கல்லானாலும் கணவன புல்லானாலும் புருஷன்

கல்லானாலும் கணவன புல்லானாலும் புருஷன்

ஒரு பெண், ஓர் ஆடவனைத் திருமணம் முடித்த பின் அவன் எவ்வளவு கொடுமைப்படுத்தினாலும் அவனுடன் தான் வாழ வேண்டும்; அவன் மூலம் வாழ்க்கைத் தேவை நிறைவேறாவிட்டாலும் அவனுடன் தான் வாழ வேண்டும் என்பது இந்து தர்மம். கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன் என்ற பழமொழி இதைத் தான் எதிரொலிக்கிறது.

கிறித்தவ மதத்திலும் பைபிளின் அடிப்படையில் விவாகரத்து கிடையாது. இதை மாத்யூ 5:32  கூறுகின்றது.

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: வேசித்தன முகாந்திரத்தினால் ஒழிய தன் மனைவியைத் தள்ளி விடுகிறவன் அவளை விபச்சாரஞ் செய்யப் பண்ணுகிறவனாயிருப்பான். அப்படித் தள்ளிவிட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபச்சாரஞ் செய்கிறவனாயிருப்பான்.

மாத்யூ 5:32

பைபளின் இந்த வசனம் விவாகரத்தை மறுப்பது மட்டுமின்றி, விதவைத் திருமணத்தையும் என்று ஒரேயடியாக மறுத்து விடுகின்றது.

யூத மதமோ ஒரு சிறு வெறுப்பு ஏற்பட்டாலும் விவாகரத்துச் செய்யலாம் என்று கூறி, எதிர் முனைக்குச் சென்று விவாகரத்தின் வாசலைத் திறந்து விட்டிருக்கின்றது.

ஒருவன் ஒரு ஸ்த்ரீயை விவாகம் பண்ணிக் கொண்ட பின்பு அவள் மேல் இலச்சையான காரியத்தைக் கண்டு அவள் மேல் பிரியமற்றவனானால் அவன் தள்ளுதலின் சீட்டை எழுதி அவள் கையிலே கொடுத்து அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பி விடலாம்.

அவள் அவனுடைய வீட்டை விட்டுப் போன பின்பு, வேறு ஒருவனுக்கு மனைவியாகலாம்.

அந்த இரண்டாம் புருஷனும் அவளை வெறுத்து, தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிட்டாலும், அவளை விவாகம் பண்ணின அந்த இரண்டாம் புருஷன் இறந்து போனாலும்,

அவள் தீட்டுப்பட்ட படியினால், அவளைத் தள்ளி விட்ட அவளுடைய முந்தின புருஷன் திரும்பவும் அவளை மனைவியாகச் சேர்த்துக் கொள்ளக் கூடாது;      அது கர்த்தருக்கு முன்பாக அருவருப்பானது; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தின் மேல் பாவம் வரப் பண்ணாயாக.

உபகாமம் 24:1-4

எந்த நிபந்தனையுமின்றி ஒரு சீட்டை எழுதிக் கொடுத்து மனைவியை வீட்டுக்கு அனுப்பி விடலாம் என்று இந்த வசனம் கூறுகிறது. மேலும் விவாகரத்துச் செய்த பின், சம்பந்தப்பட்ட பெண் தனது முதல் கணவனை மீண்டும் மணக்கவே முடியாது என்றும் இந்த வசனங்கள் தடை விதிக்கின்றன.

விவாகரத்தே இல்லை என்று கிறித்தவம் சொல்கிறது.

எடுத்தேன்; கவிழ்த்தேன் என்று விவாகரத்துச் செய்ய யூத மதம் போதிக்கிறது.

ஆனால் இஸ்லாம் தான் இந்த விஷயத்தில் நடுநிலையைக் கடைப்பிடிக்கின்றது. விவாக விலக்கு என்ற ஒன்று இருந்தாக வேண்டும்; அதே சமயம் அந்த மண விலக்கு ஒரு வரம்புக்குள் இருக்க வேண்டும் என்ற நிலையை இஸ்லாம் கைக்கொள்கிறது. இஸ்லாமிய தலாக் முறையைப் படித்தால் இதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

விவாகரத்தின் அவசியம்

ஆண்களுக்கு அளிக்கப் பட்டுள்ள விவாகரத்துச் செய்யும் உரிமை பெண்களுக்கு இழைக்கப் படும் மாபெரும் அநீதி என்று சிலர் கருதுகின்றனர்.

கணவனுக்கு மனைவியைப் பிடிக்காத போது விவாகரத்துச் செய்ய அனுமதியில்லாவிட்டாலோ அல்லது விவாகரத்துச் சட்டம் கடுமையான விதிகளைக் கொண்டதாக இருந்தாலோ அதனால் பெண்களுக்கு நன்மையை விட தீமைகளே விளையும்.

  1. விவாகரத்துப் பெற முடியாது என்ற நிலையையும், மிகுந்த சிரமப்பட்டே விவாகரத்துப் பெற முடியும் என்ற நிலையையும் சந்திக்கும் ஒருவன் மனைவியோடு வாழாமல் சின்ன வீட்டை ஏற்பாடு செய்து கொள்வான்; மனைவியைத் துன்புறுத்துவான்; பராமரிக்கவும் மாட்டான்.
  2. அல்லது விவாகரத்துப் பெறுவதற்காக நடத்தை கெட்டவள் என்று மனைவியின் மீது பொய்யாகப் பழியைச் சுமத்துவான்.
  3. அல்லது மனைவியைத் தீயிலிட்டுக் கொளுத்தி விட்டு தற்கொலை என்றோ, விபத்து என்றோ நாடகமாடி தப்பித்துக் கொள்வான்.

விவாகரத்தை அனுமதிக்காத போதும், விவாகரத்தின் விதிகள் கடுமையாக இருக்கும் போதும் இத்தகைய விளைவுகள் ஏற்படுவதை எவராலும் தடுக்க முடியாது.

ஆண்களின் கொடூரத்தை உணர்ந்த இஸ்லாம், பெண்களின் உயிர், உடமை, மானம், மரியாதை ஆகியவை காக்கப்பட வேண்டுமென்று கருதி விவாகரத்துக்கு அனுமதி வழங்கி அதன் விதிகளையும் எளிதாக்கியிருக்கிறது.

விவாகரத்தில் ஒரு கட்டுப்பாடு

தலாக் எனும் விவாக ரத்துச் சட்டம் இஸ்லாத்தில் எளிமையாக்கப் பட்டிருந்தாலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விவாகரத்துச் செய்யுமாறு இஸ்லாம் கூறவில்லை. அதற்கு முன் பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுமாறு வழிகாட்டுகிறது. கடைசி கடைசியாகவே “தலாக்’ எனும் ஆயுதத்தைக் கையில் எடுக்க வேண்டும் எனக் கூறுகிறது.

தலாக் விடுமுன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

சொல்லித் திருத்துதல்

இல்லற வாழ்வில் பிரச்சனையைச் சந்திக்கும் கணவன், மனைவியிடம் பக்குவமாக அவளது குறைகளைச் சுட்டிக் காட்டி அவளது குடும்பக் கடமைகளை உணர்த்தி, குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி எடுத்துச் சொல்லி, தான் அவளைப் பராமரிக்கும் பொறுப்பில் இருப்பதையும் விவாக ரத்தினால் அவள் சந்திக்க நேரும் பாதிப்புகளையும் இனிய மொழிகளால் எடுத்துரைக்க வேண்டும்.

“அப்பெண்கள் உங்களுக்கு மாற்றமாக நடப்பார்கள் என்றஞ்சினால் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்” (அல்குர்ஆன் 4:34) என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

இப்போதனையிலிருந்து, பெண்கள் மட்டுமே தவறு செய்யக் கூடியவர்கள் என்றும் ஆண்களிடம் தவறே ஏற்படாது என்றும் கருதி விடக் கூடாது. ஏனெனில் இஸ்லாம் இதை விடவும் அழுத்தமாக ஆண்களுக்கு அறிவுரை சொல்லத் தவறவில்லை.

“நீங்கள் மனைவியருடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது முறையில்லை; ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கலாம்; நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அனேக நன்மைகளை அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கலாம்”. (அல்குர்ஆன் 4:19) என்று இறைவன் கூறுகிறான்.

“நீங்கள் உங்கள் துணைவிகளிடம் ஏதேனும் தீய குணங்களைக் கண்டால் உடனே அவர்களை வெறுத்து விடாதீர்கள். நீங்கள் கவனிப்பீர்களாயின், அவர்களிடம் வேறு நல்ல குணங்களைக் காண்பீர்கள்!” என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சிறந்த அறிவுரையைக் கூறியுள்ளனர்.

(நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

தள்ளித் திருத்தல்

இவ்வாறு எடுத்துரைத்தும் மனைவி தன் போக்கிலிருந்து திருந்தாத போது, அடுத்த கட்டமாக, தனது அதிருப்தியையும், அவள் மீதுள்ள கோபத்தையும் வெளிப்படுத்துவதற்காகவும் தாம்பத்ய உறவின் தேவையை அவளுக்கு உணர்த்துவதற்காகவும் நிரந்தரமாகவே பிரிய நேரிடும் என்பதை அவளுக்குப் புரிய வைப்பதற்காகவும் அவளுடன் தாம்பத்ய உறவு கொள்வதைத் தற்காலிகமாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

“அவர்களைப் படுக்கையிலிருந்து (தற்காலிகமாக) விலக்கி விடுங்கள்” (அல்குர்ஆன்4:34) என்று இறைவன் அடுத்த அறிவுரையை வழங்குகிறான்.

தன் மீது கணவன் மோகமும் இச்சையும் கொண்டிருக்கிறான்; தன்னை அவனால் தவிர்க்க முடியாது என்று பெண் இயல்பாகவே இறுமாந்திருக்கிறாள். இந்த நிலையில், அவளது பெண்மையும், அண்மையும் கணவனால் புறக்கணிக்கப்படும் போது, அவளது தன்மானம் சீண்டப் படுவதையும் தனது உறவைக் கணவனால் தவிர்த்துக் கொள்ள முடியும் என்பதையும் தெளிவாக உணரும் போது, நிலைமையின் விபரீதத்தை அவள் புரிந்து கொள்ள முடியும். இதனால் தலாக் தவிர்க்கப் பட்டு குடும்பத்தில் சுமூக உறவு ஏற்படலாம்.

அடித்துத் திருத்துதல்

மேற்சொன்ன இரு நடவடிக்கைகளும் கூட மனைவியிடம் மாற்றத்தை  ஏற்படுத்தவில்லையாயின் மூன்றாவது நடவடிக்கையாக அவளை அடித்துத் திருத்த இஸ்லாம் அனுமதிக்கிறது!

“அவர்களை (இலேசாக) அடியுங்கள்” (அல்குர்ஆன் 4:34)

அடித்தல் என்று சொன்னால், பலவீனமான பெண் மீது தனது பலத்தைப் பிரயோகிப்பதோ அல்லது மிருகங்களை அடிப்பது போன்றோ அடிப்பது என்று அர்த்தமில்லை.

ஏனெனில் எந்தச் சந்தர்ப்பத்திலும் மனைவியின் முகத்தில் அடிப்பதையும், காயம் ஏற்படும் படி அடிப்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிக வன்மையாகத் தடுத்துள்ளார்கள். (நூல்: முஸ்லிம்)

கணவனால் அடிக்கப்பட்டால், அவளது பெண்மையும், தன்மானமும் சீண்டப்படுவதை இன்னும் தெளிவாக அவள் உணர்ந்து கொள்வதோடு கணவன் “எதற்கும்’ தயாராக இருப்பதையும் புரிந்து கொள்கிறாள். இதனால் அவளது போக்கில் நிச்சயமாக மாற்றம் ஏற்பட்டு விவாகரத்துச் செய்யப்படும் நிலை தவிர்க்கப்படுகிறது.

விவாகரத்து என்ற அளவுக்குச் செல்வதைத் தடுக்கவே இலேசாக அடிக்க இஸ்லாம் அனுமதிக்கிறது. இதையும் பெண்ணுரிமை பேசுவோர் குறை கூறுவார்கள்.

இலேசாக அடியுங்கள் என்று கூறும் இஸ்லாமிய மார்க்கத்தை நம்பியவர்களை விட அடிப்பது பற்றிப் பேசாத மற்ற சமுதாயத்தினர் தான் பெண்களை அதிகமாக அடித்து உதைத்துச் சித்திரவதை செய்கிறர்கள்.

ஆண் வலிமை உள்ளவனாகவும் பெண் வலிமை குறைந்தவளாகவும் படைக்கப்பட்டுள்ளார்கள். இருவரும் தனித்திருக்கும் போது இரண்டு போலீசாரைக் காவலுக்கு நிறுத்தி வைக்க முடியாது. இந்த நிலையில் கோபம் ஏற்பட்டால் பலம் வாய்ந்தவர்கள் பலவீனர்கள் மீது பாய்வது வழக்கமான ஒன்று தான். இதை எந்தச் சட்டத்தினாலும் தடுக்க முடியாது.

இலேசாக அடியுங்கள் என்று கூறுவதன் மூலம் கண் மண் தெரியாமல் அடிப்பதைத் தடுத்து நிறுத்த முடியும்!  மனைவியரைச் சித்திரவதைப் படுத்துவது முஸ்லிம்களிடம் மற்றவர்களை விட குறைவாகவே இருப்பதற்கு இதுவே காரணம் என்பதை உணர வேண்டும்.

ஜமாஅத் தீர்வு

கணவன் மனைவியருக்கு இடையேயுள்ள பிணக்கு மேற்சொன்ன மூன்று நடவடிக்கைகளுக்குப் பின்னரும் தொடருமானால், அவர்கள் பிரச்சனையில் ஜமாஅத் (முஸ்லிம்களின் கூட்டமைப்பு) தலையிடும்.

“(கணவன் மனைவி ஆகிய) அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.”

அல்குர்ஆன் 4:35

எந்தப் பிரச்சனையிலும் சம்மந்தப் பட்டவர்களே பேசித் தீர்க்க விரும்பினால் பெரும்பாலும் தீர்வு ஏற்படுவதில்லை. ஏனெனில் உணர்வுப் பூர்வமாகப் பிரச்சனையை அணுகுவதால் சில வேளை சிக்கல் மேலும் முற்றிப் போகலாம். தத்தம் நிலையிலேயே பிடிவாதமாக நிற்பர். தம்பதியர் உறவும் இதில் விதிவிலக்கில்லை.

இதன் காரணமாக இந்தப் பிரச்சனையில் நேரடித் தொடர்பில்லாத ஆனால் தம்பதியர் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்வதில் அக்கறையும் ஆசையும் கொண்ட அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களையே நடுவர்களாக, ஜமாஅத் நியமித்துச் சிக்கலைத் தீர்க்க முயல வேண்டும். இதனால் தம்பதியர் தரப்புக் குற்றச் சாட்டுக்கள், விருப்பு வெறுப்பற்ற, ஒருதலைப் பட்சமற்ற கோணத்தில் அணுகப்பட்டு, சமூகமான, ஒத்த தீர்வு காணப்படும். இதனால் தலாக் தவிர்க்கப்படும்.

இந்த நான்கு நடவடிக்கை களாலும் கூட இணக்கம் ஏற்படவில்லையானால் அவர்கள் இணைந்து வாழ்வதில் அர்த்தமேயில்லை! இந்நிலையில் வேறு வழி ஏதுமின்றி தலாக்கை இஸ்லாம் அனுமதிக்கிறது.

விவாகரத்துச் செய்யும் முறை

“உன்னை விவாகரத்துச் செய்கிறேன்” என்று மனைவியிடம் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கணவன் கூறுவதன் மூலம் விவாகரத்து ஏற்பட்டு விடும். இதற்கென எவ்விதச் சடங்குகளும் இல்லை. ஆனால் இவ்வாறு விவாகரத்துச் செய்திட மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு முறை மனைவியை விவாகரத்துச் செய்தவுடன் அடியோடு திருமண உறவு முடிந்து விடும் என்று கருதிவிடக் கூடாது. மாறாக முதல் தடவை விவாகரத்துச் செய்த பின் மனைவிக்கு மூன்று மாதவிடாய் ஏற்படுவதற்குள் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம். மனைவி கர்ப்பிணியாக இருந்தால் அவள் பிரசவிப்பதற்குள் சேர்ந்து கொள்ளலாம். (பார்க்க: திருக்குர்ஆன் 65:4)

இந்தக் காலக் கெடுவுக்குள் மனைவியுடன் கணவன் சேரவில்லை என்றால் அவர்களுக்கிடையே திருமண உறவு நீங்கி விடும். ஆயினும் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை.

இதன் பிறகு அவர்களுக்கிடையே மீண்டும் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டால் முன்பு கூறிய எல்லா வழிமுறைகளையும் கையாண்ட பின் இறுதியாக மீண்டும் விவாகரத்துச் செய்யலாம்.

முன்பு கூறியது போல குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் மீண்டும் சேர்ந்து கொள்ளவும் செய்யலாம். அந்தக் காலக் கெடு முடிந்து, இருவரும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் திருமணம் செய்து சேர்ந்து கொள்ளலாம்.

இவ்வாறு மூன்றாம் முறை சேர்ந்து வாழும் போது மீண்டும் அவர்களுக்கிடையே நல்-ணக்கம் ஏற்படாது போனால் மூன்றாம் தடவையாக விவாகரத்துச் செய்யலாம். இது தான் இறுதி வாய்ப்பாகும்.

மூன்றாவது தடவை விவாகரத்துச் செய்து விட்டால் மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்கான வாசல் அடைக்கப்பட்டு விடுகிறது.

ஆயினும் விவாகரத்துச் செய்யப்பட்டவள் இன்னொருவனை மணந்து அவனும் அவளை விவாகரத்துச் செய்து விட்டால் இந்த நேரத்தில் மட்டும் முதல் கணவன் மறுபடியும் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம்.

“(திரும்பவும் அழைத்துக் கொள்ளத் தக்க) இத்தகைய தலாக் இரண்டு தடவை தான்” (திருக்குர்ஆன் 2:229) என்ற இறை வசனத்தி-ருந்து இதை அறியலாம்.

இஸ்லாம் வழங்கியுள்ள இந்தச் சட்டத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாத சில முஸ்-ம்கள் தங்கள் இல்லற வாழ்வைப் பாழாக்கி வருகிறார்கள். ஒரே நேரத்தில் மூன்று தலாக் என்றோ, முத்தலாக் என்றோ கூறி மனைவியை விவாகரத்துச் செய்கின்றனர். அதன் பிறகு சேர்ந்து வாழ்வதற்கு வழி இல்லை என்றும் நினைக்கின்றனர்.

இது முற்றிலும் தவறாகும். ஒரு நேரத்தில் மூன்று தலாக் என்றோ, முன்னூறு தலாக் என்றோ கூறினாலும் ஒரு விவாகரத்து தான் நிகழ்ந்துள்ளது. ஒரு விவாகரத்துச் செய்த பின் எவ்வாறு குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாமோ, அல்லது குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பின் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமோ அது போல் இப்போதும் செய்து கொள்ளலாம்.

ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்-ம் 2691)

ஒரு நேரத்தில் மூன்று தலாக் என்று கூறி அது மூன்று தலாக்காகவே கருதப்படுதல் நபிகள் நாயகத்துக்குப் பின்னர் ஏற்பட்ட தவறான நடைமுறையாகும்.

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மீண்டும் முதல் கணவனை மணக்கவே முடியாது என்று ஒரேயடியாக யூத மதம் மறுத்து விடுகின்றது. ஆனால், இஸ்லாம் விவாகரத்தை மூன்று கட்டங்களாகப் பிரித்துள்ளது. இரண்டு கட்டங்களில் மீட்டிக் கொள்ளலாம் என்ற அவகாசத்தை, அதாவது விவாகரத்துச் செய்த மனைவியுடன் மீண்டும் இணையலாம் என்ற சட்டத்தை வழங்குகிறது.

மூன்றாவது கட்டம் தான் இறுதிக் கட்டம். அந்தக் கட்டத்திற்குப் பின்னர், விவாகரத்துச் செய்து விட்டால் அந்தத் தம்பதியர் சேர முடியாத பிரிவு என்ற எல்லைக்குள் வந்து விடுகின்றனர்.

அதற்குப் பிறகும் இஸ்லாம் சலுகை மழை பொழிகின்றது. விவாகரத்துச் செய்யப்பட்ட பெண், வேறொருவரை மணந்து, அந்த இரண்டாவது கணவரும் மூன்று தலாக் விட்டு விட்டால் மீண்டும் முதல் கணவருக்கு அந்தப் பெண் வாழ்க்கைப் படலாம் என்று இஸ்லாமிய மார்க்கம் வழி காட்டுகின்றது.

பெண்களின் விவாகரத்து உரிமை

விவாகரத்துச் செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பது போல் பெண்களுக்கும் இஸ்லாத்தில் உண்டு.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ் (ரலி) என்பவரின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ, நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்” என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி “சரி” என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் “தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு” என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்கள்: புகாரி 5273, நஸயீ

மேற்கண்ட செய்தியி-ருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தி-ருந்த நடைமுறையை அறியலாம்.

ஒரு பெண்ணுக்குக் கணவனைப் பிடிக்கா விட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர், அவள் கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையைத் திரும்பக் கொடுக்குமாறும், அந்த மஹர் தொகையைப் பெற்றுக் கொண்டு கணவன் அவளை விட்டு விலகுமாறும் கட்டளையிட வேண்டும், திருமணத்தையும் ரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியி-ருந்து அறியலாம்.

பெண்கள் தாமாகவே விவாக ஒப்பந்தத்தை முறித்து விடாமல் தலைவர் முன்னிலையில் முறையிடுவது அவசியமாகின்றது. ஏனெனில் பெண்கள் கணவர்களிடமிருந்து ஊரறிய மஹர் தொகை பெற்றிருப்பதாலும் அதைத் திரும்பவும் கணவனிடம் ஊரறிய ஒப்படைக்க வேண்டும் என்பதாலும் இந்த நிபந்தனை ஏற்படுத்தப் பட்டுள்ளது.

மேலும் விவாகரத்துப் பெற்ற பின்னால் அதிகச் சிரமத்துக்கு அவர்களே ஆளாக நேர்வதால் அத்தகைய முடிவுக்கு அவர்கள் அவசரப்பட்டு வந்து விடக் கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு அவசியமாகின்றது. சமுதாயத் தலைவர் அவளுக்கு நற்போதனை செய்ய வழி ஏற்படுகின்றது. இதனால் சமுதாயத் தலைவரிடம் தெரிவித்து விட்டு அவர் மூலமாகப் பிரிந்து கொள்வதே அவளுக்குச் சிறந்ததாகும்.

பெண்கள் விவாகரத்துப் பெற இதை விட எளிமையான வழி உலகில் எங்குமே காண முடியாததாகும். இருபதாம் நூற்றாண்டில் கூட வழங்கப்படாத உரிமையை இஸ்லாம் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே வழங்கி விட்டது.

இவ்வாறு பெண்கள் விவாக விடுதலை பெற மிகப் பெரிய காரணம் ஏதும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலே கண்ட செய்தியில் அப்பெண்மணி கணவர் மீது எந்தக் குறையையும் கூறவில்லை. தனக்குப் பிடிக்கவில்லை என்றே கூறுகிறார். அதற்கு என்ன காரணம் என்று கூட நபியவர்கள் கேட்கவில்லை. காரணம் கூறுவது முக்கியம் என்றிருந்தால் நபியவர்கள் கட்டாயம் அதைப் பற்றி விசாரித்திருப்பார்கள். அவர்கள் ஏதும் விசாரிக்காமலேயே விவாகரத்து வழங்கியதி-ருந்து இதை உணரலாம்.

இஸ்லாம், திருமணத்தைப் பிரிக்க முடியாத பந்தமாகக் கருதவில்லை. மாறாக வாழ்க்கை ஒப்பந்தமாகவே அதைக் கருதுகிறது. இதைத் திருக்குர்ஆன் “அப்பெண்கள் உங்களிடம் உறுதியான உடன்படிக்கை எடுத்து, ஒருவர் மற்றொருவருடன் கலந்து விட்டீர்களே! (திருக்குர்ஆன் 4:21) என்றும்

“கணவர்களுக்கு மனைவியர் மீதுள்ள உரிமையைப் போன்று மனைவியருக்கும் கணவர்கள் மீது உரிமையுண்டு” (திருக்குர்ஆன் 2:228) என்றும் கூறுகிறது.

பெண்களுக்கு விவாகரத்துச் செய்யும் உரிமை வழங்கப்படா விட்டால் அதனாலும் பல தீய விளைவுகள் ஏற்படும்; ஏற்படுகின்றன.

கணவனைப் பிடிக்காத பெண்கள் விவாகரத்துச் சட்டம் கடுமையாக இருப்பதால் கணவரையே கொலை செய்யும் நிகழ்ச்சிகள் அதிகமாகி வருகின்றன.

விஷம் கொடுக்கப்பட்டு கணவர்கள் கொல்லப்படுகிறார்கள். அல்லது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை வெட்டிக் கொலை செய்கின்றனர். கணவனிடமிருந்து எளிதாக விவாகரத்துப் பெற்று, விரும்பியவனைச் சட்டப்படி மணந்து கொள்ள வழியிருந்தால் இது போன்ற கொடூரம் நடைபெறாது.

எனவே தான் ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் விவாகரத்துச் சட்டத்தை இஸ்லாம் மிக மிக எளிமையாக்கியுள்ளது. ஆண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் இஸ்லாம் பெண்களுக்கும் உரிமை வழங்கியுள்ளது என்பதை இதி-ருந்து அறியலாம். (பார்க்க திருக்குர்ஆன் 2:228-232)

இப்போது சொல்லுங்கள்! உலகில் உள்ள மதங்களில் எந்த மதம் இலகுவான மதமாக இருக்கின்றது? பெண்களுக்கும் இலகுவான சட்டங்களை வகுத்துள்ளது?

இஸ்லாமிய மார்க்கம் தான் வணக்க வழிபாடுகளில் மட்டுமல்லாமல் வாழ்வியலிலும் எளிமையான சட்டங்களை வழங்கி, இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்று பறைசாற்றுகிறது. இதைத் தான்  வல்ல அல்லாஹ்வும் தனது திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.

அல்குர்ஆன் 5:6

உடன் கட்டையும் இல்லை! உடன் மொட்டையும் இல்லை!

கணவன் இறந்து விட்டால் போதும்! அந்தப் பெண்ணுக்கு, சமுதாய மக்கள் மொட்டையடித்து விடுவர். வெள்ளாடை உடுத்தி ஒரு மூலையில், மூளி என்று முடக்கி வைத்து விடுகின்றனர்.

ஒரு பெண் கணவனுடன் வாழ்ந்தால் சுமங்கலி! கணவனை இழந்து விட்டால் அமங்கலி; தாலி அறுத்தவள். நல்ல காரியத்திற்குச் செல்வோருக்கு முன்னால் அவள் குறுக்கே வந்து விட்டால் அது துற்குறி, சாபக்கேடு, கெட்ட சகுனம் என்றெல்லாம் விதவைப் பெண்களை வதை செய்கின்ற கொடுமை நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

மொட்டை அடித்து வதை செய்யும் கொடுமையுடன் நின்று விடுவதில்லை. இறந்த கணவனை எரிக்கும் போது அந்த நெருப்பில் மனைவியையும் தள்ளி விட்டு, உடன் கட்டை ஏறுதல் என்ற பெயரில் கொழுந்து விட்டு எரியச் செய்வர்.

04.09.1987 அன்று ராஜஸ்தான் மாநிலம் டியோராலா என்ற கிராமத்தில் ஒரு கோரச் சம்பவம் நடந்தது. ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்த மால்சிங் என்பவர் இறந்து விடுகிறார். அவருடைய உடலுக்குச் சிதை மூட்டப்படுகிறது. இறுதிச் சடங்கில் ஊர் பொதுமக்கள் கூடி நிற்கிறார்கள். இறந்த கணவனின் தலை, அவனது இளம் மனைவியின் மடியில் இருக்க சிதைக்கு தீ மூட்டப்படுகின்றது. பிணம் மட்டும் அந்தக் கோரத் தீயின் பசிக்கு இரையாகவில்லை. கொழுந்து விட்டு எரிந்த அந்த நெருப்பில் 18 வயது இளம் பெண் ரூப் கண்வாரும் சேர்ந்து எரிகின்றாள்.

தன்னைக் காப்பாற்றும்படி கதறிய கதறல், மவ்ட்டீக சிந்தனையில் ஊறிப் போன அந்த மக்களின் செவிட்டுக் காதுகளில் விழவில்லை. மறுமணம் புரிந்து மறு வாழ்வு காண வேண்டிய ஒரு மலர் குருட்டு நம்பிக்கையின் கோரத் தீயில் பலியாகிப் போகின்றாள்.

இன்றைய காலத்து 24 மணி நேரத் தொலைக்காட்சி அலை வரிசைகள் அன்று இல்லை. அப்படி இருந்திருந்தால் அந்தச் செய்தியைக் கண்டு உலகமே வெகுண்டு, வீறு கொண்டு எழுந்திருக்கும். பத்திரிகைகள் தான் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தைப் படம் பிடித்துக் காட்டின. பாரதீய ஜனதா கட்சி மட்டும் அப்போது இந்த அநியாயத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது.

அகில இந்திய அளவில் கிளம்பிய எதிர்ப்பலையால் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. எனினும் ஊர் மக்களுக்கு எதிராக காவல்துறை தரப்பில் சரியான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவில்லை. இதனால் 31.04.2004 அன்று இந்த வழக்கைத் தனி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இவ்வாறு உடன்கட்டை ஏறவில்லை என்றால், கணவனை இழந்த கைம்பெண் இப்படிச் சாகவில்லை என்றால், அவளைச் சாகடிப்பதற்குச் சமுதாயம் வேறொரு முறையைக் கையாளும்.

ஆண்களோ அல்லது திருமணம் முடித்த பெண்களோ பார்க்காதவாறு விதவைப் பெண் ஒரு கருப்புத் திரையில் மூடப்பட்ட, ஆட அசைய முடியாமல் சதுர வடிவில் அமைக்கப்பட்ட ஒரு தனியறையில் அடைக்கப்படுவாள்.

நாள் முழுவதும் தரையில் தான் உட்கார வேண்டும். அதுவும் தன் இரு முட்டுக்கால்களை நெஞ்சுக்கு நேராகக் கொண்டு வந்து குத்த வைத்து உட்கார வேண்டும். ஒரு வேளை மட்டும் உப்பில்லாத உணவு சாப்பிட வேண்டும். இதிலேயே அவள் மெலிந்து சாக வேண்டும். இதுவும் ராஜஸ்தானில் நடைபெறும் கொடுமையாகும்.

விதவைப் பெண்கள் அனுபவிக்கும் விதவிதமான கொடுமைகளைப் பார்த்தீர்களா? ஏற்கனவே கணவனை இழந்து தவிக்கும் அவளுக்குச் சமுதாயம் ஆறுதல் வழங்குவதற்குப் பதிலாக, அரங்கேற்றும் அக்கிரமங்கள், இழைக்கும் அநியாயங்களைப் பாருங்கள்.

உடன் கட்டை ஏற்றி, உயிருடன் ஒரு பெண்ணைக் கொலை செய்யும் கொடுமை இந்நாட்டில் இந்து மதத்தில் உள்ள நடைமுறையாகும்.

யூத மதத்தில் விதவையின் நிலை

யூத மதப்படி, கணவனை இழந்த கைம்பெண்ணுக்குக் குழந்தை இல்லையெனில் அவள் கண்டிப்பாகக் கணவனின் தம்பியைத் திருமணம் முடித்தாக வேண்டும். கணவனின் சந்ததி தழைப்பதற்காக இந்த ஏற்பாடு! இதை பைபிளின் பழைய ஏற்பாட்டில் நாம் பார்க்கலாம்.

அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவனை மைத்துனச் சுதந்தரமாய்ப் படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான்.

ஆதியாகாமம் 38:8

இதில் வேடிக்கை என்னவெனில், இறந்தவனின் சகோதரனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தாலும் அவன் தன் அண்ணியைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும்.

விதவையான அந்தப் பெண்ணிடம் சம்மதம் கூடப் பெறப்படாது. காரணம், அவள் இறந்தவனின் மனைவியாக, ஒரு பெண்ணாக நடத்தப்படமாட்டாள். மாறாக, அவள் இறந்தவனின் சொத்தாகவே கருதப்படுவாள்.

அது மட்டுமின்றி விதவை களையும், விவாகரத்துச் செய்யப் பட்ட பெண்களையும் யூத உயர் குலத்தோர் மற்றும் மத குருமார்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்றும் பழைய ஏற்பாடு தெரிவிக்கின்றது.

கன்னிகையாயிருக்கிற பெண்ணை அவன் விவாகம் பண்ண வேண்டும்.

விதவையானாலும் தள்ளப்பட்டவளையானாலும் கற்பு குலைந்தவளையானாலும் வேசியையானாலும் விவாகம் பண்ணாமல், தன் ஜனங்களுக் குள்ளே ஒரு கன்னிகையை விவாகம் பண்ணக் கடவன்.

அவன் தன் வித்தைத் தன் ஜனங்களுக்குள்ளே பரிசுத்தக் குலைச்சலாக்காமல் இருப்பானாக; நான் அவனைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.

லேவியராகமம் 21:13-15

இப்படி யூத மதம் தன் பங்குக்கு விதவைப் பெண்களுக்கு அநீதி இழைக்கின்றது; கொடுமையைக் கட்டவிழ்த்து விடுகின்றது.

அரபியர்களிடம் விதவைகள்

இஸ்லாம் வருவதற்கு முன் வாழ்ந்த அரபியர்களிடம் விதவைகளை மணம் முடிக்கும் பழக்கம் இருந்தாலும் அவர்களிடத்திலும் ஒரு கொடுமை நீடித்து வந்தது.

சகோதரர்களின் மனைவிகளை சொத்துக்களைப் போல் பாவிப்பது யூதர்களின் நடைமுறை என்றால், அரபியர்கள் தங்கள் தந்தையரின் மனைவியரைச் சொத்தாகப் பாவித்து அவர்களைக் கட்டிக் கொள்வார்கள்.

இவ்வாறு விதவைகள் மற்றும் விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் விஷயத்தில் உலக மதங்கள் அனைத்தும் அநீதியையும், அக்கிரமத்தையும் இழைப்பதைப் பார்க்கிறோம். இதில் இஸ்லாம் மட்டும் தான் விதிவிலக்காகத் திகழ்கிறது.

உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 24:32

கைவிடப்பட்ட கைம்பெண்களை திருமணம் முடித்து வைக்க இந்த வசனம் சொல்கிறது. யூத, கிறித்தவ, இந்து மதங்கள் போன்று விதவைகளையும், விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களையும் சாபக்கேடுகளாக, சமுதாயச் சுமைகளாக இஸ்லாம் கருதவில்லை.

கைம்பெண்களின் சம்மதம் கேட்காமலேயே அவளைக் கொழுந்தனுக்குக் கட்டி வைக்கும் பழக்கத்தை யூத மதம் கொண்டிருப்பதைக் கண்டோம். கணவனின் சொத்துக்களில் ஒன்றாக அவளையும் பாவிக்கும் பொழுது, அந்தப் பெண்ணிடம் எப்படி சம்மதம் கேட்கச் சொல்ல முடியும்?

இதோ இஸ்லாம் எனும் இந்த எளிய மார்க்கத்தின் இனிய தூதர், இது தொடர்பாக வழங்கும் உரிமை முழக்கத்தைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள், “கன்னி கழிந்த பெண்ணை அவளது (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒரு முறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம்” என்று சொன்னார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்து கொள்வது)?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்)” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஹன்ஸா பின்த் கிதாம்(ரலி)

நூல்: புகாரி 5136

எவ்வளவு பெரிய விடுதலை உணர்வை இஸ்லாம் வழங்குகிறது என்று பாருங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மணம் முடித்த பெண்களில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர மற்ற அனைவரும் விதவையர் தான் என்றால், விதவைகளின் மறு வாழ்வுக்கு இஸ்லாம் கொடுத்த முக்கியத்துவத்தையும், முன்னுரிமையையும் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

இறந்து விட்ட தந்தையின் மனைவியரை, தந்தையின் சொத்தாகப் பாவித்து, பிள்ளைகள் மணமுடிக்கும் வழக்கம் அரபியர்களிடம் இருந்ததைக் கண்டோம். இந்தப் பழக்கத்தை இஸ்லாம், அரபியர்களிடமிருந்து வேரறுத்து எறிந்து விடுகின்றது.

உங்கள் தந்தையர் மணமுடித்த பெண்களை மணக்காதீர்கள்! ஏற்கனவே நடந்து முடிந்ததைத் தவிர. இது வெட்கக்கேடானதும், வெறுப்புக்குரியதும், கெட்ட வழியுமாகும்.

அல்குர்ஆன் 4:22

விதவைகளையும், விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களையும் மணம் முடிக்கும் வழக்கம் கிறித்தவர்களிடம் தற்போது நடைமுறையில் இருந்தாலும் வேதத்தில் இல்லை. எனவே இது வேதத்தின் குறைபாடாக ஆகிவிடுகின்றது. ஆனால் திருக்குர்ஆன் நிறைவான வேதம் என்பதால் இந்த நிவாரணத்தைத் தன்னகத்தே கொண்டிருப்பதுடன், அதை மக்களிடம் நடைமுறையிலும் கொண்டு வந்தது.

இவ்வாறு விதவைப் பெண்களின் கொடுமைகளைப் போக்கும் எளிய மார்க்கமாக இஸ்லாம் திகழ்கிறது. இந்த எளிய மார்க்கம் விதவைகளுக்கென சில வழிமுறைகளையும் வகுத்துள்ளது. அது தான் இத்தா சட்டமாகும்.

இத்தா  ஒரு விளக்கம்

கணவனை இழந்த பெண்கள் கர்ப்பமாக இருந்தால் பிரசவிக்கும் வரையிலும், கர்ப்பமாக இல்லா விட்டால் நான்கு மாதம், பத்து நாட்கள் கழியும் வரையிலும் மறுமணம் செய்யக் கூடாது. இந்தக் கால கட்டம் “இத்தா’ எனப்படுகிறது.

கணவனுடன் வாழ்ந்தவள் அவனது கருவைச் சுமந்திருக்கலாம்; அந்த நிலையிலேயே அவள் இன்னொருவனை மணந்து கொண்டால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் பாதிப்படையும். இரண்டாம் கணவன் அக்குழந்தை தனது குழந்தை இல்லை எனக் கூறுவான்.

முதல் கணவனின் குடும்பத்தாரும் அது தமது குடும்பத்துக் குழந்தை இல்லை எனக் கூறி விடுவர். இதனால் தந்தை யார் என்பதே தெரியாததால் மன ரீதியான பாதிப்பு அக்குழந்தைக்கு ஏற்படும். தகப்பனிடமிருந்து கிடைக்க வேண்டிய சொத்துரிமை கிடைக்காமல் போய் விடும்.

இன்னொருவரின் குழந்தையைச் சுமந்து கொண்டு என்னை ஏமாற்றி விட்டாள் என்று இரண்டாம் கணவன் நினைத்தால் அப்பெண்ணின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடும்.

கருவில் குழந்தை இருப்பதை அறிய ஒரு மாதம் போதுமே! அந்த மாதத்தில் மாதவிலக்கு ஏற்பட்டால் குழந்தை இல்லை என்பது தெரிந்து விடுமே! நான்கு மாதம் பத்து நாட்கள் அதிகமல்லவா? என்று சிலர் நினைக்கலாம்.

இது நியாயமான கேள்வி தான். ஆனால் நடைமுறையில் சில சிக்கல்களைத் தவிர்க்கவே இஸ்லாம் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் காத்திருக்கச் சொல்கிறது.

ஒரு பெண் தான் முதல் மாதமே கருவுற்றிருப்பதை அறிந்து கொண்டாலும் அதை அவள் மறைக்க முயற்சிக்கலாம். (அதனால் தான் இறைவனும் கூட இவ்வாறு குர்ஆனில் கூறுகிறான்  2:228)  தான் கருவுறவில்லை என்று கூறி இன்னொருவனைத் திருமணம் செய்யலாம். நான்கு மாதம் பத்து நாட்களுக்கு இவ்வாறு கூறமுடியாது. வயிறு காட்டிக் கொடுத்து விடும்.

குறைப் பிரசவமாக ஒரு குழந்தையை அவள் பெற்றெடுத்தால் அது முந்தைய கணவனுடையதாக இருக்குமோ என்று இரண்டாம் கணவன் சந்தேகப்படுவான். நான்கு மாதம் பத்து நாட்கள் கடந்த பின்பு அவன் இப்படிக் கூற முடியாது. குழந்தை இருந்தால் தான் நான்கு மாதத்தில் வெளிப்படையாகத் தெரியுமே என்று அவன் உண்மையை விளங்கிக் கொள்வான்.

இத்தகைய காரணங்களால் தான் பெண்களுக்கு நன்மை செய்வதற்காக, அவர்களது எதிர் காலம் மகிழ்ச்சியாக அமைவதற்காக, அவளது குழந்தையின் எதிர்காலப் பாதுகாப்புக்காக இறைவன் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளான்.

மாதவிடாய் அற்றுப் போன பெண்களின் இத்தாக் காலம்

உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப் போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக் கெடு மூன்று மாதங்கள்.

(அல் குர்ஆன் 65:4)

கர்ப்பிணிப் பெண்களின் இத்தாக் காலம்

கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் மறுமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும் என்று 2:234 வசனத்தில் கூறப்பட்டுள்ளது. அந்தக் காலக் கெடுவிலிலி-ருந்து கர்ப்பிணிப் பெண்கள் விதிவிலக்குப் பெறுகிறார்கள்.

கர்ப்பிணிகளின் காலக் கெடு அவர்கள் பிரசவிப்பதாகும். அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவரது காரியத்தை அவன் எளிதாக்குவான் (அல் குர்ஆன் 65:4)

கணவன் மரணிக்கும் போது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்து, கணவன் இறந்த அன்றே பிரசவித்து விட்டால் அவளுக்கு இத்தா ஏதும் கிடையாது.

கணவன் மரணிக்கும் போது முதல் மாதக் கருவை மனைவி சுமந்திருந்தால் அவள் பிரசவிக்கும் வரை மறுமணம் செய்யக் கூடாது. இதற்கு எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் ஆகலாம்.

இவ்வசனத்திலிலி-ருந்து இந்தச் சட்டத்தை அறியலாம்.

இத்தாக் காலம் என்பது மேற்கூறப்பட்ட நிலையிலுள்ள பெண்கள் மறுமணம் செய்வதற்காக உள்ள கால கட்டமாகும். அதாவது மேற்கூறப்பட்ட கால கட்டங்கள் நிறைவு பெற்றவுடன் தான் அவர்கள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும்.

இக்கால கட்டங்களில் அவர்கள் தங்களுடைய அலங்காரங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தக் கால கட்டத்தில் பகிரங்கமான முறையில் மணம் பேசுதல் போன்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது. மறைமுகமாக திருமணம் குறித்து பேசிக் கொள்வதில் தவறில்லை.

(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் 2:235

கணவன் இறந்த பின் அவனது மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்த நாட்களில் சுர்மா இடவோ மணப் பொருட்களை பூசவோ சாயமிடப்பட்ட ஆடைகளை அணியவோ கூடாது. நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டுத் தயாரிக்கப்பட்ட (அஸ்ப் எனும்)  ஆடைகளைத் தவிர!

அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)

நூல்: புகாரி 313

இதைத் தவிர ஏனைய காரியங்களைச் செய்து கொள்வதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. மேலே கூறப்பட்டுள்ள காரியங்கள் தவிர மற்றவற்றுக்கு சாதாரண நாட்களில் பெண்களுக்கு என்ன சட்டமோ அது தான் இந்த இத்தா காலத்திலும் உள்ளது.

ஆனால் இன்று நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில், இத்தா என்ற பெயரில் பெண்களுக்கு எண்ணற்ற கொடுமைகள் இழைக்கப்படுகின்றன.

வீட்டில் வெள்ளைத் திரை போட்டு மறைத்து வைக்கின்றனர். பெண்களைச் சூரிய ஒளி கூட படாத வகையில்  இருட்டறையில் அடைத்து வைத்து விடுகின்றனர். சில ஊர்களில் பாய்களால் அறை அமைக்கின்றனர். அவர்கள் வானம் பார்க்கக் கூடாது; வெளிச்சம் பட்டுவிடக் கூடாது; யாரையும் பார்க்கக் கூடாது என்பதற்காகப் பாயிலுள்ள ஓட்டைகளைக் கூட சாணியைப் பூசியும், சிமிண்ட் போன்ற பொருட்களை பூசியும் அடைத்து விடுகின்றனர். இதற்கு வயதான பெண்களும் விதிவிலக்கல்ல.

அவர்கள் எந்த ஆண்களையும் பார்க்கக் கூடாதாம், அதற்காகத் தான் இவ்வாறெல்லாம் செய்கின்றனர்.

சில ஊர்களில் ஆண் குழந்தைகள் கூட அந்த அறைக்குள் செல்வது கூடாதாம். இதை விட மிகக் கொடுமை என்னவென்றால் கர்ப்பிணிப் பெண்கள் கூட அந்த அறைக்குள் செல்லக் கூடாதாம். ஏனென்றால் அப்பெண்களின் வயிற்றில் ஆண் குழந்தை இருக்கலாமாம். அது அப்பெண்ணைப் பார்த்து விடக் கூடாதாம். சில ஊர்களில் பெற்றெடுத்த மகன் கூட இந்த அறைக்குள் தன்னுடைய தாயைப் பார்ப்பதற்குத் தடை உள்ளது.

இது போன்று மார்க்கத்தில் இல்லாத கற்பனைக் கட்டுப்பாடுகளைப் போட்டு வைத்திருக்கிறார்கள். இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத இந்த நிபந்தனைகளை விதிப்பதன் மூலம் இந்த எளிய மார்க்கத்தை கடின மார்க்கமாக ஆக்கி விட்டவர்கள், அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும்.

வீட்டில் வெள்ளைத் திரை போட்டு மறைக்கும் பழக்கம் பிற மதத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒன்றாகும். கணவனை இழந்தவர்கள் நான்கு மாதம், பத்து நாட்கள் திருமணம் முடிக்காமல் இருக்க வேண்டும்; அலங்காரங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்தக் கட்டுப்பாட்டையும் அல்லாஹ் விதிக்கவில்லை. காரணம், இது அல்லாஹ்விடமிருந்து வந்த     கரை படாத கலப்படமில்லாத மார்க்கமாகும். மக்கள் மீது எந்தச் சிரமத்தையும் விதிக்காத எளிய மார்க்கமாகும்.

இத்தாவிலும் சலுகைகள்

கணவனை இழந்த பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய இத்தா குறித்து பார்த்தோம். விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களும் இத்தா இருக்க வேண்டும் என்றாலும், அதே கால அளவு இருக்கத் தேவையில்லை.

விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 2:228

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கான இத்தா காலம் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகும். மேலும், பைபிள் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டதைப் போன்று, விவாகரத்துச் செய்தவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ ஒரேயடியாகத் தடை விதிக்கவில்லை. இந்த மூன்று மாதவிடாய் காலத்திற்குள் கணவன், மனைவியுடன் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம் என்ற வாய்ப்பை வழங்குகிறது.

ஒருவர் ஒரு பெண்ணை மணமுடித்து, அவளைத் தொடாமலேயே விவாகரத்துச் செய்து விட்டால் அந்தப் பெண் இத்தா அனுஷ்டிக்க வேண்டுமா? என்றால் தேவையில்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் நம்பிக்கை கொண்ட பெண்களை மணந்து அவர்களைத் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்து விட்டால் உங்களுக்காக அவர்கள் அனுசரிக்கும் இத்தா ஏதுமில்லை. அவர்களுக்கு வாழ்க்கை வசதி அளியுங்கள். அழகிய முறையில் அவர்களை விட்டு விடுங்கள்!

அல்குர்ஆன் 33:49

இது போன்ற இல்லறவியலின் ஒவ்வொரு விஷயத்திலும் பல்வேறு சலுகைகளை வழங்கி, தான் ஓர் எளிய மார்க்கம் என்பதை உலகுக்குப் பறை சாற்றி நிற்கின்றது.