ஆறு நோன்பு எப்போது நோற்க வேண்டும்?

கேள்வி :

ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் பிடிக்க வேண்டும் என்று உள்ளது. இது பெருநாளை அடுத்துள்ள ஆறு நாட்கள் தொடர்ந்து பிடிக்க வேண்டுமா? அல்லது ஷவ்வால் மாதம் முழுவதும் ஏதேனும் ஆறு நாட்களில் நோற்றுக் கொள்ளலாமா?

அக்பர், திருநெல்வேலி.

பதில் :

1795 حَدَّثَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ ، حَدَّثَنَا صَفْوَانُ وَسَعْدُ بْنُ سَعِيدٍ ، عَنْ عُمَرَ بْنِ ثَابِتٍ ، عَنْ أَبِي أَيُّوبَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ” مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتَّةً مِنْ شَوَّالٍ، فَذَلِكَ صِيَامُ الدَّهْرِ “. رواه الدارمي

யார் ரமலானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் 6 நோன்பு நோற்கின்றாரோ அவர் (ஆண்டு) காலம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போலாவார்.

நூல் : தாரமீ 1795

இந்த ஹதீஸில் ரமளானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வால் நோன்பு நோற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“தொடர்ந்து” என்ற வார்த்தையிலிருந்து பெருநாளைக்குப் பிறகுள்ள ஆறு நாட்கள் தொடர்ந்து பிடிக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இது தவறான வாதமாகும்.

ஏனெனில் ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, ஷவ்வாலிலும் ஆறு நாட்கள் நோன்பைத் தொடர வேண்டும் என்ற கருத்தில் தான் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளதே தவிர, ஆறு நாட்கள் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்ற கருத்தில் இது கூறப்படவில்லை.

ஒரு வாதத்திற்கு ரமளானைத் தொடர்ந்து ஆறு நாட்கள் நோன்பு பிடிக்க வேண்டும் என்று அந்த ஹதீஸ் கூறுகின்றது என்று வைத்துக் கொண்டால், பெருநாளில் நோன்பு பிடிப்பதற்குத் தடை உள்ளது. ஆறு நாட்கள் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும் என்ற கருத்தில் உள்ளவர்கள் கூட ஷவ்வால் பிறை 2லிருந்து 7 வரை தொடர்ந்து பிடிக்க வேண்டும் என்று தான் கூறுகின்றனர். இதில் ரமளானைத் தொடர்ந்து என்ற வாதம் அடிபட்டுப் போகின்றது. ஒரு நாள் விடுபட்டு விட்டால் அது ரமளானின் தொடர்ச்சியாக ஆகாது. மேலும் ஷவ்வால் பிறை 2லிருந்து 7 வரை தான் ஆறு நோன்பு பிடிக்க வேண்டும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் ஹதீஸ்களில் இல்லை.

மேலும் இந்த நன்மை ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் கிடைக்க வேண்டும். ரமலான் முடிந்த மறுநாள் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவர்கள் ரமலானைத் தொடர்ந்து இந்த நோன்பைப் பிடிக்க முடியாமல் போய்விடும். எனவே தொடர்து என்பதன் பொருள் நாட்களால் தொடர்வது அல்ல; மாதத்தால் தொடர்வது என்ற கருத்தில் தான் பயன்படுத்தப்பட்டு இருக்க முடியும்.

ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதம் தனக்கு வசதியான நாட்களில் இந்த நோன்பை நோற்கலாம். நாட்களால் தொடர்ச்சி என்று பொருள் கொண்டால் ஷவ்வால் பிறை ஒன்று பெருநாளாக உள்ளதால் ஒருவரும் தொடர்ந்து பிடிக்க முடியாமல் போய்விடும். பெண்களில் பலருக்கு இந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும்.

எனவே ஆறு நோன்புகள் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஷவ்வால் மாதம் முழுவதும் உள்ள நாட்களில் ஏதேனும் ஆறுநாட்கள் நோன்பு வைக்கலாம் என்பதே சரியான கருத்தாகும்.

முப்பது நோன்பும், ஆறு நோன்பும் சேர்த்து முப்பத்து ஆறு நோன்புகளாகின்றன. நன்மைகள் ஒன்றுக்குப் பத்து என்ற கணக்குப்படி தினமும் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதற்குக் காரணம் கூறியுள்ளனர்.

ஆறு நோன்பின் தத்துவம் இது தான் என்றால் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம். ஆனால் ஷவ்வாலில் என்று ஹதீஸ்களில் இடம்பெறுவதால் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பையும் வைத்து விட வேண்டும்.