்தவர்கள், இரத்தம் சிந்தியவர்களிடம் தான் இருக்கின்றது. வெறும் மதனிகளின் உழைப்பில் ஏகத்துவக் கொள்கை வளர்ந்தது என்பதை தவ்ஹீது இயக்கத்தின் ஆரம்ப கால வளர்ச்சியில் பங்கெடுத்தவர்கள் யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

ஏனெனில், “முஹ்யித்தீன் என்று திக்ர் செய்வது கூடும்; அது ஷிர்க் அல்ல! இதை எதிர்ப்பவர் என்னிடம் முபாஹலா செய்யத் தயாரா?” என்று காயல் ஜலீல் முஹைதீன் கேட்ட போது இந்த மதனிகள் தாங்கள் மையம் கொண்டிருந்த மர்கஸ் என்ற மடாலயங்களில் மய்யமாகக் கிடந்தார்கள்.

அப்போது இணை வைப்பிற்கு எதிராக எரிமலையாகக் கிளம்பியவர்கள் அந்த முபாஹலாவை எதிர் கொண்டார்கள். இணை வைப்பின் காட்டுக் கூச்சலுக்கு வேட்டு வைத்து ஏகத்துவத்தை நிலைநாட்டினார்கள்.

“இய்யாக்க நஃபுது வஇய்யாக்க நஸ்தஈன்’ என்ற வசனத்தைக் காட்டி அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேட வேண்டும் என்று பிரச்சாரம் செய்த போது, டாக்டரிடம் உதவி தேடுவதும் இணை வைப்பு தானே என்று குராபிகள் எதிர்க் கேள்வி கேட்டனர்.

இதற்கெல்லாம் “இஸ்திஆனத்’ என்பது வேறு, “தஆவுன்’ என்பது வேறு என்ற விளக்கம் தரப்பட்ட போது தான் ஏகத்துவப் பிரச்சாரத்தில் இருந்த ஆலிம்களுக்கே தெளிவு கிடைத்தது. எனவே ஏகத்துவ வளர்ச்சிக்கு அப்போது தேவைப்பட்டது பிரச்சாரமோ, மர்கஸோ அல்ல! விளக்கம், விவாதக் களம் போன்றவை தான் தேவைப்பட்டது. அதில் தான் தவ்ஹீதுக் கொள்கை பிரம்மாண்ட வளர்ச்சி கண்டது.

தவ்ஹீதை ஆரம்பத்தில் சொல்லும் போது, “இவர்கள் அரபு நாட்டில் காசு வாங்கி விட்டு, அந்தக் காசுக்காக, அரபு நாட்டின் எலும்புத் துண்டுக்காக இந்தப் பிரச்சாரத்தைச் செய்கின்றார்கள்” என்ற குற்றச்சாட்டை மக்கள் முன்வைத்தனர். அதற்குத் தக்க மதனிகள் அரபு நாட்டு சம்பளத்தை வாங்கிக் கொண்டும் இருந்தனர். இது தவ்ஹீது வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக அமைந்தது.

“தமிழக மதரஸாக்களில் படித்தவர்கள் தான் நாங்கள்! அரபு நாட்டில் படித்தவர்கள் அல்லர்! தாயத்து தட்டு எழுதிப் பிழைப்பு நடத்திய இந்த தமிழகத்து ஆலிம்களிடம்  ஓதி விட்டு வந்து தான் தவ்ஹீதைச் சொல்கிறோம். நாங்கள் அரபு நாட்டிலிருந்து சம்பளமும் வாங்கவில்லை” என்று மக்களிடம் பிரச்சாரம் செய்த போது தான் மக்களிடம் இந்தப் பிரச்சாரம் எடுபட்டது. மக்கள் தவ்ஹீதுக் கொள்கைக்கு சாரை சாரையாகப் படையெடுத்து வந்தனர்.

அப்படி உழைத்து தவ்ஹீதை வளர்த்த அந்த மக்களிடம் இந்தப் பள்ளிகள் தவ்ஹீது அடிப்படையில் இருப்பது எப்படி அபகரிப்பாகும்? இதை ஒவ்வொரு தவ்ஹீதுவாதியும் சிந்தித்துப் பார்த்து, தடம் புரண்ட ஜாக்கின் அபத்தத்தைப் புரிந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.