“வன்ஹர்’ என்பதன் பொருள்

இப்படியும் சில தஃப்ஸீர்கள்      தொடர்: 6

வன்ஹர்என்பதன் பொருள்

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

ஒரு அரபு சொல்லுக்குப் பொருள் செய்வதாக இருந்தால் அரபு அகராதியின் படி பொருள் செய்ய வேண்டும். குறிப்பாக, குர்ஆனில் உள்ள ஒரு வார்த்தைக்குப் பொருள் செய்யும் போது இதே வார்த்தை குர்ஆனின் ஏனைய இடங்களில் எந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது? ஹதீஸ்களில் எப்பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது? என்பதைக் கவனித்து பொருள் செய்ய வேண்டும்.

இந்த அணுகுமுறை இறைவனுடைய வார்த்தையை சரியான முறையில் புரிய, அவ்வார்த்தைக்குப் பிழையில்லாத பொருள் செய்ய ஏதுவாக இருக்கும். இந்த வழிமுறையை மீறும் பட்சத்தில் மொழியாக்கம் என்ற பெயரில் சம்பந்தமே இல்லாத பொருளை உதிர்ப்பதைத் தவிர வேறு வழியிருக்காது. இந்த வகையிலமைந்த ஒரு விளக்கத்தை இங்கே காண்போம்.

எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!

அல்குர்ஆன் 108:2

எந்த ஒரு வணக்க வழிபாட்டையும் “இறைவனுக்காக’ என்ற தூய எண்ணத்துடன் செய்திட வேண்டும் என்ற அடிப்படையில், “இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவீராக ‘என இவ்வசனத்தில் இறைவன் நபிகளாருக்குக் கட்டளையிடுகின்றான்.

“அறுப்பீராக’ என்று நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் வன்ஹர் என்ற அரபுச் சொல் இடம்பெற்றுள்ளது. இது நஹ்ர் என்ற மூலச் சொல்லிலிருந்து பிறந்தது. இவ்வார்த்தைக்கு அறுத்தல் என்பது பொருளாகும்.

இந்த வார்த்தை இதே பொருளில் ஹதீஸ்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.  அறுத்துப் பலியிடுவதற்கான நாள் என்ற பொருளில் யவ்முன் நஹ்ர் என்ற சொல் ஹதீஸ்களில் ஏராளமான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. (பார்க்க புகாரி 67, 369, 968)

வன்ஹர் என்பதற்கு அனைத்து தர்ஜுமாக்களிலும் அரபு அகராதியின் படி “அறுப்பீராக’ என்றே மொழிபெயர்த்துள்ளனர்.

ஆனால் இதற்கு இமாம்கள் அளிக்கும் விளக்கம் வித்தியாசமாக இருக்கின்றது.

நூல்: அத்துர்ருல் மன்சூர்

பாகம் 15 பக்கம் 704

நீர் அறுக்கும் போது கிப்லாவை முன்னோக்குவீராக என்று பொருள் என அபுல் அஹ்வஸ் கூறுகிறார்.

நூல்; அத்துர்ருல் மன்சூர்

பாகம் 15 பக்கம் 703

அதாஃ கூறுகிறார்: நீர் தொழும் போது ருகூவிலிருந்து தலையை உயர்த்தி சீராக நிற்பீராக என்று பொருளாகும்.

தொழுகையின் ஆரம்பத்தில் தக்பீர் கூறும் போது கைகளை உயர்த்துவீராக என்று பொருளாகும் என அபூ ஜஃபர் கூறுகிறார்.

நூல்: அத்துர்ருல் மன்சூர்

பாகம் 15 பக்கம் 702

வன்ஹர் என்ற வார்த்தைக்குப் பொருள் ஒருவர் கிப்லாவை முன்னோக்குதல் என்கிறார். மற்றொருவர் சீராக நிற்குதல் என்கிறார். மிகவும் எளிதான அனைவருக்கும் நன்கு தெரிகின்ற ஒரு வார்த்தைக்கு இந்த இமாம்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப விளக்கமளித்து குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். இந்த வார்த்தைக்கு அரபு அகராதியிலும், ஏனைய ஹதீஸ்களிலும் பொருளைப் பார்த்திருந்தால் இத்தகைய விளக்கத்தை இமாம்கள் அளித்திருக்க மாட்டார்கள்.

குர்ஆன் வசனங்களை சரியாகப் புரிந்து கொள்ள இமாம்கள் கூறும் விளக்கங்கள் தான் முட்டுக்கட்டையாக இருக்கின்றன என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

நடுத் தொழுகை

தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள்!

அல்குர்ஆன் 2:238

இந்த வசனத்தில் அனைத்து தொழுகையையும், குறிப்பாக நடுத்தொழுகையையும் பேணுமாறு கூறப்படுகிறது. நடுத் தொழுகை எது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

அலீ பின் அபீதா-ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின் போது நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள், “எதிரிகளுடைய புதை குழிகளையும் அவர்களுடைய வீடுகளையும் அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக! அவர்கள், சூரியன் மறையும் வரை நடுத் தொழுகையிலிருந்து நமது கவனத்தைத் திருப்பிவிட்டார்கள்” என்று கூறினார்கள். அஸ்ர் தொழுகையே நடுத் தொழுகையாகும்.

நூல்: புகாரி 6396

அஸ்ர் தொழுகையே நடுத்தொழுகை என்று நபிகள் நாயகம் (ஸல்) விளக்கமளித்துள்ளார்கள். இனி இதில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு கடுகின் முனையளவும் இடமில்லை என்பது தெளிவு.

இருப்பினும் நடுத்தொழுகை எதுவென்பதில் அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளதாக விரிவுரை நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் உச்சமாக, நடுத்தொழுகை எது என்பதில் அறிஞர்களின் கருத்துகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து, கஷ்ஃபுல் கிதா அன் ஸலாதில் உஸ்தா (நடுத்தொழுகை தொடர்பாக சந்தேகத்தை அகற்றுதல்) என்றொரு நூலே தொகுப்பட்டுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

நபிகள் நாயகம் (ஸல்) தெளிவாக விளக்கிவிட்ட பின்னரும் கருத்து வேறுபாடு கொள்ள என்ன அவசியம்?

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்ளதூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.

அல்குர்ஆன் 4:59

இவ்வசனத்தின் படி முஸ்லிம்களுக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்படும் போது குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டை நோக்கிச் சென்று அதற்கான தீர்வைக் காண வேண்டும். இதுவே இறைவன் நமக்குக் காட்டித் தரும் நல்வழி. கருத்து வேறுபாடுகளைக் களைய நல்லதொரு தீர்வு.

இறைவன் காட்டித் தந்த இந்த வழியை அறிஞர்கள் கடைப்பிடித்தார்களா? தங்கள் கருத்து வேறுபாடுகளைக் களைய நபிவழியின் துணையை நாடியிருந்தால் நடுத்தொழுகை எது என்பதில் பல்வேறு கருத்துக்கள் தோன்றியிருக்காது, முளைத்திருக்காது.

நபிவழியின் பக்கம் தலை சாய்க்காததால் நடுத்தொழுகை தொடர்பாக நபிகளாரின் விளக்கத்தை ஓரங்கட்டிவிட்டு ஒவ்வொருவரும் தங்களது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஏறத்தாழ நடுத்தொழுகை தொடர்பாக 20க்கும் மேற்பட்ட கருத்துக்களை விரிவுரை நூல்களில் காணமுடிகின்றது. அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.

நடுத்தொழுகை என்பது மக்ரிப் தொழுகையாகும் என இப்னு அப்பாஸ் கூறுகிறார். இக்கருத்தையே கபீஸா என்பவரும் கூறுகிறார்.

நாஃபிஃ கூறுகிறார்:

இப்னு உமர் (ரலி) அவர்களிடம் நடுத்தொழுகை பற்றி கேட்கப்பட்டது. அதற்கு இப்னு உமர் அது அனைத்து தொழுகைகளும் தான். அவைகளை பேணுங்கள் என்று பதிலளித்தார். முஆத் பின் ஜபல் அவர்களும் இதையே கூறுகிறார்.

ஆறாவது கருத்து, அது ஜூம்ஆ தொழுகையாகும். இக்கருத்தை மாலிக் மத்ஹபைச் சார்ந்த இப்னு ஹபீப் கூறுகிறார்.

ஏழாவது கருத்து நடுத்தொழுகை என்பது மற்ற நாட்களில் லுஹர் தொழுகையாகும். ஜூம்ஆ நாளில் ஜூம்ஆ தொழுகையாகும்.

எட்டாவது கருத்து அது இஷா தொழுகையாகும். இதை இப்னு தீன், மற்றும் குர்துபீ ஆகியோர் கூறுகின்றனர்.

நாங்கள் ஜைத் பின் ஸாபித் அவர்களுடன் இருந்தோம். உஸாமாவிடம் ஆளனுப்பி நடுத்தொழுகையைப் பற்றி கேட்டார்கள். அதற்கு உஸாமா அது லுஹர் தொழுகையாகும் என பதிலளித்தார்.

பத்தொன்பதாவது கருத்து அது சுப்ஹ், இஷா தொழுகைகளாகும். ஏனெனில் இவ்விரண்டு தொழுகைகளும் நயவஞ்சர்களுக்கு மிகவும் பாரமானது என்று ஆதாரப்பூர்வமான செய்தி இருக்கிறது. மாலிக் மத்ஹபை சார்ந்த அப்ஹரிய்யு என்ற அறிஞர் இதை கூறுகிறார்.

நூல்: அர்ரிவாயாதுத் தஃப்ஸீரிய்யா

பாகம் 1, பக்கம் 240

இது போக நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள், அச்ச நிலை தொழுகை, லுஹா நேரத் தொழுகை, இரவுத் தொழுகை, வித்ர் தொழுகை என என்னென்ன தொழுகைகள் இருக்கின்றதோ அத்தனையையும் குறிப்பிட்டு (மழைத் தொழுகையை மட்டும் தான் விட்டிருக்கிறார்கள். அது கூட ஏன் என்று தெரியவில்லை. இன்னும் சில விரிவுரைகளைப் பார்வையிட்டால் இதனையும் குறிப்பிட்டிருக்கலாம்) இவை தான் நடுத்தொழுகை (?) என்று அறிஞர்கள் விளக்கமளிக்கின்றனர்.

அஸ்ர் தொழுகையே நடுத்தொழுகை என்று ஒற்றை வரியில் முடிக்க வேண்டிய விஷயத்திற்கு ஒரு தனிப் புத்தகமே எழுதியிருக்கிறார்கள் எனில் இது சரியா? மார்க்க அறிஞர்களுக்கு அழகா? என்பதை நியாய உணர்வுடன் சிந்தித்துப் பாருங்கள்.

முரண்பாடு கொள்ளத் தேவையே இல்லை எனும் போது ஏன் ஒரு புத்தகம் வெளியிடும் அளவிற்கு இவ்வளவு கருத்துக்கள்?

நபிகளாரின் விளக்கத்தை விட யாருடைய கருத்தையும் முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ளக்கூடாது; கவனத்தில் கொள்ளத் தேவையில்லை என்பதற்குத் தான் இவை ஆதாரங்களாக அமைந்துள்ளன.

(வளரும் இன்ஷா அல்லாஹ்)