கண்களை மூடிக் கொண்டு துஆச் செய்யலாமா?

கேள்வி:

கண்களை மூடிக்கொண்டு துஆச் செய்யும் போது உள்ளச்சம் ஏற்படுகிறது. ஆனால் இது பிறமதத்தினரின் வழிபாட்டு முறையாக உள்ளதால் கூடாது என்று சிலர் கூறுகின்றனர்.

பதில்:

கண்களை மூடிக் கொண்டு பிரார்த்தனை செய்வதற்கு மார்க்கத்தில் தடையேதும் இல்லை.

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்.

திருக்குர்ஆன் 7:55

இந்த வசனத்தில் பிரார்த்தனை செய்யும் ஒழுங்கைப் பற்றி இறைவன் கூறும் போது, பணிவாகவும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறுகின்றான். கண்களை மூடிக் கொண்டால் தான் உங்களால் இந்த நிபந்தனையை நிறைவேற்ற முடியும் என்றால் அதைச் செய்வதில் தவறில்லை.

நமக்கு அனுமதிக்கப்பட்ட விஷயங்களை பிறமதத்தவர்கள் செய்வது பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.