ஆணாதிக்கம்

குடும்பவியல் தொடர்: 15

ஆணாதிக்கம்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

ஒழுக்கத்தைப் பேணி வாழ்வதுதான் குடும்பவியலுக்கு மிகவும் அடிப்படை என்பதற்கான விளக்கத்தை இதுவரை நாம் பார்த்திருக்கிறோம்.

இஸ்லாமிய குடும்பவியலைப் பொறுத்தவரை, அதற்கென அடிப்படையான விதிகள் உள்ளன. அந்த அழுத்தமான விதிகளின் படிதான் இஸ்லாமிய குடும்பவியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அந்த விதிகள் என்னவென்பதை ஒவ்வொன்றாகத் தெரிந்து, தெளிவாகப் புரிந்து கொண்டால்தான் நம்முடைய குடும்பம் இஸ்லாமிய குடும்பமாக, சரியான வாழ்க்கை நெறியில் அமைந்த குடும்பமாக இருக்கமுடியும்.

ஆணே பெண்ணை நிர்வகிக்க வேண்டும்

இஸ்லாமிய குடும்பவியலில் முக்கிய அம்சம் என்னவெனில், ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒரு குடும்பத்தைக் கட்டியமைக்கின்றனர்.

பொதுவாக எங்கெல்லாம் இரண்டு பேர் அல்லது மூன்று பேர் சேர்ந்து ஒரு நிர்வாகம் செய்ய வேண்டிய நிலைமை வருகிறதோ, அப்போது அவர்களில் ஒருவர் தலைமை தாங்க வேண்டும். நிர்வாகம் இல்லாத இடத்திற்குத் தலைமை தேவையில்லை. உதாரணத்திற்கு, இரண்டு நபர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள்; நன்றாகப் பழகுகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் எந்த நிர்வாகமும் கிடையாது. எந்த வரவு செலவும் கிடையாது.

அதே நேரத்தில் இருவர் சேர்ந்து ஒரு நிறுவனத்தையோ, தொழிலையோ, கடையையோ அமைத்தால் அங்கே ஒரு நிர்வாகம் அமைந்துவிடுகிறது. எங்கெல்லாம் நிர்வாகம் அமைகிறதோ அங்கெல்லாம் ஆளாளுக்கு ஒரு முடிவை மேற்கொண்டார்களானால் அந்த நிர்வாகம் சீரழிந்துவிடும். அதற்கு யாராவது ஒரு நபர்தான் தலைமை தாங்க வேண்டும்.

ஆக, ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து குடும்பம் என்ற நிர்வாகத்தைக் கட்டியமைக்கின்ற போது அதற்குத் தலைவர் யாராக இருக்க வேண்டும்? இது மிக முக்கியமான விஷயம்.

இஸ்லாத்தைப் பொறுத்தளவில், குடும்பத்தின் தலைவனாக ஆண்தான் இருக்கிறான். குடும்பத்தின் தலைவனாக, நிர்வகிக்கக் கூடியவனாக, குடும்பத்தைக் கட்டுப்படுத்தக் கூடியவனாக, கண்காணிப்பவனாக, நல்லது கெட்டது என்ற பொறுப்பை ஏற்றுச் செயல்படுத்துபவனாக ஆண் தான் திகழ்வான் என்பது இஸ்லாமியக் குடும்பவியலில் மிக முக்கிய அடிப்படை விதி.

இறைவன் முதலில் ஆணைப் படைத்து, அந்த ஆணிலிருந்துதான் பெண்ணை படைத்ததாகத் திருக்குர்ஆன் கூறுகின்றது. எனவே ஆணைப் படைத்து விட்டு அவனுக்குத் துணையாக பெண் அந்த ஆணிலிருந்து படைக்கப்பட்டதால் பெண்ணை விட ஆணுக்கு முதலிடம் இஸ்லாத்தில் வழங்கப்பட்டிருப்பதை நாம் அறிவோம்.

அல்குர்ஆனின் 4:01, 7:189, 39:6 ஆகிய வசனங்களில் ஆணைப் படைத்து அந்த ஆணிலிருந்து பெண்ணைப் படைத்து ஆணின் முக்கியத்துவத்தை சொல்கிறான் அல்லாஹ்.

அதேபோன்று, ஆண் தான் நிர்வகிக்க வேண்டும் என்ற தெளிவான கட்டளையையும் அல்லாஹ் பிறப்பிக்கிறான்.

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.

அல்குர்ஆன் 4:34

இஸ்லாமியக் கட்டமைப்பில் ஆண்கள்தான் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம்? என்பதை இந்த வசனம் சொல்கிறது. ஒருவரை விட ஒருவரை அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். அதாவது பெண்களை விட ஆண்களுக்கு சில சிறப்புத் தகுதிகளை அல்லாஹ் கொடுத்திருக்கிறான் என்ற காரணத்தினாலும், ஆண்கள் தங்களது பொருளாதாரத்தை மனைவிமார்களுக்காகச் செலவிடுகிறார்கள் என்ற காரணத்தினாலும் ஆண்கள் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

இதுதான் இஸ்லாத்தில் குடும்பவியலின் அடித்தளம். ஆண்கள் தான் பெண்களை நிர்வகிக்க வேண்டும் என்று சொல்லும் அதே நேரத்தில் அதற்கான இரண்டு காரணங்களையும் சொல்கிறான். குருட்டுத்தனமாக இந்த விதியை உருவாக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறான். ஆண்களுக்குத்தான் அதற்குத் தகுதி இருக்கிறது; அந்தச் சிறப்பை அல்லாஹ் ஆண்களுக்குத்தான் கொடுத்திருக்கிறான் என்பது ஒரு காரணம். அவனுடைய பொருளாதாரத்தில் தான் அந்தக் குடும்பம் இயங்குகிறது என்பது மற்றொரு காரணம். நல்லது கெட்டது அனைத்திற்குமான செலவுகள் ஆண் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. பெண்கள் மீது எந்த ஒரு பொருளாதாரச் சுமையும் சுமத்தப்படவே இல்லை. அவளாக விரும்பிச் செய்யும் செலவுகள் என்பது வேறு விஷயம்.

ஒரு பெண் கணவனின் நல்லது கெட்டதற்குப் பொறுப்பாவாளா? குடும்பத்தின் செலவுகளுக்குப் பொறுப்பாளியாவாளா? கிடையாது. இவ்வளவு ஏன்? ஒரு குடும்பத்தில் அவள் நுழைந்துவிட்டால் எனில் அவளது சாப்பாட்டிற்குக் கூட அவள் பொறுப்பாளி இல்லை. அதற்கும் ஆண் மீது தான் பொறுப்பு என்று சுமத்தப்பட்டிருக்கும் போது ஆண் இயல்பாகவே நிர்வகிப்பதற்குத் தகுதியுள்ளவனாக இருக்கிறான்.

அதேபோன்று இஸ்லாமியக் குடும்பவியலில் இல்லற வாழ்க்கையில் ஈடுபடும் ஆண்களுக்கும் உரிமை இருக்கிறது; பெண்களுக்கும் உரிமை இருக்கிறது. ஆண்களுக்கும் கடமைகள் இருக்கின்றன; பெண்களுக்கும் கடமைகள் இருக்கின்றன. பெண்களை அடிமையாக ஆக்கிவிடவில்லை என்பதைக் கீழ்க்காணும் வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.

பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 2:228

பெண்கள் ஒரேயடியாக குடும்பத்திற்கு சேவைகள் மட்டுமே செய்து கொண்டிருக்க வேண்டும் என்ற நிலை கிடையாது. அதில் கணவன் செய்ய வேண்டியவைகளும் இருக்கிறது. அதாவது பெண் தனது கணவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது கடமை. பெண்ணுக்கு அவளது கணவன் செய்ய வேண்டியது பெண்களின் (மனைவி) உரிமை.

எனவே பெண்களுக்கு வெறுமனே கடமைகளை மட்டுமே சுமத்திவிடவில்லை இஸ்லாம். அவர்களது உரிமையையும் கொடுக்கிறது. ஆனாலும் பெண்களை விட ஒருபடி மேல் ஆண்களுக்குத் தகுதி இருக்கிறது, ஒரு படித் தரம் அதிகமாகத்தான் இருக்கிறது என்று சொல்லிவிட்டு, இப்படிச் சொன்னதால் ஆண்களுக்கு தற்பெருமை தலைக்கு ஏறிவிடக் கூடாது என்பதால் எல்லாவற்றும் மேலாக உயர்ந்தவனாக மனிதனைப் படைத்த அல்லாஹ் இருக்கிறான் என்பதையும் “அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்’ என்று சேர்த்து அவ்வசனத்தில் முடிக்கிறான்.

பெண்களை விட ஆண்கள் ஒருபடி மேல்தான் எனினும் ஆணை விடவும் எல்லாவற்றையும் விட நான் மேலானவனாக இருக்கிறேன் என அல்லாஹ் உணர்த்துகிறான்.

இது இஸ்லாமிய குடும்பவியலின் அடிப்படைக் கொள்கையாகும். அதாவது ஒவ்வொரு ஆணும் தான்தான் தனது குடும்பத்தின் பொறுப்பாளர் என்பதை உணர வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் தனது கணவனின் நிர்வாகத்திற்குக் கீழ்தான் இருக்க வேண்டும். கணவனின் தலைமைப் பொறுப்புக்கு நாம் கட்டுப்பட வேண்டும். அதுதான் நமக்கு சுமத்தப்பட்ட கடமை என்பதைப் பெண்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்.

அறிவுஜீவிகளின் அறியாமை

இதனை விரிவாக அலசி ஆராய்வதற்கு முன், இன்றைய உலகில் இது குறித்து என்ன கருத்து நிலவுகிறது என்பதையும் தெரியவேண்டும். ஏனெனில் ஆண்தான் பெண்களை நிர்வகிக்க வேண்டும் என நாம் சொல்லும் போது, சமூகத்தில் தங்களை முற்போக்குவாதிகள் போன்று காட்டிக் கொள்ளும் சில ஆண்களும் சில பெண்களும் இது ஆணாதிக்க சமூகம் என்று அருவருக்கத்தக்க ஒரு சொல்லைப் போன்று விஷமப் பிரச்சாரம் செய்கின்றனர்.

ஒரு குடும்பத்தில் ஆண் தலைவராக இருந்து குடும்பத்தைப் பராமரிப்பது கெட்டது போன்றும் இழிவானது போன்றும் மடமையானது போன்றும் அடிமைத்தனம் போன்றும் சித்தரிக்கின்றனர். ஆண் ஆதிக்க சமுதாயம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி, பெண்கள் ஆண்களுக்கு அடங்கியிருக்கத் தேவையில்லை என்று சொல்வதை முற்போக்குத்தனமாக நினைக்கிறார்கள். அதுதான் பெண்களுக்கான சுதந்திரம் என்றெல்லாம் பேசுகின்றார்கள்,

இஸ்லாமிய வட்டத்துக்குள் இல்லாத இவர்கள் இஸ்லாம் சொல்வதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே இஸ்லாமிய அடிப்படையில் இவர்களுக்கு அறிவுரை கூறுவது பயனளிக்காது. அறிவின்படியும் அறிவியல் முடிவின்படியும் இவர்களுக்கு நாம் அறிவுரை கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும். அறிவியல் அடிப்படையில் பார்த்தாலும் அவர்களின் பேச்சு அறிவியலுக்கு எதிரானது. அவர்கள் பேசுவது எழுதுவது பெண்களின் உடற்கூறு விஞ்ஞானத்திற்கும் எதிரானது.

ஏன் இவர்கள் இப்படிப் பேசுகிறார்கள் என்று ஆராய்ந்தால், இந்தப் பெண்கள் தங்களது கணவனிடம் குடும்ப வாழ்க்கையில் சரியான இன்பத்தையும் சந்தோஷத்தையும் அடையாதவர்களாக இருப்பதால், கணவனல்லாத தவறான வழிமுறைகளில் தங்களது இன்பத்தையும் சந்தோஷத்தையும் பெற்றுக் கொள்வதற்காக “பெண்களின் உரிமைக்காக போராடுகிறோம்’ என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு தங்களது தவறைச் சரிகாண்கின்றனர்.

ஒரு கணவனிடம் சந்தோஷம் இல்லையெனில் அவனிடமிருந்து விலகி, வேறொரு கணவனைத் திருமணம் முடித்துக் கொண்டு செல்வதுதான் சரியான வழிமுறை. தற்போது வாழ்கிற கணவனின் மூலம் சந்தோஷம் கிடைக்கவில்லையெனில் அந்த அநியாயத்தை சகித்துக் கொண்டு வாழவேண்டும் என்றெல்லாம் இஸ்லாம் சொல்லவில்லை. அதற்கு மாற்று வழி முதலாவது திருமணத்தை ரத்து செய்துவிட்டு வேறொரு கணவனை மணப்பதுதான் அந்தப் பெண்ணுக்கான சரியான உரிமை.

இஸ்லாமல்லாத மதங்களில் பெண்களுக்கு இந்த உரிமை வழங்கப்படாததால் அந்த உரிமையைக் கேட்டுப் பெறுவதற்குப் பதிலாக ஒட்டுமொத்த ஆண் சமூகத்தையும் வெறுப்பதாகக் காட்டிக் கொள்கிறார்கள்.

“புரட்சி’ என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டால் எங்கு வேண்டுமானாலும் போகலாம், வரலாம் என்பதற்காக இப்படி “பெண் உரிமை’ என்றும் “ஆண் ஆதிக்க எதிர்ப்பு’ என்றும் கிளம்பிவிடுகிறார்கள்.

பெண் சுதந்திரம் என்று உளறிக் கொண்டு, எந்த ஆணுடனும் சுற்றித் திரியலாம், எங்கு வேண்டுமானாலும் சுற்றித் திரியலாம், வெளிநாடுகளுக்கும் வெளிமாநிலத்திற்கும் சுதந்திரமாகச் சென்று வரலாம் என்று நினைக்கிறார்கள். இதைப் பற்றிக் கேட்டால் ஆண் ஆதிக்கம், பெண்ணின் சுதந்திரம் பறிப்பு என்றெல்லாம் கூப்பாடு போடுவாôர்கள். அதையும் முற்போக்கு போன்று பேசுவார்கள். ஆனால் அவர்களது கருத்தும் பேச்சும்தான் பிற்போக்குத்தனமானது. அறிவியலுக்கும் நடைமுறை அனுபவத்திற்கும் கூட எதிரானது.

அதே போன்று மனைவியை சந்தோஷப்படுத்த முடியாத ஆண்களில் சிலர், இதனால் தனது ஆண்மைக்கு இழுக்கு ஏற்பட்டுவிடும் என்பதாலும் தனது மனைவி தன்னைப் பற்றி வெளியில் பரப்பிவிட்டால் தனது நிலை என்னவாகும்? என்று அஞ்சுகிறவர்களும் இந்தப் போர்வையைப் போர்த்திக் கொண்டு, ஆண் ஆதிக்க சமூகத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்பார்கள். அதாவது தன்னிடமுள்ள குறை வெளியில் தெரியக் கூடாது என்பதற்காக தனது மனைவி எவருடனும் செல்வதை ஏற்றுக் கொண்டும் வாழ்கிற இத்தகையவர்கள் ஆண் ஆதிக்க எதிர்ப்பு ஆண்களாக சமூகத்தில் வலம் வருவார்கள்.

முற்போக்கு என்ற நோய் பிடித்த சில ஆண்கள், கண்ட பெண்களுடனும் உல்லாசமாக இருப்பதற்காகவும் சட்ட விரோதமாக சந்தோஷத்தைப் பெறுவதற்காகவும் ஒரு ஆணும் பெண்ணும் தனது இஷ்டப்படி எப்படி வேண்டுமானாலும் சுற்றித் திரியலாம் என்ற கருத்தை ஆதரிப்பார்கள். அதாவது பலான மாதிரித் திரிய வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் ஆணாதிக்க எதிர்ப்பு என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு தன்னை ஒரு முற்போக்காளனாகக் காட்டிக் கொள்வார்கள்.

முதலாவது புரிய வேண்டிய செய்தி, எந்த நிர்வாகமாக இருந்தாலும் ஒரு ஆதிக்கம் இல்லாமல் எப்படி நிர்வாகத்தை நடத்த முடியும்? ஆதிக்கம் இல்லாமல் எந்த நிர்வாகத்தையும் நடத்தவே முடியாது. உதாரணத்திற்குச் சொல்வதாக இருந்தால், ஒரு பள்ளிக் கூடம் இருக்கிறது. அதை ஒரு தலைமை ஆசிரியர் நிர்வாகம் செய்வார். அதாவது ஆதிக்கம் செலுத்துவார். உடனே இந்த முற்போக்குகள் சொல்வதைப் போன்று ஒரே தலைமை ஆசிரியரின் ஆதிக்கமாக இருக்கிறது என்று குறை சொல்லமுடியுமா?

பள்ளிக்கூடம் என்றால் அதற்கு ஒரு தலைமையாசிரியர் தான் நிர்வாகம் செய்யவேண்டும். அதுதான் சரியானது. அல்லது மாணவர் ஆதிக்கம் செய்வதா? அதையாவது இந்த முற்போக்குகள் சொல்வார்களா? அல்லது ஒருவரும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்று சொல்ல முடியுமா? ஒருவரும் ஆதிக்கம் செலுத்தாவிட்டால் அந்த நிர்வாகம் ஒழுங்காக நடக்குமா?

ஒரு கடையில் முதலாளி, தொழிலாளி என்ற இரண்டு வர்க்கத்தினர் இருக்கத்தான் செய்வார்கள். முதலாளி ஆதிக்கம் செலுத்தினால், முதலாளிகள் ஆதிக்கம் செலுத்துகிறார்களே என்று கூக்குரலிட முடியுமா? கடைக்குச் சொந்தக்காரன்தான் ஆதிக்கம் செலுத்த முடியும். இதில் எந்த வியப்புக்கும் அவசியமில்லை. ஆதிக்கம் என்பது கெட்டதா? நல்லதா? என்பதை முதலில் முடிவு எடுக்க வேண்டும். ஆதிக்கம் செலுத்துவது என்றால் நிர்வாகம் செய்வது என்று பொருள். ஒழுங்காக ஆதிக்கம் செலுத்தினால்தான் கண்காணித்தால்தான் எந்த நிறுவனமும் சரியாக நடக்கும்.

குடும்பத்தில் அது நடக்கிறதா? இது நடக்கிறதா? குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிப் போடுவதும், மனைவி சந்தோஷமாக இருக்கிறாளா? இல்லையா? என்பதையெல்லாம் கவனிப்பதும் தானே நிர்வாகம். அதுதான்ஆதிக்கம் செலுத்துதல் என்பதாகும்.

இதைத் தவறு என்று சொல்வார்களேயானால், அடுத்து என்ன சொல்ல வருகிறார்கள்? இரண்டு விஷயத்தைத் தான் இவர்களால் சொல்ல முடியும். ஒன்று, ஆணிடம் இருக்கும் தற்போதைய நிர்வாகத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைப்பது. அதாவது பெண் ஆதிக்கம். இரண்டாவது, ஆணிடமும் பெண்ணிடமும் நிர்வாகம் இருக்கக் கூடாது என்று சொல்ல வேண்டும்.

நிர்வாகமே தேவையில்லை என்று மூளை கழன்றவர்கள் தான் சொல்வார்கள். ஒரு நபர் தனியாக இருக்கிற போது அவர் எந்த நிர்வாகத்தின் கீழும் வரமாட்டார். ஒருவருடன் மற்றவர்கள் சேர்கின்ற போது அதில் நிர்வாகம் வந்துவிடும். அவர்களுக்கிடையே நடக்கிற கடன்கள், கொடுக்கல் வாங்கல்கள் வந்துவிடுமாயின் அதில் ஒரு நிர்வாகம் (ஆதிக்கம்) இருக்க வேண்டும். ஆளாளுக்குச் செலவழித்தால் கணக்கு வழக்குகள் நாசமாகிவிடும். ஒரு கடைக்கு இரண்டு முதலாளிகள் இருந்து ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருவர் பொருளாதாரத்தை எடுத்தால் கடை இருக்கிற இடம் தெரியாமல் போய்விடும். ஒரு நிர்வாகம் என்ற திட்டமிடுதல் பிரகாரம் நடத்தினால் தான் கடையை ஒழுங்காக நடத்திட முடியும்.

எனவே ஆண் நிர்வாகம் செய்வது, அல்லது பெண் நிர்வாகம் செய்வது, அல்லது யாரும் நிர்வாகம் செய்யக் கூடாது என்று மூன்று விதமாகத்தான் நிர்வாகத்தைப் பிரிக்க முடியும். ஆணும் பெண்ணும் சேர்ந்து என்றால் அதில் யாரையாவது  ஒருவரைத்தான் தலைமையாக ஏற்க வேண்டும். எனவே இந்த மூன்று அம்சங்களில் மூன்றாவதான, “யாரும் நிர்வாகம் செய்யவேண்டாம்’ என்பதை அறிவு ஏற்றுக் கொள்ளாது.

ஆண் தேவையில்லை, பெண் நிர்வகிக்க வேண்டும் என்றால் அதற்குப் பெயர் பெண் ஆதிக்கம் என்று வரும். ஆண் செய்கிற எல்லாவற்றையும் பெண்ணால் செய்ய முடியுமா? என்பதற்கு அறிவுப்பூர்வமாக, உடல்கூறு விஞ்ஞானத்தின் மூலமும் நடைமுறை சாத்தியம் என்ற அடிப்படையிலும் பதில் சொல்ல வேண்டும்.

ஆண் செய்யும் அனைத்தையும் பெண்ணால் செய்ய முடியும் என்று இவர்கள் வாதிக்கின்றனர். ஆனால் இது மிகப்பெரிய பொய். மீடியாக்களும் பத்திரிக்கைகளும் இந்தப் பொய்யை திரும்பத் திரும்ப சரியானது போன்று  காட்டுவதால் மக்களிடம் ஆண் ஆதிக்க சமூகம் என்ற வார்த்தை தவறுதலாகவும் இழிவானதாகவும் கருதப்படுகிறதே தவிர மற்றபடி அதில் எந்த உண்மையும் அதில் இல்லை. இதுதான் கோயபல்ஸ் தத்துவம். கோயபல்ஸ் தத்துவம் என்றால் ஒரு பொய்யைத் திரும்பத் திரும்ப உண்மை போன்று சொல்லிக் கொண்டிருப்பது. உதாரணத்திற்கு குரங்கிலிருந்து தான் மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்று வந்தான் என்பதைப் போன்றதாகும்.

தமிழில் ஆட்டைக் கழுதையாக்கும் வேலை என்று ஒரு கதை சொல்வார்கள். அதாவது, ஒருவன் ஆட்டை வாங்கிக் கொண்டு போகின்ற வழியில் நான்கு பேர் திட்டமிட்டு அவனது ஆட்டைப் பறிப்பதற்காக ஆட்டை கழுதை என்று சொல்லி அவனது மனதை மாற்றும் செயலில் இறங்குகிறார்கள். அதில் ஒருவர், “கழுதையை ஓட்டிக் கொண்டு போகிறாயே! உனக்கு என்ன ஆனது?’ என்று கேட்டதும், ஆட்டை ஓட்டிச் சென்றவன் சண்டை போடும் அளவுக்கு, ஆட்டைத்தான் நான் கொண்டு செல்கிறேன் என்று பதில் சொல்கிறான்.

இன்னும் சிறிது தூரத்தில் இன்னொருவன் அதே போன்று, “கழுதையைக் கூட்டிச் செல்கிறாயே! உனக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்கிறான். அப்போது ஆட்டை இழுத்துச் செல்பவனுக்கு இலேசாக மனதில் சலனம் ஏற்படுகிறது. முதலில் கேட்டவனிடம் சண்டை போடும் அளவுக்குப் பதில் சொன்னவன், கொஞ்சம் நிதானமாக பதில் சொல்கிறான்.

சிறிது தூரத்தில் இன்னொருவன் இதுபோன்றே கேட்டதும், தன் மனநிலையில் தான் கோளாறு இருக்கிறதோ, நம் பார்வைக்குத் தான் கழுதை ஆடாகத் தெரிகிறதோ என்கிற நிலைக்குள் தள்ளப்பட்ட பிறகும் ஆட்டைக் கூட்டிச் செல்கிறான்.

இன்னும் சிறிது தூரம் சென்றதும் அதே போன்றதொரு கேள்வியை நான்காம் நபர் கேட்டதும், ஆட்டைக் கூட்டிச் செல்பவனின் மனதில், “நிச்சயம் நாம் ஒரு கழுதையைத் தான் கூட்டிச் செல்கிறோம். நமது பார்வையில் தான் தவறு இருக்கிறது; அல்லது நமது மனநிலை தான் கழுதையை ஆடாக ஏற்று இருக்கிறது. இப்படியே நமது ஊருக்குப் போனால் ஊர்வாசிகள் அனைவரும் நம்மைக் கேள்வி கேட்டால் நமக்கு இழுக்காகிவிடும்’ என்றெண்ணி ஆட்டை விட்டுவிட்டுச் செல்கிறான்.

இந்தக் கதையைப் போன்றுதான் இன்றைய மீடியாக்களும் பத்திரிக்கைகளும் திட்டமிட்டு ஆண்கள் குடும்பத்தை நிர்வகிக்கிற உண்மையை ஆண் ஆதிக்க சமூகம் என்ற பொய் குற்றச்சாட்டைக் கூறி, தவறான விமர்சனம் மூலமாக ஆட்டைக் கழுதையாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் ஆண் ஆதிக்கம், ஆண் ஆதிக்கம் என்று திரும்பத் திரும்பச் சொல்வதினால், முதலில் படிக்கும் போது இவர்கள் கிறுக்கர்கள் என்று நினைப்போம். இரண்டாவது படிக்கிற போது, நமக்குத்தான் புரியாமல் இருக்கிறதோ என்று நினைப்போம். இப்படியே திரும்பத் திரும்பக் கேட்கிற போது அவர்கள் சொல்வதுதான் சரியானது என நமது மனது ஏற்றுக் கொள்கிறது. எனவே இவர்கள் எத்தனை தடவை சொன்னாலும் இது ஒரு பொய். இந்தப் பொய்யை உண்மையாக்கும் வேலையில் இவர்களை வெற்றி காண விடக் கூடாது என்பதில் நாம் கண்ணும் கருத்துமாகச் செயல்பட வேண்டும்.

எனவே முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை, பணம் கொடுக்கல் வாங்கல் நடக்கின்ற சூழல் ஏற்பட்டால், ஒருவருடைய தேவைகள் இன்னொருவரினால் நிறைவடைந்தால் அதற்கு ஒரு நிர்வாகம் தேவைப்படுகிறது. அந்த நிர்வாகம் ஒரு தலைமையின் கீழ் செயல்படுவது அவசியத்திலும் அவசியமாகிறது. ஒரு தலைவர் நிறுவனத்தை நடத்துகிறார் என்றால் அதனை தலைவர் ஆதிக்கம் என்று குறை சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. நிறுவனத்தை அதன் தலைவர் ஆதிக்கம் செலுத்துவது தான் அந்த நிறுவனம் ஒழுங்காக இயங்குகிறது என்பதற்கான அடிப்படை. அதை ஆதிக்கம் என்று கொச்சைப்படுத்துவதை ஏற்கக் கூடாது. தலைவர் நிறுவனத்தை ஆதிக்கம் செலுத்தாவிட்டால் வேறு யார் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என இந்த மூடர்கள் எதிர்பார்க்கிறார்கள்?

இப்படி ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கிற நிறுவனம் தான் குடும்பம் என்பது. அதில் யார் ஆதிக்கம் செலுத்துவது நல்லது என்ற கேள்விகள் வரக்கூடாது என்பதால் ஒரு ஆண்தான் பெண்ணை நிர்வாகம் செய்ய வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது. அதாவது முடிவு எடுக்கும் கடைசி அதிகாரம் ஆணுக்குத் தான் இருக்கிறது என்று இஸ்லாம் கூறுகிறது.