ஜிஹாத் அரசின் மீதுதான் கடமையா?

ஜிஹாத் அரசின் மீதுதான் கடமையா?

கேள்வி :

ஜிஹாத் என்ற உணர்வு மனிதனிடத்தில் (சிறிதளவு கூட) இல்லையென்றால் அவன் முஃமினாக இருக்க முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அரசாங்கம் தான் போர் செய்ய வேண்டும் என்றால் மனிதனிடத்தில் எவ்வாறு அவ்வுணர்வு வர முடியும்?

எஸ்.எம். ஷாஃபி, நாகூர்

பதில் :

இஸ்லாத்தில் எந்த ஒரு வணக்கமாக இருந்தாலும் அது எப்போது கடமையாகின்றதோ அப்போது தான் அதைச் செய்ய வேண்டும். ஜகாத், ஹஜ் போன்ற வணக்கங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அன்றாடம் சாப்பாட்டுக்கு வழியில்லாத ஒருவரிடம் போய், ஹஜ் செய்தால் தான் நீ முஸ்லிம் என்று கூற முடியாது. அது போலவே ஜிஹாத் என்பதும் எப்போது கடமையாகின்றதோ அப்போது தான் அதைச் செய்ய வேண்டும்.

ஜிஹாத் என்ற பெயரில் தடி எடுத்தவன் தண்டல்காரன் எனச் செயல்பட மார்க்கத்தில் இடமில்லை. இஸ்லாமிய அரசாங்கம் தான் ஜிஹாத் செய்ய வேண்டும் என்பதை ஆதாரத்துடன் அறிந்து கொள்ள

இஸ்லாமிய அரசில் தான் ஜிஹாத் கடமையா?

ஜிஹாத் வேறு தீவிரவாதம் வேறு

ஆகிய ஆக்கங்களைப் பார்க்கவும்

صحيح مسلم

5040 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَهْمٍ الأَنْطَاكِىُّ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ عَنْ وُهَيْبٍ الْمَكِّىِّ عَنْ عُمَرَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ سُمَىٍّ عَنْ أَبِى صَالِحٍ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَنْ مَاتَ وَلَمْ يَغْزُ وَلَمْ يُحَدِّثْ بِهِ نَفْسَهُ مَاتَ عَلَى شُعْبَةٍ مِنْ نِفَاقٍ ». قَالَ ابْنُ سَهْمٍ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ فَنُرَى أَنَّ ذَلِكَ كَانَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم-.

யார் போர் செய்யாமலும், போரைப் பற்றி மனதில் கூட எண்ணாமலும் மரணிக்கின்றானோ அவன் நயவஞ்சகத்தின் ஒரு பகுதியுடன் மரணிக்கின்றான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம்

இந்த ஹதீஸில் போரைப் பற்றி மனதில் கூட எண்ணாமல் மரணித்தால் அவன் நயவஞ்சகத்தின் ஒரு பகுதியுடன் மரணிப்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

ஜிஹாத் செய்தால் தான் ஜிஹாதைப் பற்றிய எண்ணம் மனதில் உருவாகும் என்பதில்லை. அப்படியென்றால் யார் ஜிஹாத் செய்யாமல் இறக்கின்றானோ அவன் நயவஞ்சகன் என்று மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கலாம்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படிச் சொல்லாமல் மனதில் கூட எண்ணாமல் என்பதையும் சேர்த்துச் சொல்வதிலிருந்தே ஜிஹாத் செய்ய முடியாத ஒரு நிலையும் ஏற்படும் என்று இந்த ஹதீஸ் உணர்த்துவதை அறியலாம்.

இப்போதைய சூழ்நிலையில் நமக்கு ஜிஹாத் கடமையில்லை என்றாலும் இதே நிலைதான் எப்போதும் இருக்கும் என்று சொல்ல முடியாது.

ஒரு வேளை நாம் இஸ்லாமிய அரசாங்கத்தின் கீழ் வந்து ஜிஹாத் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் அப்போது ஜிஹாதை மறுக்கக் கூடாது என்பது தான் இந்த ஹதீஸின் பொருள்.

ஹஜ் செய்வதற்கு வசதியில்லை என்பதற்கும், வசதி வந்தாலும் ஹஜ் செய்ய மாட்டேன் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஜிஹாதைப் பற்றிய உணர்வு ஒவ்வொரு முஸ்லிமிடமும் இருந்தாக வேண்டும். ஏனெனில் மற்ற வணக்கங்களைச் செய்வதற்கு யாரும் எளிதாக முன்வந்து விடுவார்கள். ஆனால் ஜிஹாத் செய்வதற்கு மனதளவில் எப்போதும் தயாராக இருந்தால் மட்டுமே கடமை ஏற்படும் போது அதை நிறைவேற்ற முடியும் என்பதால் தான் நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் ஜிஹாதைப் பற்றிய உணர்வுடன் இருப்பதை வலியுறுத்துகின்றார்கள்.