இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள்

முஸ்லிமல்லாதவர்களால் விமர்சனம் செய்யப்படும் விஷயங்களில் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்களும் ஒன்றாகும். ஒரு மனிதன் மற்றொரு மனிதனைக் கொலை செய்து விட்டால் கொலை செய்தவன் கொல்லப்பட வேண்டுமென இஸ்லாம் கூறுகின்றது. ஒருவனது அங்கத்தை மற்றொருவன் சேதப்படுத்தி விட்டால் சேதப்படுத்தியவனின் அதே அங்கம் சேதப்படுத்தப்பட வேண்டும். திருடினால் கையை வெட்ட வேண்டும் என்றெல்லாம் கடுமையான சட்டங்களை அமுல்படுத்தச் சொல்கிறது இஸ்லாம்.

இஸ்லாத்தில் உடன்பாடில்லாத பிற மதத்தவர்கள் இந்தச் சட்டங்களையும் விமர்சிக்கின்றனர். இது என்ன கொடுமை! திருடியதற்காகக் கையை வெட்டச் சொல்வது காட்டுமிராண்டித்தனம் அல்லவா? விபச்சாரத்திற்காக மரண தண்டனை வழங்குவது மனிதாபிமானமற்றதல்லவா? நாகரீகத்தின் உச்சிக்கு மனிதன் சென்றுவிட்ட காலத்தில் இந்தக் கொடூரமான மனிதாபிமானமற்ற சட்டங்கள் பொருந்துமா? என்று வினாக்களை எழுப்பி வருகின்றனர்.

தண்டனை வழங்குவதன் நோக்கம்

குற்றவாளிகள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். என்று இஸ்லாம் கூறுவது போலவே மற்றவர்களும் கூறுகின்றார்கள். கடுமையான தண்டனைகள் வழங்குவதா? கடுமை குறைந்த தண்டனைகள் வழங்குவதா? என்பதிலேயே இஸ்லாத்துடன் இவர்கள் முரண்படுகிறார்கள். இரண்டு வகையான தண்டனைகளில் எது அறிவுப்பூர்வமானது என்பதை நாம் ஆராய்வோம்.

குற்றவாளி ஒருவன் தண்டிக்கப்பட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் தான் இது விஷயத்தில் நாம் சரியான முடிவுக்கு வர முடியும்.

கொலையாளிகளைக் கொல்வதால் அவனால் ஏற்கனவே கொல்லப்பட்டவனின் உயிர் திரும்பக் கிடைத்துவிடப் போவதில்லை. கற்பழித்தவனுக்கு மரண தண்டனை வழங்குவதால் போன கற்பு திரும்பவும் கிடைத்துவிடப் போவதில்லை. பொருளாதாரம் சம்பந்தப்பட்ட, திருட்டு போன்ற சில குற்றங்களில் வேண்டுமானால் பறிபோனவை சில சமயங்களில் கிடைக்கலாமே தவிர பெரும்பாலான குற்றங்களில் குற்றவாளி தண்டிக்கப்பட்டு விடுவதால் அவனால் பாதிக்கப்பட்டவனுக்குப் பயனேதும் கிடையாது. இழந்ததை மீட்பது தண்டனைகளின் நோக்கம் அல்ல என்பதை இதிலிருந்து விளங்கலாம்.

அப்படியானால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியதின் காரணம் என்ன?

குற்றம் செய்தவனுக்கு வழங்கப்படும் தண்டனை மீண்டும் மீண்டும் குற்றம் செய்வதிலிருந்து அவனைத் தடுக்க வேண்டும்.

ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையைக் கண்டு மற்றவர்கள் குற்றம் செய்ய அஞ்ச வேண்டும்.

குற்றவாளியால் பாதிப்புக்கு உள்ளானவன் தனக்கு நீதி கிடைத்துவிட்டதாக நம்ப வேண்டும். அவன் மனநிறைவு அடைய வேண்டும்.

குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க இந்த மூன்றைத் தவிர வேறு காரணங்களிருக்க முடியாது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதன் நோக்கங்கள் இவை தான் என்பதை மாற்றுக் கருத்துடையவர்களும் மறுக்க மாட்டார்கள்.

குற்றம் செய்தவர்கள் மீண்டும் குற்றம் செய்யாமலும், குற்றம் செய்ய நினைப்பவர்கள் அதன் பால் நெருங்காமலும் இருக்க வேண்டுமென்பதற்காகத் தான் உலகமெங்கும் சிறைச்சாலைகள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்களெல்லாம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்கு எந்தவிதமான தண்டனையும் வழங்கக் கூடாது என்று உலகில் எந்த அரசாங்கமும் கூறவில்லை.

குற்றங்களுக்கெதிராகப் பல்வேறு தண்டனைகளை வழங்கி வரும் அரசுகள் இந்த நோக்கத்தில் வெற்றி பெற்றுள்ளார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

குற்றம் செய்பவனையும், செய்ய நினைப்பவனையும் தடுத்து நிறுத்தும் அளவுக்கு வலிமை மிக்கதாக எந்த நாட்டின் சட்டமும் இல்லாததே இதற்குக் காரணமாகும். அது மட்டுமின்றிக் குற்றவாளிகளுக்குச் செய்து தரப்படுகின்ற வசதிகளைக் காணும் ஒருவன் நாமும் குற்றம் செய்தால் அந்த வசதிகளை அனுபவிக்கலாமே என்று எண்ணுகின்றான். குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய சட்டங்களே குற்றம் செய்யத் தூண்டினால் என்னவாகும்? அறிவு ஜீவிகள் இதைப் பற்றிச் சிந்தித்ததாகத் தெரியவில்லை.

ஒருவன் திருடுகிறான்; அல்லது கற்பழிக்கிறான்; கொலை செய்கிறான்; கொள்ளையடிக்கிறான்; அப்பாவிப் பெண்களின் கற்பைச் சூறையாடுகிறான்; இன்ன பிற குற்றங்களில் ஈடுபடுகிறான். இத்தகைய சமூக விரோதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை என்ன? சில மாதங்களோ, சில வருடங்களோ சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றது. இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் தண்டனையின் அளவு இது தான்.

சிறைத் தண்டனை என்பது என்ன? வெளியே வர முடியாது என்ற ஒரு அம்சத்தை நீக்கி விட்டுப் பார்த்தால் எத்தனையோ பரம ஏழைகளின் வாழ்வை விட சிறை வாழ்வு மேலானதாக உள்ளது.

நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கும் ஏழைகளுக்கு அன்றாடம் கால் வயிற்றுக் கஞ்சிக்கே வழியில்லை. அநியாயமாகவும், அயோக்கியத்தனமாகவும் நடந்து கொண்ட குற்றவாளிகளுக்கு மூன்று வேளை உணவுக்கு உத்திரவாதம் தரப்படுகின்றது. உயர் தரமான மருத்துவ வசதிகள் அவர்களுக்குச் செய்து தரப்படுகின்றன. அவர்களின் பொழுதைப் போக்குவதற்காக (?) சினிமா போன்ற வசதிகளும் சிறைச் சாலைகளுக்குள்ளேயே செய்து தரப்படுகின்றன. இருக்கின்ற வசதிகள் போதாதென்று குற்றவாளிகளுக்கான வசதியைப் பெருக்க என்ன செய்யலாம் என்பதைக் கண்டறியக் கமிஷன்கள் அமைக்கப்படுகின்றன.

இந்தக் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகளை எதுவும் செய்து விடாத அளவுக்குப் பாதுகாப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.

இதில் வேதனையான அம்சம் என்னவென்றால், எந்த மக்களிடம் இருந்து ஒருவன் திருடுகிறானோ, எந்த மக்களைக் கொலை செய்கிறானோ, எந்தப் பெண்களைக் கற்பழித்தானோ அந்த மக்களின் வரிப் பணத்திலிருந்து தான் இந்த அயோக்கியர்களுக்கு இவ்வளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

இந்தப் பெயரளவிலான தண்டனை, குற்றவாளிகளின் மனப்பான்மையைக் கடுகளவும் மாற்றியதாகக் காணோம். சிறைச் சாலையிலிருந்து விடுதலை பெற்று வரும் ஒருவன், மீண்டும் குற்றம் புரிந்து விட்டு மாமியார் வீட்டுக்குப் போகிறேன் என்று திமிருடன் கூறிக் கொண்டு மீண்டும் சிறைச் சாலையில் தஞ்சமடைகிறான்.

53 முறை சிறை சென்றவர் மீண்டும் கைது! 15 முறை சைக்கிள் திருடியவன் மீண்டும் கைது! என்றெல்லாம் அன்றாடம் செய்தித் தாள்களில் செய்திகள் வருகின்றன. 53 தடவை குற்றம் புரிகிறான். 53 தடவையும் கைது செய்யப்படுகிறான். 53 தடவை வழங்கப்பட்ட தண்டனைகள் அவனுக்கு எந்த அச்சத்தையும் ஏற்படுத்தக் காணோம். அதை ஒரு தண்டனையாகவே அவன் கருதக் காணோம்.

மணியடித்தால் சோறு! மாமனாரு வீடு! என்று சிறைச் சாலையில் கிடைக்கும் வசதிகள் பற்றி மற்றவர்களும் தெரிந்து கொண்டதால் நேர்மையாக வாழ்ந்து கஞ்சிக்குக் கஷ்டப்படுவானேன்? ஏதேனும் குற்றம் புரிந்தால் சிறைச் சாலைகளில் மூன்று வேளை உணவு கிடைக்குமே; என்றெண்ணி அவர்களும் குற்றங்களில் ஈடுபடத் தொடங்குகின்றனர்.

ஆண்டுதோறும் குற்றவாளிகள் பெருகி வருகிறார்கள். குற்றங்கள் பெருகுகின்றன. குற்றவாளிகளை அதிகப்படுத்துவதற்காக மக்களின் வரிப்பணம் பாழாக்கப்படுகின்றது. அறிவு ஜீவிகள் (?) வக்காலத்து வாங்கும் மனிதாபிமானச் சட்டங்கள் ஏற்படுத்திய விளைவுகள் இவை.

அடுத்ததாக, பாதிக்கப்பட்டவன் இந்தத் தண்டனைகளால் மனநிறைவு அடைவானா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

திருடியவனை என்ன செய்யலாம் என்று திருட்டுக் கொடுத்தவனிடம் கேட்டால் ஆறு மாதம் சோறு போடலாம் எனக் கூற மாட்டான். கொல்லப்பட்டவனின் மகனிடம் போய்க் கொலையாளியை என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டால் பதினாலு வருடம் அரசாங்கச் செலவில் அவனைப் பராமரிக்க வேண்டும் என்று கூறுவானா? தலையைச் சீவ வேண்டும் என்பானா?

கற்பழிக்கப்பட்டவள், அதனால் தனது எதிர்காலமே இருண்டு விட்ட நிலையில் கற்பழித்தவனுக்கு எத்தகைய தண்டனை கொடுத்தால் மனம் நிறைவடைவாள்? என்றெல்லாம் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளைச் சீர்தூக்கிப் பார்த்துத் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பார்க்காமல் பாதிக்கப்படாத இடத்தில் உட்கார்ந்து கொண்டு சட்டங்கள் இயற்றப்படுவதால் தான் பாதிக்கப்பட்டவனின் உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.

இஸ்லாமோ இதையும் கவனத்தில் கொள்கிறது. ஒருவன் பத்துப் பேரைக் கொலை செய்து தூக்குத் தண்டனை பெறுகிறான். உலகின் பல நாடுகளில் கருணை மனுவின் அடிப்படையில் தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களுக்குக் குடியரசுத் தலைவர் மாமனோ, மச்சானோ அல்ல என்றாலும் அந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டிருப்பதிலிருந்து பாதிக்கப்பட்டவனின் நிலையைச் சட்டம் கடுகளவும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாமியச் சட்டம் என்ன கூறுகிறது? ஒருவன் மற்றொருவனின் கண்ணைக் குருடாக்கி விடுகிறான். இஸ்லாத்தில் இதற்கான தண்டனை குற்றவாளியின் கண்ணையும் குருடாக்கி விட வேண்டும். கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்பது இஸ்லாத்தின் குற்றவியல் சட்டம்.

அதே நேரத்தில் கண்ணை இழந்தவன் குற்றவாளியை மன்னித்து விடுவதாக அறிவித்தால், அல்லது எதிரியிடமிருந்து ஏதேனும் தொகை கிடைத்தால் போதும் என்று கூறினால் குற்றவாளியின் கண் குருடாக்கப்படாது.

அது போலவே கொல்லப்பட்டவனின் மகன் அல்லது தந்தை அல்லது மற்ற வாரிசுகள் குற்றவாளியின் உயிரை எடுக்க வேண்டாம் என்று கூறுவார்களானால் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டான். இது இஸ்லாமியச் சட்டம்.

அதாவது உலக நாடுகள் குடியரசுத் தலைவருக்கு வழங்கிய அதிகாரத்தைப் பாதிக்கப்பட்டவனுக்கு இஸ்லாம் அளிக்கிறது.

சட்டங்கள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதை நியாயமான சிந்தனையுடைய யாரும் மறுக்க முடியாது.

பாதிக்கப்பட்டவன் மனநிறைவு பெறும் வகையில் தண்டனை அளிக்கப்படாவிட்டால் பாதிக்கப்பட்டவனே குற்றவாளியாகும் நிலைமையும் உருவாகும்.

கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டவன் ஜாமீனில் விடப்படும் போதும், சிறைச் சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போதும் கொல்லப்பட்டவனின் உறவினர்கள் அவனைக் கொன்று விடுவது அன்றாட நிகழ்ச்சியாகி வருகிறது.

இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? கொலையாளியை இந்தச் சட்டங்கள் தண்டிக்காது. தண்டித்தாலும் அது போதுமானதாக இருக்காது என்ற எண்ணத்தின் காரணமாகவே கொலை செய்யப்பட்டவனின் உறவினர்களும் கொலையாளிகளாகி விடுகின்றனர்.

குற்றங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் முக்கியக் காரணமாக உள்ளது எனலாம்.

இனி இஸ்லாமியச் சட்டம் எவ்வளவு அர்த்தமுள்ளது; அறிவுப்பூர்வமானது என்பதைக் காண்போம்.

திருட்டுக் குற்றத்தில் ஈடுபடும் ஆண்கள், பெண்கள் ஆகியோரின் வலது கை மணிக்கட்டு வரை வெட்டப்பட வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. இப்படிக் கையை வெட்டினால் அவர்கள் தொடர்ந்து திருடமாட்டார்கள். திருடவும் முடியாது. மீண்டும் திருடுவதற்கு மனதாலும் எண்ண மாட்டார்கள் என்பது ஒரு நன்மை. முதன் முதலாகத் திருட எண்ணுபவனும் அதற்குக் கிடைக்கும் தண்டனையை அறியும் போது திருடத் துணிவு பெற மாட்டான். இது மற்றொரு நன்மை.

கை வெட்டப்பட்டவனைப் பார்க்கும் போது அவன் திருடன் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள இயலும். எனவே அவனிடம் தங்கள் பொருட்களைத் திருட்டுக் கொடுக்காமல் எச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம்.

இவர்கள் இங்கே இருக்கிறார்களா? என்று திருடர்களின் புகைப்படங்களைப் பொது இடங்களில் ஒட்டி வைப்பதால் அந்த முகங்களை யாரும் நினைவில் பதிய வைக்க இயலாது. ஆனால் கையை வெட்டினால் அதுவே திருடன் என்பதற்குச் சிறந்த அடையாளமாகி விடுகிறது. இது மூன்றாவது நன்மை.

தண்டனை வழங்கப்படுவதன் நோக்கம் பரிபூரணமாக இப்போது நிறைவேறுகிறது. அது மட்டுமின்றி, குற்றவாளியை வருடக் கணக்கில் சிறையில் போட்டு அவனைப் பராமரித்துப் பாதுகாக்கும் வகையில் ஏற்படும் பொருளாதாரச் செலவுகள் மிச்சமாகின்றன. மக்களின் வரிப்பணம் பாழாகாமல் இந்தச் சட்டம் தடுக்கிறது. சிறைக் கூடங்களை ஒழித்து விட்டு இஸ்லாம் பரிந்துரைக்கின்ற தண்டனைகளை அமுல்படுத்தினால் பற்றாக்குறை பட்ஜெட் போடும் அவசியமிராது.

பாவம்! கையை வெட்டுகின்றீர்களே! என்று பரிதாபப்படுவது தான் மனிதாபிமானம் என்று அறிவு ஜீவிகள் எண்ணுகின்றனர். பரிதாபப்பட வேண்டியது தான். அதை நாம் ஆட்சேபிக்கவில்லை. யாருக்குப் பரிதாபப்படுவது?

மரணப் படுக்கையில் கிடக்கும் தன் மனைவியின் உயிர் காக்கும் மருந்து வாங்கச் செல்லும் ஒருவனிடமிருந்து திருடன் பணத்தை அபேஸ் செய்கிறான். இந்த அயோக்கியனால் பணத்தை மட்டுமின்றித் தன் மனைவியின் உயிரையும் பறிகொடுத்து நிற்கிறானே! அவனுக்காக யார் பரிதாபப்படுவது?

தன் மகளின் திருமணத்திற்காக உழைத்துச் உழைத்து சேர்த்த பணத்தைத் திருடன் பறித்துக் கொள்கிறான். பணத்தையும், மகளின் வருங்காலத்தையும் பறிகொடுத்து நிற்கிறானே அவனுக்கு யார் பரிதாபப்படுவது?

நேர்மையையும், ஒழுக்கத்தையும் விரும்பக்கூடியவன் பாதிக்கப்பட்டு நடுத் தெருவில் நிற்பதைப் பார்த்துப் பரிதாபப்பட மாட்டார்களாம். அவனை நடுத்தெருவில் நிறுத்திய அயோக்கியனுக்காகப் பரிதாபப்படுவார்களாம்? என்னே மனிதாபிமானம்! என்னே காருண்யம்? அறிவை அடகு வைத்துவிட்டு அயோக்கியர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் தான் அறிவு ஜீவிகளாம்!

பரிதாபப்படுபவர்கள் அதை முழுமையாகப் பட்டுத் தொலைக்க வேண்டியது தானே. எந்தக் குற்றவாளிக்கும் எந்தத் தண்டனையும் தேவையில்லை என்று கூறினால் முழு மனிதாபிமானம் என்று ஏற்றுக் கொள்ளலாம். சிறைச்சாலை போலீஸ், நீதிமன்றம் ஆகியவற்றிற்குச் செய்யும் செலவுகளாவது மிச்சமாகும்.

ஆனால் இவர்கள் இப்படிச் சொல்ல மாட்டார்கள்.

இதிலிருந்து மனிதாபிமானம் காரணமாக இவ்வாறு இவர்கள் வாதிடவில்லை என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம். லஞ்சம், ஊழல் மற்றும் எண்ணற்ற கிரிமினல் நடவடிக்கைகளில் இறங்குவோர் நாளை சிறைச்சாலைக்குச் செல்லும் நிலை ஏற்படலாம். அப்போது தாங்கள் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத் தான் குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்குகின்றனர்.

இப்படியே கையை வெட்டிக்கொண்டே போனால் கையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகிவிடுமே என்றெல்லாம் புத்திசாலித்தனமான(?) கேள்விகளையும் இந்த அறிவு ஜீவிகள் எழுப்புகின்றனர்.

நிச்சயம் கையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகாது. ஒரே ஒரு திருடனுக்குக் கையை வெட்டி விட்டால் மற்ற எவனுக்குமே திருடும் துணிவு ஏற்படாது. வெட்டப்படும் கைகளின் எண்ணிக்கை நிச்சயம் பெருகாது.

சவுதி அரேபிய அரசாங்கம் இந்தத் தண்டனைகளைக் கடுமையான முறையில் கடைப்பிடிக்கின்றது. பல ஆண்டுகளாக இந்தச் சட்டத்தை அமுல்படுத்தி வருகின்றது. அங்கே கையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. மாறாகத் திருடுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. உலகத்திலேயே குற்றங்கள் குறைவாக நடக்கும் நாடு என்ற பெருமையை அந்த நாடு பெற்றுள்ளது.

உதாரணத்துக்காகத் தான் திருட்டுக் குற்றத்தின் தண்டனை பற்றி இங்கே குறிப்பிட்டுள்ளோம். இஸ்லாம் கூறும் தண்டனை முறைகள் யாவுமே இவ்வாறு தான் அமைந்துள்ளன. கொலை செய்தவனை அரசாங்கம் உடனே கொன்று விடுமானால் கொலை செய்ய எவருமே துணிய மாட்டார்கள். பல்லை உடைத்தால் தனது பல்லும் அரசாங்கத்தால் உடைக்கப்படும் என்பதை அறிந்தால் எவருமே மற்றவனின் பல்லை உடைக்க மாட்டார்கள்.

உலகில் எத்தனையோ அரசுகள் வந்து போய்விட்டன. மக்களின் உயிருக்கும் உடைமைக்கும், கற்புக்கும் பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பில் அத்தனை அரசுகளுமே தோல்வியைத் தான் தழுவி இருக்கின்றன. எப்போது என்ன நேருமோ என்று அஞ்சி அஞ்சியே மக்கள் வாழும் நிலை ஏற்பட்டு விட்டது.

இந்த நிலை மாற வேண்டுமானால் குற்றவாளிகள் விஷயத்தில் கருணை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது. தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். இஸ்லாம் சொல்கின்றது என்ற குறுகிய நோக்கில் இஸ்லாமியத் தண்டனைகளைப் புறக்கணிக்காமல் அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளைக் கருத்தில் கொண்டு அதை அமுல்படுத்த முன் வர வேண்டும்.

காலம் கடந்தாவது சில பேர் இன்று இதை உணரத் தலைப்பட்டுள்ளனர். பெண்கள் கற்பழிக்கப்படுவது பெருகி வருவதைக் கண்டு கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுவோர்க்கு அரபு நாடுகளில் உள்ளது போல் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கூற ஆரம்பித்துள்ளனர். பல்வேறு பெண்கள் மாநாடுகளில் இந்தக் கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெயரளவிலான தண்டனைகளால் பயனேதும் இல்லை என்பதை அனுபவப்பூர்வமாக உலகம் அறிந்து வருகிறது. குற்றவியல் சட்டங்கள், குற்றங்களைக் குறைப்பதில் படுதோல்வியடைந்து விட்டதை ஒவ்வொரு அரசும் புரிந்து கொண்டது.

குற்றவாளிகளுக்கு ஒத்தடம் கொடுக்கும் இந்தத் தண்டனைகளை மாற்றி அவர்களுக்கெதிராகச் சாட்டையை உயர்த்திக் கடும் தண்டனைகளை நடைமுறைப்படுத்தினால் அதன் பயனை இந்த அறிவு ஜீவிகள் அனுபவப்பூர்வமாக உணர்வார்கள். அதன் பிறகு இஸ்லாமியச் சட்டத்தை விமர்சிக்க மாட்டார்கள்.

திருடனைப் பிடித்தவுடன் அவனுக்குக் கையை வெட்டிவிட்டால் பிறகு அவன் நிரபராதி என்பது தெரிய வந்தால் போன கை திரும்ப வந்து விடுமா? என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர்.

எடுத்தேன்; கவிழ்த்தேன் என்று தண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறவில்லை. குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட பின்பே தண்டனை வழங்குமாறு கூறுகின்றது. மரண தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் விபச்சாரத்தை நான்கு நேரடியான சாட்சிகள் மூலம் நிரூபிக்க வேண்டும். நான்குக்கும் குறைவானவர்கள் இக்குற்றத்தைக் கூறினால் அவ்வாறு குற்றம் சுமத்தியவர்களுக்கு எண்பது கசையடிகள் வழங்குமாறு இஸ்லாம் உத்தரவிடுகிறது. இஸ்லாமிய ஆட்சி முறையில் தகுந்த சாட்சியங்களின்றிச் சில குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ள முடியுமே தவிர நிரபராதிகள் தண்டிக்கப்படவே முடியாது என்பது தான் உண்மை.