ஸஹருக்கு பாங்கு சொல்வது குழப்பத்தை ஏற்படுத்துமா?

ஸஹருக்கு பாங்கு சொல்வது குழப்பத்தை ஏற்படுத்துமா?:

ஹதீஸ் மறுப்பாளர்களுக்கு பதில்!

தற்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் எழுச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் எரிச்சல் கண்டவர்கள் நம்மை பார்த்து, ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று அவதூறு பரப்பி வருகின்றார்கள்.

ஆனால் உண்மை என்ன தெரியுமா?

இப்படி நம்மைப் பார்த்து அவதூறு பரப்புபவர்கள் தான் உண்மையில் ஹதீஸ் மறுப்பாளர்களாக உள்ளார்கள்.

ஸஹருக்கு பாங்கு சொல்வது நபி வழி என்பதை நாம் அறிவோம்.

ஸஹருக்கு பாங்கு சொல்வோம்; நபி வழியைப் பேணுவோம்!

صحيح البخاري

621 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ يَمْنَعَنَّ أَحَدَكُمْ – أَوْ أَحَدًا مِنْكُمْ – أَذَانُ بِلاَلٍ مِنْ سَحُورِهِ، فَإِنَّهُ يُؤَذِّنُ – أَوْ يُنَادِي بِلَيْلٍ – لِيَرْجِعَ قَائِمَكُمْ، وَلِيُنَبِّهَ نَائِمَكُمْ، وَلَيْسَ أَنْ يَقُولَ الفَجْرُ – أَوِ الصُّبْحُ -» وَقَالَ بِأَصَابِعِهِ وَرَفَعَهَا إِلَى فَوْقُ وَطَأْطَأَ إِلَى أَسْفَلُ حَتَّى يَقُولَ هَكَذَا وَقَالَ زُهَيْرٌ: «بِسَبَّابَتَيْهِ إِحْدَاهُمَا فَوْقَ الأُخْرَى، ثُمَّ مَدَّهَا عَنْ يَمِينِهِ وَشِمَالِهِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் சஹர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் பாங்கு உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில் அவர் இரவிலேயே பாங்கு சொல்வது உங்களில் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருப்போர் திரும்பி வருவதற்காகவும், உங்களில் தூங்கிக் கொண்டிருப்போரை உணர்த்துவதற்காகவும் தான். ஃபஜ்ர் அல்லது சுப்ஹு நேரம் வந்து விட்டது என்பதை அறிவிப்பதற்காக அல்ல.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல் : புகாரி 621

மக்கள் உறக்கத்திலிருந்து விழித்து ஸஹர் செய்ய வேண்டியுள்ளதால், ஸஹர் செய்வதற்காக மக்களை எழுப்பிவிடக்கூடிய ஏற்பாடு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் செய்யப்பட்டிருந்தது.

பிலால் (ரலி), அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) ஆகிய இரண்டு முஅத்தின்கள் இதற்காக நியமிக்கப்பட்டிருந்தனர். இருவரது குரலும் மக்களுக்கு நன்கு பரிச்சியமாகி இருந்தது. ரமழான் மாதத்தில் ஸஹருக்கு ஒரு பாங்கும், ஸுப்ஹ் தொழுகைக்கு ஒரு பாங்கும் என இரண்டு பாங்குகள் சொல்ல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

صحيح البخاري

2656 – حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ بِلاَلًا يُؤَذِّنُ بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُؤَذِّنَ – أَوْ قَالَ حَتَّى تَسْمَعُوا أَذَانَ – ابْنِ أُمِّ مَكْتُومٍ» وَكَانَ ابْنُ أُمِّ مَكْتُومٍ رَجُلًا أَعْمَى، لاَ يُؤَذِّنُ حَتَّى يَقُولَ لَهُ النَّاسُ: أَصْبَحْتَ

‘பிலால் இரவில் பாங்கு சொல்வார். இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்லும் வரை நீங்கள் உண்ணுங்கள்! பருகுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2656

மற்றொரு அறிவிப்பில்,

صحيح البخاري

1918 – حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، وَالقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّ بِلاَلًا كَانَ يُؤَذِّنُ بِلَيْلٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُوا وَاشْرَبُوا حَتَّى يُؤَذِّنَ ابْنُ أُمِّ مَكْتُومٍ، فَإِنَّهُ لاَ يُؤَذِّنُ حَتَّى يَطْلُعَ الفَجْرُ»، قَالَ القَاسِمُ: وَلَمْ يَكُنْ بَيْنَ أَذَانِهِمَا إِلَّا أَنْ يَرْقَى ذَا وَيَنْزِلَ ذَا

இரண்டு பாங்குகளுக்கும் இடையே எவ்வளவு இடைவெளி இருக்கும் என்பதை விளக்கும் போது, அவர் பாங்கு சொல்லி விட்டு இறங்குவார்; இவர் பாங்கு சொல்வதற்காகச் செல்வார் என்று ஆயிஷா (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் விளக்கமளித்ததாக இடம் பெற்றுள்ளது.

நூல்கள்: புகாரி 1919

மற்றொரு அறிவிப்பில்,

صحيح البخاري

1921 – حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «تَسَحَّرْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَامَ إِلَى الصَّلاَةِ»، قُلْتُ: كَمْ كَانَ بَيْنَ الأَذَانِ وَالسَّحُورِ؟ ” قَالَ: «قَدْرُ خَمْسِينَ آيَةً»

ஸஹருக்கும், சுப்ஹுக்கும் இடையில் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவுக்கு இடைவெளி இருக்கும் என்று அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

நூல் : புகாரி 1921

ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் என்பது சாதாரணமாக நிறுத்தி நிதானமாக ஓதினால் இருபது நிமிடத்திலிருந்து அரை மணி நேரம் வரை தேவைப்படும். எனவே இரண்டு பாங்குக்கும் இடையில் அரை மணி நேரம் இடைவெளி விடலாம்.

ஸுபுஹுக்குச் சிறிது நேரம் இருக்கும் போது ஒரு பாங்கு சொல்லி மக்களை விழித்தெழச் செய்யும் வழக்கம் பெரும்பாலும் எங்குமே இன்று நடைமுறையில் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த இந்த சுன்னத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும்.

முதல் பாங்கு ஸஹருக்கு எனவும், இரண்டாவது பாங்கு சுபுஹுக்கு எனவும் மக்களுக்குத் தெளிவாக விளக்கிவிட்டு இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழகத்தின் பல பகுதிகளில் மக்களை ஸஹருக்கு எழுப்பி விடுவதற்காகப் பலவிதமான நடைமுறைகள் உள்ளன.

நள்ளிரவு இரண்டு மணிக்கெல்லாம் ஒலிபெருக்கிக் குழாய் மூலம் பாடல்களைப் போட ஆரம்பித்து விடுகின்றனர்.

நன்மைகளை அதிகமதிகம் பெற்றுத் தரக்கூடிய புனித மாதத்தில், புனிதமான நேரத்தில் இசைக் கருவிகளுடன் பாடல்களை ஒலிபரப்பி, பாவத்தைச் சம்பாதித்து வருகின்றனர். இது ஒட்டு மொத்த ஜமாஅத்தினரின் ஏற்பாட்டின் படி நடந்து வருகின்றது.

ஷைத்தானுக்கு விலங்கு போடப்படும் மாதத்தில் ஷைத்தானை அவிழ்த்து விடுவதை விடக் கொடுஞ்செயல் வேறு என்ன இருக்க முடியும்? இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

நள்ளிரவு இரண்டு மணிக்கு ஆரம்பிக்கும் பாடல்கள் சுபுஹ் வரை சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விடாமல் அலறிக் கொண்டிருக்கும்.

பிற மதத்தவர்களின் உறக்கத்தைக் கெடுத்து, அவர்கள் இஸ்லாத்தை வெறுப்பதற்கு இது காரணமாக அமைந்து விடும்.

பின்னிரவில் எழுந்து தொழுவதே சிறப்பு என்ற அடிப்படையில் பின்னிரவில் எழுந்து தொழுபவர்களின் காதுகளைக் கிழிக்கும் வகையில் ஒலிபெருக்கியை அலற விட்டு, பாவத்தைக் கட்டிக் கொள்கிறார்கள்.

இன்னும் சில பகுதிகளில் இரவு ஒரு மணியிலிருந்தே பக்கிரிசாக்கள் கொட்டு மேளத்துடன் தெருத்தெருவாகப் பாட்டுப் பாடிச் செல்லும் வழக்கம் உள்ளது.

ஸஹருக்காக இரவு ஒரு மணிக்கும், இரண்டு மணிக்கும் மக்களை எழுப்பி விடக் கூடிய அதிகாரத்தை இவர்களுக்கு யார் வழங்கினார்கள்?

கடைசி நேரத்தில் ஸஹர் செய்வதே சிறந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க, நள்ளிரவு இரண்டு மணிக்கும், மூன்று மணிக்கும் மக்களின் உறக்கத்தைக் கெடுப்பது குற்றமாகும். இது போன்ற செயல்களைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும்.

அல்லாஹ்வுடைய தூதர் காட்டிந்தந்த இந்த ஸஹர் பாங்கை நடைமுறைப்யைபடுத்தினால் இத்தகைய மார்க்கத்திற்கு முரணான நடைமுறைகள் ஒழிந்துவிடும்.

மேற்கண்ட நபிகளாரின் வழிகாட்டுதல் அடிப்படையில் நாமும் ஸஹர் நேரத்தை அறிவிப்புச் செய்ய பாங்கு சொல்ல வேண்டும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மர்கஸ்களில் இந்த நபிவழி பேணப்படுகின்றது. இந்த நபிமொழியை அறியாதவர்களுக்கு இந்தச் செய்தியைக் கொண்டு சேர்த்து அவர்களும் அல்லாஹ்வுடைய தூதருடைய வழிகாட்டுதலைப் பின்பற்ற நம்மால் இயன்ற முயற்சிகளை செய்ய வேண்டும்.

குர்ஆன் ஹதீசைச் சரியாக பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் ஜாக் என்ற இயக்கத்தினர் ஸஹருக்கு பாங்கு சொல்லும் நபிவழியைப் பின்பற்றினால் குழப்பம் ஏற்படும் என்று சொல்லி ஹதீஸை நிராகரித்துள்ளனர்.

இது குறித்து அவர்களது இதழில் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு அவர்களது உளறலும், அதற்கு நமது விளக்கத்தையும் இங்கே காண்போம்.

ஸஹர் பாங்கு குழப்பமா?:

அல்ஜன்னத் மாத இதழில் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும் போது,, ஸஹர் பாங்கு சொல்வதால் குழப்பம் ஏற்படும் என்று கூறி, ஸஹர் பாங்கு சொல்லத் தேவையில்லை என்று எழுதியுள்ளார்கள்.

ஹதீஸைச் செயல்படுத்தினால் குழப்பம் ஏற்படும் என்று மத்ஹபுவாதிகள் கூறிய அதே காரணத்தை இப்போது இவர்கள் கூறியுள்ளார்கள் என்பதைப் பார்க்கும் போது இவர்கள் குர்ஆன், ஹதீஸை விட்டு விலகி எங்கோ சென்று விட்டார்கள் என்பதையே இது காட்டுகின்றது.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழிகெட்டு விட்டார்.

திருக்குர்ஆன் 33:36

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஒன்றைக் கற்றுத் தந்திருக்கும் போது, மனோ இச்சையின் அடிப்படையில் அதை மறுப்பது தெளிவான வழிகேடாகும் என்பதை இந்த வசனம் விளக்குகின்றது.

இந்த ஹதீஸை நிராகரிக்க ஜாக் இயக்கம் சொல்லும் காரணம் இதுதான்:

தூங்குபவர்கள் எழுந்து ஸஹர் செய்ய வேண்டும் என்ற காரணத்தை மட்டும் அடிப்படையாக வைத்துச் சொல்லப்பட்டதாகும். ஸஹர் நேரத்தை மக்களுக்குத் தெரிவிப்பது தான் இதன் நோக்கம். இன்று நேரத்தைத் தெரிந்து கொள்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் கையாளப்படுகின்றன. நேரத்தை அறிந்து கொள்வது என்ற காரணம் நிறைவேறிவிடுமானால் அதுவே போதுமானதாகக் கொள்ளலாம்

என்று வியாக்கியானம் கூறியுள்ளனர்.

இவர்கள் கூறுகின்ற காரணத்துக்காகத் தான் ஸஹர் பாங்கு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. வணக்க வழிபாடுகளைப் பொருத்தவரை ஒரு காரணத்துக்காக அது ஏற்படுத்தப்பட்டாலும் அது தொடர் வணக்கமாக ஆக்கப்பட்டால் அதை மாற்ற முடியாது.

தொழுகைக்கு அழைக்கப்படும் பாங்கை எடுத்துக் கொள்வோம்.

صحيح البخاري

606 – حَدَّثَنَا مُحَمَّدٌ هُوَ ابْنُ سَلاَمٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الوَهَّابِ الثَّقَفِيُّ، قَالَ: أَخْبَرَنَا خَالِدٌ الحَذَّاءُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «لَمَّا كَثُرَ النَّاسُ» قَالَ: «ذَكَرُوا أَنْ يَعْلَمُوا وَقْتَ الصَّلاَةِ بِشَيْءٍ يَعْرِفُونَهُ، فَذَكَرُوا أَنْ يُورُوا نَارًا، أَوْ يَضْرِبُوا نَاقُوسًا فَأُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ الأَذَانَ، وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ»

தொழுகைக்கான நேரத்தை மக்களுக்கு அறிவிப்பதற்காகத் தான் பாங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. மக்களின் எண்ணிக்கை அதிகமான போது, அவர்கள் அறிந்திருக்கின்ற ஏதாவது ஒரு முறையில் தொழுகையின் நேரத்தை அறிந்து கொள்ள ஆலோசித்தனர். அப்போது நெருப்பை மூட்டுவதன் மூலமோ, மணி அடிப்பதன் மூலமோ அறிந்து கொள்ளலாம் என கருத்துச் சொல்லப்பட்டது. ஆனால் பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால் (ரலி) கட்டளையிடப்பட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல்: புகாரி 606

தொழுகையின் நேரத்தை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான் தொழுகைக்கான பாங்கின் நோக்கம் என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இன்று நேரத்தைத் தெரிந்து கொள்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் கையாளப்படுகின்றன. நேரத்தை அறிந்து கொள்வது என்ற காரணம் நிறைவேறிவிடுமானால் அதுவே போதுமானதாகக் கொள்ளலாம் என்று இவர்கள் கூறும் வியாக்கியானத்தின் அடிப்படையில் ஐவேளைத் தொழுகைக்கு பாங்கு சொல்லத் தேவையில்லை என்று இவர்கள் வாதிடுவார்களா?

காரணத்தோடு ஒரு விஷயம் சொல்லப்பட்டால் அந்தக் காரணம் இல்லாவிட்டால் பின்பற்றத் தேவையில்லை என்பது வணக்க வழிபாடுகளுக்குப் பொருந்தாது என்பதை விளங்கிக் கொள்ள இதுவே போதுமானதாகும்.

தங்களது கருத்தை நியாயப்படுத்துவதற்காக மேலும் சில வாதங்களையும் முன் வைத்துள்ளனர்.

இரண்டு பாங்குக்கும் இடையிலுள்ள இடைவெளி மேடையில் ஏறி இறங்கும் நேரம் தான் என்று ஹதீஸில் இடம் பெறுகின்றது. அதாவது இரண்டு பாங்குக்கும் இடையில் அதிகப்படியாக ஐந்து நிமிட இடைவெளி தான் இருக்கும் என்று தெரிய வருகின்றது… ஐந்து நிமிட இடைவெளிக்குள் இரண்டு பாங்குகள் சொல்லும் போது மக்களிடம் குழப்பமான நிலை ஏற்படும்

என்றும் ஜாக் பத்திரிகையில் கூறியுள்ளனர்.

மேடையில் ஏறி, இறங்கும் நேரம் தான் என்று ஒரு அறிவிப்பாளர் கூறுவதை மட்டும் அடிப்படையாக வைத்து, ஐந்து நிமிட இடைவெளி என்று முடிவு செய்ய முடியாது. ஏனெனில் மற்றொரு அறிவிப்பில்,

صحيح البخاري

1921 – حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «تَسَحَّرْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَامَ إِلَى الصَّلاَةِ»، قُلْتُ: كَمْ كَانَ بَيْنَ الأَذَانِ وَالسَّحُورِ؟ ” قَالَ: «قَدْرُ خَمْسِينَ آيَةً»

ஸஹருக்கும், சுப்ஹுக்கும் இடையில் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவுக்கு இடைவெளி இருக்கும் என்று அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

நூல் : புகாரி 1921

ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் என்பது சாதாரணமாக நிறுத்தி நிதானமாக ஓதினால் இருபது நிமிடத்திலிருந்து அரை மணி நேரம் வரை தேவைப்படும். எனவே இரண்டு பாங்குக்கும் இடையில் அரை மணி நேரம் இடைவெளி விடலாம். ஆனால் இவர்களாக ஐந்து நிமிட இடைவெளி என்று தீர்மானித்துக் கொண்டு அதனால் குழப்பம் ஏற்படும் என்று கூறுகின்றனர்.

ஒரே ஊரில் பல பள்ளிகள் இருப்பதால் எல்லா பள்ளிகளிலும் பாங்கு சொல்லும் போது இது முதலாவதா, இரண்டாவதா என்பது தெரியாமல் மக்களிடம் குழப்பம் அதிகரித்து விடும் என்றும் கூறியுள்ளனர்.

ஸஹர் பாங்கு என்ற நபிவழியைப் புறக்கணிப்பதற்காக, நேரம் அறிந்து கொள்ள எத்தனையோ வழிமுறைகள் இருப்பதாக வாதிட்டார்கள். ஆனால் அதே சமயம், இரண்டு பாங்கு சொல்லப்படும் போது பாங்கின் நேரத்தை வைத்து இது எந்த பாங்கு என்பதைத் தீர்மானிக்கலாம் என்று கூறாமல் குழப்பம் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர் என்றால் இவர்களுக்கு ஹதீஸைச் செயல்படுத்துவதில் எந்த அளவுக்கு ஈடுபாடு உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இந்த ஹதீஸை எப்படியாவது நிராகரித்துவிட வேண்டும் என்பதுதான் இவர்களது நோக்கம் என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸஹர் பாங்கை, இது போன்ற பொருந்தாத காரணங்களைக் கூறி புறக்கணிக்கின்றனர். மக்களிடம் வழக்கத்தில் இல்லை என்றால் உரிய முறையில் அறிவிப்புச் செய்து விட்டு அதை நடைமுறைப்படுத்த வேண்டும். இத்தனை மணிக்கு ஸஹர் பாங்கு சொல்லப்படும், இத்தனை மணிக்கு சுப்ஹ் பாங்கு சொல்லப்படும் என்பதை போஸ்டர்கள் மூலமோ, பிரசுரங்கள் மூலமோ அறிவிப்புச் செய்தால் எந்தக் குழப்பமும் ஏற்படாது.

இன்று பல ஊர்களில் தவ்ஹீது ஜமாஅத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் ஸஹர் பாங்கு சொல்லப்படுகின்றது. அந்த ஊர்களிலெல்லாம் எந்தக் குழப்பமும் ஏற்படவில்லை. குழப்பம் இவர்களுடைய கொள்கையில் தான் உள்ளது.

விரலசைத்தல், நெஞ்சின் மீது கை கட்டுதல், இரவுத் தொழுகை போன்றவற்றுக்குத் தெளிவான ஆதாரங்கள் இருந்த போதும், மக்களிடம் நடைமுறையில் இல்லை என்பதால் அதைக் குழப்பம் என்று குராஃபிகள் கூறினர். இப்போது அதே வழிமுறையைப் பயன்படுத்தி, இவர்களும் தாங்கள் செயல் படுத்தவில்லை என்பதற்காக, நபிவழியைக் குழப்பம் என்று கூறுகின்றார்கள் என்றால் இவர்கள் எந்த நிலைக்குச் சென்று விட்டார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதன் மூலம் இவர்கள் ஹதீஸ்களைத் திருப்பவும், வளைக்கவும் முனைந்துள்ளார்கள். இதுதான் தெளிவான ஹதீஸ் நிராகரிப்பு. இவர்கள் தான் உண்மையிலேயே ஹதீஸ் மறுப்பாளர்கள்.