ஜனாஸா தொழுகை நடத்தத் தகுதியானவர் யார்?

ஜனாஸா தொழுகை நடத்தத் தகுதியானவர் யார்?

உண்மையை மறைக்கும் லால் பேட்டை மன்பவுல் அன்வார்

கே.எம். அப்துந்நாஸிர், கடையநல்லூர்

இறந்தவருக்கு, அவருடைய வாரிசுகளோ  அல்லது நெருங்கிய உறவினரோ தான் தொழுகை நடத்த உரிமை பெற்றவர் என்பதை நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் தெளிவாக நமக்கு போதிக்கின்றன.

ஆனால் நாங்கள் சுன்னத் ஜமாஅத்தினர் என்று சொல்லிக் கொள்பவர்கள் நபி வழிக்கு மாற்றமாக, “எங்களுடைய பள்ளிவாசல் இமாம் தான் தொழுகை நடத்துவார். உங்களை தொழுகை நடத்த விட மாட்டோம்’ என்று கூறி இறையாலயத்தில் களேபரத்தை உண்டாக்குகின்றனர்.

இதற்குக் காரணம் மார்க்கத்தைக் கற்ற மவ்லவிகள், மக்களுக்கு எது உண்மையோ அதனை போதிக்காமல் மார்க்கத்திற்குச் சம்பந்தமில்லாத விஷயங்களை மார்க்கம் என்று போதிப்பது தான்.  இவர்களுடைய பித்தலாட்டங்களை மக்களும் தெளிவாக உணர்ந்தே இருக்கின்றனர்.

இதற்கு உதாரணமாக, “ஜனாஸா தொழுகை நடத்துவதற்கு தகுதியானவர் யார்?’ என்பது தொடர்பாக லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபி மதரஸா மார்க்கத் தீர்ப்பு என்ற பெயரில் வழங்கிய விஷயத்தைக் கூறலாம்.

வலங்கைமான் பகுதியில் ஒரு தவ்ஹீத் சகோதரர் தன்னுடைய உறவினருக்குத் தானே தொழுகை நடத்துவதற்கு உரிமை படைத்தவர் என்ற அடிப்படையில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜனாஸா தொழுகை நடத்தினார். நல்ல முறையில் அடக்கமும் செய்யப் பட்டது. இறந்தவரின் நெருங்கிய உறவினர் தான் தொழுகை நடத்தத் தகுதியானவர் என்று குர்ஆன், ஹதீஸ் ஒளியில் பிரச்சார நோட்டீஸ்களும் விநியோகம் செய்யப்பட்டன.

இதற்கு எதிராக மார்க்கத் தீர்ப்பு என்ற பெயரில் லால்பேட்டை மன்பவுல் அன்வார் மதரஸாவின் மார்க்கத் தீர்ப்பு மையம் ஒரு சட்டத்தைக் கூறியுள்ளது. அதாவது பள்ளிவாசல் இமாம் தான் ஜனாஸா தொழுகை நடத்தத் தகுதியானவர் என்பது தான் அதன் சாராம்சம். அதில் அவர்கள் பல விதமான இருட்டடிப்புகளைக் செய்துள்ளனர். தான் கூறிய கருத்தில் ஒருவன் முரண்பட்டுக் கூறுவதே அக்கருத்து தவறு என்பதற்கு மாபெரும் ஆதாரமாகும். அவர்கள் வெளியிட்டுள்ள ஃபத்வா ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையில் அமைந்திருப்பதை அறிவுள்ளவர்கள் விளங்கிக் கொள்ள முடியும்.

இறந்தவருக்கு, பள்ளிவாசல் இமாம் தான் தொழுகை நடத்த வேண்டும் என்ற கருத்தை நிலைநாட்டுவதற்காக மன்பவுல் அன்வார் மார்க்கத் தீர்ப்பு மையம் மூன்று ஆதாரங்களைக் காட்டியுள்ளது.

அதில் முதல் ஆதாரம் மார்க்கத்திற்கு அறவே தொடர்பில்லாத ஒன்றாகும். அவர்கள் காட்டியுள்ள முதல் ஆதாரமே இவர்களுடைய கருத்து உண்மைக்கு எதிரானது என்பதற்குத் தெளிவான சான்றாகும். இதோ அவர்களுடைய முதல் சான்றைப் பாருங்கள்.

முதல் ஆதாரமும் முறையான விளக்கமும்

ஜனாஸா தொழுகை நடத்த முதல் உரிமை முஸ்லிம் ஆட்சியாளருக்கும், அவர் இல்லையென்றால் காஜிக்கும், அடுத்த உரிமை அப்பள்ளியில் தொழ வைக்கும் இமாமிற்கும், அடுத்து மய்யித்தின் வலீ (பொறுப்புதாரிக்கும்) உரியதாகும்.

நூல்: ஃபதாவா ஆலம்கீரி

பாகம்: 1, பக்கம்: 163

மேற்கண்ட வாசகம் திருக்குர்ஆனிலோ, திருநபி ஹதீஸ்களிலோ உள்ளவை என்று எண்ணி விடாதீர்கள். மாறாக இந்த மத்ஹபுவாதிகள் குர்ஆன், ஹதீஸை விட மேலாக மதிக்கின்ற மத்ஹபு நூற்களில் இடம் பெற்ற வாசகங்கள் தான். அதிலும் இந்த ஆலம்கீரி என்ற புத்தகம் முகலாய மன்னர் அவுரங்கசீப் காலத்தில் எழுதப்பட்டது தான். அவுரங்கசீப் கி.பி. 1658 முதல் கி.பி. 1707 வரை வாழ்ந்திருக்கிறார்.

நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு சுமார் 1000 ஆண்டுகளுக்குப் பிந்தியவர்கள் எழுதிய நூலிலிருந்து தான் இவர்கள் மார்க்கத் தீர்ப்பை எடுத்துள்ளனர். நாம் கூறுவதோ நபியவர்கள் கூறிய ஹதீஸ். இவர்கள் கூறுவதோ நபியவர்களுக்கு 1000 ஆண்டுகளுக்குப் பிறகு யாரோ ஒருவர் எழுதி வைத்த வாசகங்களை! இதனை பொது மக்கள் நன்றாகவே விளங்கி வைத்துள்ளனர்.

மார்க்கத்தின் மூலாதாரங்கள் குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டும் தான். குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ இல்லாத ஒன்றை ஒருவன் மார்க்கத்தின் ஆதாரமாகக் கருதினால் அவனை விட வழிகெட்டவன் யார் இருக்க முடியும்? இவர்களாகவே ஒரு நூலை எழுதி வைத்துக் கொண்டு அதிலுள்ள வாசகங்களை மார்க்க ஆதாரமாக ஆக்குகின்றவர்களுக்கு திருமறைக் குர்ஆன் விடுக்கின்ற எச்சரிக்கையைப் பாருங்கள்.

தம் கைகளால் நூலை எழுதி, அதை அற்ப விலைக்கு விற்பதற்காக “இது அல்லாஹ்விடமிருந்து வந்ததுஎன்று கூறுவோருக்குக் கேடு தான். அவர்களின் கைகள் எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது. (அதன் மூலம்) சம்பாதித்ததற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது.

அல்குர்ஆன் 2:79

மன்பவுல் அன்வார் மார்க்க் தீர்ப்பு மையம் காட்டிய முதல் சான்று எவ்வளவு பெரிய மோசடி என்பதை இதன் மூலம்  விளங்கிக் கொள்ளலாம்.

இரண்டாவது ஆதாரமும் இருட்டடிப்பும்

இறந்தவருக்கு, பள்ளிவாசல் இமாம் தான் தொழுகை நடத்த வேண்டும் என்பதற்கு மன்பவுல் அன்வார் மார்க்கத் தீர்ப்பு மையம் இரண்டாவது சான்றாகப் பின்வரும் சம்பவத்தைக் கூறியுள்ளது.

அலீ (ரலி) அவர்களின் மகன் ஹசன் (ரலி) மரணமடைந்த போது அவர்களின் சகோதரர் ஹுசைன் (ரலி) அவர்கள் அப்போது மதீனாவின் கவர்னராக இருந்த ஸயீதுப்னு ஆஸ் (ரலி) அவர்களை முன்சென்று ஜனாஸா தொழ வைக்கக் கேட்டுக் கொண்டார்கள். அத்துடன், “நபியவர்களின் சுன்னத் மட்டும் இல்லையென்றால் உங்களை முற்படுத்தியிருக்க மாட்டேன்’ என்றும் சொன்னார்.

நூல்: பஜ்ஜார், தப்ரானி

இதனுடைய அறிவிப்பாளர்கள் வரிசையில் சில குறைபாடுகள் இருந்தாலும் இந்த ஆதாரமும் அவர்களுடைய நிலைப்பாட்டிற்கு எதிரான ஆதாரம் தான். இந்தச் செய்தியைப் பல தடவை படித்துப் பாருங்கள். எங்காவது பள்ளிவாசல் இமாம் தொழுகை நடத்த வேண்டும் என்று வந்துள்ளதா? மதீனாவின் ஆட்சியாளரை ஹுசைன் (ரலி) அவர்கள் முற்படுத்தியதாகத் தான் வந்துள்ளதே தவிர பள்ளிவாசல் இமாமை முற்படுத்தியதாக வரவில்லையே? வலங்கைமான் பள்ளிவாசல் இமாம் என்ன தமிழக முதல்வரா? இல்லை, இந்தியப் பிரதமரா? குறைந்த பட்சம் நகராட்சித் தலைவராகவாவது இருக்கிறாரா?

உண்மையில் இதில் அவர்களுக்கு எவ்வித சான்றும் இல்லை. மாறாக இறந்தவருடைய பொறுப்புதாரி விரும்பினால் யாரை வேண்டுமானாலும் தொழுவிக்கச் சொல்லக்கூடிய அதிகாரம் அவருக்கு இருக்கிறது. இறந்தவருடைய உறவினர் தான் அதற்கு உரிமை படைத்தவர் என்பதால் தான் ஹுசைன் (ரலி) அவர்கள் ஸயீதுப்னுல் ஆஸ் அவர்களை முற்படுத்துகிறார்களே தவிர ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி) தாமாக முன் சென்று தொழுவிக்கவில்லை.

இறந்தவரின் பொறுப்புதாரி, தான் தொழுவிக்காமல் மற்றவரை தொழுகை நடத்துமாறு கூறுவதும் நபிவழியில் உள்ளது என்பதால் தான், “நபியவர்களின் சுன்னத் மட்டும் இல்லையென்றால் உங்களை முற்படுத்தியிருக்க மாட்டேன்’ என்று ஹுசைன் (ரலி) கூறுகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை ஆராய்ந்தால் அமீராக இருப்பவர் தான் தொழுகை நடத்த வேண்டும் என்பது வலியுறுத்தப் படவில்லை என்பதை விளங்கலாம்.

நபித்தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்ற போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு புதிய கப்ரைக் கண்டு இது யார்? என்று கேட்டார்கள். “இது இன்ன ஆள்? இன்ன கிளையாருடைய அடிமையாவார்’ என்று சொன்னதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பெண்ணைத் தெரிந்து கொண்டார்கள். “அந்தப் பெண்மணி மதிய நேரத்தில் இறந்து விட்டார். அந்தப் பகல் நேரத்தில் நீங்கள் துôங்கிக் கொண்டிருக்கும் போது உங்களை நாங்கள் எழுப்ப விரும்பவில்லை” என்று நபித் தோழர்கள் பதில் கூறினார்கள்.

அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகைக்கு நின்றார்கள். அவர்களுக்கு பின்னால் நபித்தோழர்கள் நின்றனர். அந்தத் தொழுகையில் நான்கு தக்பீர் சொன்னார்கள். பிறகு, “நான் உங்கள் மத்தியில் இருக்கும் போது உங்களில் யார் இறந்தாலும் எனக்குத் தெரிவிக்காமல் இருக்கக் கூடாது. நிச்சயமாக எனது தொழுகை இறந்தவருக்கு அருட்கொடையாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: யஸீத் பின் ஸாபித் (ரலி)

நூல்கள்: நஸயீ, இப்னுமாஜா, இப்னுஹிப்பான்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருக்கும் போது அவர்களுக்குத் தெரியாமலேயே ஒரு பெண்ணை ஸஹாபாக்கள் அடக்கம் செய்திருக்கின்றார்கள். இதைத் தெரிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “நான் ஒரு ஆட்சியாளர். என்னைத் தான் ஜனாஸா தொழுகை நடத்த அழைக்க வேண்டும்என்று சொல்லவில்லை. தாம் ஒரு இறைத்தூதர் என்ற அடிப்படையில் ஜனாஸா தொழுகை நடத்தினால் அந்த மய்யித்திற்கு நன்மையாகும் என்ற கருத்தைக் கூறுகின்றார்கள். இதுபோல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. எனவே ஆட்சியாளர் தான் தொழுகை நடத்த வேண்டும் என்று கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் எல்லா மய்யித்திற்கும் ஜனாஸா தொழுதார்கள் என்பதை அடிப்படையாக வைத்து ஆட்சியாளர் ஜனாஸா தொழுவிப்பது சுன்னத் என்று கூற முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு தொழுததற்கான காரணம், அவர்களது தொழுகை இறந்தவருக்கு அருட்கொடை என்பதால் தானே தவிர ஆட்சியாளர் என்பதற்காக அல்ல என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கலாம்.

ஒரு மனிதருடைய குடும்பத்தார் விஷயத்திலும், அவனது ஆதிக்கத்திற்கு உட்பட்ட இடத்திலும் அவனுடைய அனுமதியின்றி நீ இமாமத் செய்யாதே!என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி)

நூல்: முஸ்லிம்

இந்த ஹதீஸில் ஒருவருடைய குடும்பத்தாரிடம் மற்றவர்கள் இமாமத் செய்யக்கூடாது என்று கூறப்படுவதால் ஜனாஸா தொழுகை நடத்துவதற்கு  அதிக தகுதி படைத்தவர்  இறந்தவருடைய குடும்பத்தினர் தான் என்பதை விளங்கலாம். அவர்கள் அனுமதித்தால் மற்றவர்கள் இமாமத் ùச்யயலாம்.

இந்த ஹதீஸில் ஒருவருடைய குடும்பத்தாரிடம் மற்றவர்கள் இமாமத் செய்யக்கூடாது என்று தான் நபியவர்கள் கூறுகிறார்கள். எனவே வீடாக இருந்தாலும் பள்ளியாக இருந்தாலும் ஒருவருடைய குடும்பத்தாரின் விஷயத்தில் மற்றவர்கள் குறுக்கீடு செய்யக்கூடாது என்பது தான் இதனுடைய பொருளே தவிர வீட்டில் வைத்து இமாமத் செய்வதை மட்டும் தான் இது குறிக்கும் என்பது அறியாமையாகும்.

மூன்றாவது ஆதாரமும் முரண்பாடுகளும்

இறந்தவருக்குப் பள்ளிவாசல் இமாம் தான் தொழுகை நடத்த வேண்டும் என்பதற்கு ஆதாரமாக மூன்றாவதாக, பின்வரும் செய்தியைக் கூறியுள்ளனர்.

அமீருல் முஃமினீன்  உமர் (ரலி) ஷஹீதாக்கப்பட்டபோது உஸ்மான் (ரலி)யும், அலீ (ரலி)யும் ஜனாஸா தொழ வைக்க முற்பட்டார்கள். “ஃபர்ளு தொழுகைக்கு இமாமாக இருந்து தொழ வைக்கின்ற நானே உமர் (ரலி) அவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்துவதற்கு முதல் உரிமை பெற்றவன்” என்று கூறி சுஹைப் (ரலி) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தி வைத்தார்கள்.

அறிவிப்பாளர்: உர்வா

நூல்: முஸ்தத்ரக் (பதாவா உஸ்ஸனாயில்)

மேற்கண்ட சம்பவம் நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின் நடந்ததாகும். நபியவர்கள் கூறியதாக இதில் எந்தக் கருத்தும் இல்லை. நபியவர்களோடு இம்மார்க்கம் முழுமை பெற்று விட்டது. அதற்குப் பிறகு யாருடைய நடைமுறையும் கருத்தும் மார்க்கமாகாது. எனவே மேற்கண்ட செய்தி மார்க்க ஆதாரமாகக் கொள்வதற்குத் தகுதியற்றதாகும்.

மேலும் மேற்கண்ட செய்தி மன்பவுல் அன்வார் உலமாக்களின் கருத்திற்கே எதிரானதாகும். அவர்களுடைய கருத்துப் படி ஆட்சியாளர் இருக்கும் போது அவர் தொழுகை நடத்துவது தான் சரியானதாகும். அப்படி இருக்கும் போது இமாமாக இருந்த சுஹைப் (ரலி) அவர்கள் தொழுகை நடத்தியது எப்படி அவர்களுக்குரிய சான்றாக முடியும்?

மேலும் இதிலும் பல மோசடிகளை மன்பவுல் அன்வார் மார்க்கத் தீர்ப்பு மையம் செய்துள்ளது, உஸ்மான் (ரலி) அவர்களுக்கும் அலீ (ரலி) அவர்களுக்கும் மத்தியில் ஜனாஸா தொழுகை நடத்துவதில் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் வகையில் பிரச்சனை ஏற்பட்ட காரணத்தினால் தான் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக சுஹைப் (ரலி) அவர்கள் மேற்கண்ட வாசகத்தைக் கூறி தொழுகை நடத்துகிறார்கள்.

மேலும் உமர் (ரலி) அவர்கள் ஆட்சியாளராக இருக்கும் போதே சுஹைப் (ரலி) அவர்களை மக்களுக்குத் தொழுகை நடத்தும் இமாமாக நியமித்து விட்டுச் செல்கிறார்கள். இதன் அடிப்படையில் தான் சுஹைப் (ரலி) ஜனாஸா தொழுகை நடத்தினார்களே தவிர இதுதான் மார்க்கச் சட்டம் என்ற அடிப்படையில் அல்ல. மொத்தத்தில் இது நபியவர்கள் காலத்தில் நடந்ததில்லை என்பதும் நபியவர்களின் போதனை இவ்வாறு அமையவில்லை என்பதுமே போதுமான சான்றாகும்.

மன்பவுல் அன்வார் பதில் கூறுமா?

குர்ஆன் ஹதீஸை விட்டு விட்டு மத்ஹபுகளைத் தான் பின்பற்ற வேண்டும் என்று கூறும் மன்பவுல் அன்வார், அந்த மத்ஹபு இமாம்களின் கருத்தையாவது மதிக்கிறார்களா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் இறந்தவருக்கு அவருடைய நெருங்கிய உறவினர்கள் தான் தொழுகை நடத்த வேண்டும் என்பதை ஹனஃபி மத்ஹப் இமாம்களே மிக வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

ஹனஃபி மத்ஹபைச் சார்ந்த இமாம் அபூ யூசுஃபின் விளக்கம்

அபூ யூசுஃப் அவர்களுடைய கருத்துப் படி “அரசனை விட நெருங்கிய உறவினர் தான் (தொழுகை நடத்துவதற்கு) மிக உரிமை படைத்தவராவார். இது தான் இமாம் ஷாஃபி அவர்களின் கருத்துமாகும். அபூ யூசுஃப், ஷாஃபி ஆகியோரிடத்தில் ஜனாஸா தொழுகையாகிறது உறவின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஒரு காரியமாகும். இது போன்றவற்றிலே திருமணம் மற்றும் இன்ன பிற காரியங்களைப் போன்று உறவினரே அரசனை விட முற்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் இந்தத் தொழுகையாகிறது இறந்தவருக்கு பிரார்த்திப்பதற்காகவும், பரிந்துரை செய்வதற்காகவும் தான் மார்க்கக் கடமையாக்கப்பட்டுள்ளது. நெருங்கிய உறவினரின் பிரார்த்தனை தான் மிக ஏற்றமானதாகும். ஏனெனில் அவர் தான் மனத் தூய்மையான பிரார்த்தனையில் உச்ச நிலையில் இருப்பார். (இறந்தவரின் மீதுள்ள) தன்னுடைய அதிகமான அன்பின் காரணமாக அவரின் உள்ளத்தை பிரார்த்தனையில் லயிக்கச் செய்வார். அவரிடம் மென்மையும் பணிவும் காணப்படும். எனவே பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு அவர் மிகவும் நெருக்கமானவராகி விட்டார்.

ஹனஃபி மத்ஹப் நூல்: பதாயிவுஸ் ஸனாயி, பாகம்: 3, பக்கம்: 320

இமாம் அபூ யூசுஃப் கூறுகிறார்: இறந்தவருடைய பொறுப்புதாரி தான் அவருக்குத் தொழுகை நடத்துவதற்கு மிக உரிமை படைத்தவராவார். ஏனென்றால் இதுவாகிறது திருமணத்தைப் போன்று உறவோடு சம்பந்தப்பட்ட ஒரு சட்டமாகும்

ஹனஃபி மத்ஹப் நூல்: தப்யீனுல் ஹகாயிக்,  பாகம்: 3, பக்கம்: 175

இறந்தவருக்குத் தொழுகை நடத்தும் உரிமை அவருடைய உறவினர்களுக்குத் தான் இருக்கிறது. உறவினரல்லாதவர்கள் உறவினர்களின் உரிமையை பாழாக்குதல் கூடாது.

ஹனஃபி மத்ஹப் நூல்: அல்மப்சூத்  பாகம்: 2, பக்கம்: 125

ஷாஃபி (ரஹ்) அவர்களின் விளக்கம்

இறந்தவருக்கு அவரது மகன் தான் தொழுகை நடத்த வேண்டும் என இமாம் ஷாஃபி அவர்கள் மிகத் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்கள்.

ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இறந்தவருக்குத் தொழுகை நடத்துவதற்கு மிகவும் உரிமை படைத்தவர் (அவருடைய) தந்தை ஆவார். அடுத்த நிலையில் உள்ளவர் சிறிய தந்தை. அதற்கடுத்து வருபவர் மகன். அதற்கடுத்து வருபவர் மகனுடைய மகன். அதற்கடுத்து வருபவர் சகோதரர். அதற்கடுத்து வருபவர் சகோதரருடைய மகன். அதற்கடுத்து வருபவர் சிறிய தந்தை. அதற்கடுத்து வருபவர் சிறிய தந்தையின் மகன். இவ்வாறே சொந்தங்களில் மிகவும் நெருக்கமானவர்களின் வரிசை அடிப்படையிலேயே இருக்க வேண்டும். ஏனென்றால், இறந்த ஒருவருக்கு தொழுகை நடத்துவதன் நோக்கம் அவருக்காகப் பிரார்த்தனை செய்வதாகும். இவர்களுடைய பிரார்த்தனை தான் இறைவன் ஏற்றுக் கொள்வதற்கு மிகத் தகுதியானதாகும். ஏனென்றால், இவர்கள் மற்றவர்களை விட இறந்தவரின் மீது நெருக்கம் உடையவர்கள். எனவே, இவர்களே இறந்தவருக்குத் தொழுகை நடத்துவதற்கு மிகவும் உரிமை படைத்தவர்கள்.

நூல்: அல் முஹத்தப்

பாகம்: 1, பக்கம்: 132

எனவே உண்மையான சத்தியத் கருத்துகளை சிந்தித்துப் பாருத்து முடிவு செய்யுங்கள். அசத்திய வாதிகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.