மறுமையின் சாட்சிகள்

மறுமையின் சாட்சிகள்

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்

இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒருநாள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டுவிடும். அதன்பிறகு அனைத்து மனிதர்களும் எழுப்பப்பட்டு விசாரணையை எதிர்நோக்கியவர்களாக அல்லாஹ்வின் முன்னால் நின்று கொண்டிருப்பார்கள். பூமியில் வாழும்போது செய்த அனைத்துக் காரியங்கள் குறித்தும் மனிதர்களிடம் கேள்வி கேட்கப்படும்.

அந்த நாளில் அனைத்து அதிகாரமும் ஆதிக்கமும் அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கும். அப்போது நினைத்ததை எல்லாம் அவனால் செய்ய முடியும். இருப்பினும், அவன் தமது மனம்போன போக்கில் விசாரித்து கூலி வழங்கமாட்டான். அவன் நீதமானவன். அவன் நமது செயல்களுக்கும் சில விதிமுறைகளை வழிமுறைகளை வைத்திருக்கிறான். அந்த வகையில், அவனது அனைத்து விசாரணைகளும் அதற்குரிய கூலிகளும் ஆதாரங்கள், சாட்சிகள் அடிப்படையில் தான் அமைந்திருக்கும். எவரும் எந்தவொரு செயலையும் எந்த வகையிலும் மறைக்கவும் முடியாது; மறுக்கவும் முடியாது.

நன்மையான காரியங்களைச் செய்திருக்கும் நம்பிக்கையாளர்கள் தங்களுக்குரிய பரிசுகளை, வெகுமதிகளைப் பெற்றுக் கொள்வார்கள். தீமையான காரியங்களைச் செய்திருக்கும் குற்றவாளிகள் தங்களுக்குரிய தண்டனைகளை, வேதனைகளைப் பெற்றுக்கொள்வார்கள். சின்னஞ்சிறிய அற்பமான செயல்களாக இருந்தாலும், மிகப்பெரிய மகத்தான காரியங்களாக இருந்தாலும் அனைத்துக்கும் அந்நாளில் அடுக்கடுக்கான ஆதாரங்கள் இருக்கும். பல்வேறு விதமான சான்றுகள் இருக்கும்.

இவ்வாறு, நல்லவர்களுக்கு ஆதரவாகவும் கெட்டவர்களுக்கு எதிராகவும் சாட்சிகள் நிறைந்திருப்பது என்பது மறுமை நிகழ்வுகளில் முக்கியமான ஒன்றாகும். இதைப் பின்வரும் வசனங்களின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

சாட்சி கூறுவோர் மீதும் சாட்சி கூறப்படுவோர் மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன் 85:3)

ஸூர் ஊதப்படும். இதுவே எச்சரிக்கப்பட்ட நாள். ஒவ்வொருவரும், இழுத்துச் செல்பவருடனும் சாட்சியுடனும் வருவர். (அக்ல்குர்ஆன் 50:20,21)

ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியை நாம் எழுப்பும் நாளில்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு (பேச) அனுமதிக்கப்படாது. அவர்கள் (வணக்க வழிபாடுகள் செய்யுமாறு) வற்புறுத்தப்படமாட்டார்கள்.    (அல்குர்ஆன் 16:84)

நமது தூதர்களுக்கும் நம்பிக்கை கொண்டோருக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும் சாட்சிகள் முன் வரும் நாளிலும் நாம் உதவுவோம்.  (அல்குர்ஆன் 40:51)

ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியைப் பிரித்தெடுப்போம். “உங்கள் சான்றுகளைக் கொண்டு வாருங்கள்!என்று கூறுவோம். உண்மை அல்லாஹ்விற்கே உரியது என்பதை அப்போது அறிந்து கொள்வார்கள். அவர்கள் இட்டுக்கட்டியவை அவர்களை விட்டு மறைந்து விடும்.  (அல்குர்ஆன் 28:75)

பூமி தனது இறைவனின் ஒளியால் பிரகாசிக்கும். (பதிவுப்) புத்தகம் (முன்) வைக்கப்படும். நபிமார்கள் மற்றும் சாட்சிகள் கொண்டு வரப்படுவார்கள். அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பு வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 39:69)

எந்தவொரு நல்லறமும் செய்யாதவருக்கு சொர்க்கம் தரப்படுகிறது என்று அதிருப்தியில்  எவரும் எதிர்த்துப் பேசுவதற்கோ வாதம் செய்வதற்கோ வாய்ப்பே இருக்காது. எந்தவொரு தீமையும் செய்யாதவருக்கு நரகம் கொடுக்கப்படுகிறது என்று பொய் சொல்லி உண்மையை மறைக்கவோ மறுக்கவோ முடியாது. காரணம், நன்மைகள் தீமைகள் அனைத்துக்கும் மிகத் துல்லியமான சாட்சிகள் இருக்கும். இந்த உலகில் வாழும்போது, நமக்குத் தெரியும் வகையிலும் தெரியாத வகையிலும் பல சாட்சிகள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. இந்த வகையில், மறுமையில் எவ்வாறெல்லாம் சாட்சிகள் சூழ்ந்திருக்கும் என்பதை மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் அறிந்து கொள்வோம்.

அல்லாஹ்வே முதல் சாட்சியாளன்

நம்மைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ், வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்தையும் அறிந்தவன். உறக்கம், ஓய்வு போன்ற பலவீனம் இல்லாமல் இரவு பகல் முழுவதும் நம்மை கண்காணித்துக் கொண்டிருப்பவன். மனிதர்கள் அனைவரையும் பற்றி முழுமையாக துல்லியமாக அறிந்தவன். இத்தகைய இறைவன் மறுமை நாளில் நமது செயல்களுக்கு முதல் சாட்சியாக இருப்பான்.

நாம் நல்லது செய்தோமா? கெட்டது செய்தோமா? என்று பகிரங்கப்படுத்துவதற்கு அவனே போதுமானவன். இதை நாம்  நமது மனதில் முதலில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதை குர்ஆனிலும் பல இடங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். இந்தச் செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நமக்கு தெளிவாக எடுத்துரைத்து இருக்கிறார்கள். அந்த ஆதாரங்களில் சிலவற்றை இப்போது காண்போம்.

இவர் இதை இட்டுக்கட்டிவிட்டார்என்று கூறுகிறார்களா? “நான் இட்டுக்கட்டியிருந்தால் அல்லாஹ்விடமிருந்து சிறிதளவும் நீங்கள் என்னைக் காப்பாற்ற முடியாது. நீங்கள் எதில் மூழ்கியுள்ளீர்களோ அதை அவனே நன்கு அறிவான். எனக்கும் உங்களுக்குமிடையே அவனே சாட்சியாகப் போதுமானவன். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்என்று (முஹம்மதே!) கூறுவீராக!  (அல்குர்ஆன் 46:8)

முஹம்மதே!) “நீர் (இறைவனின்) தூதர் அல்லர்என்று, மறுப்போர் கூறுகின்றனர். “எனக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான். வேதத்தின் அறிவு உள்ளோரும் போதுமானவர்கள்என்று கூறுவீராக!  (அல்குர்ஆன் 13:43)

(முஹம்மதே!) நாம் அவர்களுக்கு எச்சரித்ததில் சிலவற்றை உமக்குக் காட்டினாலோ, உம்மை நாம் கைப்பற்றிக் கொண்டாலோ நம்மிடமே அவர்களின் மீளுதல் உள்ளது. பின்னர் அவர்கள் செய்வதற்கு அல்லாஹ் சாட்சியாளனாக இருக்கிறான்.  (அல்குர்ஆன் 10:46)

அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டும் நாளில் இணை கற்பித்தோரை நோக்கி “நீங்களும், உங்கள் தெய்வங்களும் உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்!என்று கூறுவோம். அப்போது அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவோம். “நீங்கள் எங்களை வணங்கவே இல்லைஎன்று அவர்களின் தெய்வங்கள் கூறுவார்கள். “எங்களுக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான். நீங்கள் (எங்களை) வணங்கியதை அறியாதிருந்தோம்என்றும் கூறுவார்கள்.  (அல்குர்ஆன் 10:28, 29)

உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பிறகு உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் “தூதர்உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?” என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்து “இதை ஒப்புக் கொண்டீர்களா? எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டீர்களா?” என்று கேட்ட போது, “ஒப்புக் கொண்டோம்என்று அவர்கள் கூறினர். “நீங்களே இதற்குச் சாட்சியாக இருங்கள்! உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கிறேன்என்று அவன் கூறினான்.  (அல்குர்ஆன் 3:81)

நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாளில் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, “இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” எனக் கேட்டார்கள். நாங்கள் “அல்லாஹ்வையும் அவனது தூதருமே நன்கறிவர்!என்றோம். அந்நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு, “இது (குர்பானி கொடுப்பதற்குரிய) நஹ்ருடைய நாளல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம்!என்றோம். பிறகு “இது எந்த மாதம்?” என அவர்கள் கேட்டதும் நாங்கள் “அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்!என்றோம். அப்போதும் அம்மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தார்கள். பிறகு, “இது துல்ஹஜ் மாதம் அல்லவா?” என அவர்கள் கேட்க, நாங்கள் “ஆம்!என்றோம். பிறகு “இது எந்த நகரம்?” எனக் கேட்டார்கள். அதற்கு நாங்கள் “அல்லாஹ்வும் அவது தூதருமே நன்கறிவர்!என்றோம். அப்போதும் அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தார்கள். பிறகு “இது புனிதமிக்க நகரமல்லவா?” எனக் கேட்க, நாங்கள் “ஆம்!என்றோம்.

பிறகு “உங்களுடைய (புனிதமிக்க) இந்த நகரத்தில் உங்களுடைய (புனிதமிக்க) இந்த மாதத்தில் இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் இரட்சகனைச் சந்திக்கும் நாள் (மறுமை)வரை புனிதமானவையாகும்!என்று கூறிவிட்டு, “நான் உங்களிடம் (இறைச்செய்திகள் அனைத்தையும்) சேர்ப்பித்துவிட்டேனா?” எனக் கேட்டார்கள். மக்கள் “ஆம்!என்றனர். பிறகு அவர்கள், “இறைவா! இதற்கு நீயே சாட்சியாயிரு! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள்! ஏனெனில், செவியேற்பவரைவிட அறிவிக்கப்படுபவர் (இந்த இறைச் செய்தியை) நன்கு புரிந்து கொள்பவராயிருக்கலாம்; எனக்குப் பின்னால் நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு நிராகரிப்பவர்களாவிட வேண்டாம்!எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி), ஆதாரம்: புஹாரி (1741, 4403)

சாட்சியாகும் மலக்குகளும் பதிவேடுகளும்

நம்மைக் கண்காணிப்பது நமது காரியங்களைப் பதிவு செய்வது போன்ற பல்வேறு பணிகளைச் செய்வதற்கு மலக்குகளை அல்லாஹ் படைத்திருக்கிறான். குறிப்பாக, ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது செயல்களைப் பதிவு செய்வதற்கென்று மலக்குகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவ்வாறு, நமக்காக நியமிக்கப்பட்டுள்ள அந்த மலக்குகள் அனைத்துத் தருணங்களிலும் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நமது செயல்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். நமது செயல்களுக்குரிய ஏடுகளும் அவற்றை எழுதிய மலக்குகளும் மறுமை நாளில் நமது காரியங்களுக்கு முக்கியமான சாட்சிகளாக இருப்பார்கள். இந்த விளக்கத்தை பின்வரும் வரிகளின் வாயிலாக விளங்கலாம்.

உங்கள் மீது மரியாதைக்குரிய எழுத்தர்களான கண்காணிப்பாளர்கள் உள்ளனர். நீங்கள் செய்வதை அவர்கள் அறிவார்கள். (அல்குர்ஆன் 82:10,11,12)

மனிதர்களுக்கு துன்பம் ஏற்பட்ட பின் அருளை நாம் அவர்களுக்கு அனுபவிக்கச் செய்தால் நமது சான்றுகளில் அவர்கள் சூழ்ச்சி செய்கின்றனர். “அல்லாஹ் விரைந்து சூழ்ச்சி செய்பவன்என (முஹம்மதே!) கூறுவீராக! நமது தூதர்கள் நீங்கள் செய்யும் சூழ்ச்சியைப் பதிவு செய்கின்றனர். (அல்குர்ஆன் 10:21)

மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை. (அல்குர்ஆன் 50:16-18)

அவர்களது இரகசியத்தையும், அதை விட ரகசியத்தையும் நாம் செவியுறவில்லை என்று அவர்கள் நினைக்கிறார்களா? அவ்வாறில்லை! அவர்களிடம் உள்ள நமது தூதர்கள் பதிவு செய்கின்றனர்.        (அல்குர்ஆன் 43:80)

வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.  (அல்குர்ஆன் 50:17,18)

மறுமை நாளில் அனைத்துப் படைப்பினங்களுக்கும் முன்னிலையில் இந்த என்னுடைய சமுதாயத்திலிருந்து ஒரு மனிதனை அல்லாஹ் வெளியே கொண்டு வருவான். தொன்னூற்று ஒன்பது ஏடுகள் அவனுக்கு விரித்து வழங்கப்படும். ஒவ்வொரு ஏடும் பார்வை எட்டும் தூரம் அளவிற்கு இருக்கும்.

அந்த மனிதனிடம் அல்லாஹ், “இதில் இருக்கும் ஏதேனும் ஒன்றை நீ மறுக்கிறாயா? (உன்னை கண்காணிப்பதற்கு நான் நியமித்த) எனது எழுத்தாளர்கள் உனக்கு (ஏதேனும் இதிலே தவறாக பதிவு செய்து) தீங்கிழைத்து இருக்கிறார்களா?” என்று கேட்பான். “இல்லை, எனது இறைவாஎன்று அந்த மனிதன் கூறுவான். மேலும் இறைவன், “உன்னிடம் ஏதேனும் கோரிக்கை இருக்கிறதா?” என்று அந்த மனிதனிடம் கேட்பான். “இல்லை, என் இறைவாஎன்று அந்த மனிதன் கூறுவான். உடனே இறைவன், “அவ்வாறில்லை, நம்மிடம் உமக்கு சிறந்த நன்மை இருக்கிறது; இன்று உனக்கு அநீதி இழைக்கப்படாதுஎன்று கூறுவான். (அந்த மனிதனுக்குரிய ஏடுகள்) அவற்றில் இருந்து ஒரு துண்டு சீட்டு வெளியே எடுக்கப்படும். அதில், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு என்று இருக்கும். “உன்னுடைய எடையை நிறுத்துஎன்று இறைவன் கூறுவான். “இறைவா! இந்த ஏடுகளுடன் இருக்கும் இந்தச் சீட்டு என்ன?” என்று அந்த மனிதன் அவனிடம் கேட்பான். அதற்கு, “நீ அநீதி இழைக்கப்படமாட்டாய்என்று இறைவன் கூறுவான்.

(நன்மை தீமைகளை அளவிடும் தராசின்) ஒரு தட்டில் ஏடுகளும் மற்றொரு தட்டில் அந்தத் துண்டுச்சீட்டும் வைக்கப்படும். ஏடுகள் எடையில் தாழ்ந்துவிடும். துண்டுச் சீட்டு எடையில் கனத்துவிடும். அல்லாஹ்வுடைய பெயரைவிட எந்தவொன்றும் கனத்துவிடாது.

இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்கள்: திர்மிதீ 2563, இப்னுமாஜா 4290, அஹ்மத் 6699

தங்களுக்கே சாட்சி சொல்லும் மனிதர்கள்

மறுமை நாள் என்பது திடுக்கங்களும் தடுமாற்றங்களும் நிறைந்திருக்கும் நேரம். என்ன நடக்குமோ? என்று எல்லோரும் பயத்தில் உறைந்திருக்கும் தருணம். இத்தகைய நேரத்தில், தங்களது காரியங்களை வெறுத்து மூடி மறைக்கவும், மறுத்துத் தவிர்க்கவும் இயலாத நிலையில் மனிதர்கள் இருப்பார்கள். இதன் காரணமாக, மனிதர்கள் தங்களது செயல்களை எடுத்துக் காட்டும் வேளையில் அதை ஒப்புக் கொள்வார்கள். இவ்வாறான நிலையை மனிதர்களில் இறைத்தூதர்கள் உட்பட அனைவருக்கும் வல்ல இறைவன் ஏற்படுத்தி வைத்துள்ளான். இதைப் பின்வரும் ஆதாரங்களின் வாயிலாக நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட, அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்? விதிக்கப்பட்ட அவர்களின் பங்கு அவர்களுக்குக் கிடைக்கும். “அல்லாஹ்வை விட்டு விட்டு நீங்கள் யாரை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே?” என்று நமது தூதர்கள் அவர்களைக் கைப்பற்ற அவர்களிடம் வரும் போது கேட்பார்கள். “அவர்கள் எங்களை விட்டும் மறைந்து விட்டனர்என அவர்கள் கூறுவார்கள். தாம் (ஏக இறைவனை) மறுப்போராக இருந்தோம் எனத் தமக்கு எதிராகச் சாட்சி கூறுவார்கள்.  (அல்குர்ஆன் 7:37)

ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களின் சந்ததிகளை உமது இறைவன் வெளியாக்கி, அவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான். நான் உங்கள் இறைவன் அல்லவா?” (என்று கேட்டான்.) “ஆம்! (இதற்கு) சாட்சி கூறுகிறோம்என்று அவர்கள் கூறினர். “இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்துவிட்டோம்என்றோ, “இதற்குமுன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்; நாங்கள் அவர்களுக்குப் பின்வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா?’ என்றோ கியாமத் நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதிமொழி எடுத்தோம்.)  (அல்குர்ஆன் 7:172, 173)

உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பிறகு உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?” என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்து “இதை ஒப்புக் கொண்டீர்களா? எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டீர்களா?” என்று கேட்ட போது, “ஒப்புக் கொண்டோம்என்று அவர்கள் கூறினர். “நீங்களே இதற்குச் சாட்சியாக இருங்கள்! உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கிறேன்என்று அவன் கூறினான். (அல்குர்ஆன் 3:81)

வளரும் இன்ஷா அல்லாஹ்