கணவன் மனைவியர் உடலுறவுக்கு கட்டுப்பாடுகளோ தடைகளோ உள்ளதா?

கேள்வி :

கணவன் மனைவியர் உடலுறவுக்கு கட்டுப்பாடுகளோ தடைகளோ உள்ளதா?

ஷப்ராஸ்

பதில் :

கணவன் மனைவிக்கிடையே நடக்கும் இல்லறத்தில் குறிப்பிட்ட சில காரியங்களைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் இஸ்லாம் அனுமதிக்கின்றது.

மனைவியின் பின் துவாரத்தின் வழியாக புணருவதையும் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது அவளுடன் உடலுறவு கொள்வதை மட்டுமே மார்க்கம் தடை செய்கின்றது.

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகிவிட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்!

திருக்குர்ஆன் 2:222

سنن أبي داود

2162 – حَدَّثَنَا هَنَّادٌ، عَنْ وَكِيعٍ، عَنْ سُفْيَانَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنِ الْحَارِثِ بْنِ مَخْلَدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَلْعُونٌ مَنْ أَتَى امْرَأَتَهُ فِي دُبُرِهَا»

மனைவியின் பின் துவாரத்தில் உறவு கொண்டவன் சபிக்கப்பட்டவனாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : அபூ தாவூத்

எனவே தடை செய்யப்பட்ட இந்த இரண்டைத் தவிர்த்து மற்ற அனைத்து காரியங்களும் அனுமதிக்கப்பட்டவையே.

பின்வரும் வசனம் இந்த அனுமதியைத் தருகின்றது.

உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். உங்கள் விளை நிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்!

திருக்குர்ஆன் 2:223

கணவன் மனைவிக்கிடையே நடக்கும் அந்தரங்கமான விஷயங்கள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு விவரிப்பது நாகரீகமான செயல் அல்ல. எனவே தான் அல்லாஹ் மனைவியர் விளை நிலங்கள் என்ற அழகான உவமையோடு நிறுத்திக் கொண்டான்.