இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

இந்த ஆண்டு ரமளான் மாதம் செப்டம்பர், அக்டோபர் ஆகிய இரு மாதங்களை உள்ளடக்கி வந்துள்ளது. இதில் கடந்த செப்டம்பர் இதழை, ரமளான் சிறப்பிதழாக “இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம்’ என்ற தலைப்பில் கண்டோம். ஒரு கொடியில் இரு மலர்கள் என்பது போல் இந்த ரமளான் மாதத்தில் இரண்டாவது சிறப்பிதழாக “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்’ என்ற தலைப்பில் வெளியிடுகிறோம்.

கொளுத்தும் வெயிலில் கோயிலைச் சுற்றி தரையில் உருண்டு அங்கப் பிரதட்சிணம் செய்தல், வாயிலும், முதுகிலும் அலகு குத்திக் கொண்டு கொக்கிகளில் மாட்டி அந்தரத்தில் தொங்குதல், ஆணியில் நடப்பது, தீச்சட்டிகளைக் கையில் ஏந்துதல், தீ மிதித்தல், மொட்டைத் தலையில் தேங்காய் உடைத்து மண்டையையும் பிளப்பது, நரபலி கொடுத்தல்

கணவனை இழந்த பெண் அதிகப்பட்சமாக “சதி’ என்ற பெயரில் தற்கொலை செய்து கொள்ளுதல், குறைந்தபட்சமாக மொட்டையடித்துக் கொண்டு, வெள்ளாடை உடுத்தி, மூளியாக மூலையில் முடங்கிக் கிடத்தல்

இப்படி இந்த நாட்டில் அன்றாடம் அடுக்கடுக்கான அநியாயங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

இங்கே பட்டியலிடப்பட்டுள்ள இந்த அநியாயங்கள், அறியாமைகள் இந்தியாவில் நடப்பவை. உலக அளவில் அந்தந்த நாட்டுக்கேற்ப வித்தியாசமான மூடச் செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

இவ்வாறு உலகெங்கிலும் அரங்கேறும் இந்த அநியாயங்களில் இருந்து மக்களை விடுவிக்கும் ஓர் உன்னத மார்க்கம் தான் இஸ்லாம்.

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவற்றை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.

அல்குர்ஆன் 7:157

மக்களின் சுமையை இறக்கி, அவர்கள் மீது பிணைக்கப் பட்டிருக்கும் விலங்குகளை இஸ்லாம் அப்புறப்படுத்துகின்றது. இந்த அடிப்படையில் இஸ்லாம் மார்க்கத்தை ஒரு விடுதலை இயக்கம் என்று குறிப்பிடலாம்.

அன்றாடம் அரங்கேறிய அநியாயங்களின் அசுத்தத்திலிருந்து மீண்டு, இந்த விடுதலை இயக்கத்தின் பால் வந்த பிறகு, இங்கும் வேறு விதமான கொடுமைகளுக்கு ஆட்படுத்தினால் என்ன செய்வது? என்று கேட்கலாம்.

இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?

அல்குர்ஆன் 54:17, 22, 32, 40

சிந்திப்பதற்கு எளிய நூல் என்று திருக்குர்ஆன் தன்னைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.

சிந்திப்பதற்கு மட்டுமல்ல! செயல்படுவதற்கும் எளிய வழி என்று கூறுகின்றது.

உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும்.

அல்குர்ஆன் 2:178

அல்லாஹ் உங்களுக்கு (சட்டங்களை) எளிதாக்கவே விரும்புகிறான். (ஏனெனில்) மனிதன் பலவீனனாகப் படைக்கப் பட்டுள்ளான்.

அல்குர்ஆன் 4:28

அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.

அல்குர்ஆன் 5:6

உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை.

அல்குர்ஆன் 22:78

தான் காட்டுகின்ற பாதை எளிமையை, இலகுவை மையமாகக் கொண்டது; கடினத்தை, சிரமத்தை, சிக்கலை மையமாகக் கொண்டதல்ல என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

சிந்திப்பதற்கும், செயல் படுவதற்கும் எளிமை என்ற தாரக மந்திரத்தைக் கொண்டது தான் திருக்குர்ஆன் என்று இந்த வசனங்கள் உலக மக்களுக்குப் பறை சாற்றுகின்றன.

அத்துடன் மட்டுமன்றி, தனக்கு நிகராக இந்தத் தரணியில் வேறு எந்த வேதமும் இல்லை, தனக்கு நிகராக ஒரு வேதத்தையல்ல; ஒரு சில அத்தியாயங்களை அல்லது ஒரு சில வசனங்களையாவது யாரேனும் கொண்டு வாருங்கள் பார்ப்போம் என்று உலக மக்களை நோக்கி அறைகூவல் விடுகின்றது.

நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்.

அல்குர்ஆன் 2:23

தனக்கு நிகராக உலகில் எந்தவொரு வேதமும் கிடையாது என்று இதன் மூலம் உலக மக்களுக்குப் பறை சாற்றுகின்றது. தன்னிகரற்ற இந்த வேதம் காட்டுகின்ற எளிய பாதையைத் தான் இந்த இதழில் நாம் காணவிருக்கிறோம்.

வாழ்வியலை மட்டுமின்றி வணக்க வழிபாடுகளையும் எளிமையாக்கி, அதில் மார்க்கம் நமக்குக் காட்டுகின்ற சலுகைகளை இதில் விவரிப்பதுடன், இந்த எளிய மார்க்கத்தை, மார்க்க அறிஞர்கள் எனப்படுவோர் எப்படியெல்லாம் கடினமாக்கி வைத்திருக்கிறார்கள் என்பதையும் இவ்விதழில் அடையாளம் காட்டுவோம்.