ஏசு மரணிக்கவில்லை – ஆதாரம்: 7

ஏசு மரணிக்கவில்லை   ஆதாரம்: 7

யூதர்களை விரட்டிய இறைவன்

இறைவன் ஏற்படுத்திய இன்னொரு ஏற்பாடு, அணு அணுவாக மரணத்தை ஏசு சுவைக்கும் காட்சியைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்று யூதர்கள் காத்திருந்தனர். அதற்கான அவகாசத்தையும் அரியதொரு வாய்ப்பையும் எதிர்பார்த்திருந்தார்கள்.

ஆனால் கடவுள் அவர்களது எதிர்பார்ப்பில் மண் அள்ளிப் போட்டு விட்டார். அந்த யூதக் கூட்டத்தை விரட்டியடிப்பதற்காகப் பலத்த ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டைக் கடவுள் செய்திருந்தார்.

நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று.

மத்தேயு 27:45

அதே நேரத்தில் திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது; நிலம் நடுங்கியது; பாறைகள் பிளந்தன.

மத்தேயு 27:51

ஏறக்குறைய நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று.

கதிரவன் ஒளி கொடுக்கவில்லை.   திருக்கோவிலின் திரை நடுவில் கிழிந்தது.

லூக்கா 23:44, 45

ஏசு சிலுவையில் தொங்க விடப்பட்ட அந்த நேரத்தில் கிரகணம் ஏற்பட்டு இருள் சூழ்ந்தது; நிலநடுக்கமும் ஏற்பட்டது.

யூதர்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால் ஏசுவின் சாவை உறுதி செய்யாமல் நகர மாட்டார்கள். அதற்காக அவர்களை விரட்டியடிப்பதற்காகவும், ஏசுவின் ஆதரவாளர்கள் அவருக்கு உதவுவதற்காகவும் இப்படி ஒரு ஏற்பாட்டைக் கடவுள் செய்கின்றார்.