வித்ருக்குப் பின் தொழலாமா?

கேள்வி :

வித்ரு தொழுகையை இரவின் முற்பகுதியிலேயே தொழுது விட்டு உறங்குகிறோம். பிறகு நபிலான தொழுகை தொழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் நபில் தொழுது விட்டு மீண்டும் ஒரு முறை வித்ரு தொழலாமா?

பதில் :

இரவின் இறுதிப் பகுதியில் வித்ரு தொழுவது தான் சிறந்ததாகும். உறங்கி விடுவோம் என்று அஞ்சினால் இரவின் முற்பகுதியிலேயே தொழுது கொள்ளலாம்.

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا حَفْصٌ وَأَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ خَافَ أَنْ لَا يَقُومَ مِنْ آخِرِ اللَّيْلِ فَلْيُوتِرْ أَوَّلَهُ وَمَنْ طَمِعَ أَنْ يَقُومَ آخِرَهُ فَلْيُوتِرْ آخِرَ اللَّيْلِ فَإِنَّ صَلَاةَ آخِرِ اللَّيْلِ مَشْهُودَةٌ وَذَلِكَ أَفْضَلُ و قَالَ أَبُو مُعَاوِيَةَ مَحْضُورَةٌ

‘இரவின் இறுதியில் எழ முடியாது என அஞ்சுபவர் இரவின் ஆரம்பப் பகுதியிலேயே வித்ரு தொழுது விடட்டும். இரவின் இறுதியில் எழ முடியும் என்று நம்புகிறவர் இரவின் இறுதியிலேயே வித்ரு தொழட்டும். ஏனெனில் இரவின் இறுதியில் தொழும் போது (வானவர்கள்) பங்கேற்கின்றனர். இதுவே சிறந்ததாகும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1255

இவ்வாறு முற்பகுதியில் வித்ரு தொழுது விட்டுப் படுத்த பின், இரவில் விழித்தால் உபரியான தொழுகைகளைத் தொழலாமா? அவ்வாறு தொழுதால் மீண்டும் வித்ரு தொழ வேண்டுமா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.

حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ عُبَيْدِ اللَّهِ حَدَّثَنِي نَافِعٌ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اجْعَلُوا آخِرَ صَلَاتِكُمْ بِاللَّيْلِ وِتْرًا

‘இரவுகளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 998, 472

இந்த ஹதீஸில் உங்களின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என்று கூறப்படுவதால் வித்ருக்குப் பிறகு வேறு தொழுகை எதையும் தொழக் கூடாது; வித்ருக்குப் பிறகு மீண்டும் தொழுதால் அதன் பிறகு கடைசியாக வித்ரு தொழ வேண்டிய நிலை ஏற்படும். ஒரே இரவில் இரண்டு வித்ரு தொழுவதற்குத் தடை உள்ளது. எனவே வித்ருக்குப் பின் தொழக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர்.

இரவின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருந்தாலும், வித்ரு தொழுகைக்குப் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள்.

و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ حَدَّثَنَا هِشَامٌ عَنْ يَحْيَى عَنْ أَبِي سَلَمَةَ قَالَ سَأَلْتُ عَائِشَةَ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ كَانَ يُصَلِّي ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً يُصَلِّي ثَمَانَ رَكَعَاتٍ ثُمَّ يُوتِرُ ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ وَهُوَ جَالِسٌ فَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ قَامَ فَرَكَعَ ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ بَيْنَ النِّدَاءِ وَالْإِقَامَةِ مِنْ صَلَاةِ الصُّبْحِ و حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا شَيْبَانُ عَنْ يَحْيَى قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ ح و حَدَّثَنِي يَحْيَى بْنُ بِشْرٍ الْحَرِيرِيُّ حَدَّثَنَا مُعَاوِيَةُ يَعْنِي ابْنَ سَلَّامٍ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ أَنَّهُ سَأَلَ عَائِشَةَ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ غَيْرَ أَنَّ فِي حَدِيثِهِمَا تِسْعَ رَكَعَاتِ قَائِمًا يُوتِرُ مِنْهُنَّ

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (இரவுத்) தொழுகை பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவில்) பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். (முதலில்) எட்டு ரக்அத்கள் தொழுவார்கள். பிறகு (மூன்று ரக்அத்) வித்ரு தொழுவார்கள். பிறகு உட்கார்ந்த நிலையில் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். ருகூவுச் செய்ய எண்ணும் போது எழுந்து நின்று, நிலையிலிருந்து ருகூவுச் செய்வார்கள். பிறகு சுப்ஹுத் தொழுகையின் பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் இரண்டு ரக்அத்கள் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஸலமா பின் அப்திர்ரஹ்மான் பின் அவ்ஃப்

நூல்: முஸ்லிம் 1220

இந்த ஹதீஸில் வித்ர் தொழுத பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுததாகக் கூறப்படுகின்றது.

எனவே இரண்டையும் இணைத்து நாம் முடிவு செய்ய வேண்டும். இரவில் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என்ற கட்டளை கட்டாயம் அப்படித்தான் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இடப்பட்ட கட்டளையாக இருக்க முடியாது.சிறந்தது என்ற அடிப்படையில் இடப்பட்ட கட்டளையாகத் தான் இருக்க முடியும். கண்டிப்பாகச் செய்ய வேண்டிய கட்டளையாக இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அதை மீறியிருக்க மாட்டார்கள்.

அது கட்டாயம் அல்ல என்று காட்டித் தருவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வித்ருக்குப் பின்னரும் தொழுது காட்டியுள்ளனர் என்று புரிந்து கொண்டால் இரண்டு ஹதீஸ்களுக்கும் முரண்பாடு இல்லாமல் பொருந்திப் போகும்.

எனவே வித்ர் தொழுத பின்னர் தேவைப்பட்டால் தொழுவதில் தவறில்லை என்பதை அறிய முடியும்.

இவ்வாறு தொழும் போது மீண்டும் வித்ர் தொழக் கூடாது.

حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا مُلَازِمُ بْنُ عَمْرٍو حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بَدْرٍ عَنْ قَيْسِ بْنِ طَلْقِ بْنِ عَلِيٍّ عَنْ أَبِيهِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا وِتْرَانِ فِي لَيْلَةٍ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَاخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي الَّذِي يُوتِرُ مِنْ أَوَّلِ اللَّيْلِ ثُمَّ يَقُومُ مِنْ آخِرِهِ فَرَأَى بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَنْ بَعْدَهُمْ نَقْضَ الْوِتْرِ وَقَالُوا يُضِيفُ إِلَيْهَا رَكْعَةً وَيُصَلِّي مَا بَدَا لَهُ ثُمَّ يُوتِرُ فِي آخِرِ صَلَاتِهِ لِأَنَّهُ لَا وِتْرَانِ فِي لَيْلَةٍ وَهُوَ الَّذِي ذَهَبَ إِلَيْهِ إِسْحَقُ وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَغَيْرِهِمْ إِذَا أَوْتَرَ مِنْ أَوَّلِ اللَّيْلِ ثُمَّ نَامَ ثُمَّ قَامَ مِنْ آخِرِ اللَّيْلِ فَإِنَّهُ يُصَلِّي مَا بَدَا لَهُ وَلَا يَنْقُضُ وِتْرَهُ وَيَدَعُ وِتْرَهُ عَلَى مَا كَانَ وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَمَالِكِ بْنِ أَنَسٍ وَابْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِيِّ وَأَهْلِ الْكُوفَةِ وَأَحْمَدَ وَهَذَا أَصَحُّ لِأَنَّهُ قَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ صَلَّى بَعْدَ الْوِتْرِ

‘ஒரு இரவில் இரண்டு வித்ர் கிடையாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: தல்க் பின் அலீ (ரலி)

நூல்: திர்மிதீ 432

ஒரு இரவில் இரண்டு வித்ர் கிடையாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் ஏற்கனவே வித்ர் தொழுதவர்கள் மீண்டும் ஒரு முறை வித்ர் தொழக் கூடாது.

வித்ர் என்ற சொல்லுக்கு ஒற்றை என்று பொருள். ஒரு முறை வித்ர் தொழுதவர் மீண்டும் வித்ர் தொழுதால் இரண்டு ஒற்றையும் சேர்ந்து இரட்டை ஆகி விடும். ஏற்கனவே மூன்று ரக் அத் வித்ர் தொழுதவர் மீண்டும் மூன்று ரக அத்கள் தொழுதால் இவர் தொழுதது ஆறாகும். இப்போது ஒற்றை என்ற நிலை மாறி விடுகிறது. எனவே தான் இரண்டு வித்ர் கிடையாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கலாம்.

அப்படியானால் இரவின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளைக்கு இது முரணாக அமைகின்றதே என்ற சந்தேகம் ஏற்படலாம்.

வித்ர் என்பது ஒரு குறிப்பிட்ட தொழுகையைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டாலும், வித்ர் என்றால் ஒற்றைப்படை என்று பொருள்.

இரவுத் தொழுகையை இரண்டு இரண்டாகத் தொழ வேண்டும். இறுதியில் அதை ஒற்றைப்படையாக ஆக்கி விட வேண்டும் என்பதையே இந்த ஹதீஸ் கூறுகின்றது என்று விளங்கிக் கொண்டால் முரணில்லை.

حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ سَأَلَ رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى الْمِنْبَرِ مَا تَرَى فِي صَلَاةِ اللَّيْلِ قَالَ مَثْنَى مَثْنَى فَإِذَا خَشِيَ الصُّبْحَ صَلَّى وَاحِدَةً فَأَوْتَرَتْ لَهُ مَا صَلَّى وَإِنَّهُ كَانَ يَقُولُ اجْعَلُوا آخِرَ صَلَاتِكُمْ وِتْرًا فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِهِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேடை மீது இருக்கும் போது ‘இரவுத் தொழுகை பற்றி நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?’ என்று ஒரு மனிதர் கேட்டார். ‘இரண்டிரண்டாகத் தொழ வேண்டும். சுப்ஹை (தொழ முடியாது என்று) அஞ்சினால் ஒரு ரக்அத் தொழலாம். அவர் தொழுதது அவருக்கு வித்ராக அமையும். உங்களின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 472

இரவில் ஒருவர் பத்து ரக்அத்கள் தொழுதுள்ளார் என்று வைத்துக் கொள்வோம். அவர் ஒரு ரக்அத் வித்ர் தொழுகின்றார் என்றால் அவர் மொத்தம் தொழுதது பதினொரு ரக்அத்கள். அவர் தொழுத மொத்த ரக்அத்களின் எண்ணிக்கையும் ஒற்றைப்படையாக ஆகி விடுகின்றது.

அதன் பிறகு அவர் இரண்டு ரக்அத் தொழுதாலும் அவர் மீண்டும் வித்ர் தொழத் தேவையில்லை. ஏனெனில் அவர் தொழுத மொத்த ரக்அத்களின் எண்ணிக்கை பதிமூன்று. இதுவும் ஒற்றைப்படை தான்.

எனவே இரவின் இறுதியாகத் தொழுகையை முடிக்கும் போது அவர் தொழுத மொத்த ரக்அத்களின் எண்ணிக்கை ஒற்றைப்படையாக இருக்க வேண்டும் என்பதைத் தான் இந்த ஹதீஸ் கூறுகின்றது என்று விளங்கிக் கொண்டால் முரணில்லை.

எனவே ஒருவர் வித்ர் தொழுத பின்னர் மீண்டும் எழுந்து வேறு தொழுகைகளைத் தொழுதாலும் அதன் பின்னர் வித்ர் தொழக் கூடாது. அவர் ஏற்கனவே தொழுத தொழுகை அதை வித்ராக்கி விடும்.

எனினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெரும்பாலும் கடைசியாகவே வித்ர் தொழுதுள்ளதால் கடைசியாக வித்ர் தொழுவது தான் சிறந்தது.