தேசவிரோதிக்கு அரசு மரியாதையா?

தேசவிரோதிக்கு அரசு மரியாதையா?

“மராட்டியம் மராட்டியருக்கே” என்ற இனவாதம் பேசிய நவீன ஹிட்லர் பால்தாக்கரே இந்திய அரசியல் சட்டத்தை மதிக்காத ஒரு தேச விரோதி! அவருக்கு அரசு மரியாதையுடன் மும்பை சிவாஜி பூங்காவில் தகனம் நடைபெற்றது. இவரது உடலை அரசு மரியாதையுடன் தகனம் செய்ததன் மூலம் மகாராஷ்டிர அரசு இந்திய அரசியல் சாசனத்திற்கு அவமரியாதை செய்துள்ளது. பால்தாக்கரே ஒரு பிரிவினைவாதி என்பதை இவரது குற்றப் பின்னணியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

  1. 1960ல் கர்நாடகத்துடன் ஏற்பட்ட எல்லைப் பிரச்சனையால் பம்பாய் கலவரக் காடானது. இந்தக் கலவரத்தை அடக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது.
  2. தென்னிந்தியாவிலிருந்து பிழைப்புக்காக வந்தவர்கள் உடுப்பி எனும் ஹோட்டல்களை நடத்தினார்கள். அவை சிவசேனாவின் கலவரத் தாக்குதலில் தவிடுபொடியாயின.
  3. அந்நிய மாநிலங்களிலிருந்து வந்தேறிகளால் மண்ணின் மைந்தர்களுக்கு மராட்டியத்தில் வேலை வாய்ப்பு இல்லை என்ற மராத்திய வெறியை பால்தாக்கரே இவர்களின் மண்டைகளில் ஏற்றினார். இதன் விளைவாக இடது கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்களை நிர்மூலமாக்கி, அந்த இடங்களில் சிவசேனை, தனது சங்கங்களை அமைத்தது.
  4. அத்தோடு நில்லாமல், 1967ல் பரேல் என்ற இடத்திலுள்ள டால்வி என்ற கட்டடத்தில் துணி மில்களுக்கு நடுவே அமைந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தை அடித்து நொறுக்கி அழித்தது.
  5. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் பொதுக்கூட்டங்களைத் தடுத்து நிறுத்தியதுடன் மட்டுமல்லாமல் அக்கட்சித் தலைவர்கள் மீது கொலைவெறித் தாக்குதலை சிவசேனை தொடுத்தது.
  6. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கிருஷ்ண் தேசாய் என்பவர் துணி ஆலைகள் பகுதியில் நன்கு பிரபலமான மக்கள் தலைவர். நான்கு முறை மும்பை நகர்மன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர். அதன் பின் 1967ல் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1970ல் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போதே அவரை சிவசேனை குண்டர்கள் கொலை செய்தனர்.

தொழிற்சங்க நிர்வாகிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் இவருடைய இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சிக்கும் இந்தக் கொலையில் பங்கிருந்தது. சிவசேனா தலைவர் பால்தாக்கரேவிற்கும், அப்போதைய காங்கிரஸ் முதல்வர் வசந்தராவ் நாயக்கிற்கும் இந்தக் கொலையில் பங்குண்டு என்று எதிர்க்கட்சியினர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர். இது சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற முதல் அரசியல் கொலையாகும்.

  1. பாலிவுட் என்றழைக்கப்படும் பம்பாய் திரைப்படத் துறை பால்தாக்கரேயின் பாதடியில் பணிந்து கிடந்தது. தடாவில் கைது செய்யப்பட்ட இந்தி நடிகர் சஞ்சய் தத், தனது கல்நாயக் என்ற திரைப்படம் சிவசேனை குண்டர்களின் தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக, பால்தாக்கரேயிடம் சென்று ஆசி பெற்றுக் கொண்டார்.

பாகிஸ்தானின் மிகப் பெரிய விருதான நிஷான் இ இம்தியாஸ் என்ற விருது நடிகர் திலீப்குமாருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைத் திருப்பிக் கொடுக்குமாறு திலீப்குமாருக்கு உத்தவிட்டார் பால்தாக்கரே! பாலிவுட்டில் பால்தாக்கரேயின் ஆதிக்கம் எந்த அளவுக்கு இருந்தது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு! எனினும் அந்த விருதைத் திரும்பக் கொடுக்க திலீப்குமார் மறுத்து விட்டார் என்பது வேறு விஷயம்.

சல்மான் கான் என்ற கூத்தாடியின் தந்தை சலீம்! இவனுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த ஷைத்தான், விநாயகர் சதுர்த்தியின் போது தனது வீட்டிற்கு விநாயகர் சிலைகளைக் கொண்டு வந்து வழிபடுவானாம். மவ்லவிகள் சொல்லை மதிக்க மாட்டானாம். அதனால் இவனது மதச் சார்பின்மையை பால்தாக்கரே வெகுவாகப் பாராட்டினார். சல்மான் கான், சலீம் கான் போன்றோரை ஷைத்தான்கள் என்ற கருதி முஸ்லிம்கள் என்றைக்கோ தூக்கி எறிந்து விட்டனர் என்பது இந்த மராத்திய வெறியனுக்குத் தெரியாததல்ல. முஸ்லிம்களைச் சீண்டுவதற்காகவே இதுபோன்ற பாராட்டுகளைத் தெரிவிக்கின்றார்.

கலாச்சாரக் காவல்துறை

  1. மகாராஷ்டிரா மாநிலத்தில் காவல்துறை என்று ஒன்றிருந்தாலும் சிவசேனை கட்சி தங்களுக்கென்று கலாச்சாரக் காவலர்களை உருவாக்கிக் கொண்டது. இதன் மூலம் காதலர் தினம் கொண்டாடுபவர்களை தர்ம அடி கொடுத்துத் தண்டனை வழங்கியது. பாகிஸ்தானிய கலைஞர்கள், எழுத்தாளர்களைத் தாக்கியது. பாகிஸ்தான் அணி மும்பையில் கிரிக்கெட் விளையாடாமல் தடுத்தது. இவையெல்லாம் இந்திய அரசியல் சட்டத்திற்குக் கட்டுப்படாமல் சிவசேனை குண்டர்கள் நடத்திய ஏவல்துறையின் அராஜகங்கள். இதில் காதலர் தினக் கொண்டாட்டங்கள் கலாச்சாரச் சீர்கேடுகள் தான் என்றாலும் அதற்காக சட்டத்தை இவர்கள் கையில் எடுத்ததைத் தான் இங்கு நாம் சுட்டிக் காட்டுகின்றோம்.

இவர்களின் கலாச்சார வேஷத்திற்கு மைக்கேல் ஜாக்சன் என்ற கூத்தாடி மட்டும் விதிவிலக்கு. ஏனெனில் 1996ல் ஷிவ் உதயர்க் சேனாவுக்கு மைக்கேல் ஜாக்சன் கச்சேரி நடத்தி, பணம் வசூலித்துக் கொடுத்தார். பால்தாக்கரேயின் வீட்டுக்கே வந்து, அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி கொள்ளும் வகையில் அங்குள்ள கழிவறையை ஜாக்ஸன் உபயோகித்தாராம். இந்தப் பாக்கியத்திற்காக மைக்கேல் ஜாக்ஸனை மட்டும் சிவசேனைக் குண்டர்கள் தண்டிக்காமல் விட்டு விட்டார்கள் போலும்.

மதன் கமிஷன் குற்றச்சாட்டு

1960ல் துர்கா கோயில் மற்றும் பள்ளிவாசல் பிரச்சனை ஏற்பட்டது. அதில் தான் பால்தாக்கரேயின் மத அரசியல் துவங்கியது. இதை 1970ல் நடந்த பீவாண்டி, ஜல்கோவலன் மற்றும் மஹதியில் நடைபெற்ற கலவரங்களில் நன்றாக அறிய முடிந்தது. இந்தக் கலவரங்களுக்கு சிவசேனா தான் காரணம் என்று நீதிபதி மதன் கமிஷன் குற்றம் சாட்டியது.

பால்தாக்கரேயின் இந்துத்துவ அரசியலுக்கு முதன்முதலில் வெற்றி கிடைத்தது 1987ல் வைல் பார்லி என்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தான்.

ரமேஷ் பிரபு என்பவர் இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். இப்படியே இந்துத்துவா விஷத்தை ஊட்டி, இறுதியில் 1995ல் சிவசேனை ஆட்சியைப் பிடித்தது. ஆனாலும் அதற்கு அடுத்து வந்த தேர்தல்களில் சிவசேனா ஆட்சிக் கட்டிலைப் பிடிப்பதற்கு இது உதவவில்லை.

பாபரி மஸ்ஜித் இடிப்பும் பம்பாய் கலவரமும்

  1. பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பின் 1992 டிசம்பர் 6 முதல் 1993ஆம் ஆண்டின் துவக்கம் வரையிலான இரண்டு மாதங்களில் சிவசேனா கட்சி 1000 முஸ்லிம்களைக் கொன்றொழித்தது. இதற்கு 1990ல் துவங்கப்பட்ட சாம்னா என்ற பத்திரிகை துணை நின்றது. பின்னர் ஒரு தொலைக்காட்சி நேர்காணலின் போது, “நான் ஒரு கலகக்காரத் தலைவன் அல்ல, நான் இந்துக்களைத் தான் பாதுகாத்தேன்” என்று தான் செய்த கொலைகளை நியாயப்படுத்தி, பகிரங்கமாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் பால்தாக்கரே!

இது தொடர்பாக ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன் தெரிவித்ததாவது: ஜனவரி 1993லிருந்து முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலைத் திட்டமிட்டு சிவசேனா உறுப்பினர்கள் நடத்தினர். சிவசேனா தலைவர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில் முஸ்லிம்களின் சொத்துக்களைச் சூறையாடினார்கள்.

இந்த வழக்குகளில் ஒன்றில் மட்டும் பால்தாக்கரே விடுதலையானார். மீது 8 அல்லது அதற்கு மேற்பட்ட வழக்குகளிலும், இன்னும் சாம்னாவில் அவர் எழுதிய வெறியூட்டும் எழுத்துக்களுக்கும் எந்த நடவடிக்கையும் அவர் மீது எடுக்கப்படவில்லை.

பிஜேபி, சிவசேனா ஆட்சியாளர்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை; எடுக்கவும் மாட்டார்கள் என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் காங்கிரஸ் என்ற நயவஞ்சகக் கட்சி அவர் மீது இந்த வழக்குகள், எழுத்துக்கள் விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான் வேதனை.

பாயும் புலியா? பயந்தாங்கொள்ளியா?

  1. பால்தாக்கரே, இந்திரா காந்தி கொண்டு வந்த அவசர நிலைப் பிரகடனத்தை ஆதரித்தார். எதற்காக? தன்னையும் தன்னுடைய பரிவாரத்தையும் மிசா என்ற சட்டத்திலிருந்து காத்துக் கொள்வதற்காகத் தான். இதிலிருந்து அவர் எப்படிப்பட்ட வீரர் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

காங்கிரஸின் கள்ள உறவு

  1. சிவசேனாவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள உறவு அன்றிலிருந்து இன்று வரை தொடர்கின்றது. காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லாமல் சிவசேனை இந்த அளவுக்கு உச்ச நிலையை, உன்னத நிலையை அடைந்திருக்கவே முடியாது. மகாராஷ்ட்ராவின் முதல்வராக இருந்த காங்கிரஸின் வசந்தராவ் நாயக், அரசியல் லாபம் அடைவதற்காக சிவசேனையின் வளர்ச்சிக்கு உதவினார்.

2007ல் பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவராக ஆவதற்கும், 2012ல் பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராக ஆவதற்கும் சிவசேனாவின் உதவியை காங்கிரஸ் நாடியது. இது காங்கிரசுக்கும் சிவசேனாவுக்கும் உள்ள ஆழமான நட்பையும் அழுத்தமான பிணைப்பையும் பறைசாற்றியது.

உதறிய உறவினர்கள்

  1. ஊருக்கு உத்தமரான இவரால் உறவினர்களுடன் ஒத்துப் போகமுடியவில்லை. அவரது மகன் ஜெயதேவ் இவரை விட்டுப் பிரிந்து வாழ்கின்றார். இவரது மருமகன் ராஜ் தாக்கரே இவரைக் கைகழுவி விட்டு, மகா நவநிர்மான் சேனாவைத் துவக்கி விட்டார். இந்தக் கட்சி சேனாவின் வாக்கு வங்கியை உடைத்து, கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு வழிவகுத்தது.

பால்தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரேயின் சந்திப்பு நடந்தது. ஆனால் சங்கமிப்பு நடக்கவில்லை. இவர் பிரிந்ததற்குக் காரணம், பால்தாக்கரே தனது மகன் உத்தவ் தாக்கரேயை வாரிசாக ஆக்கியது தான். இதே காரணத்திற்காக இவரது கட்சியில் முன்னணித் தலைவராகச் செயல்பட்ட நாராயணன் ரானேயும் வெளியேறினார்.

இவை அனைத்தும் பால்தாக்கரேயின் உண்மை முகத்தை எடுத்துக்காட்டும் விஷயங்களாகும்.

மராட்டியத்தை மராட்டியரே ஆள வேண்டும் என்பது இவரது நிலைப்பாடு. இதன்படி சிவசேனா கட்சியைச் சேர்ந்த வேறு யாராவது மராட்டியத்தை ஆள முடியுமா? நிச்சயம் முடியாது. பால்தாக்கரேயின் குடும்பத்தைச் சேர்ந்த அவரது வாரிசு மட்டும் தான் ஆள வேண்டும். இப்படிப்பட்ட குறுகிய நிலைப்பாட்டைக் கொண்ட இவருக்குத் தான் மகாராஷ்ட்டிரத்தில் அரசு மரியாதை!

பால்தாக்கரே மட்டுமல்ல, அவருடைய சிவசேனா குண்டர்களும் சட்டத்திற்குக் கட்டுப்படாதவர்கள் என்பதற்கு அவர் இறந்த பிறகு நடந்த நிகழ்வும் சான்றாகவுள்ளது. மும்பை சிவாஜி பூங்காவில் அமைந்திருக்கும் பால்தாக்கரேயின் தற்காலிக நினைவுச் சின்னத்தை அகற்ற வேண்டும் என்று மும்பை மாநகராட்சி கோரிய போது, அதை எடுக்க முடியாது என்று சிவசேனா குண்டர்கள் மறுத்தே விட்டனர்.

மராட்டியம் மராட்டியருக்கே என்ற கொள்கை இந்தியாவின் அரசியல் சட்டத்திற்கு எதிரானது. ஆனாலும் அந்த முழக்கத்தைத் துணிந்து செய்தவர்.

60களிலும் 70களிலும் தமிழர்களை மும்பையிலிருந்து துரத்தியடித்தவர். அவர்களது உணவு விடுதிகளை அடித்து நொறுக்கியவர்.

பத்திரிகை, பால் வியாபாரம் செய்து கொண்டிருந்த, காரோட்டிப் பிழைக்கின்ற பீகார், உபி மாநிலத்தைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தினரை வந்தேறிகள் என்ற முத்திரை குத்தி விரட்டியவர். அவர்களுடைய கார்களை அடித்து உடைத்து அவர்களையும் தாக்கியவர்.

ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றொழித்தவர்.

இத்தகைய குற்றப் பின்னணி உள்ள ஒரு தேச விரோதிக்கு அரசு மரியாதை! இந்தக் குற்றவாளியின் மரணத்தை, ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று குடியரசுத் தலைவர் தெரிவிக்கின்றார். இந்தக் குற்றவாளிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் சூதாடிகள், சினிமா கூத்தாடிகள் அனைவரும் படையெடுத்து வந்தனர்.

இவர்கள் அத்தனை பேரிடமும் இந்த நாட்டு அரசியல் சட்டத்திற்கு எந்த மரியாதையும் இல்லை என்பதையே இவர்களது இந்த நடவடிக்கை எடுத்துக் காட்டுகின்றது.

இதை எதிர்த்து துணிச்சலாகக் குரல் எழுப்பியவர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அவர்கள் மட்டும் தான்.

இந்திய அரசியல் சட்டம் விதி 1 (1) மற்றும் 19 (1) ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி அவர் மட்டும் தான், “பால்தாக்கரே அரசு மரியாதைக்கு மட்டுமல்ல, இறுதி மரியாதை செலுத்தப்படுவதற்குக் கூடத் தகுதியற்றவர்; தரத்தை இழந்தவர்’ என்பதை நாசூக்காகவும் நாகரீகமாகவும் தெரிவித்திருந்தார்.

இதுபோன்ற குற்றப் பின்னணியில் உள்ளவர்களுக்கு அரசு மரியாதை வழங்கப்படுமானால் இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி இருக்காது. குண்டர்களின் ஆட்சி தான் நடக்கும். அது இந்த நாட்டின் அழிவுக் காலமாகும்.