இவர்கள் தான் காதியானி மதத்தினர்

இவர்கள் தான் காதியானி மதத்தினர்

அப்துந் நாசிர்

முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 33:40

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னுடைய உம்மத்தில் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். ஒவ்வொருவரும் தான் நபி என்று வாதிடுவார்கள். நான் தான் நபிமார்களில் முத்திரையானவன். எனக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி), நூல்: திர்மிதி 2145

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டு விட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்து விட்டு ஆச்சரியமடைந்து, “இந்தச் செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா?” என்று கேட்கலானார்கள். நான் தான் அந்தச் செங்கல். மேலும், நான் தான் இறைத் தூதர்களில் இறுதியானவன்.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 3535

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மற்ற இறைத்தூதர்களை விடவும் ஆறு விஷயங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்: 1. நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப் பெற்றுள்ளேன். 2. (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய (மதிப்பும்) அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றியளிக்கப்பட்டுள்ளது. 3. போர்ச் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளன. 4. எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. 5. நான் மனித இனம் முழுவதற்கும் தூதராக நியமிக்கப்பெற்றுள்ளேன். 6. என்னோடு நபிமார்களின் வருகை முற்றுப் பெற்றுவிட்டது.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 907

நபி (ஸல்) அவர்கள் “தூதுத்துவமும் நபித்துவமும் நிறைவு பெற்றுவிட்டது. எனக்குப் பிறகு எந்த ரசூலும் இல்லை நபியும் இல்லை” என்று கூறினார்கள். (நபியவர்கள் இவ்வாறு கூறியது) மக்களுக்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது. உடனே நபியவர்கள் “என்றாலும் நற்செய்திகள் (எஞ்சியுள்ளன)’ என்று கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! (முபஸ்ஸராத்) நற்செய்திகள் என்றால் என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், “ஒரு முஸ்லிம் காண்கின்ற கனவு. அது நபித்துவத்தின் (நாற்பத்தாறு) பங்குகளில் ஒரு பங்காகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: திர்மிதி 2198

ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எனக்கு (ஐந்து) பெயர்கள் உள்ளன. நான் “முஹம்மத்’ (புகழப்பட்டவர்) ஆவேன். நான் “அஹ்மத்’ (இறைவனை அதிகமாகப் புகழ்பவர்) ஆவேன். நான் “மாஹீ’ (அழிப்பவர்) ஆவேன்; என் மூலம் அல்லாஹ் (ஏக) இறை மறுப்பை அழிக்கின்றான். நான் “ஹாஷிர்’ (ஒன்றுதிரட்டுபவர்) ஆவேன்; மக்கள் என் பாதங்களுக்குக் கீழே (என் தலைமையில்) ஒன்று திரட்டப்படுவார்கள். நான் “ஆகிப்’ (இறுதியானவர்) ஆவேன்; எனக்குப் பிறகு வேறெந்த இறைத்தூதரும் இல்லை” என்று கூறினார்கள்.

நூல்:  முஸ்லிம் 4697

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “பனூ இஸ்ராயீல்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப் போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப் பின்) கலீபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 3455

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: தபூக் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களை (தாம் திரும்பி வரும் வரை தமக்குப்) பிரதிநிதியாக நியமித்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், “குழந்தைகளையும் பெண்களையும் கவனித்துக் கொள்வதற்காகவா என்னை விட்டுச் செல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மூசாவிடம் ஹாரூனுக்கு இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும், (ஒரு வேறுபாடு யாதெனில்) எனக்குப் பிறகு எந்த நபியும் இல்லை” என்று சொன்னார்கள்.

நூல்: முஸ்லிம் 4777

மேற்கண்ட குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்கள் முஹம்மது (ஸல்) அவர்கள் தாம் இறுதி நபி. அவர்களுக்குப் பின் எந்த நபியும், எந்த ரசூலும் வர மாட்டார்கள் என்பதை உறுதியாகக் கூறுகின்றன. இறுதி நபியாகிய முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பின் நபி என்று வாதிடக் கூடிய பொய்யர்கள் தோன்றுவார்கள் என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்ததை மெய்ப்பிக்கும் வகையில் தன்னை நபி என்று வாதிக்கும் பொய்யர்களில் ஒருவன் தான் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி என்பவனாவான். இவன் இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் காதியான் என்ற ஊரில் பிறந்தான்.

“யூதர்கள் எதிர்பார்க்கும் மஸீஹ், கிறிஸ்தவர்கள் எதிர்பார்க்கும் மெஸய்யா, முஸ்லிம்கள் எதிர்பார்க்கும் மஹ்தி, ஈஸா (அலை), இந்துக்கள் எதிர்பார்க்கும் கல்கி அவதாரம் ஆகிய அனைத்தும் நான் தான்” என்று இந்த பொய்யன் உளறினான்.

இவனுடைய இந்த உளறல் மூலம் இவன் பொய்யன் என்பதை அறிந்து கொண்ட இந்துக்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் யாரும் இவனை ஏறிட்டும் கூடப் பார்க்கவில்லை. ஆனால் முஸ்லிம்களில் இவனுடைய பொய்களைப் பற்றி அறியாத சிலர் தான் இவனால் வழிகெடுக்கப்பட்டு வழிகேட்டில் வீழ்ந்து விட்டனர்.

முஹம்மது (ஸல்) அவர்கள் தம்மை அல்லாஹ்வின் தூதர் என்று மக்கா காஃபிர்களிடம் எடுத்துரைத்த போது அம்மக்களால் நபிகள் நாயகத்தின் நபித்துவத்தை மறுக்க இயலவில்லை. அதற்குக் காரணம் நபி (ஸல்) அவர்கள் நபித்துவத்திற்கு முன்னும் நபித்துவத்திற்குப் பிறகும் உண்மையாளராகத் திகழ்ந்தார்கள் என்பது தான். இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள்” எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப் பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் “ஸஃபா’ மலைக் குன்றின் மீது ஏறிக்கொண்டு, “பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!” என்று குறைஷிக் குலங்களை (பெயர் சொல்-) அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கு வரமுடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூலஹப் உள்ளிட்ட குறைஷியர் வந்தனர். நபி (ஸல்) அவர்கள், “சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்கள் மீது தாக்குதல் தொடுக்கப் போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா?” என்று கேட்க, மக்கள் “ஆம். (நம்புவோம்); உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை” என்று பதிலளித்தனர்.

நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கின்றேன்” என்று (தமது மார்க்கக் கொள்கையைச்) சொன்னார்கள். (இதைக் கேட்ட) அபூலஹப், “நாளெல்லாம் நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?” என்று கூறினான். அப்போது தான் “அபூலஹபின் கரங்கள் நாசமாகட் டும்! அவனும் நாசமாகட்டும்……” என்று தொடங்கும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது

நூல்: புகாரி 4770

நபி (ஸல்) அவர்கள் தம்முடைய உண்மையை முன்னிறுத்தித் தான் தம்மை நபி என்று மக்களிடம் எடுத்துரைத்தார்கள்.

1891ஆம் ஆண்டிலிருந்து மிர்ஸா குலாம் அஹ்மத் தன்னை நபி என்று வாதிட்டான். ஒரு நபி என்பதற்கு முக்கியமான அடையாளமே அவர் பொய்யராக இருக்கக்கூடாது என்பது தான். ஆனால் இந்த மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவனோ மிகவும் கடைந்தெடுத்த பொய்யர்களில் ஒருவனாக இருந்தான். இவன் திருமறைக்குர்ஆனில் இல்லாத வசனங்களை திருமறைக் குர்ஆனில் உள்ளதாகவும், நபி (ஸல்) அவர்கள் கூறாத ஹதீஸ்களை நபியவர்கள் கூறியதாகவும் அல்லாஹ்வின் மீதும் நபியவர்களின் மீது இட்டுக்கட்டிக் கூறியுள்ளான். இப்படிப்பட்ட பொய்களே இவன் பொய் நபி என்பதற்கு தெளிவான சான்றுகளாக விளங்குகின்றன.

இவன் ஏராளமான பொய்களைக் கூறியுள்ளான். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இவனுடைய பொய்களுக்கு உதாரணமாக சில சான்றுகளைத் தருகின்றோம்.

மிர்சா குலாமும் முஹம்மதீ பேகம் திருமணமும்

முஹம்மதீ பேகம் என்ற பெயர் கொண்ட இன்னொருவரின் மனைவியின் மீது ஆசை கொண்ட மிர்சா குலாம் எப்படியாவது அவளை அடைந்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் அல்லாஹ் தனக்கு முன்னறிவிப்புச் செய்திருப்பதாக பின்வரும் விஷயங்களைக் கூறினான்.

முஹம்மதீ பேகத்தை நாம் உமக்குத் திருமணம் செய்து வைத்தோம் என்று அல்லாஹ் எனக்கு அறிவித்தான்.

இது ஒரு முன்னறிவிப்பு அல்ல. இதில் ஆறு முன்னறிவிப்புகள் உள்ளன.

முதலாவது: அவளைத் திருமணம் செய்யும் வரை நான் உயிருடன் இருப்பேன்.

இரண்டாவது: அவளைத் திருமணம் செய்யும் வரை அந்தப் பெண்ணின் தந்தை உயிருடன் இருப்பார்.

மூன்றாவது: எனக்குத் திருமணம் செய்து தந்த பின் அவளுடைய தந்தை மூன்று வருடத்துக்குள் இறப்பார்.

நான்காவது: முஹம்மதீ பேகத்தின் கணவர் சுல்தான் முஹம்மத் இரண்டரை வருடத்தில் மரணிப்பார்.

ஐந்தாவது: அப்போது நான் முஹம்மதீ பேகத்தை திருமணம் செய்வேன்.

ஆறாவது: அவளை மணப்பேண். அது வரை அவள் உயிருடன் இருப்பாள்.

இந்த ஆறு அறிவிப்புகள் நிறைவேறாவிட்டால் அதுவே நான் பொய்யன் என்பதற்கான ஆதாரம் என்று மிர்ஸா குலாம் சொன்னான்.

இவை அனைத்தும் “ஆயினே கமாலாத்” என்ற நூலில் 325ஆம் பக்கத்தில் மிர்சா குலாமால் எழுதப்பட்டுள்ளது.

இப்போது நாம் கேள்விக்கு வருகிறோம். ஸைனப் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்ததாக அல்லாஹ் கூறும் போது “ஸவ்வஜ்னாகஹா’ அவரை உமக்கு மணமுடித்துத் தந்தோம் என்று கூறினான்.

அதே வார்த்தையைத் தான் அல்லாஹ் தனக்கும் பயன்படுத்தினான் என்று மிர்ஸா சொன்னான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் மணமுடித்துக் கொடுத்ததாகக் கூறியதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸைனபைத் திருமணம் செய்யாமல் அல்லாஹ் செய்து கொடுத்த திருமணத்துடன் போதுமாக்கிக் கொண்டு வாழ்க்கை நடத்தினார்கள்.

இவ்வாறு “ஸவ்வஜ்னாகஹா’ அவரை உமக்கு மணமுடித்துத் தந்தோம் என்று பொய்யன் மிர்சாவுக்கு  அல்லாஹ் கூறியிருந்தால் அது கட்டாயம் நிறைவேறியிருக்க வேண்டும். ஆனால் பொய்யன் மிர்சா செத்துப் போகும் வரை அந்தப் பெண்ணை அவன் மணமுடிக்கவில்லை. இதில் இருந்து அவன் அல்லாஹ்வின் மீது பொய் கூறி விட்டான் என்பது உறுதியாகிறது. மேலும் “இதுதான் நான் பொய் சொல்லவில்லை என்பதற்கு ஆதாரம்’ என்றும் அவன் சொன்னான். இதற்கு மிர்சாவை நபி என்று நம்புபவர்கள் நேரடியாகப் பதில் சொல்ல வேண்டும்.

சுல்தான் முஹம்மத் இரண்டரை வருடத்தில் செத்துப் போவார் என்று பொய்யன் மிர்சா கூறினான். அவ்வாறு நடக்காவிட்டால் நான் பொய்யன் என்றும் கூறினான். ஆனால் பொய்யன் சொன்னபடி சுல்தான் முஹம்மத் சாகவில்லை. நீண்ட காலம் வாழ்ந்தார்.

நான் உண்மை சொல்கிறேன் என்பதற்கு ஆதாரமாக இதை இந்தப் பொய்யன் குறிப்பிட்டான். இதுவும் நிறைவேறவில்லை. நபிமார்களை மெய்ப்பிக்க அல்லாஹ் வழங்கும் அத்தாட்சிகள் அப்படியே நிறைவேற வேண்டும்.

அதுவும் இது தான் நபி என்பதற்கு ஆதாரம் என்று அறிவித்திருக்கும் போது அது நிறைவேறாமல் போகாது. இந்தக் கேள்விகள் காதியானிக் கூட்டத்தாருடன் விவாதம் செய்யும் போது மூல நூலை வாசித்துக் கேட்கப்பட்ட கேள்விகளாகும். அதை அவர்கள் மறுக்கவில்லை.

அந்தப் பெண்ணின் தந்தை அவளுக்குத் திருமணம் நடக்கும் வரை உயிருடன் இருந்து, அவளை எனக்குத் திருமணம் செய்து வைப்பார் என்று பொய்யன் மிர்சா கூறினான். ஆனால் அந்தப் பெண்ணின் தந்தை மகளுக்குக் கல்யாணம் செய்து வைக்காமலே மரணித்து விட்டார்.

இதிலும் மிர்சா எனும் அயோக்கியன் மாபெரும் பொய்யன் என்பது உறுதியாகிவிட்டது. அல்லாஹ் எனக்குத் திருமணம் செய்து வைத்தான் என்று இந்தப் பாதகன் சொன்னானா? இல்லையா?

அல்லாஹ் அப்படிச் சொல்லியிருந்தால் அது போல் நடந்ததா? இது நிறைவேறாவிட்டால் அவன் பொய்யன்.

சுல்தான் முஹம்மத் இரண்டரை வருடத்தில் மரணிப்பார் என்று இந்த அயோக்கியன் சொன்னான். அவன் அப்படிச் சொன்ன படி நடந்ததா? நடந்தது என்றால் அவன் உண்மை சொன்னான். நடக்கவில்லை என்றால் அவன் பொய் சொல்லியிருக்கிறான்.

அவளுடைய தந்தை தன் மகளை எனக்கு மணமுடித்துத் தந்து விட்டு மரணிப்பார் என்ற இவன் சொன்னானா? இல்லையா? அது நிறைவேறவில்லை என்பதால் அவன் பொய்யன் என்பதை அவனே ஒத்துக் கொள்கிறான் என்று தானே அர்த்தம்.

இது காதியானி கூட்டத்துடன் நடந்த விவாதத்தில் நேருக்கு நேராகக் கேட்கப்பட்ட கேள்விகள். இப்போது நாம் கேட்கும் கேள்விகள் திடீர் கேள்விகள் அல்ல. பல வருடங்களுக்கு முன்னர் கேட்கப்பட்ட கேள்விகள். அந்த விவாதத்தின் போதும் அவர்கள் அதற்குப் பதில் சொல்லவில்லை. இத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொண்ட பிறகு கூடப் பதில் சொல்ல முடியாது.

மிர்சா குலாம் பொய்யன் தான் என்பதை அவன் ஆதாரமாகக் காட்டியவைகளை வைத்தே அல்லாஹ் அடையாளம் காட்டிவிட்டான்.

பொய்யன் மிர்சாவின் புளுகு மூட்டை

அல்லாஹ் எனக்கு நான்கு ஆண்மக்களைத தந்துள்ளான். ஐந்தாவதாக ஒரு ஆண் மகன் குறித்து அல்லாஹ் நற்செய்தி கூறினான். இது என்றாவது ஒரு நாள் நடந்தே தீரும் என்று மிர்சா கூறினான்.  (நூல்: தத்கிரா)

ஆனால் இவனுக்கு ஐந்தாவதாக ஆண் பிள்ளை பிறக்கவில்லை. தன்னைத் தானே பொய்யன் என்று இவன் நிரூபித்தான். இதன் மூலம் இவன் அல்லாஹ்வின் பெயரால் புளுகு மூட்டையை அவிழ்த்து விடுபவன் என்பது உறுதியாகி விட்ட பிறகு அவனைப் பொய்யன் என்று அவனது சீடர்களே உணர்ந்தார்கள். இதை மறைப்பதற்காக இவனது நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த போது மகன் என்ற இடத்தில் கிராண்ட் சன் – பேரன் என்று மாற்றிக் கொண்டார்கள்.

இது தத்கிரா என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பின் 265ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

இப்படி பொய்களை விட்டடித்தவன் எப்படி உண்மையான நபியாக இருக்க முடியும் என்பதை இந்தக் காதியானி மதத்தினர் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

அல்லாஹ்வின் மீது பொய் கூறிய மிர்சா

மிர்சா குலாம் காதியானி கூறுகிறான்: இதோ இவர் தான் மூஸா அல்லாஹ்வின் இளைஞர். இவர் உயிரோடு இருப்பதாக அல்லாஹ் தன்னுடைய வேதத்திலே சுட்டிக் காட்டியுள்ளான்.  அவர் வானத்திலே உயிருடன் இருக்கிறார். அவர் மரணிக்கவில்லை. அவர் இறந்தவர்களில் இல்லை என்று நாம் நம்பிக்கை கொள்வதை நம் மீது இறைவன் விதியாக்கியுள்ளான்.

நூல்: நூருல் ஹக், பக்கம்: 68, 69

மூஸா (அலை) அவர்கள் வானத்தில் உயிருடன் இருப்பதாக அல்லாஹ் குர்ஆனில் எங்குமே கூறவில்லை. ஆனால் பொய்யன் மிர்சா குலாம் அஹ்மத் காதியானியோ குர்ஆனில் இல்லாத ஒன்றை குர்ஆனில் இருப்பதாகப் பொய்யாக இட்டுக் கட்டி கூறியுள்ளான். இதோ இத்தகைய பொய்யர்களைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்.

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட, அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்?

அல்குர்ஆன் 7:37

முஹம்மது (ஸல்) அவர்கள் தமக்குப் பிறகு நபி என்று வாதிடும் பொய்யர்கள் தோன்றுவார்கள் என்று முன்னறிவிப்புச் செய்தார்கள். அவர்களின் முன்னிறிவிப்பின் பிராகரம் தோன்றியவன் தான் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி என்பவன். இவன் பொய்யன் என்பதை இவனது வார்த்தைகளை வைத்தே அல்லாஹ் நிரூபித்து விட்டான். நாம் குறிப்பிட்ட விஷயங்கள் தவிர இன்னும் ஏராளமான மிர்சாவின் பொய்கள் உள்ளன. தேவை ஏற்பட்டால் அவற்றை நாம் வெளியிடுவோம்.

இவனுடைய உளறல்களைச் சிந்தித்த உலக மக்கள் அனைவரும் இவன் பொய்யன் என்பதை அறிந்து கொண்டார்கள். தற்போது உள்ள காதியானி மதத்தினரும் இவனது பொய்களை உணர்ந்து, அவற்றை சிந்தித்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தான் இறுதி நபி, அவர்களுக்குப் பின் வேறு நபியோ, ரசூலோ வர முடியாது என்ற சத்தியக் கொள்கையின் பக்கம் திரும்பும் நல்வாய்ப்பை அல்லாஹ் வழங்குவானாக!