கியாமத் நாளின் அடையாளங்கள்

திருக்குர்ஆன் விளக்கவுரை       தொடர்: 8

கியாமத் நாளின் அடையாளங்கள்

ஈஸா நபியின் வருகை

உலக முடிவு நாள் மிகவும் நெருங்கும் போது ஏற்படவுள்ள அடையாளங்களில் ஈஸா நபியவர்கள் வானிலிருந்து இவ்வுலகுக்கு இறங்கி வருவதும் ஓர் அடையாளம்.

ஈஸா நபி வருவார்கள் என்று நம்புவது குர்ஆனுக்கு எதிரானது என்றும் ஆதாரமற்றது என்றும் சிலர் வாதிடுகின்றனர். தமது வாதத்தை நிலைநாட்ட சில ஆதாரங்களையும் முன் வைக்கின்றனர். அந்த ஆதாரங்களையும் அதற்கான விளக்கத்தையும் கண்டு வருகின்றோம்.

ஈஸா நபி மரணித்துவிட்டார் என்று வாதிடுவோரின் அடுத்த ஆதாரம் இது தான்.

அவர் (அக்குழந்தை), ‘நான் அல்லாஹ்வின் அடியான். எனக்கு அவன் வேதத்தை அளித்தான். என்னை நபியாக்கினான். நான் எங்கே இருந்த போதும் பாக்கியம் பொருந்தியவனாகவும் ஆக்கினான். நான் உயிருடன் இருந்து, என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான். என்னை துர்பாக்கியசாயாகவும், அடக்குமுறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை.

திருக்குர்ஆன் 19:30-32 இந்த வசனங்களுக்குப் பல்வேறு மொழி பெயர்ப்பாளர்கள் தவறாகவே மொழி பெயர்த்துள்ளனர்.

தவறான மொழி பெயர்ப்பின் அடிப்படையில் ஒரு சாரார் ஈஸா நபி அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதற்கு இதைச் சான்றாகக் காட்டுகிறார்கள். சரியான மொழி பெயர்ப்பின் படி ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்ற கருத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ இவ்வசனங்கள் தரவில்லை.

  1. நான் அல்லாஹ்வின் அடிமையாவேன். எனக்கு வேதத்தை அவன் வழங்கினான். மேலும், என்னை நபியாகவும் ஆக்கினான். (திருக்குர்ஆன் 19:30)
  2. நான் எங்கிருந்த போதும் என்னை பாக்கியம் பெற்றவனாக அவன் ஆக்கியுள்ளான். மேலும், நான் உயிருள்ளவனாக இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான். (திருக்குர்ஆன் 19:31)
  3. மேலும், எனது தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் (ஆக்கினான்.) என்னை துர்பாக்கியசாலியாகவும், அடக்குமுறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை. (திருக்குர்ஆன் 19:32)

இரண்டாவது வசனத்தில் ‘நான் உயிருள்ளவனாக இருக்கும் போது தொழ வேண்டும்; ஸகாத் கொடுக்க வேண்டும்” என ஈஸா நபி கூறியதாகக் கூறப்படுகிறது.

ஈஸா நபி அவர்கள் உயிருடன் உயர்த்தப்பட்டு வானில் இருந்தால், அவர்கள் எப்படி ஸகாத் கொடுக்க முடியும்? அவர்கள் ஸகாத் கொடுக்க முடியவில்லையானால் அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பது தான் பொருள். ஏனெனில் உயிருடன் இருக்கும் வரை தமக்கு ஸகாத் கடமை என்று ஈஸா நபி அவர்கள் கூறியிருக்கிறார்கள். இது தான் அந்த சாரார் எடுத்து வைக்கும் வாதம்.

இம்மூன்று வசனங்களில் முதல் இரண்டு வசனங்களுக்குச் செய்யப்படும் பொருளில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. மூன்றாவதாக நாம் குறிப்பிட்டுள்ள 19:32வசனத்திற்குத் தான் எல்லா தமிழ் மொழி பெயர்ப்புகளும், எல்லா ஆங்கில மொழி பெயர்ப்புகளும் தவறான பொருள் தந்துள்ளன.

எனவே 19:32 வசனத்தின் சரியான பொருள் என்னவென்று பார்ப்போம்.

இவ்வசனத்தில் ‘வ பர்ரன் பிவாலிததீ” என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. ‘எனது தாயாருக்கு நன்மை செய்பவனாகவும்” என்பது இதன் பொருள்.

செய்பவனாகவும் (செய்பவன் + ஆக + உம்) என்பதில் ‘உம்”மைப் பொருளை எங்கே முற்றுப் பெறச் செய்வது என்பதில் தான் பலரும் கவனக் குறைவாக இருந்துள்ளனர்.

‘உம்”மைப் பொருளைப் பொருத்த வரை தமிழ் மொழியில் கருத்துக் குழப்பம் ஏற்படுவதில்லை. அரபு மொழியில் கருத்துக் குழப்பம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது என்பதை முத-ல் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

‘இப்ராஹீமை நல்லவனாகவும், வல்லவனாகவும் கருதுகிறேன்” என்ற தமிழ் வாக்கியத்தில் நல்லவனாகவும், வல்லவனாகவும் என இரண்டு ‘உம்”மைப் பொருள்கள் இடம் பெற்றுள்ளன. அரபு மொழியில் இதே வாக்கியத்தைக் கூற வேண்டுமானால் ‘கருதுகிறேன் இப்ராஹீமை நல்லவனாகவும், வல்லவனாகவும்” என்ற வரிசைப்படி அமையும்.

“நல்லவனாகவும்’ என்பதை முற்றுப் பெறச் செய்வதற்குரிய இடம் தமிழ் மொழியில் பின்னால் இடம் பெற்றிருக்கும். ஆனால், அரபு மொழியில் முன்னால் இடம் பெற்றிருக்கும்.

இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு, திருக்குர்ஆன் 19:32 வசனத்தை ஆராய்வோம்.

‘என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும்” என்பதை எங்கே முற்றுப் பெறச் செய்ய வேண்டும் என்று தேடினால் இரண்டு இடங்களில் அதை முற்றுப் பெறச் செய்ய முடியும்.

‘என்னை நபியாகவும் ஆக்கினான்” என்று 19:30 வசனம் கூறுகிறது. இதன் தொடர்ச்சியாக ‘என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும்” என்று முற்றுப் பெறச் செய்யலாம்.

‘என்னை நபியாகவும் என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் அவன் ஆக்கினான்’ என்ற கருத்து கிடைக்கிறது.

“என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும்’ என்ற சொற்றொடரை 19:31 வசனத்தின் இறுதியிலும் முற்றுப் பெறச் செய்ய முடியும்.

‘நான் உயிருடையவனாகவும், என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும் ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்’ என்ற கருத்து இதி-ருந்து கிடைக்கும்.

நாம் இரண்டாவதாகக் கூறியபடி முற்றுப் பெறச் செய்வது தான் மிகவும் சரியானதாகும்.

‘உம்மை’ப் பொருளாக இடம் பெறும் சொற்களை அதற்கு அருகில் உள்ள இடத்தில் தான் முற்றுப் பெறச் செய்ய வேண்டும். அருகில் முற்றுப் பெறச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் தான் தொலைவில் முற்றுப் பெறச் செய்ய வேண்டும் என்பது இலக்கண விதியாகும்.

‘என் தாயாருக்கு நன்மை செய்பவனாக’ என்பது 19:32-வது வசனம்.

அதற்கு முந்தைய வசனமாகிய 19:31-ல் முற்றுப் பெறச் செய்ய வழியிருக்கும் போது அதைப் புறக்கணித்து விட்டு அதற்கும் முன்னால் சென்று 19:30 வசனத்தில் முற்றுப் பெறச் செய்வதை இலக்கணம் அறிந்தவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே ‘நான் உயிருள்ளவனாகவும், என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் இருக்கும் காலமெல்லாம்” என்பது தான் சரியான பொருளாகும்.

எனவே, ஈஸா நபி அவர்கள் உயிருடன் இருப்பது மட்டுமின்றி தாயாருக்கு நன்மை செய்பவராகவும் இருந்தால் தான் அவர் மீது ஸகாத் கடமையாகும். அவர் எப்போது உயர்த்தப்பட்டு விட்டாரோ அப்போது அவரால் தாயாருக்கு நன்மை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

ஈஸா நபிக்கு ஸகாத் எப்போது கடமையாகும்? என்றால் அதற்கு இரண்டு நிபந்தனைகளை அல்லாஹ் கூறுகிறான்.

  1. ஈஸா நபி அவர்கள் உயிருடன் இருக்க வேண்டும்.
  2. அவர்கள் தமது தாயாருக்கு நன்மை செய்யக்கூடியவராக இருக்க வேண்டும்.

இவ்விரண்டு நிபந்தனைகளும் ஒரு சேர அமைந்திருந்தால் தான் அவர்கள் மீது ஸகாத் கடமையாகும்.

ஈஸா நபி உயர்த்தப்படுவதற்கு முன்பு தான் இது பொருந்தும். அப்போது தான் அவர்கள் உயிருடனும் இருந்தார்கள். தாயாருக்கு நன்மை செய்யும் நிலையிலும் இருந்தார்கள்.

அவர்கள் தாயாரை விட்டு எப்போது உயர்த்தப்பட்டார்களோ அப்போது உயிருடன் இருக்கிறார்கள் என்ற ஒரு நிபந்தனை மட்டும் தான் உள்ளது. தாயாருக்கு நன்மை செய்பவராக என்ற நிபந்தனை இல்லை.

இன்று கூட ஈஸா நபி உயிருடன் தான் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் தமது தாயாருக்கு நன்மை செய்யும் நிலையில் இல்லை.

எனவே ஸகாத் அவர்கள் மீது கடமையில்லை. யாருக்கு ஸகாத் கொடுப்பார் என்று கேட்பது அபத்தமானதாகும்.

ஒரு வாதத்திற்காக எதிர் தரப்பினரின் வாதத்தை ஏற்றாலும் அவர்களின் கேள்வி அர்த்தமற்றதாகும்.

அல்லாஹ்வின் எந்தக் கட்டளையானாலும் அதற்குரிய சூழ்நிலை இருக்கும் போது தான் அதை நிறைவேற்ற வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் அல்லாஹ் அதைக் கூறாவிட்டாலும் கூட அப்படித் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

‘முஃமின்களே! உங்கள் குரலை நபியின் குரலை விட உயர்த்தாதீர்கள்” (49:2) என்று அல்லாஹ் கூறுகிறான்.

முஃமின்களே என்று அழைத்து இறைவன் கூறுவதால் இதை நாம் செயல்படுத்த வேண்டும். இதை எப்படிச் செயல்படுத்த இயலும்? நபியின் குரலைக் கேட்கும் காலத்தில் உள்ளவர்கள் மட்டுமே இதைச் செயல்படுத்த முடியும். மற்றவர்களுக்கு இது இயலாது. இதற்கான சூழ்நிலை இல்லை என்பதால் இதைச் செயல்படுத்தும் கடமை நமக்கு இல்லை என்று புரிந்து கொள்கிறோம். இங்கே வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு வரட்டுப் பிடிவாதம் பிடிப்பதில்லை. அல்லாஹ் ‘அதற்கான சூழ்நிலை இருக்கும் போது” என்று கூறாவிட்டாலும் அது தான் பொருள் என விளங்குகிறோம்.

ஈஸா (அலை) அவர்கள் இப்பூமியில் வாழக்கூடிய காலத்தில் பொருள் வசதி பெற்றவராக இல்லாமலிருந்தால் அப்போதும் அவர்களால் ஸகாத் கொடுக்க முடியாது. அதனால் அவர்கள் இப்பூமியில் வாழ்ந்ததையே மறுத்து விட முடியுமா? உயிருடன் உள்ளவரை ஸகாத் கொடுக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான் என்றால் அதற்குரிய வசதி வாய்ப்பு இருந்தால் என்றே புரிந்து கொள்ள வேண்டும். எனவே மேற்கண்ட வசனத்தை வைத்து ஈஸா (அலை) மரணித்து விட்டார்கள் என்று முடிவு செய்ய முடியாது.

ஈஸா நபி உயிருடன் உள்ளார் என்ற கருத்தை வலுவூட்டக் கூடிய மற்றொரு சான்றாகவும் இது அமைந்து விடுகிறது.

ஈஸா நபியவர்கள் மரணித்து விட்டார்கள் எனக் கூறுவோர் தமது வாதத்தை நிலைநாட்ட சில ஆதாரங்களை எடுத்துக் காட்டுகின்றனர். ஆராய்ந்து பார்த்தால் அறியாமையின் அடிப்படையில் அவர்களின் வாதம் எழுப்பப்பட்டிருப்பதை அறியலாம்.

முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.

(திருக்குர்ஆன் 3:144)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து விட்டால் வந்த வழியே திரும்பிச் சென்று விடக் கூடாது; இறைவனது தண்டனைக்கு அஞ்சியும், இறைவனது பரிசுகளை எதிர்பார்த்தும் தான் இம்மார்க்கத்தில் இருக்க வேண்டுமே தவிர, முஹம்மத் (ஸல்) அவர்களுக்காக இம்மார்க்கத்தில் இருக்கக் கூடாது என்று இவ்வசனம் அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றது.

இந்தக் கருத்தைத் தெரிவிப்பதற்காக இவ்வசனம் அருளப்பட்டாலும் இவ்வசனத்தைச் சிந்திக்கும் போது “ஈஸா நபி மரணித்து விட்டார்கள்’ என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளதாகச் சிலர் வாதிடுகின்றனர்; முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முன் வந்த ஈஸா நபி உள்ளிட்ட அனைத்துத் தூதர்களும் மரணித்து விட்டனர் என்பது இவர்களின் வாதம்.

ஏற்கனவே வந்த தூதர்கள் மரணித்ததை முன்னுதாரணமாகக் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மரணிப்பார்கள் என்பதை இறைவன் அறிவிப்பதால், இக்கருத்து மேலும் வலுவடைகின்றது எனவும் கூறுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது, பெரும்பாலான நபித் தோழர்கள் அவர்களின் மரணத்தை நம்ப மறுத்தனர். அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள் இவ்வசனத்தை எடுத்துச் சொல்லித் தான் நபித் தோழர்களைச் சரியான வழிக்குக் கொண்டு வந்தனர்.

இந்த வரலாறு புகாரி (1242, 3670, 4454) மற்றும் பல ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸ்களையும் தங்களின் வாதத்துக்கு வலு சேர்ப்பதற்கு இவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

ஈஸா நபி மரணிக்காமல் இருந்திருந்தால் அபூபக்கர் (ரலி) அவர்களின் வாதத்தை நபித் தோழர்கள் ஏற்றிருக்க மாட்டார்கள். “ஈஸா நபி மரணிக்காமல் இருப்பது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஏன் மரணிக்காமல் இருக்கக் கூடாது’ என்று நபித் தோழர்கள் எதிர்க் கேள்வி கேட்டிருப்பார்கள். இது அவர்களின் வாதம்.

திருக்குர்ஆனை அணுக வேண்டிய விதத்தில் அணுகாதவர்கள் தான் இந்த வாதத்தை எடுத்து வைக்க முடியும். ஒரு விஷயத்தைப் பற்றி ஒரு வசனத்தில் கூறப்பட்டதை வைத்து உடனேயே ஒரு முடிவுக்கு வருவது குர்ஆனை அணுகும் வழி முறையல்ல.

இது பற்றி வேறு வசனங்களில் கூடுதல் விளக்கம் உள்ளதா? அல்லது விதி விலக்குகள் உள்ளனவா? என்றெல்லாம் தேடிப் பார்க்க வேண்டும். பல இடங்களில் அது குறித்து கூறப்பட்ட அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு முடிவுக்கு வருவதே குர்ஆனை அணுகும் முறையாகும்.

திருக்குர்ஆனில் எத்தனையோ வசனங்களில் பொதுவாகக் கூறப்பட்டதற்கு வேறு இடங்களில் விதி விலக்குகள் கூறப்பட்டுள்ளன. இது தான் குர்ஆனின் தனி நடையாகும்.

“ஈஸா நபியைத் தவிர’ என்று இந்த இடத்திலேயே கூறப்படவில்லையே என்று கேட்பது குர்ஆனின் நடையைப் புரிந்து கொள்ளாதவர்களின் கேள்வியாகும்.

“முஹம்மதுக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர்’ என்ற வார்த்தைக்குள் ஈஸா நபி அடங்கினாலும் அவர்களுக்கு வேறு இடங்களில் விதி விலக்கு அளிக்கப் பட்டுள்ளதைக் கவனிக்காததால் தான் இவ்வாறு வாதிடுகின்றனர்.

ஈஸா நபி கியாமத் நாளின் அடையாளமாக இருக்கிறார்.      (திருக்குர்ஆன் 43:61)

ஈஸா நபி மரணிப்பதற்கு முன் அவரை வேதக்காரர்கள் நம்பிக்கை கொள்வார்கள். (திருக்குர்ஆன் 4:159)

ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை என்று இவ்விரு வசனங்களும் அறிவிக்கின்றன.

எனவே ‘அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டார்கள்” என்பதையும் இவ்விரு வசனங்களையும் இணைத்து ‘ஈஸா நபி தவிர மற்ற தூதர்கள் அவருக்கு முன் மரணித்து விட்டார்கள்” என்று தான் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு முடிவு செய்யும் போது, எந்த வசனத்தையும் நாம் மறுக்கவில்லை. எல்லா வசனங்களும் சேர்ந்து எந்தக் கருத்தைத் தருகிறதோ அந்தக் கருத்தைத் தான் நாம் கொள்கிறோம்.

இவ்விரு வசனங்கள் மட்டுமின்றி மற்றொரு வசனமும் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். அவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக!

(திருக்குர்ஆன் 5:75)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து ‘அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர்’ என்று திருக்குர்ஆன் 3:144 வசனம் குறிப்பிடுவது போலவே இவ்வசனம் ஈஸா நபியைக் குறித்துப் பேசுகிறது.

இவ்வசனத்தைக் கவனமாகப் பார்த்தால் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை என்பது பளிச்சென விளங்கும்.

இவ்வசனம் அருளப்பட்ட காலத்தில் ஈஸா நபி மரணித்திருந்தார்கள் என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். அவரைக் கடவுளாக நம்புகின்ற மக்களுக்கு மறுப்புக் கூறும் போது எவ்வாறு கூற வேண்டும்?

‘ஈஸா தூதர் தான்; அவரே மரணித்து விட்டார்” என்று கூறினால் அது தான் சரியான பதிலாக இருக்க முடியும்.

மரணித்தவரை எப்படிக் கடவுள் எனக் கருதலாம் என்ற கருத்து இதனுள் அடங்கியிருக்கும். ஈஸா நபி மரணித்திருந்தால் அதைச் சொல்ல வேண்டிய இடம் இது தான். ஈஸா நபியைக் கடவுளாக்கியவர்களுக்கு மறுப்புச் சொல்லும் இந்த இடத்தில் இறைவன் பயன்படுத்திய வார்த்தையைக் கவனித்தீர்களா? ‘ஈஸா தூதர் தான். அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர்’ என்று அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ் ஞானமிக்கவன், நுண்ணறிவாளன், அவன் பொருத்தமற்ற சொற்களைப் பயன்படுத்துவதை விட்டும் தூய்மையானவன். ஈஸா நபி மரணித்திருந்தால் இந்த வாசக அமைப்பு, இறைவன் தெளிவாகக் கூறுபவன் அல்லன் என்ற கருத்தைத் தந்து விடும்.

அவரே இறந்திருக்கும் போது அதைக் கூறாமல் அவருக்கு முன் சென்றவர்கள் இறந்து விட்டார்கள் என்று விவேகமுள்ளவர் யாரேனும் பேசுவதுண்டா?

அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர் எனக் கூறி விட்டு அவர் பூமியில் வாழும் போது சாப்பிட்டுக் கொண்டிருந்ததைக் காரணமாகக் காட்டி அவரது கடவுள் தன்மையை அல்லாஹ் மறுக்கிறான். அவர் மரணித்திருந்தால் அதையே காரணமாகக் காட்டி அவரது கடவுள் தன்மையை இறைவன் மறுத்திருப்பான்.

முஹம்மதுக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர் என்ற வசனம் அருளப்படும் போது முஹம்மத் (ஸல்) அவர்கள் உயிரோடு இருந்தனர் என்று புரிந்து கொள்கிறோம். அது போல் ஈஸாவுக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர் என்ற வசனம் இறங்கும் போதும் ஈஸா நபி உயிருடன் இருந்தனர் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரே மாதிரியாக அமைந்த இரண்டு இடங்களில் வித்தியாசமாகப் பொருள் கொள்வது ஏற்புடையதன்று.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது நபித் தோழர்கள் நடந்து கொண்ட முறையை அவர்கள் சான்றாகக் காட்டுவதும் சரியல்ல. ஈஸா நபி வருவார்கள் என்ற ஏராளமான ஹதீஸ்களை நபித் தோழர்கள் தான் அறிவிக்கின்றனர். நாம் முன்னர் சுட்டிக் காட்டிய 43:61, 4:159 இரு வசனங்களையும் நபித் தோழர்கள் அறிந்திருந்தனர். ஈஸா நபிக்கு விதிவிலக்கு இருந்ததைச் சந்தேகமற அவர்கள் அறிந்திருந்தனர்.

நபிகள் நாயகத்துக்கும் அது போல விதிவிலக்கு இருக்கும் என்று அவர்கள் எண்ணியதால் தான் ‘நபிகள் நாயகம் மரணிக்கவில்லை” என்று வாதிட்டனர். நபிகள் நாயகத்துக்கு விதிவிலக்கு இல்லை என்பது அபூபக்கர் (ரலி) அவர்களின் வாதத்தின் மூலம் தெரிந்ததும் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டார்கள்.

அனைவருக்கும் சர்வ சாதாரணமாகத் தெரிந்த விதி விலக்குகளை யாரும் சான்றாகக் காட்டிப் பேச மாட்டார்கள். எனவே, இவ்வசனம் ஈஸா நபி மரணித்ததாகக் கூறவில்லை.

வளரும் இன்ஷா அல்லாஹ்…