கடனை தள்ளுபடி செய்வதன் சிறப்பு

பொருளியல்     தொடர்: 22

கடனை தள்ளுபடி செய்வதன் சிறப்பு

அப்துல்லாஹ் பின் அபீகத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) அபூகத்தாதா (ரலி) அவர்கள், தமக்குக் கடன் தர வேண்டிய ஒருவரைத் தேடினார்கள். அவர் தலைமறைவாகிவிட்டார். பின்னர் அவரைக் கண்டபோது அவர், “நான் (வசதியின்றி) சிரமப்படுபவன்என்று கூறினார். அதற்கு அபூகத்தாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாகவா?” என்று கேட்டார்கள். அவர் “அல்லாஹ்வின் மீது சத்தியமாகத்தான்என்றார். அபூகத்தாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மறுமை நாளின் துயரங்களிலிருந்து அல்லாஹ் தம்மைக் காப்பாற்ற வேண்டுமென விரும்புகின்றவர், (கடனை அடைக்க முடியாமல்) சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிக்கட்டும். அல்லது கடனைத் தள்ளுபடி செய்துவிடட்டும்என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்என்றார்கள்.

நூல்: முஸ்லிம் 3184

கடனைத் தள்ளுபடி செய்வதால் எவ்வளவு பெரிய சிறப்பு இருக்கிறது என்பதைப் பாருங்கள். நபித்தோழர்கள் மறுமை வாழ்வின் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார்கள்; கஷ்டப்படுகிறேன் என்று சொன்னவுடன் எப்படி கட்டுப்பட்டு நடந்தார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

பிரச்சனை ஏற்பட்டால்….

கடன் வாங்கிய ஒருவனுக்கும் கடன் கொடுத்த ஒருவனுக்கும்  பிரச்சனை ஏற்பட்டு, இஸ்லாமிய ஆட்சிக்கு வழக்கு முறையாக வந்து, அதை விசாரித்துப் பார்த்தால் கடன் வாங்கியவன் திருப்பிக் கொடுப்பதற்கு வசதியில்லாமல் இருக்கிறான். அவனிடத்தில் இருப்பது, கடனை விடக் குறைவாக உள்ளது. இந்த நேரத்தில் ஓர் இஸ்லாமிய ஆட்சி எப்படித் தீர்வு அளிக்கவேண்டும்?

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் பழங்களை விலைக்கு வாங்கிய ஒருவர் (நஷ்டமடைந்து) பாதிக்கப்பட்டார். அவருக்குக் கடன் அதிகமாகிவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவருக்குத் தர்மம் செய்யுங்கள்என்று கூறினார்கள். அவ்வாறே மக்கள் அவருக்குத் தர்மம் செய்தனர். அது அவரது கடனை அடைக்கப் போதுமான அளவுக்குத் தேறவில்லை. எனவே, அவருக்குக் கடன் கொடுத்தவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அவரிடமிருந்து) கிடைப்பதைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதைத் தவிர உங்களுக்கு வேறெதுவுமில்லைஎன்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 3170

கடனை எழுதிக் கொள்ளுதல்

ஒருவரிடம் கடன் வாங்கும் போது அவரிடத்தில் எழுதிக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். ஆனால் இன்றைக்கு ஒரு மனிதனிடம் நல்ல முறையில் பழகிவிட்டோம் என்றால் அவரிடம் கடன் வாங்கும் போது “எழுதிக் கொள்ளுவோம்’ என்று கேட்டால் அவர் என்ன சொல்லுவார்? “என் மீது உனக்கு நம்பிக்கையில்லையா? எப்படி எல்லாம் நாம் பழகியிருக்கிறோம்’ என்று கூறுவார்.

இந்த நேரத்தில் அல்லாஹ் எப்படிப் பாதுகாக்கிறான் என்பதைப் பாருங்கள். அதாவது உங்கள் மீது எனக்கு நூறு சதவீதம் நம்பிக்கை தான் என்றாலும் அல்லாஹ் எழுதச் சொன்னதற்காக இதை எழுதுகிறோம் என்றால் பேச்சு முடிந்துவிடும். அண்ணன் தம்பியிடம் கடன் வாங்கும் போது அல்லது தம்பி அண்ணனிடம் வாங்கும் போது, “எப்படி எழுத முடியும்?’ என்ற கேள்விக்கே இடமில்லாமல் போய்விடுகிறது. இதை அல்லாஹ் தன் திருமறையில் கூறிக் காட்டுகின்றான்.

நம்பிக்கை கொண்டோரே! குறிப்பிட்ட காலக்கெடு விதித்து ஒருவருக்கொருவர் கடன் கொடுத்தால் அதை எழுதிக் கொள்ளுங்கள்! எழுதுபவர் உங்களுக்கிடையே நேர்மையான முறையில் எழுதட்டும். அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தது போல் எழுதிட எழுத்தர் மறுக்காது எழுதட்டும். கடன் வாங்கியவர், எழுதுவதற்குரிய வாசகங்களைச் சொல்லட்டும்! தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அதில் எதையும் குறைத்து விடக் கூடாது. கடன் வாங்கியவர் விபரமறியாதவராகவோ, பலவீனராகவோ, எழுதுவதற்கு ஏற்பச் சொல்ல இயலாதவராகவோ இருந்தால் அவரது பொறுப்பாளர் நேர்மையாகச் சொல்லட்டும். உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்! இரு ஆண்கள் இல்லா விட்டால் சாட்சிகள் என நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும், இரண்டு பெண்களையும் (ஆக்கிக் கொள்ளுங்கள்!) அவ்விரு பெண்களில் ஒருத்தி மறந்து விட்டால் மற்றொருத்தி நினைவு படுத்துவாள். அழைக்கப்படும் போது சாட்சிகள் மறுக்கக் கூடாது. சிறிதோ, பெரிதோ தவணையைக் குறிப்பிட்டு எழுதிக் கொள்வதை அலட்சியம் செய்யாதீர்கள்! இதுவே அல்லாஹ்விடம் நேர்மையானது; சாட்சியத்தை நிரூபிக்கத் தக்கது; ஒருவருக் கொருவர் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கு ஏற்றது. உங்களுக்கிடையே உடனுக்குடன் நடைபெறும் வியாபாரமாக இருந்தால் தவிர, (கடனில்லாத) வியாபாரத்தை எழுதிக் கொள்ளாமல் இருப்பது உங்களுக்குக் குற்றமாகாது. ஒப்பந்தம் செய்யும் போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! எழுத்தருக்கோ, சாட்சிக்கோ எந்த இடையூறும் அளிக்கப்படக் கூடாது. அவ்வாறு செய்தால் அது உங்கள் மீது குற்றம். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தருவான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்.

அல்குர்ஆன் 2:282

இதை ஏன் அல்லாஹ் கட்டளை இட்டுச் சொல்கின்றான் என்றால் இன்றைக்குக்  கடன் வாங்கியவன் கடனைக் கொடுக்காமல் மறுத்து விடுவதையும், வாங்கியதை இல்லை என்று சொல்வதையும் பார்க்கிறோம்

கடனை எழுதிக் கொள்ள வேண்டும் என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.

  1. முதலில் அடிப்படையை, அதாவது கடன் வாங்கியதையே மறுத்து விடுவான்.
  2. எவ்வளவு தொகை என்பதில் பிரச்சனை ஏற்படலாம்.
  3. தவணை விஷயத்தில் பிரச்சனை எழலாம்.

கடனை எழுதும் முறை

இந்தக் காலத்தில் அரசாங்க சட்டத்துக்கு உட்பட்டு எழுத வேண்டும்.  நம்முடைய இஷ்டத்துக்கு எழுதக் கூடாது. அன்றைய காலத்தில் ஒரு துண்டில் எழுதினார்கள் என்றால் அது அந்தக் காலத்துக்குப் பொருத்தமாக இருந்தது. இப்போது எப்படி எழுதினால் அதைத் திருப்பி வாங்க முடியுமோ அப்படி எழுதிக் கொள்ள வேண்டும்.

அப்படி எழுதிக் கொள்ள முடியாத சூழ்நிலை இருக்குமானால் அடமானம் வாங்கி விட்டுக் கொடுங்கள். அப்படி இல்லாமல் அவரை நன்றாக நம்புகிறீர்கள் என்றால் கொடுத்து கொள்ள முடியும். ஆனால் தவறு நடந்தால் மார்க்கத்தின் மீது குற்றம் சுமத்த முடியாது.

நீங்கள் பயணத்தில் இருக்கும் போது எழுத்தர் கிடைக்காவிட்டால் அடைமானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பினால் நம்பப்பட்டவர் தனது நாணயத்தை நிறைவேற்றட்டும். தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்! சாட்சியத்தை மறைத்து விடாதீர்கள்! அதை மறைப்பவரின் உள்ளம் குற்றம் புரிந்தது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.

அல்குர்ஆன் 2:283

தொடரும் இன்ஷா அல்லாஹ்