தொடர்: 2 திருக்குர்ஆன் விளக்கவுரை

தொடர்: 2

திருக்குர்ஆன் விளக்கவுரை

அவர்கள் தங்களுக்கிடையே சர்ச்சை செய்து கொண்டிருக்கும் நாள் எப்போது வரும் என்பதை இறைவன் கூறாவிட்டாலும் அந்த நாள் நெருங்க, நெருங்க உலகில் ஏற்படும் விபரீதங்களை நபி (ஸல்) அவர்கள் முன்கூட்டியே அறிவித்துச் சென்றுள்ளனர். அந்த நாளை நம் காலத்தவர்கள் எந்த அளவுக்கு நெருங்கியுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள அந்த முன்னறிவிப்புக்கள் நமக்கு உதவும் என்பதால் அவற்றில் சிலவற்றை அறிந்து விட்டு விளக்கவுரையைத் தொடர்வோம்.

ஒரு தாய் எத்தனை ஆண் மக்களைப் பெற்றாலும் அவர்கள் தாயைக் கவனிக்காத நிலை ஏற்படும். மகளை அண்டி வாழும் நிலைமையை அவள் சந்திப்பாள். அங்கே அடிமையாக அவள் நடத்தப்படுவாள் என்பது நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த அடையாளங்களில் ஒன்றாகும்.

ஒரு பெண் தன் எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 4777

இந்த நிலையை இன்றைக்குப் பரவலாகப் பெற்றோர்கள் சந்தித்து வருகின்றனர்.

பொருளாதார வசதியில் மிகவும் பின்தங்கியவர்களில் சிலர் மிகவும் உயர்ந்த வசதியைப் பெறுவது உலகம் தோன்றியது முதல் நடந்து வரும் நிகழ்ச்சிகளே! ஆயினும் அத்தகைய பின்தங்கியவர்கள் ஒட்டுமொத்தமாகப் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைவதென்பது கியாமத் நாள் நெருங்கி விட்டது என்பதற்கான அடையாளமாகும்.

வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறுங்காலுடனும் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்று என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 4777

ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிகவும் உயரமான கட்டடங்களைக் கட்டி வாழ்வார்கள் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் யுக முடிவு நாளின் அடையாளமாகக் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 50

இன்றைக்கு அரபியர்களுக்குக் கிடைத்திருக்கும் வசதியான வாழ்வும், இன்னபிற பகுதிகளில் நடக்கும் புரட்சிகரமான மாறுதலும் இதை விளங்கிடப் போதுமானவையாகும்.

குடிசைகள் கோபுரமாகும்

அன்றைய மனிதன் பெரும்பாலும் குடிசைகளிலேயே வாழ்ந்தான். பணம் படைத்தவர்கள் ஓட்டு வீட்டில் வசித்தனர். உயரமாக அடுக்கு மாடிக் கட்டிடங்களை எழுப்பும் மூலப் பொருட்கள் அன்று கண்டு பிடிக்கப்படவில்லை

இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர். இதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யுக முடிவு நாளின் அடையாளமாகக் குறிப்பிட்டார்கள். (நூல்: புகாரி  7121 )

விபச்சாரமும் மதுப்பழக்கமும் பெருகும்

யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும் மதுவும் பெருகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.

நூல்: புகாரி  80, 81, 5577, 6808, 5231

ஒளிவு மறைவாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வந்த விபச்சாரம் இன்று வெளிப்படையாக, பகிரங்கமாக நடக்கின்றது.  அரசாங்கமே சிவப்பு விளக்குப் பகுதியை ஏற்படுத்துவதும் அன்னியப் பெண்களுடன் உறவு கொள்ளும் போது ஆணுறை பயன்படுத்துங்கள் என்று பண்பாடு மிக்க இந்தியா போன்ற நாடுகளே செய்யும் விளம்பரமும் விபச்சாரம் எந்த அளவுக்கு பெருகிப்போயுள்ளது என்பதை உணர்த்துகிறது.

மக்களை நல்வழிப்படுத்தக் கடமைப்பட்ட அரசுகளே மதுபான விற்பனை செய்யத் துவங்கி விட்டன. நாகரீகமான பெயர்களில் அறிமுகப்படுத்தப்படும் உயர் ரக அன்னிய மதுவுக்கு மக்கள் அடிமைப்பட்டு வருவதும் மறுக்க முடியாத உண்மை.

இந்தத் தீமைக்கு எதிராகப் போராடக் கடமைப்பட்ட அரபு நாடுகளில் கூட இத்தீமை தலைவிரித்தாடும் போது அந்த நாள் நெருங்கி விட்டதாகவே தோன்றுகிறது.

தகுதியற்றவர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்படுவதும் அப்பொறுப்புகளில் அவர்கள் நாணயமின்றி நடந்து கொள்வதும் அந்த நாள் மிகவும் நெருங்கி விட்டது என்பதை உறுதிப்படுத்தும் அடையாளமாகும்.

“நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு” என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறிய போது, “எவ்வாறு பாழ்படுத்தப்படும்?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  “தகுதியற்றவர்களிடம் ஒரு காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு” என்று விடையளித்தார்கள். (நூல்: புகாரி  59, 6496)

பாலைவனம் சோலைவனமாகும்

இன்றைய அரபுகள் அடைந்துள்ள பொருளாதார உயர் நிலை 200 ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்து பார்க்கக் கூட இயலாததாகும். அவர்கள் வழங்கும் ஸகாத்தைப் பெறக் கூட அங்கே மக்களில்லை. ஸகாத்தை வழங்குவதற்காக ஏழை நாடுகளை அவர்கள் தேடிச் செல்லும் நிலையையும் நாம் காண்கிறோம்.

எதற்கும் உதவாத பாலை நிலம் என்று உலகத்தால் புறக்கணிக்கப்பட்ட அந்தப் பிரதேசத்தில் சோலைகளை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த மாறுதலும் கூட அந்த நாள் நெருங்கி விட்டது என்பதற்கான அடையாளமே!

செல்வம் பொங்கிப் பிரவாகித்து அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும் அரபுப் பிரதேசம் நதிகளும் சோலைகளும் கொண்டதாக மாறும் நிலையும் ஏற்படாமல் அந்தநாள் வராது. (நூல்: முஸ்லிம் 1681)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த முன்னறிவிப்பு நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

காலம் சுருங்குதல்

காலம் வெகுவேகமாக ஓடுவதை இன்று நாம் காண்கிறோம். மனிதனின் விஞ்ஞான அறிவு வளர்ந்து அவன் கண்டு பிடிக்கும் நவீன சாதனங்களால் காலம் மிகவும் சுருங்கி விட்டதைக் காண்கிறோம்.

ஒரு வாரம் பயணம் செய்யும் தூரம் ஒரு நாளில் சர்வ சாதாரணமாகக் கடக்கப்படுகின்றது. ஒரு வாரத்தில் செய்யப்படத்தக்க வேலைகள் ஒரு நாளில் செய்து முடிக்கப்பட சாதனங்கள் இன்று உள்ளன. உலகில் எங்கோ நடக்கும் நிகழ்ச்சிகள் அதே நேரத்தில் முழு உலகையும் எட்டி விடுகின்றன. இத்தகைய முன்னேற்றங்களும் கூட அந்த நாள் சமீபித்து வருகின்றது என்பதற்கான அடையாளமே.

“காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும். (இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு விநாடி போன்று ஆகும்” என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய அடையாளம். (நூல்: திர்மிதீ 2254)

இப்படிப் பல அடையாளங்கள் வந்து விட்டன என்றாலும் அந்த நாள் எவ்வளவு நெருக்கத்தில் உள்ளது என்பதை நம்மால் தீர்மானிக்க முடியாது. அந்த நாள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்கு நெருக்கமாக வரும் போது சில மகத்தான அடையாளங்கள் நிகழவுள்ளன. அந்த அடையாளங்கள் தோன்றி விட்டால் அந்த நாள் எவ்வளவு சமீபத்தில் இருக்கிறது என்று முடிவு செய்து விடலாம். அந்த அடையாளங்களையும் முக்கியமாக நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்