விஷமத்தனமான விரிவுரை

இப்படியும் சில தஃப்ஸீர்கள்…       தொடர்-3

விஷமத்தனமான விரிவுரை

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

இஸ்லாத்தை அழிக்க எண்ணும் எதிரிகள், அதன் பிரச்சாரம் மக்களைச் சென்றடையாமலிருக்க விஷமத்தனமான பிரச்சாரங்களைக் கையிலெடுப்பார்கள்.

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கின்றது; இஸ்லாம் தீவிரவாதத்தைத் தூண்டுகிறது என்பது கயவர்கள் கையிலெடுக்கும் விஷமப் பிரச்சாரங்களில் சில!  இது போன்ற வகையில் சில விஷமத்தனமான விளக்கங்கள் இமாம்களின் பெயரில் தஃப்ஸீர் நூல்களிலும் காணக் கிடைக்கின்றது. இஸ்லாத்தின் எதிரிகள் செய்யும் பிரச்சாரத்தை விட இதுவே மிகவும் அபாயகரமானது. இது இமாம்களோடு தொடர்பாவதால் உண்மை என எளிதில் மக்கள் நம்பி விடுகின்றனர். அது போன்ற விஷமத்தனமான ஒரு தஃப்ஸீரை இங்கே காண்போம்.

நபிகளார் தன் வளர்ப்பு மகனான ஸைத் (ரலி) அவர்களுக்குத் தனது மாமி மகள் ஜைனபைத் திருமணம் முடித்து வைத்தார்கள். அவ்விருவருக்கும் ஒத்துப் போகவில்லை என்பதால் ஜைனபை ஸைத் (ரலி)  விவாகரத்து செய்து விட்டார். அதற்கு பிறகு ஜைனபை நபிகளாருக்கு இறைவனே திருமணம் செய்து வைத்ததாகப் பின்வரும் வசனத்தில் கூறுகிறான்.

யாருக்கு அல்லாஹ் அருள் புரிந்து (முஹம்மதே!) நீரும் அவருக்கு அருள் புரிந்தீரோ, அவரிடம் “உமது மனைவியை உம்மிடமே வைத்துக் கொள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்” என்று நீர் கூறியதை எண்ணிப் பார்ப்பீராக! அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை உமது மனதுக்குள் மறைத்துக் கொண்டீர். மனிதருக்கு அஞ்சினீர்! நீர் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே தகுதியானவன். ஸைத் என்பார் அவரிடம் தன் தேவையை முடித்துக் கொண்ட போது உமக்கு அவரை மண முடித்துத் தந்தோம். வளர்ப்பு மகன்கள் தம் மனைவியரிடம் தமது தேவையை முடித்துக் கொண்டால் (விவாகரத்துச் செய்தால்) அவர்களை (வளர்ப்புத் தந்தையரான) நம்பிக்கை கொண்டோர் மணந்து கொள்வது குற்றமாக ஆகக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தோம்). அல்லாஹ்வின் கட்டளை செய்து முடிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

(அல்குர்ஆன் 33: 37)

ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி)  அவர்கள் தொடர்பாக இந்த வசனம் இறங்கிய போது ஸைத் (ரலி) நபிகளாரிடம் வந்தார். அவரை தான் விவாகரத்து செய்ய விரும்புவதாக முறையிட்டு நபிகளாரிடம் அனுமதி கோரினார். அப்போது நபியவர்கள் “உமது மனைவியை உம்மிடமே வைத்துக் கொள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: திர்மிதி 3136

வளர்ப்பு மகனைச் சொந்த மகனாகக் கருதி, சொந்த மகனுக்கு என்னென்ன உரிமைகள் உண்டோ அவை யாவும் வளர்ப்பு மகனுக்கும் உண்டு என அன்றைய சமுதாய மக்கள் நம்பினர். வளர்ப்பு மகனின் மனைவி மருமகள் ஆவாள். அவளை (விவாகரத்து செய்த பின்னர்) வளர்ப்புத் தந்தையர் திருமணம் செய்யக்கூடாது என்றும் அவர்கள் நம்பினர்.

இந்தத் தவறான நம்பிக்கையை உடைத்து, வளர்ப்பு மகனின் மனைவியைத் திருமணம் செய்வது மருமகளைத் திருமணம் செய்வதைப் போல் ஆகாது என்ற சட்டத்தை உலகிற்குச் சொல்ல வேண்டும் என்பதற்காக இத்திருமணத்தை இறைவன் செய்து வைத்துள்ளான். வளர்ப்பு மகனின் மனைவியை வளர்ப்புத் தந்தையர் திருமணம் செய்வது மக்களால் குற்றச் செயலாகப் பார்க்கப்படக் கூடாது என்பதற்காக தன் தூதருக்கே இப்படியொரு திருமணத்தை இறைவன் நடத்தி வைத்ததாக மேற்கண்ட வசனத்தில் இறைவன் குறிப்பிடுகிறான்.

உண்மை இவ்வாறிருக்க ஸைத் தனது மனைவியை விவாகரத்து செய்ததற்கும், பிறகு அவரை நபிகளார் திருமணம் செய்ததற்கும் ஒரு கட்டுக் கதையை தஃப்ஸீர் என்ற பெயரில் அவிழ்த்து விட்டிருக்கின்றனர். அந்த கட்டுக் கதையைப் படிக்கும் யாரும் இது இஸ்லாத்தை அழிக்க நினைக்கும் எதிரிகளால் புனையப்பட்டுள்ளது என்பதை எளிதாக உணர்வார்.

நபிகளார் தனது மாமி மகளான ஜைனபை ஸைத் பின் ஹாரிஸாவிற்குத் திருமணம் முடித்து வைத்தார்கள். ஒரு நாள் ஸைதை (சந்திக்க) விரும்பி நபியவர்கள் அவரின் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்கள். வாசலில் மெல்லிய திரை இருந்தது. காற்று அத்திரையை விலக்கியதால் அது விலகியது. அப்போது ஜைனப் (ரலி) அரைகுறை ஆடையுடன் அவரது அறையில் இருந்தார். அவரின் ஈர்ப்பு நபிளாரின் உள்ளத்தில் உண்டானது. இது நடந்த போது மற்றவருக்கு (ஸைதுக்கு மனைவியை பற்றி) வெறுப்பு உண்டானது. உடனே அவர், “அல்லாஹ்வின் தூதரே!  நான் எனது மனைவியை விட்டும் பிரிந்து செல்ல விரும்புகிறேன்” என்றார். அப்போது நபியவர்கள், “ஏன்? அவளுடைய நடத்தை உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறதா?” என்று கேட்டார்கள். அதற்கு ஸைத், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவளுடைய நடத்தையில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அவர் விஷயத்தில் நல்லதையே கருதுகிறேன்” என்று பதிலளித்தார். அப்போது நபியவர்கள் “உமது மனைவியை உம்மிடமே வைத்துக் கொள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்” என்று கூறினார்கள். இதுவே இவ்வசனத்தின் விளக்கமாகும்.

நூல்: தஃப்ஸீருல் பகவி, பாகம்: 6,  பக்கம்: 354

ஒரு நாள் ஒரு தேவைக்காக நபியவர்கள் ஸைதிடம் வந்தார்கள். அப்போது உருக்குச் சட்டை, முக்காடு ஆகியவைகளை அணிந்து, நின்ற நிலையில் ஜைனப் (நபியவர்களுக்கு) காட்சியளித்தார். அவர்கள் குறைஷிப் பெண்களிலேயே நற்குணமுள்ள, அழகான, வெண்மை நிறப்  பெண்ணாக இருந்தார். எனவே நபியவர்களின் உள்ளத்தில் (தவறான எண்ணம்) ஏற்பட்டது. அவரது அழகு நபியவர்களைக் கவர்ந்தது. “அல்லாஹ் தூயவன். உள்ளங்களைப் புரட்டுபவனே” என்று கூறி திரும்பிச் சென்றார்கள். ஸைத் வந்த போது ஜைனப் இதனை அவரிடம் கூறினார். பிறகு ஸைத் குழம்பி விட்டார். அந்நேரத்தில் அவரது உள்ளத்தில் அவரை (ஜைனப்) பற்றி வெறுப்பு ஏற்பட்டு விட்டது.

நூல்: தஃப்ஸீருல் பய்லாவீ, பாகம்: 5, பக்கம்: 14

இஸ்லாத்தின் வெகு வேகமான வளர்ச்சியைக் கண்டு மனம் குமுறும் இஸ்லாத்தின் எதிரிகள் நபிகளாரின் கண்ணியத்தைச் சீர் குலைத்து, இஸ்லாம் பரவுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு அவதூறை அள்ளி வீசியிருக்கின்றனர் என்பதை சாதாரண அறிவுள்ள யாரும் உணரலாம்.

நபியவர்கள் இன்னொருவர் மனைவியின் அழகில் மதிமயங்கி, அவர் மீது ஆசை கொண்டார்கள். இதனால் ஸைத் தனது மனைவியை வெறுத்து, விவாகரத்துச் செய்ய விரும்பினார் என்ற அபத்தமான கருத்தை எந்த வித மறுப்பும் இல்லாமல், பல தஃப்ஸீர் நூல்களில் பதிவு செய்திருக்கிறார்கள்.

“நீர் மகத்தான நற்குணத்தில் இருக்கிறீர்’ என்று இறைவன் யாருடைய நற்குணத்திற்கு உத்தரவாதம் அளித்தானோ அத்தகைய குணசீலரை இழிவு படுத்தும் விதத்தில் இவ்விளக்கம் அமையவில்லையா?

அடுத்தவர் மனைவியை ஆசை கொண்டு அபகரிக்கும் காமுகராக நபியவர்களைச் சித்தரிக்கும் இந்த விளக்கம் இஸ்ரவேலர்களின் கட்டுக் கதையே என்பதில் யாருக்கும் துளியும் சந்தேகமிருக்காது. அப்படியிருக்கையில் எந்தக் கண்டனத்தையும் பதிவு செய்யாமல் இந்த விளக்கங்களைத் தங்களுடைய நூல்களில் பதிவு செய்திருப்பதை என்னவென்பது?

நபியவர்களை இழிவுபடுத்தும் இந்த விளக்கத்தை ஒரு முஸ்லிம் கேட்கின்ற பொழுதினில் இது பொய்! அவதூறு! என நிச்சயம் பொங்கி எழுவான். ஏனெனில் நபியவர்கள் முஸ்லிம்களுக்குத் தங்களின் உயிரை விடவும் மேலானவர்கள்.

இதைப் பதிவு செய்த இமாம்களுக்கு இது ஏன் தெரியவில்லை என்று இதைப் படிக்கும் ஒவ்வொரு உண்மையான முஸ்லிமின் உள்ளத்திலும் கேள்வியெழும்.

ஒரு சிலர் தாங்கள் பெரிதும் மதிக்கின்ற இமாம்கள் பதிவு செய்து விட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இது உண்மை தான் என்று மனமுரண்டாகக் கூறுகிறார்கள் எனில் இவர்களுடைய உள்ளத்தில் நபிகளாரின் நேசம் கொஞ்சமேனும் உண்டா என்பது கேள்விக்குறியே!

இவர்களைப் பொறுத்த வரை நபிகளாரின் மானத்தை யார் பறித்தாலும் இவர்களுக்குத் துளியும் கவலையில்லை. காரணம் இவர்கள் வருடா வருடம் தவறாமல் நபிகளாருக்குப் பிறந்த நாள் விழா (மீலாது விழா) கொண்டாடுகின்றனர். அவர்களின் பெயரால் மவ்லித் ஓதி, வயிறு நிரம்ப, மணக்க மணக்க நெய்ச்சோறு சாப்பிடுகின்றனர். இது போதாதா? நபிகளாரை நேசிக்கிறோம் என்பதை வெளிப்படுத்த என்று நினைத்து விட்டனர் போலும்?

நபிகளாரின் கண்ணியத்தைக் களங்கப்படுத்துவதை எந்த முஸ்லிமும் ஏற்றுக் கொள்ள மாட்டான். அந்த வகையில் அமைந்துள்ள இந்த தஃப்ஸீர் (?) கட்டுக் கதையே என்பதில் துளியும் சந்தேகமில்லை.

அந்தோ பரிதாபம்! அத்திப்பழமும் ஆலிவ் மரமும்!

என்ன தான் இருந்தாலும் அத்திப் பழத்துக்கும், ஆலிவ் மரத்திற்கும் இப்படியொரு நிலை ஏற்பட்டிருக்கக் கூடாது. இதற்கு இமாம்கள் அளித்துள்ள விளக்கங்களையே இவ்வாறு கூறுகிறோம். இறைவன் அத்திப்பபழம், ஆலிவ் மரம் ஆகியவற்றின் மீது சத்தியம் செய்து மனிதனை நாம் அழகிய வடிவில் படைத்தோம் என்றும், பின் பல விஷயங்களையும் கூறுகிறான்.

அத்தியின் மீதும் ஒலிவ மரத்தின் மீதும் சத்தியமாக! தூர் ஸீனீன் மலையின் மீதும் சத்தியமாக! அபயமளிக்கும் இவ்வூர் மீதும் சத்தியமாக! மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.

அல்குர்ஆன் 95:1 ,2,3,4

இந்த வசனத்திற்கு விளக்கமளிக்க முற்பட்ட இமாம்கள் பின்வருமாறு விளக்கமளித்துள்ளனர்.

அத்தி என்பது திமிஷ்க் நகரில் உள்ள பள்ளிவாசலாகும். ஒலிவ மரம் என்பது பைத்துல் முகத்தஸ் ஆலயத்தை குறிக்கும். தூர் ஸீனீன் என்பது மூஸா அலை (நின்ற) மலை என்பதாகும் என்று அபூ அப்துல்லாஹ் ஃபாரீஸி கூறுகிறார்.

முஹம்மத் பின் கஃப் என்பார் கூறுகிறார்: அத்தி என்பது குகைத் தோழர்கள் தங்கிய பள்ளிவாசல். ஒலிவ மரம் என்பது ஈலியா நகரின் மஸ்ஜித். தூருஸீனீன் என்பது தூர் பள்ளிவாசலாகும்.

அத்தி மற்றும் ஜைத்தூன் என்பது ஷாம் (சிரியா) நகரில் உள்ள இரு பள்ளிவாசல்களை குறிக்கும்.

நூல்: இமாம் சுயூதி அவர்களின் அத்துர்ருல் மன்சூர்

பாகம்: 15,  பக்கம்: 509

தூர்ஸீனீன் என்பது (நபிகளாரின் பேரர்) ஹஸன் (ரலி) அவர்கள் ஆவார்.

நூல்: இமாம் சுயூதி அவர்களின் அத்துர்ருல் மன்சூர்

பாகம்: 15,  பக்கம்: 511

அத்தி என்றால் அத்திப்பழம், ஜைத்தூன் மரம் என்பது ஆலிவ் மரம் என்று நம் அனைவருக்கும் நன்றாகவே புரிகிறது. இப்படியிருக்க இந்த இரண்டுக்கும் தொடர்பே இல்லாதவைகளை விளக்கம் என்ற பெயரில் கூறுவதேன்?

பழத்திற்கும் பள்ளிவாசலுக்கும் தொடர்பு உண்டா? மரத்திற்கும் மஸ்ஜிதிற்கும் என்ன சம்பந்தம் என்று படிப்போரைக் குழப்பத்தில் ஆழ்த்தும் வண்ணம் இந்த விளக்கங்கள் அமைந்துள்ளன.

இப்போது சொல்லுங்கள்! அத்திப்பழத்திற்கும் ஆலிவ் மரத்திற்கும் இப்படியொரு நிலை ஏற்பட்டிருக்கக் கூடாது தானே!

நபிகளாருடன் இருந்தோர்?

முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏக இறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர். ருகூவு, ஸஜ்தா செய்தோராக அவர்களைக் காண்பீர்! அல்லாஹ்விடமிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடுவார்கள். அவர்களின் அடையாளம் ஸஜ்தாவின் தழும்பாக அவர்களின் முகத்தில் இருக்கும். இதுவே தவ்ராத்தில் அவர்களது உதாரணம்.

அல்குர்ஆன் 48:29

நபிகள் நாயகம் இறைத்தூதர் என்றும் அவர்களுடன் உள்ள ஸஹாபாக்களின் உயர்ந்த பண்புகளைப் பற்றியும் இந்த வசனம் பேசுகின்றது. நபித்தோழர்கள் தங்களிடையில் அன்போடும், தங்களை அழிக்க எண்ணும் எதிரிகளிடம் விரோதத்துடனும் நடந்து கொள்கின்றனர் என்று இறைவன் இந்த வசனத்தில் கூறுகின்றான்.

மேலே சொல்லப்பட்ட பண்புகள் யாவும் அனைத்து ஸஹாபாக்களையும் குறிக்கும். ஏனெனில் அவர்கள் அனைவரும் அவ்வாறே இருந்தனர். ஆனால் இதற்கு இமாம்கள் அளிக்கும் விளக்கம்…

நீங்களே படித்துவிட்டு எவ்வாறு இருக்கிறது என்பதைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

அவருடன் இருந்தோர் என்பது அபூபக்கர் (ரலி)யை குறிக்கும். (ஏக இறைவனை) மறுப்போர் மீது கடுமையாக.. என்பது உமர் (ரலி) ஆகும். தமக்கிடையில் மிகுந்த அன்புடன் இருக்கின்ற என்பது உஸ்மான் (ரலி) ஆவார். ருகூவு, ஸஜ்தா செய்தோராக என்பது அலீ (ரலி) ஆவார். அல்லாஹ்விடமிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடுவார்கள் என்பது ஜுபைர் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆகியோரைக் குறிக்கும் என்று அவர்களில் சிலர் கூறுகின்றனர்.

நூல்: ஸமர்கன்தியின் பஹ்ருல் உலூம், பாகம்: 4,  பக்கம்: 173

மேற்கண்ட வசனத்தில் உள்ள ஒவ்வொரு பண்பையும் தனியாகக் குறிப்பிட்டு அதற்கென்று ஒவ்வொரு ஸஹாபாக்களின் பெயரையும் இமாம்கள் கூறியுள்ளனர்.

இறைவன் பொதுவாகக் கூறியிருக்கும் போது இன்னின்ன பண்புகள் இன்னின்ன நபித்தோழர்களைக் குறிக்கும் என்று எவ்வாறு கூற முடியும்? நபிகள் நாயகம் இவ்வாறு கூறியிருக்கிறார்களா?

அர்த்தமுள்ள இறை வார்த்தையில் அர்த்தமற்ற முறையில் விளக்கமளித்து விளையாடியுள்ளனர் என்பது இவற்றிலிருந்து தெளிவாகிறது. இவைகளை இனம் கண்டு தவிர்ப்போமாக!

வளரும் இன்ஷா அல்லாஹ்