ஆலோசனை (மஷ்ஷூரா)

நிர்வாகவியல்                        தொடர்: 8

ஆலோசனை (மஷ்ஷூரா)

இன்று பல நிர்வாகங்களில் உள்ள பிரச்சனை என்னவென்றால், “என்னவெல்லாமோ நடக்கிறது; எனக்கு ஒன்றும் தெரியாது, எனக்கு ஒன்றும் சொல்லப்படவில்லை” என சக நிர்வாகிகளைக் குறை கூறுவது மலிந்து கிடக்கும்.

ஒரு நிர்வாகத்தின் செயல்பாடுகளில் நிர்வாகிகள் அனைவரும் அமர்ந்து ஆலோசனை செய்து செயல்படுத்த வேண்டிய காரியங்கள் எவை? அவசரத் தேவைகளைக் கருதி, தலைவர் தானாக எதை எதை எல்லாம் முடிவு செய்து கொள்ளலாம்? ஆகிய இரு விஷயங்கள் பற்றிய தெளிவு இல்லாமை தான் இதற்குக் காரணம்.

இவை இரண்டிற்கும் இடையிலுள்ள வித்தியாசங்களைப் பல நிர்வாகிகள் தெரிந்து கொள்ளாதது தான், “சொல்லவில்லை’ “கேட்கவில்லை’ போன்ற பிரச்சனைகளுக்குக் காரணம்.

சில அமைப்புகளில், நிறுவனங்களில் ஒரு பட்டியல் உருவாக்கி வைத்திருப்பார்கள். இதையெல்லாம் ஆலோசனை செய்து தான் முடிவு செய்ய வேண்டும். இதையெல்லாம் தலைவர் சுயமாக முடிவு செய்து கொள்ளலாம் என பட்டியல் வைத்திருப்பார்கள். திடீரென பட்டியலில் இல்லாத ஒரு பிரச்சனை வந்து விடும். ஆகையால் இதற்குப் பட்டியல் உருவாக்குவது சாத்தியமில்லாதது.

இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால், திட்டங்கள், பிரச்சனைகள் என செயல்பாடுகள் பிரிக்கப்பட வேண்டும். திட்டங்கள் சிறிதோ பெரிதோ அதை அவசியம் ஆலோசனைக்கு உட்படுத்த வேண்டும். அப்படி ஆலோசனை செய்து திட்டங்களை நடமுறைப்படுத்தும் போது ஏற்படும் தடங்கல், சிக்கல், சிரமங்களைச் சமாளிக்க ஆலோசனைக் கூட்டம் கூட்ட வேண்டியதில்லை. ஆனால் என்ன பிரச்சனை எப்படி சமாளிக்கப்பட்டது என்பதை சக நிர்வாகிகளுக்கு விளக்க வேண்டும். இது தான் முறை; இனி இப்படித் தான் நடக்கும் என்பதையும் அனைவருக்கும் தெரிவித்து விட வேண்டும்.

ஆலோசனைக் கூட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட விவகாரத்தில், நடைமுறைப்படுத்தவிருக்கும் திட்டத்தில், நிர்வாகிகள் அனைவரும் ஒன்று கூடி பல்வேறு கோணங்களை, கருத்துக்களை அலசி ஆராய்ந்து ஒரு முடிவு செய்வதாகும்.

உங்களுக்கு எந்தப் பொருள் கொடுக்கப்பட்டாலும் அது இவ்வுலக வாழ்க்கையின் வசதிகளே. அல்லாஹ்விடம் இருப்பதே நம்பிக்கை கொண்டு தம் இறைவனையே சார்ந்திருப்போருக்கும், பெரும் பாவங்களையும், வெட்கக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்வோருக்கும், கோபம் கொள்ளும் போது மன்னிப்போருக்கும், தமது இறைவனுக்கு பதிலளித்து தொழுகையை நிலை நாட்டி தமது காரியங்களில் தமக்கிடையே ஆலோசனை செய்வோருக்கும் நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவோருக்கும், தமக்கு அநீதி இழைக்கப்பட்டால் (இறைவனிடம்) உதவி தேடுவோருக்கும் சிறந்ததும் நிலையானதுமாகும்.

அல்குர்ஆன் 42:38

ஆலோசனைக்  கூட்டத்தில் பேண வேண்டிய சில நடைமுறைகள்

  1. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும். ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத நிர்வாகிகள் மிகவும் ஆபத்தானவர்கள். ஏனென்றால் கூட்டத்தில் நடைபெற்ற வாதப் பிரதிவாதங்கள் தெரியாத காரணத்தால் முடிவு தனக்கு சாதகமானதா பாதகமானதா என்று யோசித்து சாதகமாக இருந்தால் நிறைவேற்றுவார்கள், பாதகமானது என்று சிந்தித்தால் சாக்குப் போக்கு சொல்வார்கள். அந்த முடிவின் பாதகமான அம்சங்கள் சிலவற்றைப் பேசி, தனக்கு சாதகமாக ஆள் சேர்ப்பார்கள். ஆகையால் ஒவ்வொரு நிர்வாகியும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வது மிக மிக அவசியம்.
  2. ஒரு நிர்வாகம் விரும்பினால் நிர்வாகிகள் அல்லாத பலரையும் ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைக்கலாம். அவர்கள் துறை சார்ந்த நிபுணர்களாகவோ, சிறந்த களப் பணியளர்களாகவோ, புரவலர்களாகவோ, இருக்கலாம். ஆனால் ஒரு நிர்வாகத்தில் பணக்காரர்கள், நாவன்மை மிக்கவர்கள் முடிவுகளை தங்கள் வசதிக்குத் திருப்பி விடாமல் பார்த்துக் கொள்வது அவசியம். பல வேலைகளில் தாங்கள் களமிறங்க வேண்டி வருமே என்ற பயத்தில் முடிவுகளை தங்களுக்குச் சாதகமாகத் திருப்ப முயற்சி செய்வார்கள். இது இயக்கம் அல்லது நிறுவனம் வீரியமிகு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்துவதில் முட்டுக்கட்டையாக ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  3. சில ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும் இடங்களைப் பார்த்தால் சந்தைக் கடை போல் இருக்கும். எல்லோரும் ஒரே நேரத்தில் பேசிக் கொண்டிருப்பார்கள். யார் பேச்சும் யாருக்கும் புரியாது. ஆலோசனைக் கூட்டத்துக்குள்ளேயே ஆங்காங்கே குட்டி குட்டி ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கும். நேரமெல்லாம் வீண் விரயமான பிறகு அவசர அவசரமாக ஓர் முடிவை எடுத்து விட்டுக் கலைந்து சென்று விடுவார்கள். இந்த நிலை ஒரு நிர்வாகத்தின் அழிவுக்குப் போதுமானது. ஆகையால் இதற்கு இடமளித்து விடக்கூடாது.
  4. நிர்வாகிகளை ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைக்கும் போதே இடம், நேரம் குறிப்பிட்டு அழைப்பது போல் விவாதப் பொருள் (ஆஞ்ங்ய்க்ஹ) என்னவென்று தெரிவித்து விட வேண்டும். அப்போது தான் விவாதிக்கும் பொருள் சம்பந்தமான முழு விபரங்களுடன் ஆலோசனைக் கூட்டத்திற்கு வருவார்கள்.
  5. ஆலோசனைக் கூட்டம் நடக்கும் போது தலைவர், விவாதிக்கப்படும் விஷயங்களை முன்மொழிய மற்றவர்கள் கருத்துக் கூற வேண்டும். ஒருவர் பேசும் போது இன்னொருவர் எக்காரணம் கொண்டும் பேசக் கூடாது.
  6. முடிவெடுக்கும் பொறுப்பில் உள்ள நிர்வாகி, விவாதிக்கப்படும் விஷயத்தில் முழுத் தகவல்களை, அதன் சாதக பாதகங்களைத் தெரிந்து வைத்திருப்பது மிக நல்லது.

7, பெரும்பான்மை அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டிய விஷயங்கள் எவை? நிர்வாகிகளின் கருத்துக்களைக் கேட்டு, தலைவர் முடிவு எடுக்க வேண்டிய விஷயங்கள் எவை? என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கொள்கை அடிப்படையிலான முடிவு என்றால் ஒரு முறை எல்லா நிர்வாகிகளிடமும் கருத்துக் கேட்டு விட்டு, தலைவர் ஒரு முடிவு செய்து கொள்வது தான் சிறந்தது. ஆனால் ஒரு திட்டம் தீட்ட வேண்டும் என்றால், அதில் பொருளாதாரத் தேவைகள் உள்ளது என்றால் பெரும்பான்மை அடிப்படையில் முடிவு செய்து கொள்ளலாம்.

முடிவெடுத்தல்

பல தலைவர்கள் சுறுசுறுப்பாக இயங்குவார்கள்; மிக நன்றாக செயல்படுவார்கள். ஆனால் ஒரு முடிவு எடுக்க வேண்டிய நிலை வந்தால் வேறு ஆள் மீது போட்டு விட்டு ஓடி விடுவார்கள்.

அடிப்படையில் முடிவு எடுக்கும் திறமை சிலருக்கு நிறைந்து இருக்கும். அவர்கள் இயற்கையான தலைவர்கள்.

சில இயற்கைத் தகுதிகளோடு சில நுட்பங்களையும் தெரிந்து கொண்டால் மிக எளிதாக இருக்கும். அவை:

  1. ஆலோசனை செய்யப்படும் விஷயத்தில் மொத்தம் எத்தனை கருத்துக்கள் வந்துள்ளன என்று வரிசைப்படுத்துவது.
  2. ஒவ்வொரு கருத்தின் சாதக, பாதகங்களையும் அலசுவது.
  3. தன்னலமில்லாத, இறைவனுக்கு அஞ்சிய மனோநிலையை உருவாக்கிக் கொண்டு, அலசப்பட்ட கருத்துக்களிலிருந்து ஒன்றை முடிவாகத் தேர்வு செய்வது.
  4. முடிவை, சக நிர்வாகிகளுக்குப் புரியும் வண்ணம் விளக்கிக் கூறுவது.

எடுத்த முடிவை நடைமுறைப்படுத்துதல்

பல நிர்வாகங்களில் வாரம் அல்லது மாதம் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடக்கும். பல முடிவுகளை எடுப்பார்கள். ஆனால் ஒன்றும் நடைமுறைக்கு வராது. செயல்பாட்டிற்கு வந்த சில முடிவுகளும் கூட ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது போல் இருக்காது. இது அந்த நிர்வாகத்திற்குக் கீழுள்ள மக்களிடம் நிர்வாகத்தைப் பற்றிய நம்பகத் தன்மை குறைய வழி செய்து விடும். பல தலைவர்கள் வழியில் கிடக்கும் துரும்பைக் கூட மலையாகப் பார்ப்பார்கள். முடிவை மாற்றியதற்குப் பல பொருந்தாத காரணங்களைக் கூறுவார்கள்.

அதே நேரத்தில் எடுத்த முடிவை விட சிறந்ததைக் கண்டால் ஆலோசனை செய்த சக நிர்வாகிகளை அழைத்து, காரண காரியங்களை விளக்கிக் கூறி முடிவை மாற்றலாம். அதுவல்லாத எந்தக் காரணத்துக்காகவும் மாற்ற கூடாது

காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.

அல்குர்ஆன் 3:159

மோதல், கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் நிர்வகித்தல் (ஈர்ய்ச்ப்ண்ஸ்ரீற் ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற்)

ஒரு மனிதன் மட்டும் ஒரு வேலையைச் செய்யும் வரை எந்தப் பிரச்சனையும் இருக்காது. ஆனால் இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒரு வேலையைச் செய்ய ஆரம்பித்தால்  மாறுபட்ட அபிப்ராயங்கள், முரண்பாடுகள், சண்டை என பிரச்சனைகளும் தொடங்கி விடும்.

அப்படி ஏற்படும் பிரச்சனைகளை, பல நிர்வாகங்களில் முக்கிய பொறுப்பு வகிக்கும் நிர்வாகிகளே ஊதிப் பெரிதாக்குவார்கள். தனது நிர்வாகத்தின் உறுப்பினர்களுக்கு மத்தியில் எப்பொழுதும் பிரச்சனை இருந்து கொண்டே இருப்பது தான் தனது பதவிக்குப் பாதுகாப்பு என்று நினைப்பார்கள். இவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் நிறுவனத்தை, அமைப்பை அழிப்பதற்கான வேலையில் நேரடியாகவே இறங்கி விட்டார்கள் எனலாம்.

ஆகையால் ஒரு நிர்வாகத்திற்குள் ஏற்படும் பிரச்சனைகளை உடனே களைய வேண்டும். அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என இன்றைய நிர்வாகவியல் கல்வியில் போதிக்கப்படுபவற்றைப் பார்ப்போம்.

மோதல் அல்லது பிரச்சனை ஏன் ஏற்படுகிறது?

  1. ஒரு நிர்வாகத்திற்குக் கீழ் இருக்கும் இரண்டு தனி நபர்களுக்கு மத்தியிலோ, அல்லது இரண்டு குழுக்களுக்கு மத்தியிலோ அவர்களது குறிக்கோளை அடையும் முயற்சியில் மறைமுகமான அல்லது வெளிப்படையான கருத்து வேறுபாடுகள், மோதல்கள் ஏற்படும்.
  2. தனி நபர்களுக்கிடையிலோ, குழுக்களுக்கிடையிலோ, நாடுகளுக்கு இடையிலோ ஏற்படும் ஒப்பந்த முறிவு.
  3. கொள்கை பேதங்கள் (தர்ப்ப் ஸ்ரீர்ய்ச்ப்ண்ஸ்ரீற்): ஒரு நிர்வாகம், இயக்கம், தனது அடிப்படைக் கொள்கையிலிருந்து மாறிச் சென்றால், அதை அந்த நிர்வாகத்தில் உள்ள மற்றவர்கள் எதிர்த்தால் ஏற்படும் மோதல்.
  4. ஒரு நிர்வாகத்தின் கீழ் உள்ளவர்களுக்குப் பொறுப்புகள் பிரிக்கப்பட்ட பின், ஒருவர் பொறுப்பில் மற்றவர் அவசியமில்லாமல் தலையிடுவதால் மோதல் ஏற்படும்.

மோதல், சண்டைகள், பிரச்சனைகள் காரணமாக ஏற்படும் விளைவுகள்

  1. நிர்வாகிகள் மத்தியில் ஏற்படும் மன அழுத்தம், உடல் பாதிப்புகள்.
  2. தொடர்புகள் குறைந்து போய்விடும். இதனால் செயல்பாடுகளில் தொய்வு ஏற்படும்.
  3. எல்லோருடைய கவனமும் பிரச்சனையில் இருக்கும். அதனால் இயங்கு திறன் குறைந்து, செயல்பாடுகள் நின்று விடும்.
  4. எதிர்மறை மனோநிலை வளர்ந்து, ஒருவர் பற்றி மற்றவர் திரித்துப் பேசத் தொடங்குவார்கள். யூகங்களை நம்பி அதன் அடிப்படையில் காரியங்களை அமைத்துக் கொள்வார்கள்.
  5. எல்லா ஆற்றலும் அப்போதைய சண்டையில் வெற்றி பெறுவதற்காக வீண் விரயம் செய்யப்படும். இதனால் உண்மையான குறிக்கோளிலிருந்து விலகி விடுவார்கள்.

தனி நபர் பிரச்சனைகளில் ஏற்படும் மோதல்களைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள்

நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.

அல்குர்ஆன் 49:10

  1. பிரச்சனை மேலும் பெரிதாகாமல் இருக்க, இருவரையும் மூன்று நாட்கள் பிரிந்திருக்கச் செய்வது. (ஈர்ர்ப்ண்ய்ஞ் ர்ச்ச் டங்ழ்ண்ர்க்)
  2. இந்த நேரத்தில் இருவரின் நடவடிக்கைகளையும் உன்னிப்பாகக் கவனித்து வருவது.
  3. இக்காலத்தில் இருவரையும் தனித் தனியே சந்தித்து ஒருவரைப் பற்றி ஒருவருக்கு நல்ல எண்ணத்தை ஏற்படுத்துவது.
  4. சமாதானம் தான் ஒரே வழி என்பதைப் புரிய வைப்பது, அதற்காக நிர்பந்திப்பது, ஏற்பாடுகளைச் செய்வது.
  5. சம்பந்தப்பட்ட இருவரையும் நேருக்கு நேர் அழைப்பது.
  6. நாம் ஒரு குழுவாகச் செயல்பட்டதால் ஏற்பட்ட பிரச்சனை, தனி நபர் பிரச்சனை அல்ல என்பதைப் புரிய வைப்பது.
  7. பழைய விஷயங்களை விட்டு விட்டு, குறிக்கோளில் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவது.
  8. இரு தரப்பையும் அவரவர்கள் தரப்பை தெளிவுபடுத்துவதற்கான வாய்ப்பளிப்பது. அந்த நேரத்தில் யூகத்தின் அடிப்படையில் பேசுவதற்கு வாய்ப்பளிக்கக் கூடாது.
  9. தீர்ப்பளிப்பது, அல்லாஹ்வுடைய அச்சத்தை ஏற்படுத்துவது, அல்லாஹ் எவ்வளவு கருணையாளன் என்பதை நினைவுபடுத்துவது, தவறு ஒருவர் மீது என்று தெளிவாகத் தெரியும் போது சிறிய தண்டனைகள் வழங்குவது, இருவரும் ஒருவரிடம் மற்றொருவர் மன்னிப்பு கேட்கும் நிலைக்கு நிர்பந்திப்பது, நடந்தவற்றை எழுதி இருவரிடமும் கையெழுத்து வாங்குவது, விசாரணையில் கலந்து கொண்ட மற்றவர்களும் சாட்சிகளாகக் கையெழுத்திடுவது.

குழுக்களுக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சனைகளை அணுகும் முன்

  1. குறிக்கோளின் பக்கம் முழுக் கவனத்தையும் மாற்றி விடுவது.
  2. நமது சக்தி, இந்தச் சண்டையில் விரயமாகின்றது; இந்தச் சக்தி முழுவதும் நமது வளங்களை பெருக்கப் பயன்பட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இரு தரப்பினருக்கும் புரிய வைப்பது.
  3. பொது எதிரியை அடயாளம் காண்பது. எப்போதுமே ஒரு குழு இரண்டாக உடைந்தால் அல்லது கருத்து வேறுபாடு ஏற்பட்டால் ஒரு பொது எதிரி வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ அதற்குக் காரணமாக இருப்பது இயற்கை என்பதை அடையாளம் காட்டினால் பிரச்சனை இலகுவாகத் தீர்ந்து விடும்.
  4. சில நேரங்களில் ரோஷம் (ஊஞ்ர்) காரணமாக ஏற்படும் சண்டைகளில் ஒன்றாக அமர்ந்து பேசுவதற்கே ஒரு சாரார் மறுக்கக் கூடும். அந்த நேரத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துத் தான் ஆக வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்! அக்கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

அல்குர்ஆன் 49:9

தொடக்கம்

இத்துடன் இந்தத் தொடரை முடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஆனால் அதற்கு முடிவு என்று தலைப்பிடாமல் தொடக்கம் என்பது தலைகீழாகத் தெரிகிறதே என்று கேட்கலாம். படித்தவற்றைக் கொண்டு பணிகளைத் தொடங்க வேண்டும் என்பதற்காகத் தான்.

பல நிர்வாகங்களில் வசதி வாய்ப்புகள் நிரம்பி வழியும். ஆனால் தலைவர்கள் தூங்கி வழிவார்கள். நிர்வாகத்திற்குக் கீழ் உள்ள மக்கள் தலைவர்களைத் தூண்டி விட்டால் தான் வேலைகள் நடக்கும். தொடங்கு திறன் (ஒய்ண்ற்ண்ஹற்ண்ஸ்ங்) நிரம்பப் பெற்றவர்கள் நிர்வகிக்கும் நிர்வாகத்தில் இந்த நிலை இருக்காது.

நம்மில் பலர் நிர்பந்தம் ஏற்பட்டால் தான் செயல்படுவார்கள். நிர்பந்தத்தில் செயல்படுவது, பிரச்சனைகள் ஏற்பட்டால் தீர்த்து வைப்பது, நிர்வாகத்தில் வழமையாக நடைபெறும் சில காரியங்களைத் தொடர்வது, இவை இவை மிகப் பெரும் சாதனைகள் என்று மார்தட்டிக் கொள்வது, இவையனைத்தும் தொடங்கு திறன் இல்லாதவர்களின் அடையாளங்கள்.

தொடங்கு திறனை ஆங்கிலத்தில் ண்ய்ண்ற்ண்ஹற்ண்ஸ்ங் என்று கூறுவார்கள், புதுப்புது திட்டங்களையும், திட்டங்களை வெற்றிகரமாக முடிக்கும் யுக்திகளையும், தடைகளைக் கண்டு துவண்டு விடாத மனோ நிலையையும் பெற்றவர்கள் தான் தொடங்கு திறன் கொண்டவர்கள்.

திட்டமிடுதல் என்பது செய்யும் வேலையில் பாதியாகும். இது இன்றைய நிர்வாகவியல் கல்வியின் நம்பிக்கை. நபி (ஸல்) அவர்கள் வாழ்க்கை முழுவதும் திட்டமிடுதல்கள் நிறைந்து காணப்படுவதைப் பார்க்க முடியும்.

மதீனாவுக்கு ஹிஜ்ரத் புறப்பட இரண்டாண்டுகளுக்கு முன்பே முடிவு செய்து, அத்திட்டத்தைக் கட்டம் கட்டமாக அவர்கள் நடைமுறைப்படுத்திய விதம். மக்கா வெற்றிப் போருக்கு அவர்கள் திட்டமிட்ட முறை, அதை நடைமுறைப்படுத்திய விதம்.

ஆனால் இன்று திட்டமிடலுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று கூறும் அளவுக்குத் தான் நமது நிலை இருக்கிறது. ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மக்கள் அனைவரும் வந்து விடுவார்கள். ஆனால் அப்போது தான் நிர்வாகிகள் சிலர், எப்படி கூட்டத்தை நடத்தப் போகிறோம் என்று ஆலோசனை செய்து கொண்டிருப்பார்கள்.

எந்தக் காரியமானாலும் அதை முன்கூட்டியே ஆலோசனை செய்து, முடிவுகள் செய்து விட வேண்டும். கடைசி நேரத்தில் அங்கும் இங்குமாக பதட்டத்தில் ஓடக் கூடாது. திட்டமிடுதலை, சுருக்கமாகப் பின்வருமாறு பட்டியலிடலாம்.

  • திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு என்ன செலவாகும் என்பதை கணக்கிட்டுக் கொள்வது.
  • திட்டமிடப்பட்ட வேலையை முடிக்க எவ்வளவு நாளாகும் என்பதை கணக்கிட்டுக் கொள்வது.
  • திட்டத்தில் யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு என்பதை பிரித்தளிப்பது.
  • திட்டத்தை நிறைவேற்றத் தேவையானவற்றை (ஈட்ங்ஸ்ரீந் ப்ண்ள்ற்) பட்டியலிட்டுக் கொள்வது. அது நிறைவேற்றப்பட்டு விட்டதா என இடையிடையே சோதித்துக் கொள்வது.

பல நேரங்களில் திட்டமிடுதல் என்ற பெயரால் ஒன்றும் செய்யாமல் இருப்பதற்காக, அது இல்லை, இது இல்லை என்று கூறி எல்லாவற்றையும் தட்டிக் கழிக்க வழி இருக்கிறது. இந்த முறையை “மிகையான திட்டமிடல்” (ஞஸ்ங்ழ் டப்ஹய்ய்ண்ய்ஞ்) என்று கூறுவார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும். நடுநிலை பேணப்பட வேண்டும். கையில் உள்ள வளங்களைக் கொண்டு காரியங்களை முடிக்க வேண்டும்.

நம்மில் பலருக்குத் தடைகளைக் கண்டு பெரும் பயம். தடைகளைக் காரணம் காட்டி வீரியமான புதுத் திட்டங்களை செயல்படுத்த மாட்டார்கள். எதிர்ப்புகள், விமர்சனங்கள் இல்லாமல் வேலையை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

நாம் செய்யும் எந்தச் செயலையும் எதிர்ப்புகள் மற்றும் விமர்சனங்கள் தான் மெருகூட்டுகின்றன என்பதே உண்மை.

ஆகையால் ஒரு திட்டத்தை, செயல்பாட்டைச் சிந்திக்கும் போதே தடைகளையும் சிந்தித்து அதை எதிர்கொள்ளும் முறையையும் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

பல நேரங்களில் நிர்வாகிகள் தடைகளைக் காரணம் காட்டித் தங்கள் கோழைத்தனத்தை மறைத்துக் கொள்வார்கள். ஆகையால் நல்ல முறையில் திட்டமிட்டு, தடைகளை எதிர் கொள்வதற்கான வழிமுறைகளோடு அல்லாஹ்வின் மேல் நம்பிக்கை வைத்து செயல்பாடுகளைத் தொடங்குபவர்கள் அல்லாஹ்வின் நேசராவார்கள்.

உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.

அல்குர்ஆன் 3:159