ஆலிம்கள் vsஅல்குர்ஆன்

ஆலிம்கள் vsஅல்குர்ஆன்

அருள்மிகு ரமளான் மாதம் வந்து விட்டது. தலைப்பிறை தோன்றிய நாளிலிருந்து கடைசிப் பிறை வரை பள்ளிகளில், இரவுத் தொழுகைகளில் ஓதப்படுகின்ற அல்குர்ஆன் அருமையாகவும் அழகாகவும் நம் காதுகளில் அலைமோதிக் கொண்டிருக்கும். அதன் பிறகு நடைபெறுகின்ற சொற்பொழிவுகள் செவிப்பறைகளைக் கிழித்துக் கொண்டிருக்கும். சில இடங்களில் பகல் வேளைகளில் லுஹர் தொழுகைக்குப் பின்னாலும் பயான்கள் அனல் பறக்கும்.

ஆலிம்களின் அழகிய கிராஅத், அனல் பறக்கும் பயான்களின் அலறல்கள் அத்தனையும் ஏன்? எதற்காக? நாங்கள் ஆடுவதும் பாடுவதும் காசுக்குத் தான் என்று சொல்வார்களே! அதைப் போன்று தான்.

இந்தப் புனித மாதத்தில் லைலத்துல் கத்ரை அடைவதற்காக இஃதிகாஃப் என்ற வணக்கம் இருக்கின்றது. இந்த வணக்கத்தையும் சில ஆலிம்கள் செய்யத் தவறுவதில்லை. கொசு வலைகளைக் கட்டிக் கொண்டு கோதாவில் இறங்கி விடுகின்றனர். கத்ர் இரவு கிடைக்கின்றதோ இல்லையோ, காசு நன்றாகக் கிடைக்கின்றது. ஏற்கனவே விதவிதமான, வித்தியாசமான பல்சுவைப் பதார்த்தங்கள், பாயாசங்கள், பண்டங்கள் போன்றவை குர்ஆன் ஓதும் ஹாபிழ்களுக்குப் பரிமாறப்படும். இஃதிகாஃபில் இருக்கும் இவர்களுக்கு பாக்கியமிகு ரமளானின் இந்தப் பாக்கியம் கிடைக்காமல் விட்டு விடுமா? விடாது.

உலமாக்கள் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தலாமா? இது அடுக்குமா? ஆகுமா? அவர்கள் அமல் செய்யக்கூடாதா? அதில் இக்லாஸ் இல்லை என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? என்றெல்லாம் கேட்கலாம்.

நாம் இதைக் கற்பனையாகச் சொல்லவில்லை; கதையாக அளக்கவில்லை. இவர்களது நடவடிக்கைகள் நம்மை அப்படிச் சொல்ல வைக்கின்றன. புனிதமிக்க ரமளான் இந்தப் புரோகிதர்களிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இவர்களுடைய நிலையை திருக்குர்ஆன் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றது.

தவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச் சுமக்காமல் (அதன் படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதுவோருக்குரிய உதாரணம் மிகவும் கெட்டது. அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்டமாட்டான். (அல்குர்ஆன் 62:5)

அல்லாஹ்விடம் மட்டும் தான் உதவி தேட வேண்டும் என்று திருக்குர்ஆன் சொல்கின்றது.

உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.  (அல்குர்ஆன் 1:4)

இந்த வசனத்திற்கு மாற்றமாக, பச்சையாக, பக்காவாக முஹம்மது நபி (ஸல்) அவர்களிடமும், முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியிடமும் இன்ன பிற இறந்து போன அடியார்களிடமும் பிரார்த்திக்கின்றனர். அவர்களை உதவிக்கு அழைத்து இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளைத் தகர்த்தெறிகின்றனர்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இந்த ஒரு உதாரணத்தை மட்டும் இங்கு காட்டியுள்ளோம். இந்த ஆலிம்களின் திருக்குர்ஆன் விரோதப் போக்கை அடுக்க ஆரம்பித்தால் இந்த ஏடு தாங்காது. அந்த அளவுக்கு இவர்களின் அட்டகாசமும் அநியாயமும் அளவு மீறிச் சென்று கொண்டிருக்கின்றது. இது கொள்கை விஷயத்தில் ஆலிம்களின் குர்ஆனுக்கு எதிரான போக்குக்கு ஓர் எடுத்துக்காட்டு!

சட்ட விஷயங்களை எடுத்துக் கொண்டால் உதாரணத்திற்கு முத்தலாக்கை குறிப்பிடலாம்.

இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் (மஹரிலிருந்து) ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள்.

(இரண்டு தடவை விவாகரத்துச் செய்து சேர்ந்து கொண்ட பின் மூன்றாவது தடவையாக) அவளை அவன் விவாக ரத்துச் செய்து விட்டால் அவள் வேறு கணவனை மணம் செய்யாத வரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள். (இரண்டாம் கணவனாகிய) அவனும் அவளை விவாக ரத்துச் செய்து, (மீண்டும் முதல் கணவனும் அவளும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட முடியும் எனக் கருதினால் (திருமணத்தின் மூலம்) சேர்ந்து கொள்வது குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அறிகின்ற சமுதாயத்திற்கு அவன் இதைத் தெளிவுபடுத்துகிறான்.  (அல்குர்ஆன் 2:229, 230)

ஒரே அமர்வில் மூன்று தடவைகள் கூட அல்ல, “முத்தலாக்’ என்று சொல்லி மனைவியை நிரந்தரமாக, ஒரேயடியாகப் பிரிந்து விடுவதை இந்த ஆலிம்கள் ஆதரிக்கின்றனர். அல்குர்ஆனுக்கு எதிரான ஓர் அப்பட்டமான தீர்ப்பை அளித்து, அல்லாஹ்வுக்கு எதிராக நிற்கின்றனர்.

அதிலும் கொடுமை என்னவென்றால் நேரில் கூடச் சொல்லாமல் தொலைபேசியில் சொன்னால் போதும்; அல்லது ஓர் அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பி விட்டால் போதும்; மனைவி விவாக ரத்தாகி விடுவாள் என்று தீர்ப்பளிக்கின்றனர். கணவன் மனைவியைப் பிரித்து, பிள்ளைகளின் வாழ்க்கையை துவம்சம் செய்கிறார்கள். இவர்கள் குர்ஆனைப் பின்பற்றுபவர்களா? நிச்சயமாகக் கிடையாது. இவர்கள் யூத, கிறித்தவப் பாதிரிகளைப் போன்றவர்கள்.

நபி (ஸல்) அவர்கள், “கிழக்குத் திசையிலிருந்து (இராக்கிலிருந்து) சிலர் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள்; ஆனால், அது அவர்களுடைய நெஞ்செலும்புகளைத் தாண்டிச் செல்லாது. (வேட்டைக் காரனின்) அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியின் உட-ருந்து (மறு பக்கமாக) வெளியேறிவிடுவதைப் போன்று அவர்கள் மார்க்கத்திலிருந்து வெறியேறிவிடுவார்கள். பிறகு அம்பானது வில்லின் நாண் உள்ள பகுதிக்குத் (தானாகத்) திரும்பாத வரை அவர்களும் மார்க்கத்திற்குத் திரும்பி வரவே மாட்டார்கள்என்று சொன்னார்கள்.

அவர்களின் அடையாளம் என்ன?” என்று வினவப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மொட்டைபோடுவ(தை ஒரு மரபாகவும் வழிபாடாகவும் கொண்டிருப்ப)துதான் (அவர்களின் அடையாளம்)என்று பதில் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி 7562

ஆயிரம் ரமளான் வந்தாலும் இவர்கள் மாறுவதில்லை. எனவே மக்கள் இவர்களின் மாய வலையில், தீய வலையில் விழுந்து விடாமல் அல்குர்ஆன் அடிப்படையிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை அடிப்படையிலும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண் டும். அப்படி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகத் தான், குர்ஆனின் அருமையைப் புரிந்து அதன் பக்கம் நெருங்குவதற்காகத் தான் நோன்பை அல்லாஹ் கடமையாக்கி இருக்கின்றான்.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.  (அல்குர்ஆன் 2:185)

மாண்புமிகு ரமளான் மாதத்தின் நோன்பு இந்த மாற்றத்தையும் மறுமலர்ச்சியையும் தரட்டுமாக! இந்த எல்லையை நோக்கி நமது தூய பயணம் அமையட்டுமாக!