திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் ஸஜ்தா வசனங்கள் பட்டியலில் 33:24 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.புகாரி 1068 ஹதீஸில் 32வது அத்தியாயத்திலும் ஸஜ்தா செய்ய வேண்டும் என்று இடம்பெற்றுள்ளது. இதில் எது சரி?

? திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் ஸஜ்தா வசனங்கள் பட்டியலில் 33:24 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ஆதாரமாகக் காட்டப்பட்டுள்ள புகாரி ஹதீஸில் 38:24 என்று உள்ளது. மேலும் புகாரி 1068 ஹதீஸில் 32வது அத்தியாயத்திலும் ஸஜ்தா செய்ய வேண்டும் என்று இடம்பெற்றுள்ளது. இதில் எது சரி? விளக்கவும்.
நாஜ்னீன் ஸயீத், தஞ்சாவூர்

ஸஜ்தா செய்ய வேண்டிய வசனம் 38:24 என்பது தான் சரியானதாகும். திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் 33:24 என்று குறிப்பிடப்பட்டது அச்சுப் பிழையால் ஏற்பட்ட தவறு. இன்ஷா அல்லாஹ் இனி வெளியிடப்படும் பிரதிகளில் இந்தத் தவறு சரி செய்யப்படும்.

புகாரி 1068 ஹதீஸில், திருக்குர்ஆன் 32வது அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தா செய்ய வேண்டும் என்று கூறப்படவில்லை.

நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் “அலிஃப் லாம் மீம் தன்ஸீல் அஸ்ஸஜ்தா‘ (எனும் 32ஆவது) அத்தியாயத்தையும், “ஹல் அத்தா அலல் இன்ஸான்‘ (எனும் 76ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1068

நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் இந்த அத்தியாயத்தை ஓதுவார்கள் என்று தான் மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. அதை ஓதும் போது நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்தார்கள் என்று கூறப்படவில்லை.

“தன்ஸீல் அஸ்ஸஜ்தா’ (எனும்) 32ஆவது அத்தியாயத்தை ஓதும் போது சஜ்தாச் செய்தல்” என்று புகாரி இமாம் தலைப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் இவ்வாறு தலைப்பிட்டு அவர்கள் குறிப்பிட்டுள்ள மேற்கண்ட ஹதீஸில் இந்தக் கருத்து இடம்பெறவில்லை. இந்த அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தாச் செய்ய வேண்டும் என்ற கருத்தில் வேறு நூற்களிலும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை. எனவே 32வது அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தாச் செய்யத் தேவையில்லை.