நோன்பாளியாக இருக்கும் போது மாதவிடாய் ஏற்பட்டால்?

கேள்வி :

நோன்பாளியாக இருக்கும் போது மாதவிடாய் ஏற்பட்டால் அந்த நோன்பைத் தொடர வேண்டுமா? அல்லது முறித்து விட்டு வேறுநாட்களில் அந்த நோன்பை வைக்க வேண்டுமா?

ரஃபீக் அஹ்மத், நாகர்கோவில்.

பதில் :

நோன்பாளியாக இருக்கும் போது மாதவிடாய் ஏற்பட்டால் என்ன செய்வது என்று நேரடியாக ஹதீஸ்களில் காண முடியவில்லை. ஆனாலும் பொதுவாக மாதவிடாய் ஏற்பட்டவர்கள் நோன்பு நோற்பது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறையில் இதற்கான விடையும் அடங்கியுள்ளது.

صحيح مسلم

789 – وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ عَاصِمٍ عَنْ مُعَاذَةَ قَالَتْ سَأَلْتُ عَائِشَةَ فَقُلْتُ مَا بَالُ الْحَائِضِ تَقْضِى الصَّوْمَ وَلاَ تَقْضِى الصَّلاَةَ فَقَالَتْ أَحَرُورِيَّةٌ أَنْتِ قُلْتُ لَسْتُ بِحَرُورِيَّةٍ وَلَكِنِّى أَسْأَلُ. قَالَتْ كَانَ يُصِيبُنَا ذَلِكَ فَنُؤْمَرُ بِقَضَاءِ الصَّوْمِ وَلاَ نُؤْمَرُ بِقَضَاءِ الصَّلاَةِ.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நாங்கள் இருந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டுத் தூய்மை அடைவோம். அப்போது விடுபட்ட நோன்பை களாச் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளை களாச் செய்யுமாறு கட்டளையிட மாட்டார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம்

நோன்பு வைத்திருந்த நிலையில் மாதவிடாய் ஏற்பட்டு விட்டால் அத்துடன் நோன்பு முறிந்து விடுகிறது. எனவே அவர் உண்ணலாம்: பருகலாம். ஆனால் மாதவிடாய் நின்ற பிறகு வேறு நாட்களில் விடுபட்ட அந்த நோன்பை நோற்றுக் கொள்ள வேண்டும். இது கடமையான (ரமலான் மாத) நோன்புக்குரிய சட்டமாகும்.

நபிலான நோன்பாக இருந்தால் அதை வேறு நாட்களில் நோற்பது கட்டாயமில்லை.