திருந்திய பெண்ணை நபி தண்டித்தது சரியா?

கேள்வி :

விபச்சாரம் செய்தபின் அதை தவறு என்று உணர்ந்துவிட்ட பெண்ணுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏன் தண்டனை வழங்கினார்கள்? என்று இந்து நண்பர் கேட்கிறார். இதற்கு என்ன பதில் சொல்வது?

பதில்:

நீங்கள் குறிப்பிடும் சம்பவம் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

3209حَدَّثَنِي أَبُو غَسَّانَ مَالِكُ بْنُ عَبْدِ الْوَاحِدِ الْمِسْمَعِيُّ حَدَّثَنَا مُعَاذٌ يَعْنِي ابْنَ هِشَامٍ حَدَّثَنِي أَبِي عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ حَدَّثَنِي أَبُو قِلَابَةَ أَنَّ أَبَا الْمُهَلَّبِ حَدَّثَهُ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ أَنَّ امْرَأَةً مِنْ جُهَيْنَةَ أَتَتْ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ حُبْلَى مِنْ الزِّنَى فَقَالَتْ يَا نَبِيَّ اللَّهِ أَصَبْتُ حَدًّا فَأَقِمْهُ عَلَيَّ فَدَعَا نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلِيَّهَا فَقَالَ أَحْسِنْ إِلَيْهَا فَإِذَا وَضَعَتْ فَأْتِنِي بِهَا فَفَعَلَ فَأَمَرَ بِهَا نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَشُكَّتْ عَلَيْهَا ثِيَابُهَا ثُمَّ أَمَرَ بِهَا فَرُجِمَتْ ثُمَّ صَلَّى عَلَيْهَا فَقَالَ لَهُ عُمَرُ تُصَلِّي عَلَيْهَا يَا نَبِيَّ اللَّهِ وَقَدْ زَنَتْ فَقَالَ لَقَدْ تَابَتْ تَوْبَةً لَوْ قُسِمَتْ بَيْنَ سَبْعِينَ مِنْ أَهْلِ الْمَدِينَةِ لَوَسِعَتْهُمْ وَهَلْ وَجَدْتَ تَوْبَةً أَفْضَلَ مِنْ أَنْ جَادَتْ بِنَفْسِهَا لِلَّهِ تَعَالَى رواه مسلم

புரைதா பின் அல்ஹசீப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

“ஃகாமிதிய்யா’ குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் விபச்சாரம் செய்து விட்டேன். (உரிய தண்டனையை நிறைவேற்றி) என்னைத் தூய்மைப்படுத்துங்கள்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணைத் திருப்பியனுப்பி விட்டார்கள். அப்பெண் மறுநாள் (வந்து), “அல்லாஹ்வின் தூதரே! ஏன் என்னைத் திருப்பியனுப்புகிறீர்கள்? மாயிஸ் அவர்களைத் திருப்பி அனுப்பியதைப் போன்று என்னையும் தாங்கள் திருப்பியனுப்புகிறீர்கள் போலும். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (தகாத உறவில் ஈடுபட்டு) கர்ப்பமுற்றுள்ளேன்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை, நீ சென்று குழந்தை பெற்றெடு! (பிறகு திரும்பி வா)” என்று சொன்னார்கள். குழந்தை பெற்றெடுத்த பின் அந்தப் பெண் ஒரு துணியில் குழந்தையை எடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “இது நான் பெற்றெடுத்த குழந்தை” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ சென்று குழந்தைக்குப் பாலூட்டு! பால்குடி மறந்த பின் திரும்பி வா” என்றார்கள். பால்குடி மறக்கடித்த பின் அப்பெண் அச்சிறுவனுடன் வந்தார். அவனது கையில் ரொட்டித் துண்டு ஒன்று இருந்தது. அப்பெண், “அல்லாஹ்வின் தூதரே! இவனுக்குப் பால்குடி மறக்கடித்து விட்டேன். இப்போது உணவு உட்கொள்கிறான்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அச்சிறுவனை முஸ்லிம்களில் ஒருவரிடம் ஒப்படைத்தார்கள். பிறகு அந்தப் பெண்ணுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். ஆகவே, அவருக்காக நெஞ்சளவு குழி தோண்டப்பட்டது. (பின்னர் அக்குழிக்குள் அப்பெண்ணை நிறுத்திய பின்) மக்களுக்குக் கட்டளையிட, அவருக்குக் கல்லெறி தண்டனையை மக்கள் நிறைவேற்றினார்கள்.

நூல் : முஸ்லிம்

தவறு செய்தவர் திருந்தி விட்டால் அவரை அல்லாஹ் மன்னிப்பான் என்று இஸ்லாம் சொல்கிறது. ஒருவர் திருந்தி விட்டாரா இல்லையா என்பது அவரது உள்ளத்துக்கும், இறைவனுக்கும் மட்டுமே தெரிந்த விஷயமாகும்.

அது போல் ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் தவறு செய்து அதில் இருந்து திருந்தி விட்டதாகக் கூறுகிறான். அவனால் பாதிக்கப்பட்ட மனிதனும் அதை நம்பி ஏற்றுக் கொண்டு அவனை மன்னித்தால் அதிலும் இஸ்லாம் தலையிடாது.

ஆனால் உலகில் உள்ள எல்லா அரசுகளும் சட்டங்கள் வகுத்துள்ளன. குற்றங்கள் குறைய வேண்டும் என்பதற்காகவும், அநீதி இழைக்கப்பட்டவர்கள் மனநிறைவு அடைவதற்காகவும் தான் சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டங்கள் ஒருவன் குற்றம் இழைத்தானா இல்லையா என்று தான் பார்க்குமே தவிர குற்றம் செய்தவன் திருந்தினானா இல்லயா என்று பார்ப்பதில்லை. பார்க்கவும் கூடாது.

அப்படிப் பார்த்தால் சட்டங்கள் வகுக்கப்பட்டதற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும். குற்றம் செய்த ஒவ்வொருவனும் தனது குற்றம் நிரூபிக்கப்படும் போது நான் குற்றம் செய்தது உண்மை தான். ஆனால் நான் இப்போது திருந்தி விட்டேன் எனக் கூறி தப்பித்து விடுவான். ஒருவனைக் கூட எந்தக் குற்றத்துக்கும் தண்டிக்க முடியாமல் போய்விடும்.

இதுதான் எல்லா உலக நாடுகளும் கடைப்பிடிக்கும் நியதியாகும். அனைத்து மக்களின் நன்மை கருதி உருவாக்கப்பட்ட சட்டத்தை ஒரு அதிபர் மன்னித்து விட முடியாது.

நபிகள் நாயகத்துக்குத் தனிப்பட்ட முறையில் அநீதி இழைத்தவர்களை அவர்கள் பலமுறை மன்னித்து இருக்கிறார்கள். இது அவர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சனை அல்ல. சட்டத்தை நிலைநாட்டும் பிரச்சனையாகும்.

எனவே சட்டத்தின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட குற்றத்துக்கு தண்டனையை வழங்குவது தான் ஆட்சி செய்பவரின் கடமையாகும்.

அதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் செய்தார்கள்.

சட்டத்தை நிலைநாட்டுவோருக்கு இது போன்ற நெஞ்சுரம் இருக்க வேண்டும். பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு பலரைக் கொன்று குவித்தது நிரூபிக்கப்பட்டு அவர்களுக்கு தண்டனை அளிக்கப்படும் போது அதை எதிர்த்து கூட்டம் போட்டு கொடி பிடித்தால் சட்டம் வளைகிறது. சட்டம் இயற்றும் சட்டசபைகளும் வளைகின்றன. நீதிமன்றங்களும் வளைகின்றன. இது போன்ற நிலையையே பார்த்துப் பழகியதால் அந்த நண்பர் இப்படி கேட்டுள்ளார்.