மழைத் தொழுகையில் பெண்கள் கலந்து கொள்ளலாமா?

கேள்வி :

மழைத் தொழுகையில் பெண்கள் கலந்து கொள்ளலாமா?

பதில் :

இஸ்லாத்தின் அனைத்து வணக்கங்களும் முஸ்லிமான ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் பொதுவானதாகும்.

திருக்குர்ஆன். நபிமொழிகளில் பெரும்பாலும் கட்டளைகள் ஆண்களை நோக்கியதாகவே அமைந்திருக்கும். ஆண்களை நோக்கிப் பேசியிருந்தாலும் அந்தக் கட்டளை பெண்களையும் உள்ளடக்கியதே. பெண்களுக்கு அந்தச் சட்டம் இல்லை என்று நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ சொல்லப்பட்டிருந்தால் மட்டுமே அந்தச் சட்டம் பெண்களுக்கு இல்லை என்று கூறவேண்டும்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் மழைத் தொழுகையில் கலந்திருக்கிறார்கள் என்பதற்கும் மறைமுகமான சான்றுகள் உள்ளன.

நபிகளார் தொழுவித்த மழைத் தொழுகையின் விவரங்களை ஆண் நபித்தோழர்கள் விளக்குவதைப்போல் பெண் நபித்தோழியரான அன்னை ஆயிஷா (ரலி) அவர்களும் விளக்கியுள்ளார்கள். அது மட்டுமல்ல. அந்தத் தொழுகையில் ஓதிய துஆக்களையும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். துஆக்கள் உட்பட அதன் விவரங்கள் அனைத்தையும் அறிவிக்க வேண்டுமானால் அவர்கள் அதில் கலந்து கொள்ளாமல் தெரிவிக்க வாய்ப்பில்லை. அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கும் நபிமொழி பாருங்கள்.

992 حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ حَدَّثَنَا خَالِدُ بْنُ نِزَارٍ حَدَّثَنِي الْقَاسِمُ بْنُ مَبْرُورٍ عَنْ يُونُسَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ شَكَا النَّاسُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُحُوطَ الْمَطَرِ فَأَمَرَ بِمِنْبَرٍ فَوُضِعَ لَهُ فِي الْمُصَلَّى وَوَعَدَ النَّاسَ يَوْمًا يَخْرُجُونَ فِيهِ قَالَتْ عَائِشَةُ فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ بَدَا حَاجِبُ الشَّمْسِ فَقَعَدَ عَلَى الْمِنْبَرِ فَكَبَّرَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحَمِدَ اللَّهَ عَزَّ وَجَلَّ ثُمَّ قَالَ إِنَّكُمْ شَكَوْتُمْ جَدْبَ دِيَارِكُمْ وَاسْتِئْخَارَ الْمَطَرِ عَنْ إِبَّانِ زَمَانِهِ عَنْكُمْ وَقَدْ أَمَرَكُمْ اللَّهُ عَزَّ وَجَلَّ أَنْ تَدْعُوهُ وَوَعَدَكُمْ أَنْ يَسْتَجِيبَ لَكُمْ ثُمَّ قَالَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَلِكِ يَوْمِ الدِّينِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ يَفْعَلُ مَا يُرِيدُ اللَّهُمَّ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْغَنِيُّ وَنَحْنُ الْفُقَرَاءُ أَنْزِلْ عَلَيْنَا الْغَيْثَ وَاجْعَلْ مَا أَنْزَلْتَ لَنَا قُوَّةً وَبَلَاغًا إِلَى حِينٍ ثُمَّ رَفَعَ يَدَيْهِ فَلَمْ يَزَلْ فِي الرَّفْعِ حَتَّى بَدَا بَيَاضُ إِبِطَيْهِ ثُمَّ حَوَّلَ إِلَى النَّاسِ ظَهْرَهُ وَقَلَبَ أَوْ حَوَّلَ رِدَاءَهُ وَهُوَ رَافِعٌ يَدَيْهِ ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ وَنَزَلَ فَصَلَّى رَكْعَتَيْنِ فَأَنْشَأَ اللَّهُ سَحَابَةً فَرَعَدَتْ وَبَرَقَتْ ثُمَّ أَمْطَرَتْ بِإِذْنِ اللَّهِ فَلَمْ يَأْتِ مَسْجِدَهُ حَتَّى سَالَتْ السُّيُولُ فَلَمَّا رَأَى سُرْعَتَهُمْ إِلَى الْكِنِّ ضَحِكَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ فَقَالَ أَشْهَدُ أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَأَنِّي عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ قَالَ أَبُو دَاوُد وَهَذَا حَدِيثٌ غَرِيبٌ إِسْنَادُهُ جَيِّدٌ أَهْلُ الْمَدِينَةِ يَقْرَءُونَ مَلِكِ يَوْمِ الدِّينِ وَإِنَّ هَذَا الْحَدِيثَ حُجَّةٌ لَهُمْ رواه ابوادود

மழை இல்லாமல் பஞ்சம் ஏற்பட்டதைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மக்கள் முறையிட்டனர். அப்போது மிம்பரை ஏற்படுத்துமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அந்த மிம்பர் அல்முஸல்லா என்ற திடலில் வைக்கப்பட்டது. ஒரு நாள் மக்களுக்கு வாக்களித்தார்கள். மக்கள் அதில் கலந்து கொள்ளச் சென்றார்கள். சூரியன் உதித்தபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கு சென்றார்கள். மிம்பரில் அமர்ந்தார்கள். தக்பீர் கூறினார்கள். அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். நீங்கள் பஞ்சத்தைப் பற்றி முறையிட்டீர்கள். பருவகாலத்தில் மழை பெய்யாமல் தாமதமாவதையும் கூறினீர்கள்.

(இது போன்ற நிலைகளில்) அவனைப் பிரார்த்திக்குமாறு கட்டளையிட்டு அதை ஏற்பதாக வாக்களித்துள்ளான்.

அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர் ரஹீம் மாலி(க்)கி யவ்மித்தீன். லாயிலாஹ இல்லல்லாஹு யஃப்அலு மா யுரீத். அல்லாஹும்ம அன்(த்)தல்லாஹு லாயிலாஹ இல்லா அன்(த்)தல் கனீய்யு வநஹ்னுல் ஃபு(க்)கராவு அன்ஸில் அலைனல் கைஸ வஜ்அல் மா அன்ஸல்(த்)த லனா குவ்வ(த்)தன் வபலாகன் இலா ஹீன் என்று கூறினார்கள். பின்னர் ………..

(பொருள்: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன். அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். தீர்ப்பு நாளின் அதிபதி. அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவன் நினைத்ததைச் செய்வான். இறைவா! நீயே அல்லாஹ்! உன்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. (நீ) எந்தத் தேவையும் அற்றவன்; நாங்கள் தேவையுடையவர்கள்; எங்களுக்கு மழையை பொழியச் செய்வாயாக! நீ எங்களுக்கு இறக்கியதில் வலிமையையும் குறிப்பிட்ட காலத்திற்குப் போதுமானதாகவும் ஆக்கி வைப்பாயாக!)

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: அபூதாவூத் 992

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மழைத்தொழுகை பற்றி பெண்ணாகிய ஆயிஷா (ரலி) அவர்கள் விபரமாக நேர்முக வர்ணனை செய்து அறிவித்திருப்பதால் அதில் அவர்கள் கலந்து கொள்ளாமல் அறிவித்திருக்க முடியாது. எனவே பெண்களும் மழைத் தொழுகையில் பங்கேற்கலாம்.