அறிவியல் கூறும் ஆண் பெண் வேறுபாடு

குடும்பவியல் தொடர்: 16

அறிவியல் கூறும் ஆண் பெண் வேறுபாடு

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

குடும்பத்தை நிர்வகிக்கும் அதிகாரம் ஆண்களுக்குத் தான் உள்ளது என்று இஸ்லாம் கூறுகிறது. இஸ்லாம் இப்படிக் கூறுவதை பெண்களுக்கு எதிரான நடவடிக்கையாக சிலர் சித்தரிக்கிறார்கள். இஸ்லாம் ஒரு கோட்பாட்டைச் சொல்கிறது என்பதற்காக எதிர்ப்பவர்கள் அறிவியல் இது குறித்து சொல்வதையாவது கவனிக்கட்டும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் அதிகாரத்தை ஆணுக்குப் பதிலாக பெண்ணுக்குக் கொடுத்தால் என்ன? என்ற கேள்வியை எழுப்புவார்கள் பலர். இதை இன்றைய விஞ்ஞானம் எப்படிச் சொல்கிறது என்று பாருங்கள்!.

மூளையின் செயல்திட்டங்கள்

முதலில் மனிதன் என்று தீர்மானிப்பது மூளையிலுள்ள செயல்திட்டங்கள் (டதஞஏதஆஙஙஒசஏந) தான். அதனால் தான் நாம் மனிதர்களாகவே இருக்கிறோம். மனிதர்களாகிய நமக்கும் மூளை இருக்கிறது. ஆடு மாடுகளுக்கும் மூளை இருக்கத் தான் செய்கிறது. அவைகளுக்கெல்லாம் மனிதனை விட பெரிதாகத் தான்  மூளை இருக்கிறது. ஆனால் நமக்குள்ள செயல்திட்ட வேலைகள் ஆட்டுக்கும் மாட்டுக்கும் கிடையாது. மூளையை வெறும் பொருளாகப் பார்த்தால் எல்லா மூளைகளும் ஒன்றாகத்தான் தெரியும்.

மூளை என்பது ஒரு வகையான கொழுப்பு போன்றது. அதில் என்ன செயல்திட்டங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் முக்கியம். உதாரணமாக, கம்ப்யூட்டரில் ஹார்ட் டிஸ்க் என்ற ஒரு பொருள் உள்ளது. அதில் செயல்திட்டங்களால் நிரப்பப்பட்டவைகளும், புதிதாக வாங்கியதும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஹார்ட் டிஸ்க்கிலுள்ளதை அழித்து (foamat) செய்து ஒன்றுமில்லாவிட்டாலும் அதை HARD DISC என்றுதான் சொல்கிறோம்.

இதில் WINDOWS-7 போடப்பட்டுள்ளது, இதில் XP போடப்பட்டுள்ளது என்றெல்லாம் சொல்கிறோம். ஆனால் ஹார்ட் டிஸ்கைத் தனியாகப் பார்த்தால் என்ன ஆப்பரேட்டிங் சிஸ்டம், மென்பொருள் போட்டாலும் போடாவிட்டாலும் எல்லா ஹார்ட் டிஸ்குகளும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். அதைக் கம்யூட்டரில் பொருத்தி செயல்படுத்திப் பார்த்தால் தான் அது சரியாக இருக்கிறது; சரியாக இல்லை, இன்ன மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற செய்தியைப் புரிந்து கொள்ளமுடியும்.

அதே போன்று தான் மனித மூளைக்குள் இறைவன் (PROGRAMMINGS) செயல்திட்டங்களை ஏற்படுத்தி வைத்திருக்கிறான். இன்னின்ன செல்கள் (உயிரணுக்கள்) இன்னின்ன வேலையைச் செய்ய வேண்டும் என பல்லாயிரக்கணக்கான செல்களையும் பல்லாயிரக்கணக்கான வேலைகளையும் வைத்து மூளையை இறைவன் ஏற்படுத்தியிருக்கிறான். இந்த வேலைகளை மனிதனல்லாத மற்ற உயிரினங்களுக்கு இறைவன் கொடுக்கவில்லை.

ஆடு மாடுகளுக்கும் மூளை இருக்கிறது. அதில் செயல்திட்டங்களும் இருக்கத்தான் செய்கிறது. அதனுடைய செயல்திட்டங்கள் வேலைகள் எல்லாம், எதைச் சாப்பிட வேண்டும்? எதைச் சாப்பிடக் கூடாது? என்ற செயல்திட்டங்களுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. பசி எடுக்கிறது, வயிறு நிரம்புகிறது போன்ற உணர்வுகள் மட்டும் உடையவைகளாகப் படைக்கப்பட்டிருக்கிறது. அதாவது அறிவு சார்ந்த செயல்திட்டங்கள் இருக்காது. உடல் தேவைகளைப் பூர்த்தி செய்கிற செயல்திட்டங்கள் மட்டும் இருக்கும்.

உதாரணத்திற்கு, வேப்ப மரத்து இலை மனிதர்களுக்குக் கசக்கிறது. ஆனால் ஆடு மாடுகள் அதைச் சாப்பிடுகின்றன. அப்படியெனில் அவற்றின் மூளையில் கசப்புக்கான செயல்திட்டங்கள் கிடையாது. அதை உணர்த்துகின்ற நாக்கின் நரம்பிலும் அப்படியொரு செயல்திட்டம் இல்லை என்பதைப் புரியலாம். ஏன் இப்படி நடக்கிறது என்றால், மனிதர்களின் மூளையில் இவை வெறுக்கத்தக்கதாகவும் ஆடு மாடுகளின் மூளையில் விரும்பத் தக்கதாகவும் எழுதப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. ஆக மூளையில் இருக்கிற செயல்திட்டங்களை வைத்துத் தான் மனிதன் அனைத்தை விடவும் சிறப்பிற்குரியவனாக இருக்கிறான்.

குருவிக்கும், எறும்புக்கும் கூட அதற்குத் தேவையான செயல்திட்டங்களுடன் இயங்குகிற மூளை இருக்கத்தான் செய்கிறது.

எனவே மூளையின் மூலமாக, அதாவது மூளையில் ஏற்படுத்தப் பட்டிருக்கின்ற செயல்திட்டங்கள் மூலமாகத் தான் பேசுகின்ற, மனப்பாடம் செய்து கொள்கின்ற தன்மை மனிதனுக்கு இருக்கிறது. சிந்திக்கும் செயல்திட்டங்களும் நமக்குத் தெரிந்ததை பிறருக்கு அழகிய முறையில் எடுத்துச் சொல்லும் திட்டங்களும் மனிதர்களுக்குத் தான் இருக்கிறது. சொத்து சேர்க்கின்ற செயல் திட்டம் நமக்குத்தான் இருக்கிறது. ஆடு மாடுகள் சொத்துச் சேர்க்குமா? இது உனக்குரியது; இது எனக்குரியது என்று எல்லையை வகுப்பது, பழிவாங்குவது போன்ற நல்லது கெட்டதுகளை தேர்வு செய்கிற செயல்திட்டங்கள் மனிதர்களாகிய நமக்கு மட்டும்தான் இருக்கிறது. மனிதர்களைத் தவிர வேறெந்த உயிரினத்திற்கும் இந்தச் சிறப்பியல்பு கிடையாது.

இப்படி மனித மூளையில் செயல்திட்டங்களை ஏற்படுத்திய இறைவன் ஆணும் பெண்ணும் சமம் என்றால், ஒரே மாதிரியான செயல் திட்டங்களைத் தான் இறைவன் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அப்படியில்லை. அதாவது மனிதன் என்ற வகையில் மிருகங்களிலிருந்து வித்தியாசம் இருப்பது எப்படி உண்மையோ அதுபோன்று ஆணுக்கும் பெண்ணுக்கும் மனிதன் என்பதற்குத் தேவையான பொதுவான செல்களையும் செயல்திட்டங்களையும் படைத்துவிட்டு, ஆணிலிருந்து பெண்ணை வேறுபடுத்திக் காட்டுவதற்காக அல்லது பெண்ணிலிருந்து ஆணை வேறுபடுத்திக் காட்டுவதற்காக குறிப்பிட்ட செயல்திட்டங்களையும் செல்களையும் ஏற்படுத்தி வித்தியாசப்படுத்தியிருப்பதையும் மறுக்கவே முடியாது. அதனால்தான் இவன் ஆணாகவும் அவள் பெண்ணாகவும் இருக்கிறாள்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் மத்தியில் வித்தியாசம் இருக்க  வேண்டும் என்பதற்காக பெண்ணின் மூளையில் ஆணை விட சில மாறுதல்களை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான்.

உடல் கூறுகளிலும், உள் கட்டமைப்பிலும், வெளிப்புறத் தோற்றத்திலும் பல்வேறு மாறுதல்களை இறைவன் ஏற்படுத்தியிருப்பதை எவராலும் மறுக்கவே முடியாது. அதாவது மிருகங்களிலிருந்து வேறுபட்ட நமக்கு, ஆண் பெண் ஆகிய நமக்கு, பேசுவதிலும், மகிழ்ச்சியாக இருப்பதிலும், கோபப்படுவதிலும், சொத்து சேர்ப்பதிலும், பொய் சொல்வதிலும் இப்படி நாம் செய்கிற செயல்களினால் மிருகங்களிலிருந்து மாறுபடுகிறோம். ஆனால் இவை ஒவ்வொன்றிலுமோ அல்லது சிலவற்றிலோ ஆணுக்கும் பெண்ணுக்கும் பல்வேறு வித்தியாசங்கள் இருக்கின்றன. அப்படித்தான் இறைவன் படைத்துள்ளான். எனவே ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆண் பெண் வேறுபாடுகள்

மனிதன் என்பதற்கு முதல் ஆதாரமாக இருக்கிற சிந்தனையின் பிறப்பிடமான மூளையை எடுத்துக் கொள்வோம். ஆண் மூளையின் வடிவமும் பெண் மூளையின் வடிவமும் சமமாக இல்லை. ஆண் மூளை பெண் மூளையை விட 100 கிராம் பெரியதாக உள்ளது. வெளிப்படையில் ஆண் மண்டையும் பெண் மண்டையும் ஒன்றாகக் கூட இருக்கலாம். அல்லது பெண் மண்டை, ஆண் மண்டையை விடப் பெரிதாகக் கூட இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் சராசரியாக பெண் மூளையை விட ஆண் மூளை 100 கிராம் பெரிதாக இருக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. இன்றைய அறிவியல் உலகம் பெண்ணை விட ஆணுக்கு மூளை பெரிதாக இருப்பதினால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பதையும் சேர்த்து ஆய்வு செய்துள்ளது.

அதே போன்று மூளையில் பலவகைப் பயன்பாடுகள் உள்ளன. மூளையின் வலது புறம் நினைவாற்றலுக்குரியது. மூளையின் இடது புறம் சிந்தனை செய்வதற்கு, மூளையின் வலது பின்புறம் வரலாற்றுப் பூர்வமான செய்திகளை நினைவுபடுத்தவும், பழைய செய்திகளை நினைவுபடுத்தவும், இது உணர்வுப்பூர்வமாக அணுகும் பகுதி, இது கோபப்படுவதற்கான பகுதி, இது ஆசைப்படுவதற்கான பகுதி, என்றெல்லாம் பிரித்து பிரித்து ஆய்வு செய்கின்றனர் இன்றைய விஞ்ஞானிகள்.

ஒரு பெண், ஆணை விரும்புகிற செயலுக்கும், அதற்குத் திட்டம் தீட்டுகிற பகுதியும் கூட மனித மூளையில் இருக்கத்தான் செய்கிறது. ஆக மனிதன் செய்கிற வேலை மூளையின் செயல்திட்டப் பகுதிகளால் தீர்மானிக்கப்படுகிறது.

உதாரணத்திற்குச் சொல்வதாக இருந்தால் பொய் பித்தலாட்டம் போன்ற வேலை மனிதனின் முன் நெற்றி மூளையின் செல்கள் தான் தீர்மானிக்கின்றன என்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். அல்லாஹ்கூட பொய் சொல்கிற முன்நெற்றி ரோமத்தைப் பிடித்து இழுப்போம் என்கிறான்.

அவர் நேர் வழியில் இருப்பதையே, அல்லது இறையச்சத்தை ஏவுவதையே அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா?

அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?

அவ்வாறில்லை அவன் விலகிக் கொள்ளவில்லையானால் முன் நெற்றியைப் பிடிப்போம்.

அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி.

(அல்குர்ஆன் 96:11-17)

எனவே மனிதனின் முன் நெற்றியிலுள்ள மூளையின் செல்கள்தான் பொய் சொல்வதற்கும் பித்தலாட்டம் செய்வதற்கும் வழிவகுக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது ஆண், பெண் யாராக இருந்தாலும் முன் நெற்றி தான் பொய் சொல்கிறது. இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு மாதிரி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இவைகளில் மிக முக்கியமானது சிந்திப்பது, ஆய்வு செய்வதுதான். அதாவது ஒன்றிலிருந்து இன்னொன்றைக் கண்டுபிடிப்பது, தர்க்கம் செய்து விவாதிப்பது போன்ற சிந்தனைக்குண்டான செயல்திட்டம் மூளையில் இருக்கிறது. இது ஆணுக்கும் இருக்கிறது. பெண்ணுக்கும் இருக்கிறது. அதே போன்று மனனம் செய்து கொள்கிற செயல்திட்டங்களும் உள்ளன.

இதற்கு நடைமுறையில் கூட உதாரணம் சொல்லலாம். ஒரு செய்தியைத் திரும்பத் திரும்ப பயன்படுத்துகிற போது, கேட்கிற போது மனப்பாடமாகி விடுகிறது. செல்போன் நம்பரைப் பார்க்காமல் சொல்கிறோம். நம்முடைய இணையதள முகவரிகள், வலைதள முகவரிகள், முகநூல் போன்றவற்றை மனப்பாடமாக வைத்துக் கொள்கிறோம். மனனம் என்பது சிந்திக்கிற வேலை கிடையாது. ரிக்கார்டு போன்று பதிவு செய்து கொள்ளும் வேலை மட்டும்தான்.

சிந்திக்கின்ற, மனனம் செய்கின்ற ஆகிய இந்த இரண்டையும் ஆய்வு செய்கிறார்கள் விஞ்ஞானிகள். பெண்களின் நினைவாற்றல் செயல்திட்டங்கள் எப்படி இருக்கிறது என்றும் ஆண்களின் நினைவாற்றல் செயல்திட்டங்கள் எப்படி இருக்கிறது என்றும் பெண்ணின் சிந்திக்கும் திறன், ஆணின் சிந்திக்கும் திறன் எப்படி எப்படியெல்லாம் இருக்கும் என்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்படி மேற்கண்ட ஆய்வில், பெண்ணை விட ஆணின் சிந்திக்கும் திறன் கொண்ட பகுதி மூளை 13 சதவீதம் வலுவான நியூரான்களைக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்து விட்டனர்.

அதேபோன்று நினைவாற்றலைப்  பொறுத்தவரை ஆண்களை விட பெண்களின் மூளை பகுதி 11 சதவீதம் அதிக திறன் கொண்டதாக இருக்கிறது. உதாரணத்திற்கு ஆண்கள் 80 சதவீதம் நினைவாற்றல் உடையவர்களாக இருந்தால் பெண்கள் 91 சதவீதம் நினைவாற்றல் உடையவர்களாக இருப்பார்கள்.

இந்த அடிப்படையினால் தான் மனனம் செய்கிற துறையில் பெண்கள் பிரகாசிப்பார்கள். இன்று பள்ளிக்கூடப் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்குவதில் அதிகமானவர்கள் பெண்களாகத் தான் இருப்பார்கள். ஆண்கள் நூற்றுக்கு நூறு வாங்காமல் இருப்பதற்கு வேறு பல புறக் காரணங்கள் இருந்தாலும் அடிப்படையான காரணம், மனனம் செய்கிற கல்வி முறையினால் தான். பள்ளிக் கூட படிப்பைப் பொறுத்தளவுக்கு புத்தகத்தில் என்ன இருக்கிறதோ அதை அப்படியே எழுதினால் தான் அதிக மதிப்பெண் பெறமுடியும் என்ற நிலை உள்ளது. தவறுதலாக இருந்தால் கூட மதிப்பெண் கிடைத்துவிடும்.

இதற்குத் தான் மெக்காலே கல்வித் திட்டம் என்கிறார்கள். இது சிறிதும் சிந்தனைக்கு சம்பந்தமில்லாத கல்வித் திட்டமாக இருப்பதைப் பார்க்கிறோம். இது இந்திய நாட்டை ஆண்ட வெள்ளைக்காரர்கள் உருவாக்கிய கல்வித் திட்டமாகும். இதில் ஆராய்ச்சிக்கு எந்த அடிப்படையும் கிடையாது. மனனத்திற்கு முக்கியத்துவம் இருப்பதனால் தான் பெண்கள் புத்தகத்தில் இருப்பதை அப்படியே மனனம் செய்து எழுதிவிடுகிறார்கள். அதனால் முதல் மதிப்பெண் பெறுகின்றனர்.

ஆணைப் பொறுத்த வரை ஒரு விஷயத்தைச் சிந்திப்பான். சரி தவறு என்று ஆராய்வான். இப்படி ஆண் மூளை இருப்பதினால் மனனம் செய்வதில் கோளாறு வருகிறது.

திருக்குர்ஆனை சிறுவயதிலேயே மனனம் செய்தால் தான் எளிதாக மனப்பாடம் செய்ய முடியும். அரபி இலக்கணத்தைப் படித்துவிட்டு பிறகு மனனம் செய்வது என்பது சிரமமான காரியம் தான். ஏனெனில் இவனது சிந்தனை வார்த்தையைத் தேடிக் கொண்டேயிருக்கும். அங்கு ஒரு வார்த்தை இருந்தால் இவனது மூளை இன்னொரு வார்த்தையை அறிவிக்கும். அதனால்தான் பெரிய வயதில் மனனம் செய்வது கடினமாக இருக்கிறது.

இதைத்தான் இன்றைய விஞ்ஞானிகள் ஆய்வில் தெளிவுபடுத்துகின்றனர். மனனத்தில் பெண்கள் முதலிடம் வருவதை ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும். பிள்ளை பிறந்த தேதி, திருமண தேதி, முக்கிய நாட்களின் தேதி போன்றவற்றை மிகச் சரியாகச் சொல்பவர்கள் பெண்களாகத்தான் இருப்பார்கள். ஆண்களால் இதைச் சொல்ல முடியாது. அதேபோன்று குடும்பங்களில் சண்டை வந்தால், பத்து, இருபது வருடங்களுக்கு முன்னால் உள்ளதையெல்லாம் மறக்காமல் வைத்திருந்து சண்டையில் எடுத்துவிடுவார்கள். இதற்கெல்லாம் காரணம் ஞாபக சக்தி அதிகமாக இருப்பது தான். ஆனால் ஆண்கள் அப்படியெல்லாம் சண்டை போடமாட்டார்கள். அந்த நிகழ்வு நடந்ததும் அப்படியே மறந்துவிடுவார்கள். சிந்திப்பதற்குண்டான விஷயம் இருந்தால் மட்டும் அதைப் பயன்படுத்துவார்கள்.

இதற்குக் காரணம், அல்லாஹ்வே அதுபோன்ற தன்மையைப் பெண்களுக்கு வழங்கியிருப்பதினால் அதைத் தக்க சமயத்தில் வெளிப்படுத்துகிறார்கள். அதுபோன்ற தன்மையை ஆண்களுக்கு இறைவன் குறைவாக வழங்கியிருக்கிறான். அதனால் ஆண்களால் வெளிப்படுத்த முடியவில்லை.

அதே நேரத்தில் சிந்திக்கும் சக்தி பெண்களுக்கு  ஆண்களை விட குறைவாகத் தான் இருக்கும். உலகில் அதிகமான சிந்தனையாளர்கள், கண்டுபிடிப்பு ஆய்வாளர்கள் ஆண்களில்தான் அதிகம் இருக்கிறார்கள். அதிகம் என்ற சொல்வதை விட ஒரு சிலரைத் தவிர மற்றனைவரும் ஆண்களாகத்தான் இருக்கிறார்கள்.

ரேடியோவைக் கண்டுபிடித்தவர், மின்சாரத்தைக் கண்டுபிடித்தவர், விமானத்தைக் கண்டுபிடித்தவர் என்று கண்டுபிடிப்பு விஞ்ஞானிகள் பட்டியலை எடுத்தால் அனைவரும் ஆண்களாவே இருக்கின்றனர். காரணம் சிந்திக்கிற ஆய்வு செய்கிற மூளைத் திறன் செயல்திட்டங்கள் ஆண்களின் மூளையில் தான் அமைக்கப்பட்டிருக்கிறது. இவைகளெல்லாம் பெண்களுக்குக் குறைவு என்று அறிவியல் ஒத்துக் கொண்டுவிட்டது.

வளரும் இன்ஷா அல்லாஹ்